Saturday, 11 February 2017

சேதமான கப்பல் கேப்டனிடம் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை 

திருவொற்றியூர், பிப்.4:விபத்துக்குள்ளானதில் சேதமடைந்த கப்பலான டான் காஞ்சிபுரத்தின் கேப்டனிடம் தரைவழிப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்  கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் விசாரணை நடத்தினார்.
     கடந்த ஜன.28-அன்று ஏற்பட்ட விபத்தில் சேதமடைந்த டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 32 ஆயிரம் டன் டீசல் மற்றும் ஸ்பிரிட் இறக்கப்பட்டுவிட்டன. இதனைடுத்து இக்கப்பல் துறைமுகத்தில் உள்ள திரவ முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 
இதன் மீது மோதி சேதம் விளைவித்த மாப்பில் என்ற கப்பல் துறைமுகத்திற்கு வெளியே 
நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விபத்து குறித்து கடல்சார் வணிகத் துறை  விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறது. 
அதற்கடுத்தபடியாக கடல்சார் துறை பொது மேலாளர் ஏ.கே.குப்தா மீஞ்சூர் காவல்நிலையத்தில் விபத்து குறித்து புகார் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து கடந்த ஐந்து நாள்களாக பல்வேறு தரப்பிலும் தீவிர விசாரணை நடத்தப்பெற்று வருகிறது. இருப்பினும் விபத்துக் காரணங்கள், மனிதத் தவறுகள், நிர்வாகக் குளறுபடிகள் குறித்த பல்வேறு யூகங்கள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன.
கப்பல் கேப்டனிடம் 2 மணி நேரம் விசாரணை: 
    இந்நிலையில் துறையின் அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜர் துறைமுகத்திற்கு சனிக்கிழமை திடீரென வந்தார். பின்னர் கப்பல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டான் காஞ்சிபுரம் கப்பலை பார்வையிட்டார். பின்னர் கப்பலின் உள்ளே சென்ற அமைச்சர், கப்பலின் கேப்டனை அழைத்து நேரில் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது துறைமுகத் தலைவர்கள் பி.ரவீந்திரன் (சென்னை), எம.ஏ.பாஸ்கராச்சார் (எண்ணூர் காமராஜர்) ஆகிய இருவர் மட்டும் உடனிருந்தனர். 
பின்னர் துறைமுக அதிகாரிகளுடன் சில விபரங்களைக் கேட்டறிந்தார். கப்பல் கேப்படனிடம் நடத்திய விசாரணை குறித்து எவ்வித தகவலையும் அமைச்சர் 
ராதாகிருஷ்ணன் யாரிடமும் தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவிப்பது நடைபெற்று
வரும் விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்பதால் தவிர்த்துவிட்டதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment