வெள்ளப்பாதிப்பு எதிரொலி:
வடசென்னை ஏரி, நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
விரைவில் ஆய்வு: மாவட்ட ஆட்சியர்
திருவொற்றியூர், டிச.18:சமீபத்திய வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளான வடசென்னை பகுதிகளில் ஏரி மற்றும் நீர் நிலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து விரைவில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
வடசென்னையில் குசஸ்தலை ஆறு, புழல் ஏரிக் கால்வாய், ரெட்டை ஏரி, பக்கிங்காம் கல்வாய், திருவொற்றியூரில் கழிவெளி புறம்போக்கு, மணலி, மாத்தூர் ஏரிகள் நீர் நிலை பகுதிகளாக உள்ளன. சமீபத்திய வெள்ளப்பெருக்கின்போது திருவொற்றியூர், மணலி, மணலி புதுநகர், புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் என இப்பகுதியில் வசிக்கும் சுமார் 2 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கினர். பெரும்பாலான இடங்களில் மார்பளவு தண்ணீர் பெருக்கெடுத்தது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நடைபெற்றுவந்த விவசாயம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளானது. மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள சரக்குப் பெட்டக நிலையங்கள், சிறு தொழிற்சாலைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வெள்ளநீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொன்னேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இப்பகுதியே தீவுபோல் மாறும் அளவுக்கு வெள்ளப்பாதிப்பு இருந்தது. வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
முக்கிய காரணங்கள்: குசஸ்தலை ஆறு
திருவொற்றியூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்வதால் மட்டுமே பொதுவாக அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் பூண்டி, புழல், சோழவரம் ஏரிகளில் உபரி நீர் திறக்கப்படும்போதெல்லாம் இப்பகுதி வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அவலம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதற்கு முதல் காரணம், குசஸ்தலை ஆற்றில் பெரும்பாலான இடங்களில் ஆளுயரத்திற்கு மணல் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆற்றின் கரைகள் முறையாக சீரமைக்கப்படவில்லை. பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் ஆற்றின் அகலம் சுருங்கி நீரோட்டத்தின் வேகம் குறைந்துள்ளது. மேலும் நாப்பாளையம் பாலத்தை கடந்து கடலை நோக்கிச் செல்லும் இந்த ஆறு சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு ஆற்றுப் போக்கு சீராக இல்லாமல் பரவலாகச் செல்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கின் போது வெளியேற்றப்படும் வெள்ள நீரின் வேகம் தடைபடுகிறது. இதனால் தேக்கம் ஏற்பட்டு படிப்படியாக கிராமங்களில் வெள்ளநீர்
புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போதைய வெள்ளச் சேதத்தில் இதே நிலைதான்
நீடித்தது.
திசையற்ற போக்கில் புழல் ஏரிக் கால்வாய்:
புழல் ஏரியில் திறந்து விடப்படும் உபரி நீர் கால்வாய் மூலம் சென்று எண்ணூரில் கடலில் கலக்கிறது. இதற்கென சுமார் 25 கி.மீ.தூரத்திற்கு கால்வாய் உள்ளது. ஆனால் இக்கால்வாய் சீராக இல்லை. இக்கால்வாய் ஒரு ஒழுங்கான திசையில் செல்லாமல் பல இடங்களில் வளைந்து, வளைந்து செல்கிறது. பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் குறுகலாகவும், ஆழமின்றியும் காணப்படுகிறது. ஆமுல்லைவாயல் கிராமம் வழியாக மணலி பகுதியில் வரும்போது இதில் சென்னை உரத் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றபடும் கழிவு நீரும் சேர்கிறது. மேலும் வெள்ளப்பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தேக்கி வைக்கப்படும் பெட்ரோலியக் கழிவுகள் அனைத்தும் வெள்ளநீரில் கலந்து வெளியேற்றப்படுகிறது.
வெள்ளம் வடிந்தபிறகும் இப்பகுதியில் இதன் பாதிப்பு நீடிக்கிறது. புழல் ஏரிக் கால்வாயில் உள்ள ஆக்கிமிப்புகளை அகற்றி, தூர்வாரி எண்ணூர் வரை இருபுறமும் கரைகளை அமைத்து சீரமைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.
கழிவெளி புறம்போக்கு நிலத்தில் குடியிருப்புகள்:
திருவொற்றியூரில் பெய்யும் மழை வெள்ளம் இதன் மேற்கு பகுதியில் உள்ள கழிவெளி புறம்போக்கு நிலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் பக்கிங்காம் கால்வாயின்
வெள்ளத்திற்கேற்ப படிப்படியாக இக்கால்வாயில் வழிந்தோடி கடலில் கலக்கும். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இப்பகுதியில் ஒரு குடியிருப்பும் கிடையாது. இதன் ஒரு பகுதியில் சுதந்திர போராட்டப் பகுதிகளுக்காக வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதனையே சாக்காக வைத்து அரசியல் பலமிக்கவர்களால் புறம்போக்கு நிலத்தில் வீ்ட்டுமனைகள் அமைக்கப்பட்டு சட்டவிரோத விற்பனை தொடர்ந்தது. ரூ.10 ஆயிரத்தில் தொடங்கிய வீட்டுமனையின் இன்றைய விலை ரூ.5 லட்சம் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இப்பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுவிட்டன. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதிகளும் தரப்பட்டுவிட்டன. சமீபத்திய மழை வெள்ளத்தால் மேற்கு பகுதி முழுவதும் கழுத்தளவு தேங்கியதற்கு காரணம் இக்கழிவெளி புறம்போக்கு நிலத்திலை அமைக்கப்பட்ட குடியிருப்புகள்தான் முக்கிய காரணமாக உள்ளது.
மாத்தூர் ஏரிகள்:
மணலி, மாத்தூர் இடையே உள்ள இரண்டு பெரிய ஏரிகள் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளால் தற்போது பாதியாகச் சுருங்கிவிட்டன. இதனைத் தூர்வாரி ஆழப்படுத்தியிருந்தால் புழல் ஏரியில் உபரி நீர் திறக்கப்படும் போதெல்லாம் இந்த ஏரிகள் நிரம்பி வழியும் அளவுக்கு தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். இவ்வாறு சேமித்தால் மணலி, திருவொற்றியூர், மாதவரம், சின்னச் சேக்காடு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படாம் தொடர்ந்து பாதுகாக்க முடியும்.
ஆக்கிரமிப்புகள், பாரபட்சமற்ற நடவடிக்கை தேவை:
இது குறித்து திருவொற்றியூர் பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியது,
வடசென்னை பகுதியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்கள் ஏழைகள், பணக்காரர்கள் என யாராக இருந்தாலும், அரசியல் பாரபட்ச பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். ஏமாற்ற நினைத்த ஆக்கிரமிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலங்களை ஆக்கிரமித்து விற்றவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து இவர்களிடம் ஏமாந்துபோய் வீட்டுமனைகள் வாங்கிய ஏழைகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். முகத்துவாரப் பகுதிகளை தூர்வாரி தண்ணீர் தடையின்றிச்
செல்ல வழிவகை காண வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்திலாவது வழக்கமான வெள்ளப்பாதிப்பிலிருந்து வடசென்னை மக்களைக் காப்பாற்ற இயலும் என்றனர்.
பெட்டிச் செய்தி.....
ஆக்கிரமிப்புகள் குறித்து விரைவில் ஆய்வு: மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்
வெள்ளத்தின்போது வெள்ள நீர் செல்ல தடையாக இருந்த ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டன. திருவொற்றியூர், மணலி பகுதிகளில் நீர் நீலைகளில் உள்ள ஆக்கிமிப்புகள் குறித்து விரைவில் விரிவாக ஆய்வு செய்யப்படும். ஆறுகள் கலக்கும் பகுதிகளில் வெள்ளநீர் பரவலாகவே செல்கிறது. இதனை மாற்றி கால்வாய் போன்று ஆறுகளைச் சீரமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். நிவாரணப் பணிகள் சற்று நிறைவடைந்த பிறகு ஆற்றின் முகத்துவாரங்களில் தூர்வாரும் பணியை மேம்படுத்த நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். எதிர்காலத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாத வகையில் நீண்ட காலத் திட்டத்தைச் செயல்படுத்த