Monday, 26 November 2012

வேளாண் விளைபொருள் ஏற்றுமதி வர்த்தகம் முடங்கும் அபாயம்


ஆய்வுச் சான்று வழங்குவதில் அசாதாரண நிலை: அமைச்சகம் தலையிடக் கோரிக்கை

திருவொற்றியூர், நவ.25.: சென்னைத் துறைமுகம் வழியாக நடைபெற்று வரும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
    இதற்கு காரணம் வேளாண் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டிய இந்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள தாவரப் பாதுகாப்புத் துறையினர் தேவையற்ற கால தாமதம் செய்வதே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்கு 2 லட்சம் கண்டெய்னர்கள்:
     சென்னைத் துறைமுகத்தில் சுமார் ஆண்டுக்கு 20 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. இதில் வேளாண் வேளாண் விளைபொருள்களின் பங்கு கணிசமான அளவில் உள்ளது.  இதில் மக்காச்சோளம் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மக்காச்சோளம், வெங்காயம், அரிசி, மிளகாய், வேர்க்கடலை உள்ளிட்டவை மட்டும் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கண்டெய்னர்கள் வரை சென்னைத் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.   
         இதேபோல்  மரங்கள், மரக் கட்டைகள், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள், உளுந்து, துவரை, பட்டாணி, சுண்டக் கடலை உள்ளிட்ட பருப்பு வகைகள்,  அலங்காரப் பூக்கள் என ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் கண்டெய்னர்கள் வரை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.  மொத்தத்தில் வேளாண் வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு வெளிநாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஆய்வுச் சான்று வழங்கும் தாவரப் பாதுகாப்புத் துறை
       இவ்வாறு வேளாண் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் முன்பு மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள தாவரப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து சான்று அளிக்கப்பட வேண்டும்.  இச்சான்றில் விளைபொருளின் பொதுவான தாவரவியல் பெயர், தரம், கிருமி, பூச்சி ஏதும் இல்லை, அளவு, காலம் உள்ளிட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த சட்டப்பூர்வமான சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாமல் எந்த கண்டெய்னரையும் எடுத்துச் செல்ல சுங்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கமாட்டார்கள்.  நான்கு மாநிலங்களுக்கான பூச்சிக் கட்டுப்பாட்டு  மண்டல அலுவலகம் இதற்கென சென்னை மீனம்பாக்கத்தில் இயங்கி வருகிறது.
தேவையற்ற தாமதம்:
       ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய வேளாண் விளை பொருளை ஏற்றுமதி செய்ய சென்னைக்குக் கொண்டு வந்தபிறகு நேரில் வந்து ஆய்வு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள் பிறகு சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கிடங்குகளுக்கு நேரில் சென்று சோதனையிடுவர். பின்னர் அலுவலகத்திற்கு வந்து பல்வேறு விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் வரிசை எண்களுடன் கூடிய சான்றிதழ்களை முத்திரையிட்டு அளிப்பார்கள். பிறகு இதனை சுங்கத் துறை அதிகாரிகள் காண்பித்த பிறகு ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். இதே போன்ற நடைமுறைதான் இறக்குமதியாகும் பொருள்களுக்கும் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகின்றன.
     இந்த நடைமுறைகளில்தான் தற்போது தேவையற்ற கால தாமதம் ஏற்படுவதாகவும்,  முன்பு ஓரே நாளில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் தற்போது ஐந்து நாள்கள் வரை கால தாதம் ஆகின்றன. இதற்கு அதிகாரிகள் தரப்பில் தெளிவான பதில் இல்லாத நிலையில் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி விரைவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதி முடங்கினால் விவசாயிகள் பாதிக்கப்படுவர்:
இது குறித்து சென்னை மக்காச் சோளம் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியது,
     மக்காச் சோளம் ஏற்றுமதி ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.  மானாவாரி பயிரான மக்காச்சோளம் ஏழை விவசாயிகளின் வரப்பிரசாதம் என்ற அளவிற்கு தற்போது உள்ளது. இதற்கு காரணம் ஏற்றுமதி மூலம் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்து வருவதேயாகும். ஏற்றுமதியில் லாபம் குறைவுதான் என்றாலும் அதிக அளவில் ஏற்றுமதி செய்வதால் பரவாயில்லை என்ற நிலை இருந்து வந்தது. ஏற்கனவே கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் இத்தொழில் நலிவடைந்து விட்டது. இந்நிலையில் தாவரப் பாதுகாப்புத் துறையினர் தற்போது மேற்கொண்டுள்ள நடைமுறைகளால் இத்தொழில் முற்றிலும் முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
     'அனைத்தும் ஆன்லைன்' என்ற கணிணி வளர்ச்சி ஏற்பட்டுவிட்ட நிலையில் ஒரு சான்று வழங்கவே மூன்று முதல் ஐந்து நாள்கள் என்பது நடைமுறைக்கு ஒத்து வராது. ஏற்றுமதி வெற்றிகரமாக நடைபெறவேண்டும் என்றால் தேவையான சரக்குகள், லாரிகள், இருப்பு வைக்க கிடங்குகள்,  கண்டெய்னர்கள் லாரிகள், இணைப்புக் கப்பல்கள், தொடர்புடைய துறைகள் உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.  இதில் ஒன்றில் தடங்கல் ஏற்பட்டாலும்  இழப்பு ஏற்றுமதியாளருக்குத்தான். கண்டெய்னருக்கு சராசரியாக ரூ. 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை லாபம் கிடைத்து வந்த நிலையில், தற்போதைய பிரச்னையால் இந்த லாபத்தையும் இழந்து விட வேண்டியதுதான். பிறகு நட்டத்திற்கா வியாபாரம் செய்ய முடியும்?. எனவே இது குறி்த்து வர்த்தக் துறை அமைச்சகம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
சென்னை என்றாலே அலட்சியம்தான்:
இப்பிரச்னை குறித்து வெங்காயம் ஏற்றுமதி செய்யும்  கிருபாகரன் கூறியது,
   இப்பிரச்னைக்குக் காரணம் அதிகாரிகளின் அலட்சியம்தான். தாமதத்தினால் வெங்காயம் அழுகிவிடும், அதிகரிக்கும் செலவினங்களால் மக்காச்சோளம் உள்ளிட்ட ஏற்றுமதி, இறக்குமதி முடங்கும் அபாயம் உள்ளது என விளக்கமாக எடுத்துரைத்தாலும் பயன் இல்லை. அதைப் பற்றி தங்களுக்கு கவலை இல்லை. தங்ளது பணி அதிகாரத்தைச் செயல்படுத்துவது மட்டுமே. இங்கு கேள்வி கேட்பதற்கு இடமில்லை என்ற மனப்பான்மைதான் இந்த அதிகாரிகளிடம் நிலவுகிறது.  கொச்சி, தூத்துக்குடி, மங்களூர், விசாகபட்டினம், கிருஷ்ணபட்டனம், கல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள இதே தாவரப் பாதுகாப்புத் துறை அலுவலங்களில் தற்போதும் ஒரே நாளில் சான்றிதழ் வழங்கப்படும்போது சென்னையில் மட்டும் தாமதம் ஏன்? இதன் பின்னணி என்ன? இரண்டு மாதங்கள் முன்புவரை இல்லாத பிரச்னைகள் இப்போது மட்டும் ஏன்? இதற்கான 'காரண காரியங்கள்' தாவரப் பாதுகாப்புத் துறை மண்டல அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். இப்பிரச்னை குறித்து இத்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினால் பல்வேறு 'விசயங்கள்' வெளிச்சத்திற்கு வரும் என்பதே உண்மை என்றார் கிருபாகரன்
     கண்டெய்னர் லாரிகள் நெரிசல், போதிய கிடங்கு வசதிகள் இல்லாமை, சர்வதேசப் போட்டி உள்ளிட்ட பிரச்னைகளால் சென்னைத் துறைமுகம் மூலம் நடைபெற்று வந்த வேளாண் விளைபொருள்கள் ஏற்றதி படிப்படியாகக் குறைந்து வருகிறது.  இதில் தாவரப் பாதுகாப்பத் துறையும் தனது பங்களிப்பை அளிக்க உள்ளது என்பதே தற்போதைய நிலை. விவசாயப் புரட்சியே நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரவாதம், விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு என்தெல்லாம் மேடைப் பேச்சுக்குதானோ?. அலைக்கற்றைப் பிரச்னையை பற்றியே பேச நேரமில்லாதபோது.... இதில் வேளாண்மை செழித்தால் என்ன? செத்தால் என்ன?






போர்க்களத்தில் அறநெறியைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள்



வைகோ
திருவொற்றியூர், நவ.21: சங்க காலம் தொட்டு போர்க்களத்தில் அறநெறியைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள்தான் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
     சென்னைத் துறைமுகத் தமிழ்ச் சங்கம் சார்பில் 48-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் செ.ஹரிசந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த தமிழறிஞருக்கான விருது முனைவர் ம. லெனின் தங்கப்பா,  சிறந்த சமூக சேவைக்கான விருது இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், கலைச் சேவைக்கான விருது கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்மந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன். மேலும் சென்னைத் துறைமுகத்தில் சிறப்பாகப் சேவையாற்றியதற்காக டாக்டர் ராஜா ரவிவர்மா, டாக்டர் ராஜ்குமார், டாக்டர் குணசேகரன் உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர்.    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு  பெரியார், அண்ணா, சங்கரலிங்கனார் ஆகியோரின் திருஉருவப் படங்களைத் திறந்து வைத்தார்.  பின்னர்  'அறமும் மறமும்' என்ற தலைப்பில் வைகோ இலக்கிய பேருரையாற்றினார்.
அப்போது வைகோ பேசியது,
        தமிழர்களின் கலாச்சாரத்திலும், வரலாற்று நிகழ்வுகளிலும் துறைமுகங்களுக்கு முக்கிய இடம் உண்டு.   மறம் என்பதே பல்வேறு அறநெறிகள் மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுதான்.  புறநானூறு, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கியங்களில் அறமும், மறமும் பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.  எழுத்தின் மூலம் வல்லமையை உருவாக்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு.
        எது அறம்? எது மறம்?  வீரம் செறி்ந்த தமிழன் போர்க்களத்தில் அறத்தைக் காப்பாற்றினான்.  போர்முனைக்குச் சென்ற போதிலும் மனித  நேயத்தோடு போராடியவன் தமிழன்.   மகளிர், சமயத் துறவிகளை,  உடல் நலம் குன்றியவர்கள், ஊனமுற்றவர்கள் உள்ளிட்டோரை வெளியேற்றிவிட்டு போர்களத்தைச் சந்தித்தவன் தமிழன்.  இது பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் முதல் ஈழம் பிரபாகரன் வரை அனைவருக்கும் பொருந்தும்.  ஆனால் இலங்கையில் நடந்தது என்ன? பெண்கள், கற்பிணிகள் குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஆயுதங்களை இழந்து  நிராயுதபாணியாக வந்தவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.  
      உலகத்தில் மன்னிக்கவே முடியாத குற்றம் நன்றி மறப்பதுதான் என அறம் கூறுகிறது.  பசுவின் மடிக்காம்பை அறுத்தவன், பெண்களின் கற்பைச் சிதைத்தவனுக்குக் கூட மன்னிப்பு உண்டு. ஆனால் நன்றி மறந்தவனுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது என்ற பொருளில் பல்வேறு இலக்கியங்களும் வலியுறுத்துகின்றன.  தவ வேடத்தில் உள்ளவன் தவறு செய்யக்கூடாது.  வீரம், அறநெறியை எடுத்தியம்பும் புறநானூற்றில் எந்த மன்னன் பெயரும் குறிப்பிடப்படவில்லை. திருக்குறளிலோ நாட்டின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை.  உலகின் பல்வேறு பகுதிகளில் தத்துவங்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் உலகத்திற்கு பொருந்தும் அறநெறிகளை ஆதியிலேயே வகுத்தவன் தமிழன்தான்.
     இந்திய சுதந்திர வரலாற்றில் காந்தியடிகள் அறமென்றால் நேதாஜி மறம். இலங்கையில் செல்வநாயகம் மறமென்றால் பிரபாகரன் மறம்.  அண்ணா அறம்.  பெரியாரின் வழி எதிர்காலத்தில் மறம் என்றார் வைகோ.
  

Sunday, 11 November 2012

சென்னையில் தரை தட்டிய 'பிரதீபா காவேரி' கப்பல் மீட்பு

விபத்து குறித்து விசாரணை: அமைச்சர் ஜி.கே.வாசன்

திருவொற்றியூர், நவ.11:அண்மையில் தாக்கிய 'நிலம்' புயலில் சிக்கி சென்னை மெரினா அருகே தரை தட்டிய எம்.டி.பிரதீபா காவேரி என்ற எண்ணெய்க் கப்பல் 12 நாள்களுக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
    நான்காவது நாளாக தொடர்ந்த மீட்புப் பணி முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட இக்கப்பல் நடுக்கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னைத் துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்தார்.
    மும்பையைச் சேர்ந்த கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான 'எம்.டி.பிரதீபா காவேரி' கப்பல் பழுதடைந்த நிலையில் சென்னைத் துறைமுகம் அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்து. இந்நிலையில் புயல் தாக்கியால் படிப்படியாக இழுத்து வரப்பட்டு கடந்த அக்டோபர் 31-ஆம் தேதியன்று சென்னை பட்டினம்பாக்கம் அருகே தரை தட்டி நின்றது. அப்போது இக்கப்பலில் இருந்து இறங்கி தப்பிக்க முயன்ற 22 சிப்பந்திகளில் ஆனந்த் என்ற பொறியாளர் உள்ளிட்ட 6 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்துபோயினர்.
இழுக்கும் பணியின்போது கயிறு வடம் அறுந்தது:   இந்நிலையில் கரை தட்டிய கப்பலை மீட்கும் பணி நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'ஸ்மிட்' என்ற மீட்புப் பணி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 133 பி.பி இழுவை திறன் கொண்ட மாளவியா என்ற இழுவைக் கப்பல் காக்கிநாடாவிலிருந்தும், 80 பி.பி. இழுவைத் திறன் கொண்ட எஸ்.சி.ஐ.ரட்னா என்ற கப்பல் மும்பையிலிருந்தும் வரவழைக்கப்பட்டன. தரை தட்டிய கப்பல் வலுவாகவே
மணலில் புதைந்திருந்ததால் தொடக்கத்திலேயே 'மாளவியா' மூலம் இழுக்கும் பணி கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. அப்போது தரைதட்டிய கப்பலோடு இணைக்கப்பட்டிருந்த நைலான் கயிறு வடம் அறுந்து போனதால் மீட்புப் பணி தடைபட்டது.
மீட்கும் பணியில் முன்னேற்றம்:     இதனையடுத்து புதிய கயிறு வடம் மூலம்  மீட்புப் பணி வெள்ளிக்கிழமை மீண்டும் தொடர்ந்தது. ஆனால் இரண்டாவது நாளிலும் கப்பலை அசைக்கக் கூட முடியவில்லை. சனிக்கிழமையும் தொடர்ந்து இழுக்கும் பணி நடைபெற்ற நிலையில் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கடல்மார்க்கமாகச் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். அப்போது 10 டிகிரி கோணம் அளவிற்கு கப்பல் அசைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே கப்பல் நிச்சயமாக மீட்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கடற்கரைக்கு வந்து மீட்பு பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் வாசன் கப்பல் மீட்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறி்த்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்நிலையில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டதில்  ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் கப்பல் மீட்கப்பட்டது.
கடல்சார் வாணிபத் துறை நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் வாசன்   கப்பலை மீட்கும் இறுதி கட்ட நிகழ்வின்போது கடற்கரைக்கு வந்த அமைச்சர் வாசன் முழுமையாக இழுக்கப்படும்வரை சுமார் 3 மணி நேரம் அங்கேயே இருந்தார்.
பின்ர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வாசன் கூறியது,
    கப்பலில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது, ஒத்துழைப்பு கொடுத்து ராட்சத கடல் அலைகள், தளராத முயற்சி, மீட்பு பணி நிறுவனத்தின் அனுபவம் போன்ற பல்வேறு சாதகமான சூழ்நிலைகளால் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 16 கப்பல்களை மீட்டுள்ள 'ஸ்மிட்' மீட்புப் பணி நிறுவனத்தின் அனுபவம், புதிய உத்திகள்தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த சென்னைத் துறைமுகம், கடல்சார் வாணிபத் துறை, கடலோரக் காவல்படை, காவல்த் துறை,மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அமைச்சகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
   நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் மீட்கப்பட்ட கப்பல் துறைமுகம் அருகே ஆழ்கடலில் நிறுத்தி வைக்கப்படும். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் கப்பல்த் துறை இயக்குனரகம் 'பிரதீபா காவேரி' பதிவை ஏற்கனவே ரத்து செய்துள்ளது. கப்பல் நிறுவனம் மீதான நடவடிக்கை, கப்பலை மீண்டும் இயக்குவதற்கு அனுமதியளிப்பது உள்ளிட்டவை குறித்தெல்லாம் விசாரணை அறிக்கையின் பேரி கப்பல்த் துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுக்கும். புயலில் சிக்கி இறந்து போன இக்கப்பலின் ஊழியர்கள் 6 பேருக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகளை அமைச்சகம் எடுக்கும் என்றார் வாசன். 
   கடந்த 12 நாள்களாக 'மெரினா'வே 'பட்டினம்பாக்கத்திற்கு' இடம் பெயர்ந்து விட்டதோ எனக் கேட்கத் தூண்டும் அளவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தரை தட்டிய பிரதீபா காவேரியை பார்த்து ரசித்தனர். ஞாயிற்றுக்கிழமை கப்பல் மீட்கப்பட்டதன் மூலம் இதற்கு முடிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




 

Thursday, 8 November 2012

கப்பலை மீட்கும் பணி: கயிறு வடம் அறுந்ததால் தொய்வு



இன்று 2 கப்பல்களை ஈடுபடுத்த முடிவு

திருவொற்றியூர், நவ.8: புயலின் தாக்கம் காரணமாக சென்னை மெரினா கடற்கரை அருகே தரைதட்டி நிற்கும் எம்.டி. பிரதீபா காவேரி கப்பலை மீட்க வியாழக்கிழமை மேற்கொண்ட முயற்சியின்போது இழுவைக் கயிறு அறுந்து போனதால் இழுக்கும் பணியில் நிறுத்தப்பட்டது. வியாழக்கிழமை மாளவியா என்ற கப்பல் மட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை (இன்று) மாளவியா கப்பலுடன், எஸ்.சி.ஐ.ரட்னாவும் இழுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
                தரை தட்டிய கப்பலான எம்.டி.பிரதீபா காவேரியை இழுக்கும் பணியை நெதர்லாந்தைச் சேர்ந்த 'ஸ்மிட்(SMIT)'
என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் நிபுணர்கள் குழு கடந்த வாரமே சென்னை வந்துவிட்டனர். மேலும் கடந்த சில நாள்களாக கப்பலை பத்திரமாக மீட்பது குறித்து சென்னைத் துறைமுகம், கடல்சார் வாணிபத்துறை, கடலோரக் காவல்படை அதிகாரிகளுடன் ஸ்மிட் நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வந்தனர். இதற்கிடையே கப்பலை இழுக்க 133 பி.பி. இழுவைத் திறன் கொண்ட எம்.வி. மாளவியா என்ற இழுவைக் கப்பல் காக்கிநாடாவிலிருந்தும், எஸ்.சி.ஐ.ரட்னா என்ற கப்பல் மும்பையிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
              இந்நிலையில் கப்பலை இழுக்கும் பணி்க்கான ஆயத்தப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.  பலம் வாய்ந்த நைலான் கயிறு வடம் தரை தட்டிய கப்பலில் கட்டப்பட்டு மாளவியா கப்பலைக் கொண்டு வியாழக்கிழமை இழுக்கும் பணி தொடங்கியது. ஆனால் சில முயற்சிகளிலேயே கயிறு வடம் அறுந்து போனதால் இழுக்கும் முயற்சி நிறுத்தப்பட்டது. பின்னர் மீட்பு நிபுணர்கள், அதிகாரிகள் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து கடல்சார் வாணிபத்துறை வட்டாரத்தில் கூறியது, 
           தற்போது கப்பலை இயக்கும் முக்கிய இயந்திரம் பழுதடைந்துள்ளது.  எனவே தரைதட்டிய கப்பலை இழுக்க  மேலும் கூடுதல் இழுவைத் திறன் தேவைப்படுகிறது. மேலும் தற்போது கப்பலில் அதிக அளவில் அளவு கடல் நீர் நிரப்பப்பட்டுள்ளது. கடலில் மிதக்க அவசியமான சரிவிகித எடைக்காக கடல் நீர் நிரப்பப்படுவது வழக்கமானது. இக்கப்பல் காலியாக இருந்ததால் அதிக அளவில் கடல் நீர் நிரப்பப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை வெளியேற்றினால் கப்பலின் எடை குறைந்து இழுப்பதற்கு சற்று எளிதாக இருக்கும்.  ஆனால் ஜெனரேட்டரை இயக்கத் தேவையான டீசல் தீர்ந்துவிட்டதால் கப்பலில் மின்சாரம் இல்லை. மின்சாரம் இல்லாததால் மோட்டார்களை இயக்க முடியவில்லை.  இதனால் சென்னைத் துறைமுகத்திலிருந்து டீசல் எடுத்துவரப்பட்டு தரை தட்டிய கப்பலில் நிரப்பப்பட்டுள்ளது.  வியாழக்கிழமை ஜெனரேட்டர் இயக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
           கயிறு வடம் அறுந்துவிட்டதால் இழுக்கும் பணியில் தொய்வடைந்துவிட்டதாகக் கருதமுடியாது.
எல்லாமே முயற்சிதான். வெற்றி என்பது இறுதியில் தான் தெரியும். கப்பலை கயிறு மூலம் இழுக்கும் பணி வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கும். அப்போது மாளவியாவுடன் எஸ்.சி.ரட்னாவும் ஈடுபடுத்தப்படும்.  மேலும் நைலான் கயிறு வடத்திற்குப் பதிலாக பலம் வாய்ந்த இரும்பு வடம் கொண்டு இழுக்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
         கப்பல் இழுக்கும் பணி நடைபெறுவதையொட்டி மெரினா, பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதியே      
பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தது. அதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.







       
                                                                              
       

தானாகவே இணைப்பு துண்டிக்கப்படும் அலைபேசிகள்


திருவொற்றியூர், நவ.8:சென்னையில் உபயோகிக்கப்படும் அலைபேசிகளின் இணைப்புகள் தானாகவே துண்டிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து அலைபேசி உபயோகிப்பாளர்கள் கூறியது,
    சென்னையில் கடந்த சில நாள்களாக அலைபேசி மூலம் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென எதிர்முனையில் பேசுபவர்களின் குரல் கேட்பதில்லை. அலைபேசித் தொடர்பு அமைதியாகிவிடுகிறது. ஆனால் உபயோகிக்கும் நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதாவது பேசுவதற்கான கட்டணம் மட்டும் வழக்கம்போல் எடுத்துக் கொள்கின்றனர். பிறகு நாம் ஹலோ சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். இணைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் தொடர்பு கொள்ளவேண்டியதுள்ளது. மேலும் அலைபேசி இணைப்பில் பேசிக்கொண்டிருக்கும்போதே 'தங்கள் அழைப்பு ஹோல்டில் வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரம் காத்திருக்கவும் அல்லது மீண்டும் தொடர்பு கொள்ளவும்' என பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கிறது.   நாம் சற்று நேரம் பொறுமையாக காத்திருந்தால் மீண்டும் இணைப்பு வருகிறது. அதற்குள் அடுத்த அழைப்புக்குரிய கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளது. நமது அலைபேசி சேவையில் மட்டும்தான் இந்த குறைபாடு உள்ளது என்ற தொடக்கத்தில் நம்பியவர்கள் பலர். ஆனால் இப்பிரச்னை அலைபேசி உபயோகிக்கும் பலருக்கு இருப்பது பிறகுதான் தெரியவந்தது.  இது குறித்து வெவ்வேறு அலைபேசி உபயோகிப்பாளர்கள், தத்தமது வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தொடர்பு கொண்டால், 'அப்படியா, ஒரு சேவைக் குறைவும் இல்லை. இருந்தாலும் கவனிக்கிறோம்' என அலட்சியமாகப் பதில் அளிக்கின்றனர் என்றனர்.
    இது குறித்து தகவல் கிடைத்தவுடன் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை  ஆணைய வளைத்தளத்தில் சேவை நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் மூலம் தகவல் பெற முயன்ற போது ஒருவரின் அலைபேசி தொடர்பு எண்ணும் அதில் இல்லை. பொறுப்பு அதிகாரிகள் அனைவருக்கும் நிரந்த இணைப்புத் தொலைபேசி எண்கள் (LAND Line) தான் தரப்பட்டுள்ளன. அதில் தொடர்பு கொண்டாலும் சம்மந்தப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவோ அல்லது தெளிவானப் பதிலைப் பெறவோ முடியவில்லை.  













 

Sunday, 4 November 2012

6 கப்பல் சிப்பந்திகள் கடலில் இறந்து போன கோரச்சம்பவத்திற்கு காரணம் என்ன?


கப்பலிற்கு தரச் சான்று வழங்குவதில் அரசியல் பின்னணி ?

திருவொற்றியூர், நவ.3.: சென்னை மெரினா கடற்கரை அருகே கரை தட்டிய கப்பலில் வேலை செய்து வந்த 6 சிப்பந்திகள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் பல்வேறு பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
     கடந்த அக்.31 -ஆம் தேதி புதன்கிழமை நிலம் புயல் சென்னை அருகே கரையைக் கடந்தது.  இப்புயலில் சிக்கி நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.டி. பிரதீபா காவேரி என்ற எண்ணெய் கப்பல் கடல் கொந்தளிப்பில் சிக்கித் தத்தளித்தது. அப்போது கப்பலில் இருந்து உயிர்காக்கும் படகு மூலம் தப்பிக்க முயற்சித்த 22 சிப்பந்திகளில் 6 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்கள்.
   சென்னைத் துறைமுகத்தின் கடல் எல்லையில் நடந்த இச்சம்பவம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  இத்தனைக்கும் இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்திய தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து வெகு அருகாமையில்தான் உள்ளது.  மேலும்  இந்திய கடற்படையின் அலுவலகமான ஐ.என். எஸ். அடையாரும் இதற்கு அருகே தான் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் எவ்வித உதவியும் கிட்டாமல் 6 சிப்பந்திகள் இறந்து போனது வருத்தமளிக்கிறது. மேலும் மீட்கப்பட்ட 16 பேரில் 5 பேர் மட்டுமே தானாகவே நீச்சல் அடித்து தப்பி கரையை அடைந்துள்ளனர். மீதி 11 பேரை மீனவர்கள் தான் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது.  கடல் மிகவும் கொந்தளிப்பாக இருப்பதால் தங்களால் தற்போது வர இயலாது என துறைமுகம், கடலோரக் காவல்படை, கடல்சார் வாணிபத்துறை அதிகாரிகள் கைவிரித்திருந்த நிலையில்
துணிச்சலாகச் செயல்பட்டு உரிய நேரத்தில் 11 பேரைக் காப்பாற்றிய மீனவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என உயிர் தப்பிய சிப்பந்திகள் கூறினார்.
குளறுபடியில் உச்சத்தில் நடந்த கோரச் சம்பவம்:      எம்.டி.பிரதீபா காவேரி கப்பல்  ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தும் கப்பலில் ஏற்பட்ட கோளாறுகளைச் சரி செய்யவோ அல்லது கப்பல் பழுது பார்க்கும் தளத்திற்கு எடுத்துச் செல்லவோ கப்பல் நிறுவனம் நடவடிக்களைக் மேற்கொள்ளாமல் மெத்தனமாகச் செயல்பட்டுள்ளது.   மேலும் ஊழியர்களுக்கும் 6 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை,  கப்பலில் பணியாற்றுவோருக்கு தேவையான உணவுப் பொருள்கள் கூட வழங்கப்படவில்லை புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 28 ஆம் தேதி புயல் சென்னைத் துறைமுகத்தின் புயல் எச்சரிக்கை பிரதீபா காவேரி கப்பலின் ஊழியர்களை மேலும் கவலையடையச் செய்துவிட்டது.  இதனையடுத்து கப்பலைக் காப்பாற்றும் பல்வேறு முயற்சியில் கேப்டன் மற்றும் தகவல் தொடர்பு அலுவலரும் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில்தான் கப்பல் கைவிடப்படும் அபாய நிலை குறித்து கப்பலின் கேப்டன் அறிவித்ததாகவும் அதன் பிறகே உயிர்காக்கும் படகு மூலம் தப்பிக்க முயற்சி மேற்கொண்டதாகவும் உயிர் தப்பியவர்கள் தெரிவிக்கின்றனர்.
    ஆனால் சென்னைத் துறைமுகம் வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வேறு மாதிரியாக உள்ளன.  எம்.டி.பிரதீபா காவேரியிலிருந்து இழுவைக் கப்பல்களை அனுப்பும்படி உதவி கேட்டு தொடர்பு கொண்டது உண்மைதான்.  ஆனால் கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டதால் இழுவைக் கப்பல்களை இயக்க மாலுமிகள் மறுத்துவிட்டனர்.  மேலும் கப்பலின் அபாய நிலை குறி்த்து கிழக்குக் கடலோரக் காவல்படையினருக்கு சென்னைத் துறைமுக அதிகாரிகள் தகவல் பரிமாற்றம் செய்துள்ளனர்.   மேலும் புதுடில்லியில் உள்ள கப்பல்த்துறை அமைச்சகம் சார்பில் இந்திய கடலோரக் காவல்படையின் தலைமையகத்திற்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இழுவைக் கப்பல்களின் மாலுமிகள்
தெரிவித்தது போலவே கடலோரக் காவல்படையினரும் தெரிவித்துள்ளனர்.
          இந்நிலையில்  கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி துறைமுக அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட கடலோரக் காவல் படையினர்,  'கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது. இருப்பினும் பிரதீபா காவேரி கப்பலுக்கும், அதில் இருக்கும் சிப்பந்திகளுக்கும எவ்வித ஆபத்தும் இல்லை. புயல் கரையைக் கடந்தவுடன் சிப்பந்திகளை மீட்கலாம். அதுவரை சிப்பந்திகள் கப்பலிலேயே இருக்கட்டும். அதுவே பாதுகாப்பானதாக இருக்கும்'  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை மீறித்தான் சிப்பந்திகள் செயல்பட்டு ஆபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என துறைமுக தரப்பில் கூறப்படுகிறது.
கடல்சார் வாணிபத் துறை அலட்சியமா?    இதற்கிடையே கப்பல் நிறுவனம் குறித்தும் பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. பொதுவாகவே 25 ஆண்டுகளுக்கும் மேலாக கப்பல்களை தொடர்ந்து இயக்க பல்வேறு கட்டுப்பாடுகளை கடல் சார் வாணிபத்துறை விதித்துள்ளது. எம்.டி.பிரதீபா காவேரி கப்பல் 31 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இக்கப்பலின் உறுதித் தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து மும்பையில் உள்ள கடல்சார் வாணிபத்துறை உயர் அதிகாரி கூறுகையில்,
'விபத்தில் சிக்கிய இக்கப்பலின் உறுதித் தன்மை குறி்த்து ஆய்வு செய்ய கடந்த 6 மாதங்களாகவே முயற்சி செய்து வந்தோம். ஆனால் கப்பல் நிறுவனத்தினர் பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லியே கப்பலை ஆய்வுக்குக் கொண்டு வராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.  ஆனால் கப்பலை ஆய்வு செய்ய உரிய  உத்தரவினையும் எங்கள் துறை உயர் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இதற்கு கப்பல் நிறுவனத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
  ஒரு வேளை இக்கப்பலை உரிய நேரத்தில் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தி இருந்தால் இந்த கோரச் சம்பவத்தையும், 6 சிப்பந்திகளின் உயிரிழப்பையும் தவிர்த்திருக்க முடியும் ' என்றார் அந்த அதிகாரி.
   

    

Friday, 2 November 2012

சென்னையில் கரை தட்டிய டேங்கர் கப்பல்


திருவொற்றியூர், அக்.31:நீலம் புயல் சென்னையைத் தாக்கியதில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த 'எம்.டி. பிரதீபா காவேரி' என்ற ஆயில் டேங்கர் கப்பல் சென்னை பட்டினம்பாக்கம் அருகே கரை தட்டியது.  இக்கப்பலை மீட்பது குறித்து சென்னைத் துறைமுகம், கடல்சார் வாணிபத் துறை, கடலரோக் காவல் படை அதிகாரிகள்
தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
     மும்பையைச் சேர்ந்த பிரதீபா சிப்பிங் கம்பெனி லிட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான 'எம்.டி.பிரதீபா காவேரி' என்ற டேங்கர் கப்பல் மும்பையிலிருந்து கிளம்பி விசாகபட்டினம் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதில் கேப்டன் உள்ளிட்ட 37 சிப்பந்திகள் கப்பலில் இருந்தனர். சரக்கு ஏதும் ஏற்றாமல் காலியாகச் சென்று கொண்டிருந்த இக்கப்பல் சிப்பந்திகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிக் கொள்வதற்காக சென்னைத் துறைமுகம் அருகே அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நீலம் புயலின் தாக்கம் அதிகரித்ததையடுத்து கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டது. சென்னைத் துறைமுகத்தில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதினைந்திற்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுக்கடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நங்கூரமிடப்பட்டன.
   இவ்வாறு நடுக்கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்த 'எம்.டி. பிரதீபா காவேரி' என்ற கப்பல் புதன்கிழமை கடல் கொந்தளிப்பில் சிக்கி, ராட்ச அலைகளால் பட்டினம்பாக்கம் அருகே கரை ஒதுங்கியது. கப்பலை மேலும் இயக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது.  கரை தட்டிய கப்பல் ஒரு புறமாகச் சாய்ந்தது. இதனால் இதில் இருந்த சிப்பந்திகள் கடலில் குதித்து தப்பி்க்க முயற்சித்தனர்.  இது குறி்த்து தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினர் நவீன படகுகளில் சென்று கப்பலில் இருந்த சிப்பந்திகளை மீட்டனர்.
 கப்பலை மீட்க முடியுமா?:
1981-ல் ஜப்பானில் கட்டப்பட்ட இக்கப்பல் 31 ஆண்டுகளை கடந்துவிட்டது. எனவே இதன் இயந்திரங்கள் அபாய நிலையைச் சமாளிக்கும் திறன் இழந்துவிட்டது எனவும், எனவே அப்படியே பத்திரமாக இழுத்துச் செல்லமுடியுமா? அல்லது உடைத்துத்தான் எடுக்க வேண்டுமா என்பது குறித்தெல்லாம் ஆய்விற்குப் பிறகே கூறமுடியும் என கடல்சார் வாணிபத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

NEWS ITEMR:2

கப்பல் நிறுவனம்,  துறைமுக நிர்வாகங்களின் மெத்தனமே கரை தட்டியதற்கு காரணம்
காணாமல் போன 5 பேர் கதி என்ன?
நீந்திக் கரை சேர்ந்த கப்பல் ஊழியர்கள் பேட்டி
திருவொற்றியூர், நவ.1: தமிழகத்தைத் தாக்கிய புயலில் சிக்கி சென்னை அருகே கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.டி. பிரதீபா காவேரி என்ற எண்ணெய்க் கப்பல்  புதன்கிழமை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் இழுத்து வரப்பட்டு பட்டினம்பாக்கம் கடற்கரை அருகே கரை தட்டி நிற்கிறது.  இதனையடுத்து கப்பலில் பணி செய்து வந்த ஊழியர்கள்  படகு மூலம் தப்பிச் செல்ல முயன்றனர்.  அப்போது படகு கவிழ்ந்ததில் ஆனந்த் மோகன்தாஸ் என்பவர் பொறியாளர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.
 நடந்தது என்ன?:
     மும்பையைச் சேர்ந்த பிரதீபா சிப்பிங் கம்பெனி என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இக்கப்பல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை ஏற்றிச் செல்லும் வசதி கொண்டது.  இக்கப்பல் ஒப்பந்த அடிப்படையில் இந்தியன் ஆயில் கார்போரேசன் (ஐ.ஓ.சி) நிறுவனத்திற்கு டீசல்களை ஏற்றி வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இதன்படி கடந்த செப்.25-ல் எல்.டி.ஓ.வகை டீசலை ஏற்றிக்கொண்டு சென்னைத் துறைமுகம் வந்தது பிரதீபா காவேரி  டீசலை இறக்கிய பிறகு காலியாக துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடப்பட்டிருந்தது.  இந்நிலையில்  ஐ.ஓ.சி. நிறுவனத்துடனான ஒப்பந்தம் காலாவதியானதால் புதிய ஆர்டர்களுக்காக காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டது.  இதற்கிடையே உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் தீர்ந்துவிட்டதால் இதற்காக கடந்த அக்.8-ம் தேதி மீண்டும் துறைமுகத்திற்குள் வந்தது. ஆனால் வழக்கமான முகமை நிறுவனம்,  தனக்கு அதிக பாக்கி வைத்திருப்பதால் மேற்கொண்டு  பொருள்களை வழங்க முடியாது என மறுத்துவிட்டது. இருப்பினும் அவசரத் தேவை கருதி வேண்டுகோளின் அடிப்படையில் ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருள்களை மட்டும் அந்த ஏஜென்சி வழங்கியது.
இதன் பிறகும் கப்பலை பழுது பார்க்கும் தளத்திற்குக் கொண்டு செல்லவோ, ஊழியர்களுக்கு தேவையான அத்தியாவசித் தேவைகளை பூர்த்தி செய்யவோ கப்பல் நிறுவனம் துரித முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர்.
சென்னைத் துறைமுகம் மெத்தனம்:
     இந்நிலையில் கப்பல் பழுது, உணவுப் பஞ்சம், சம்பளம் வழங்காதது,  பணி ஒப்பந்தம் முடிந்தும் விடுவிக்கப்படாதது உள்ளிட்ட துயரங்களால் இன்னலுற்ற கப்பல் சிப்பந்திகளுக்கு புயல் வடிவில் புதிய பிரச்னை ஏற்பட்டது.  கடந்த அக்.28-ம் தேதி சென்னைத் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனையடுத்த கப்பலுக்கு ஆபத்து நேரிடலாம் எனக் கருதிய பிரதீபா கப்பலின் கேப்டன் சென்னைத் துறைமுகத்தில் உள்ள வி.டி.எம்.எஸ் (கப்பல் போக்குவரத்து மேலாண்மை பணி) அதிகாரிகளுக்கும், கடல்சார் வாணிபத்துறை (எம்.எம்.டி.) அதிகாரிகளுக்கும் கப்பலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து விளக்கியதாகவும், எனவே கப்பலை நடுக்கடலுக்குக் கொண்டு செல்ல இரண்டு இழுவைக் கப்பல்களை அனுப்பும்படி கோரிக்கை விடுத்ததாக கப்பலின் ரேடியோ அலுவலர் ரூபக் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.
 முதலில் இதற்கு ஒப்புதல் தெரிவித்த அதிகாரிகள், சாக்குப் போக்குச் சொல்லியவாறே புதன்கிழமைவரை இழுவைக் கப்பல்களை அனுப்பவில்லை. இதற்கிடையே காற்றின் வேகம் அதிகரித்து, கடல் கொந்தளித்ததால் கப்பலை இயக்க இறுதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் கப்பல் நகரவே இல்லை. இதற்கிடையே கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு வந்துவிட்டது என்கிறார் ரூபக் குமார்.
 உயிருக்குப் போராடிய ஊழியர்கள்:
     இதனையடுத்து நடந்த சம்பவங்கள் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கப்பல் ஊழியர்கள் கூறியது,
கப்பல் மூழ்கிவிடும் ஆபத்து ஏற்பட்டும் எவ்வித உதவியும் கிட்டாத நிலையில் அனைத்து ஊழியர்களையும் ஓரிடத்திற்கு வரும்படி கேப்டன் அழைத்தார். பின்னர் கப்பல் ஆபத்தில் சிக்கியுள்ளதால் உயிர்காக்கும் படகுகள் மூலம் தப்பிச் செல்லும்படி அவர் தெரிவித்தார். அப்போது கப்பலில் இருந்த 37 பேரில் 22 பேர் மட்டும் உடனடியாக தப்பிச் செல்ல முடிவெடுத்து படகை இறக்கி நாங்களும் அதில் ஏறினோம். ஆனால் அந்தப் படகும் பழுதடைந்தநிலையில் இருந்தது அப்போதுதான் தெரியவந்தது.  இந்நிலையில் கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. ஐந்து பேர் மட்டும்
நீந்திக் கரைக்கு வந்தோம். பின்னர் கடலில் தத்தளித்தவர்களை மீனவர்கள் மீட்டனர். அதற்குள்  ஆனந்த் மோகன்தாஸ் என்ற பொறியாளர் கடலில் மூழ்கி இறந்துவிட்டார்.  ஐந்து பேரைக் காணவில்லை. அவர்கள் கதி என்னவென்றும் தெரியவில்லை. வியாழக்கிழமைதான் கடலோரக் காவல்படையினர் ஹெலிகாப்டரில் வந்து கப்பலில் இருந்த 15 பேரை மீட்டனர்.
       மொத்தத்தில் கப்பல் நிறுவனத்தின் அலட்சியம்,  துறைமுகம், சென்னைத் துறைமுக நிர்வாக அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, அவசரத்திற்கு உதவாத கடலோரக் காவல்படை ஆகிவற்றோடு புயல் என்ற இயற்கை சீற்றமும் சேர்ந்து எங்களை சோதித்து விட்டன என்பதே உண்மை என கண்ணீரோடு தெரிவித்தனர்.

ITEM 3
.
ஒப்பந்தம் முடிந்தும் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆனந்த்
கடலில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்
திருவொற்றியூர், நவ.1:
கரை தட்டிய கப்பலில் இருந்து தப்பிக்க முயன்றபோது படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி இறந்து போன ஆனந்த் மோகன்தாஸ் (31) குறி்த்த தகவல்கள்:
   இறந்து போன ஆனந்த விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவைசே சேர்ந்த நேசல் கிராமத்தைச் சேர்ந்தவர். கப்பல் பொறியியலில் பட்டம் பெற்ற ஆனந்த் பிரதீபா கப்பல் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பே ஒப்பந்தம் முடிந்துவிட்டபோதும் அவரை கப்பல் நிறுவனம் விடுவிக்காதது மட்டுமல்ல ஆனந்தின் சம்பளத்தையும் நிலுவையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல் இக்கப்பலில் வேலை செய்து வந்த பெரும்பாலான ஊழியர்களுக்கு 5 முதல் 7 மாதங்கள் சம்பளத்தை பாக்கியாக வைத்துள்ளது கப்பல் நிறுவனம்.  எனவே பாக்கிச் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு விரைவில் இந்நிறுவனத்திலிருந்து வெளியேற முடிவு செய்திருந்த நிலையில்தான் இக்கோரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது என கப்பலில் பணிபுரிந்து உயர் தப்பிய அவரது சக நண்பர்கள் தெரிவித்தனர்.
5 பேரின் கதி என்ன?
   கேப்டன் உள்ளிட்ட மொத்த ஊழியர்கள் 37 பேரில் 16 பேர் புதன்கிழமை மீட்கப்பட்டனர். ஆனந்த் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். கப்பலில் இருந்த 15 பேரை
கடலோரக் காவல்படையினர் வியாழக்கிழமை மீட்டுள்ளனர். இந்நிலையில்
படகு கவிழ்ந்ததில் காணாமல் போன கப்பல் ஊழியர்கள் 5 பேரின் கதி என்ன? என்பது குறித்து வியாழக்கிழமை இரவுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

Tuesday, 30 October 2012

வடக்கு வாழ்கிறதா? தேய்கிறதா?



கழிவுநீர், குப்பைகளால் நாசமாகும் வடசென்னை கடற்கரை

சிறப்புத் திட்டத்தை அரசு அறிவிக்க கோரிக்கை

முகவை.க.சிவகுமார்

                                       வடசென்னையில் காசிமேடு முதல் எண்ணூர்வரை உள்ள நீண்ட கடற்கரை பகுதி கழிவு நீர் மற்றும் குப்பைகளால் சுற்றுச் சூழல் சீர்கேடு அடைந்து வருகிறது.
                                     ஒரு காலத்தில் கடற்கரை கிராமங்களாக இருந்த  மைலாப்பூர், திருவல்லிக்கேணி, சென்னைபட்டணம், வண்ணையம்பதி,  திருவொற்றியூர் உள்ளிட்டவைதான் இன்று சென்னை மாநகராக மாறியது என்றால் அது மிகையல்ல.   நாகரீகம், அறிவியல் வளர்ச்சியால் கடற்கரை கிராமங்கள் நகரங்களாக உருமாறி விட்டன.
                                 சிறு படகு துறையாக இருந்த மெரினா இன்று ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.  லட்சக் கணக்கான மக்கள் மூச்சு வாங்கும் இடமாக மெரினா மாறிவிட்டது என்றே கூறலாம். பெசன்ட் நகர் , பட்டினம்பாக்கம் ஆகிய இடங்களிலும் கடற்கரை மக்கள் பயன்பாட்டில் உள்ளது.  தமிழக அரசு மெரினாவை அழகுபடுத்த, பராமரிக்க என ஆண்டு தோரும் கணிசமான தொகையைச் செலவு செய்கிறது. தென் சென்னையில் வசிப்போர்  மெரினாவில் காலை நேரத்தில் நடைபயிற்சி செல்வதை தனி சுகமென கருதுகின்றனர்.
கடலரிப்பில் காணாமல் போன கோயில்:   ஆனால் வடசென்னையில் உள்ள  நீண்ட கடற்கரை பகுதி தற்போது குப்பை கொட்டும் இடங்களாகவும கழிவு நீர் வடிகால்களாவும் மாறி வருவதை அரசு
கண்டும் காணமால் இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.  காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மணல் நிறைந்த அழகிய கடற்கரைகள் முன்பு இருந்தன.  மேலும் காசி விசுவநாதர் கோயில், பட்டினத்தார் கோயில், அகத்தியர் கோயில், ராமலிங்கர்மடம் என வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களும், அகலமான மணற்பரப்பும், மரங்கள் அடங்கிய தோப்புகளும் இக்கடற்கரைக்கு அழகு சேர்த்தன.  ஆனால் சென்னைத் துறைமுக விரிவாக்கப்பணிகளால்  ஏற்பட்ட கடலரிப்பால் வடசென்னை கடற்கரையின் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு நிலத்தை கடல் காவு கொண்டு விட்டது. இதில் கடலில் மூழ்கிய சிறப்பு மிகுந்த காசி விசுவநாதர் கோவிலும் அடக்கம்.
கடலில் கலக்கும் கழிவுநீர்:
   மணலி,எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் இருபதுக்கும் மேற்பட்ட உரம், ரசாயனம் தயாரிக்கும் கனரக ஆலைகள் உள்ளன. இவைகளிலிருந்து வெளியேற்றப்படும் ஆலைக் கழிவு நீர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் நகராட்சிகளில் கழிவு நீரும் கடலில்தான் கலக்கின்றன. இதனால் கழிவுநீர் கலக்கும் பகுதியில் மக்கள் நடமாடமுடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.
இப்பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களின் முக்கிய தொழிலே மீன் பிடிப்பதுதான். கடலில் தொடர்ந்து கலந்து வரும் ரசாயன கழிவுகளால் இப்பகுதியில் மீன்வளம் பெருமளவு குறைந்துபோய்விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குப்பை கொட்டுமிடம்:
சென்னை மாநகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூரில் உள்ள வளாகத்தில் கொட்டப்படுகின்றன. ஆனால் தனியார் நிறுவனங்கள் மற்றும் மாவு மில்கள் போன்றவற்றில் வெளியேற்றப்படும் குப்பைகள் எண்ணூர் விரைவு சாலையில் சுங்கச் சாவடி கடற்கரை அருகே வண்டி வண்டியாகக் கொ்ட்டப்படுகின்றன. இதில் இரவு நேரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகள் அப்போதே தீவைக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் புகைமண்டலத்தால் வாகனங்களில் செல்வோர் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். காசிமேடுமுதல் நல்ல தண்ணீர் ஓடைக் குப்பம்வரை குப்பைகளால் பல இடங்களில் 'மலைக்குன்றுகள்' தோன்றியுள்ளதைக் காணலாம்.
   திருவொற்றியூர் கடற்கரையிலும் இதேபோல் தோடர்ந்து குப்பைகள் கடற்கரையில் கொட்டப்படுகின்றன. திருவொற்றியூர் கடற்கரை, சுங்கச் சாவடி ஆகிய இடங்களில்  ஒரு புறக்காவல் நிலையங்கள் இருந்தும் குப்பை கொட்டுவதைத் தடுப்பது தங்கள் வேலை அல்ல என போலீஸாரும் கண்டு கொள்வதில்லை.
சமூக அமைப்பு கோரிக்கை:
இது குறித்து திருவொற்றியூர் சமூக சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோட்டீசுவரன் கூறியது,
வடசென்னையில் நீண்ட நெடிய கடற்கரை கடலரிப்பால் பாதிப்பிற்கு உள்ளானது. ஆனால் தற்போது இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளதால் கடற்கரை நெடுகிலும் மணல் குவிந்துள்ளது. ஆனால் இப்பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதாலும், கழிவுநீர்
கலப்பதாலும் கடற்கரை பகுதி கடுமையாக மாசடைந்து உள்ளது. பல பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. சுமார் 20 லட்சம் பேர் வசிக்கும்  வடசென்னையில் எவ்வித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லை. துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்திற்காக
கடலோர மீனவ மக்கள் அடுக்குமாடி வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
எனவே சாலை திட்டம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிறைவேறும் என உறுதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் வட சென்னை கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதன்மூலம் மெரினா போல் இப்பகுதியும் அழகாக மாறும். முதற்கட்டமாக் குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீர் கலப்பதையும் உடனடியாக தடுக்க வேண்டும் என்றார் கோட்டீசுவரன்.
  தெற்கு வாழ்கிறது! வடக்கு தேய்கிறது! என்ற கோஷம் கடந்த சில ஆண்டுகளாக
வடசென்னைவாசிகள் ஓங்கி ஒலிக்கும் நிலையில் வடசென்னை கடற்கரையை
அழகுபடுத்தும் முயற்சிகளை அரசு உடனே துவங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.



                                                                              
       

                                                                              
       

மகளிர் சுய உதவி குழுக்கள் திசை மாறுகின்றனவா?

முகவை.க.சிவகுமார்,

'வறுமை ஒழிய வேண்டும் !  ஏழ்மையை விரட்ட வேண்டும் ! ' என்ற கோஷங்கள் எல்லாம் இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே நாம் கேட்டவைதான்.  இவற்றை எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற சிந்தனை மிகுந்த சினிமா கலைஞர்கள் எல்லாம் நகைச்சுவையாக விமர்ச்சித்தவை ஏராளம். காங்கிரஸ், ஜனதா, பாரதீய ஜனதா, தேசிய முன்னணி, தேசிய முற்போக்கு கூட்டணி, ஐக்கிய முன்னணி என பல்வேறு ஆட்சியாளர்கள் இந்தியாவை 63 ஆண்டு காலம் ஆண்டுள்ளனர். ஆனால் வறுமையும் ஒழியவில்லை. ஏழ்மையையும் விரட்ட முடியவில்லை. காரணம் என்ன?  வறுமையையும், ஏழ்மையையும் ஒழிக்க எந்த திட்டம் கொண்டுவந்தாலும் முதலில் துவக்கப்படும்போது அதன் குறிக்கோள்கள் சிறப்பாக இருக்கும்.  பின்னர் படிப்படியாக அரசியல் புகுந்துவிடும். பின்னர் திட்டமே செயலற்றுப் போய்விடும். இது கடந்த கால வரலாறு.
                        இதில் ஒன்றாக மகளிர் சுயஉதவி குழுக்கள் இயக்கமும் இணைந்து விடுமோ என்ற ஐயப்பாடு தற்போது எழுந்துள்ளது. 1989-ல் தர்மபுரி மாவட்டத்தில் சிறிய அளவில் துவங்கப்பட்ட இத்திட்டம் 21 ஆண்டுகளில் இது தல விருட்சமாய் வளர்ந்துள்ளது என்பது அதன் புள்ளிவிபரங்களைப் பார்த்தாலே புரியும்.
                    2010, மார்ச் 31 தேதியில் நகர்ப்புறம், ஊரகம் என மொத்த மகளிர் குழுக்களின் எண்ணிக்கை 4,41,311.   இவைகளி்ல் 69.91 லட்சம் பெண்கள் உறுப்பினராக உள்ளனர். இவர்களின் மொத்த சேமிப்புத் தொகை ரூ. 2,568 கோடி ஆகும்.  மொத்த வங்கிக் கடன் தொகை ரூ. 8,130 கோடி ஆகும்.  தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 469 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) மற்றும் நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் போன்ற மக்கள் அமைப்புகள் மூலம்
இத்திட்டம் சிறப்பாகவே செயல்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறது என்றாலும் கூட திட்டம் துவக்கப்பட்டபோது அறிவித்த நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா?
திட்டம் துவங்கியபோது....
             வறுவைக் கோட்டிற்கு கீழே (பி.பி.எல்) வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் 10 முதல் 20 பேர் வரை உறுப்பினர்களாகக் கொண்டு முதலில் குழு அமைக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் சேமிக்கும் நிதியை 'பொதுநிதி' என்ற பெயரில் வரவு வைக்க வேண்டும். அந்த நிதியை வைத்து ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும். இதில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும். மேலும் தொழிலை விரிவு படுத்த வங்கிக் கடனைப் பெறலாம். வங்கியில் வாங்கிய கடனை தவணை தவறாமல் கட்டி வந்தால் இரண்டாவது கடனையும் வங்கிகள் வழங்கும். பின்னர் சுழல் நிதியாக ரூ.10 ஆயிரம் சுழல் நிதியாக வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் குழு ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்ட கடன் தற்போது முதல் கடனாக ரூ.50 ஆயிரம், இரண்டாவதாக ரூ.ஒரு லட்சம், மூன்றாவதாக ரூ.1.50 லட்சம் என கடன் வழங்கப்படுகிறது.
                     இத்திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் 1983-ல் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் மூலம் மாவட்டங்கள்தோறும் மகளிர் திட்டங்கள் என்ற பெயரில் சுய உதவி குழுக்கள் நிர்வகிக்கப்படுகின்றன. கணினி பயிற்சி, கட்டுமானம், ஓட்டுநர், ஆயத்த ஆடைகள், செவிலியர் போன்ற தொழிற்பயிற்சிகளும், தையல், காகிதப் பை, மெழுகுவர்த்தி, அப்பளம் தயாரித்தல் போன்ற பயிற்சிகளும் இத்திட்டம் மூலம் கற்றுத் தரப்படுகின்றன. இதுவரை 56,748 பெண்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல்வேறு பணிகள்  மூலம் ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரம் சிறப்படையும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
  கந்து வட்டி ஒழிந்து விட்டதா?சுய உதவிக் குழுக்கள் அமைத்து, தொழில் தொடங்கி, வாழ்வாதாரம் பெருகும் என நோக்கம் இருந்தாலும் 4.41 லட்சம் குழுக்களில் எத்தனை குழுக்கள் இவ்வாறு செயல்படுகின்றன என்ற கேள்விக்குறிதான். இது குறித்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றில் நீண்ட நாள்களாக முதுநிலை பயிற்றுனராக உள்ள மைக்கேல் கூறியது,
எந்த திட்டம் என்றாலும் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். முதலில் நிறைகள் என்றால்....
   வீட்டில் அடைந்து கிடந்த பெண்களை வெளி உலகத்திற்கு கொண்டு வந்துள்ளது இத்திட்டம், கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, பெண் சிசுக்கொலை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, பெண்கள் மூலம் வியாபாரம் பெருகி உள்ளது, தண்ட வட்டி, கந்து வட்டி குறைந்துள்ளது, சுய தொழில் வளர்ந்துள்ளது. குடும்பத்தில் பெண்களின் மதிப்பு உயர்ந்துள்ளது.சமூக பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது.
குறைகள் என்றால்.....
                      இருப்பினும் குழுக்கள் அமைப்பதில் பல்வேறு முறைகேடுகள் துவங்கி உள்ளன.  தொண்டு நிறுவனங்கள் குழுக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகின்றன. தொண்டு நிறுவனங்கள் அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கி உள்ளன.  குழுக்களில் உள்ள பெண்களை தங்களுக்குச் சாதமாக்க அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். இதனால் கடந்த தேர்தல்களில் இது வெளிப்படையாக தெரிந்தது.  இது குறித்து மேலும் ஒரே பெண் பல்வேறு குழுக்களில் பங்கேற்று கடன் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது என்றார்.
                      ஏழை மக்களின் வாழ்வு உயர வேண்டும். இதற்கு திட்டங்கள் பல வேண்டும். இதில் மகளிர் சுய உதவி குழுத் திட்டமும் என்றுதான் ஐயமில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இந்த பயணம் கடந்த சில ஆண்டுகளாக திசை மாறி வருகிறது என பல்வேறு சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றன. எனவே அரசு, தொண்டு நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் என பல்வேறு தரப்பினரும் இப்பயணத்தை நேர்வழிக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.




  

ஜாதி இரண்டொழிய வேறில்லை....




முகவை.க.சிவகுமார்.     
 
      சமூக ஆர்வலர் ஒருவர் ஆற்றிய உரை: தங்கள் வாழ்க்கையில் நடைபெற்றுள்ள மிக முக்கிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டு, அதற்கு உதவியோரை வரிசைப்படுத்துங்கள். பின்னர் அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள். அதில் தங்களுக்கு உதவியோர் பெரும்பாலானோர் வேறு சாதிகளைச் சேர்ந்த நண்பர்களாகவே இருப்பர். எனவே சொந்தக்காரர்கள் பெரும்பாலும் அதிகம் உதவியதில்லை. எனவே சாதிகளை மறந்து விட்டு மனித நேயத்தை வளர்க்க பாடுபடுங்கள் என முடித்தார்.  
      1906-ல் ஆங்கிலேயரின் ஏகபோக வணிக முறையைக் கண்டித்து சுதேசி கப்பல் கம்பெனி மூலம் தூத்துக்குடி-கொழும்பு இடையே கப்பலோட்டினார் வ.உ.சி. இதனால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசும் பயணக் கட்டணத்தை ஒரு ரூபாயாக குறைத்தது. இதனையடுத்து சுதேசி கப்பல் நிறுவனமும் தனது கட்டணத்தை 50 பைசாவாக்கியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் பயணத்தையே இலவசமாக அறிவித்தது. விளைவு,  சுதேசி கப்பல்கள் காலியாகச் சென்றன. பெருத்த நட்டத்திற்கிடைய 1909-ல் சுதேசி கப்பல் கம்பெனி திவாலாகியது. 
     கோயம்பத்தூர் சிறைச்சாலையில் செக்கிழுத்த வ.உ.சி நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்தபோது அவரை வரவேற்க வந்தவர்கள் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட இருவர் மட்டுமே. சொத்துக்களை, வழக்கறிஞர் உரிமத்தை இழந்து தன் வாழ்நாளின் இறுதி கட்டத்தில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே போராடி 1936 நவ.18-ல் வ.உ.சி. மறைந்தார்.
     1800-களின் தொடக்கத்தில் கொங்கு நாட்டின் பாளையக்காரர்களாக இருந்து  ஆங்கிலேயர்களை எதிர்த்தார் தீரன் சின்னமலை. ஏராளமான இளைஞர்களை ஒன்று திரட்டி பிரெஞ்ச் நாட்டின் ராணுவப் பயிற்சி பெற வைத்தார். இதே காலகட்டத்தில் திப்பு சுல்தான் தனது மைசூர் படை மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டபோது அவருக்கு தனது படையுடன் பகிரங்கமாக உதவியவர் சின்னமலை. திப்புசுல்தானைத் தோற்கடித்த ஆங்கிலேயர் தீரன் சின்னமலையையும் பழிதீர்த்தனர்.  காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆடிப் பெருக்கு தினமான 1805  ஜூலை 31-ல் சங்ககிரியில் தீரன் சின்னமலை தூக்கிலிட்டப்பட்டார்.
    முதல் இந்திய சுதந்திரப் போர் துவங்குவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே வீரபாண்டிய கட்டப்பொம்மன், மருது பாண்டியர் உள்ளிட்டோர் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினர். 1789-ல் 12 ஆயிரம் வீரர்களைத் திரட்டி ஆங்கிலேயரின் கூட்டாளியாகச் செயல்பட்ட ஆற்காடு நவாபை மருது பாண்டியர்கள்  விரட்டியடித்தனர். கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு தப்பி வந்த ஊமைத்துரைக்கு அடைக்கலம் வழங்கினர். இதனையடுத்து ஆங்கிலேயர்கள் மருது பாண்டயர்களை வீழ்த்தினர்.  மருது சகோதரர்கள் தூக்கிலிடுவதற்கு முன்பு கூறிய வரிகள் இவை: நண்பர்களுக்காக போராடினோம்....நாட்டிற்காக உயிர் துறக்கிறோம்.
     எட்டையபுரத்தில் சுப்பிரமணியனாகப் பிறந்து குறுகிய காலத்திலேயே தேசியக்கவி எனப் போற்றப்பட்டவர் பாரதி. தனது பாடல்கள் மூலம் தேசப்பற்றுவை ஊட்டி வளர்த்த பாரதி வறுமையில் வாடினார். 39 வயதில் பாரதி மறைந்தபோது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வெறும் பதினான்கு பேர் மட்டுமே.
      பசும்பொன் கிராமத்தில் பெருநிலக்கிழார் குடும்பத்தில் பிறந்த முத்துராமலிங்கத் தேவர் ஆங்கிலேயர்களின் அநீதிகளை எதிர்த்து இறுதிவரை போராடியவர். தான் பதவி வகித்த தொகுதியில் ஒரு தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை நிறுத்தி சட்டமன்ற உறுப்பினராக்கினார். ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலைத்தை தலித் சமுதாயத்தினருக்கே தானமாக வழங்கியவர்.  மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தலித்துகளை அழைத்துச் சென்று ஆலயப் பிரவேசம் செய்தவர் தேவர். 
      விருதுநகரில் பிறந்த காமராஜர் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை வழங்கினார். 12 ஆயிரம் பள்ளிகளை 27 ஆயிரமாக உயர்த்தி கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றியவர். சென்னை ஐ.ஐ.டி,  திருச்சி பெல், நெய்வேலி என்.எல்.சி, வைகை, சாத்தனூர், கீழ்பவானி, மணிமுத்தாறு, அமராவதி உள்ளிட்ட அணைகளை கட்டியதால்தான் தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது.  பிறந்த ஊரிலேயே தேர்தலில் காமராஜர் தோற்கடிக்கப்பட்டார்.
     மேலூர் தும்பைப்பட்டி குக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பி.கக்கன், சட்டமன்ற,மக்களவை உறுப்பினர், பொதுப்பணி, விவசாயம், காவல் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகப் பரிணமித்தவர்.  அரசியலில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த கக்கன் 1967 தேர்தலில் தோற்றுப் போனார். பின்னர் அரசியலில் இருந்தே ஓய்வு,  வறுமையில் வாடி இறந்து போனார்.
      மேலே குறிப்பிட்டுள்ளதியாகத் தலைவர்கள், அண்ணா, பெரியார், ராஜாஜி, எம்.ஜி.ஆர் போன்றவர்கலெல்லாம் கோலோச்சிய தமிழகம் சாதீய கட்சிகளின் பின்னால் செல்லும் நிலைமை. ஒரே சாதிக்கு பல கட்சிகள். அந்த பல கட்சிகளும் எதிர் எதிர் அணியில் கரம் சேர்ந்து தேர்தலைச் சந்திக்க உள்ளன. தேர்தல் தோல்வி பயம் கொடுப்பதால் தி.மு.க., அ.தி.மு.க-வும் அவர்களைச் சேர்த்துக் கொள்ள போட்டி போடுகின்றன.
    தற்போதைய நிலவரப்படி விடுதலை சிறுத்தைகள்-புதிய தமிழகம்,  மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், கொங்கு முன்னேற்ற பேரவை-கொங்கு இளைஞர் பேரவை, பா.ம.க-வன்னியர் கூட்டமைப்பு, மனித நேய மக்கள் கட்சி-முஸ்லீம் லீக், சமத்துவ மக்கள் கட்சி-பெருந்தலைவர் மக்கள் கட்சி என ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்காக போராடுவதாகக் கூறும் இவர்கள் வரும் தேர்தலில்  முண்டாசு தட்ட தயாராகிவிட்டனர். புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகளுக்கு இதுவரை இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்துள்ளன.
     முன் பத்திகளில் குறிப்பிட்டுள்ள தலைவர்கள் வாழ்ந்தபோது தங்கள் சாதியினரை முன்னிறுத்தியது இல்லை. நேசம், நாட்டுப்பற்று, தியாகம்தான் அவர்களின் இதயத்தில் கோலோச்சி இருந்தன. நாட்டின் சொத்தாக விளங்கக் கூடிய தியாக சீலர்களை எல்லாம் சாதி கண்ணோட்டத்தில் கொண்டு வருவது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, செய்த தியாகங்களை எல்லாம் கொச்சைப்படுத்துவதாகவே இருக்கிறது.
சாதி அமைப்புகள் இருக்க கூடாது என்பது நம் வாதம் அல்ல. பதவியை அடைய குறுக்கு வழியாக சாதிகள் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு ஏற்கனவே உள்ள பெரிய அரசியல் கட்சிகளும் துணை போகின்றனவே என்பதுதான் எதார்த்தவாதிகளின் கவலையாக உள்ளது. 
      சமுதாயப் பணிகளில் எப்போதும் அரசியலை அனுமதிக்கக் கூடாது.  சமுதாய உதவி என்பது முதலில் குடும்பத்திலிருந்து துவங்க வேண்டும்.  வசதியில்லாத அண்ணன், தம்பிகள், உற்றார், உறவினர்களுக்கு வசதி படைத்தவர்கள் உதவிட முதலில் உதவிட வேண்டும். பின்னர் அவரது கிராமம், இதர ஜாதியினர் என படிப்படியாக உதவி செய்தாலே அனைத்து சமுதாயத்தினரும் உயர்ந்திட முடியும். மற்றபடி அரசியலில் ஈடுபட்டுத்தான் அவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்திற்கு சேவையாற்ற முடியும் என்பது ஏற்கத் தக்கதல்ல என்கிறார் ஃபோகஸ் அகாடமியின் நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.சங்கரவடிவேலு.
    தமிழகத்தில் நகரத்தார்கள், ஜைன, கிருத்தவ, இந்து மிஷன்கள் போன்றவை ஓசையின்றி பல்வேறு அறப்பணிகளை நீண்டகாலமாகச் செய்து வருகின்றன. இவைகள் மீது சாதி முத்திரைகள் குத்தப்பட்டிருந்தாலும் கூட அவர்களின் சேவையில் அது ஒரு போதும் எதிரொலித்தது இல்லை. சமுதாயத்திற்கு சேவை செய்தே ஆகவேண்டும் என விரும்பும் சாதீயக் கட்சிகள் இது போன்ற அமைப்புகள் மூலம் சேவையைத் தொடரலாம்.  ஒரிரு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகி, ஒட்டுமொத்த சாதிக்காரர்களை முன்னேற்ற முடியும் எனில் அந்த சாதியைச் சேர்ந்த, அரசியல் கட்சிகள் மூலம் பதவியில் இருந்த நூற்றுக் கணக்கான எம்.எல்.ஏ-க்கள் செய்யாதது ஏன்?. சமுதாய வளர்ச்சிக்கு அரசியல் பதவி மட்டுமே பயனளிக்காது.
       மேலே குறிப்பிட்டுள்ளவர்களை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.  எதிர்காலத்தில் தங்களை முதலியார், ஐயர், தேவர், கவுண்டர், நாடார், வன்னியர், நாயுடு என கொச்சைப்படுத்துவார்கள் என தங்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.  அந்த மாமனிதர்கள் தமிழத்திற்கு சொந்தமானவர்கள். அவர்களை சாதீய முன்னோடிகளாக்கி கொச்சைப் படுத்த வேண்டாம் என்பதே பெரும்பாலோரின் வேண்டுகோள். ஜாதி இரண்டொழிய வேறில்லை. ஏழைகள்- பணக்காரர்கள் என்பதுதான் அது.
      சாதி வேற்றுமையைச் சொல்லி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் மாற்றுச் சாதியினரோடு சென்னையிலும், டெல்லியிலும்  கொஞ்சிக் குழாவுவதும், அவர்கள் வீடுகளில் லட்ச ரூபாய் விலையுள்ள உயர்ரக நாய்கள், மீன்கள் வளர்க்கப்படுவது எல்லாம் குக்கிராமத்தில் இருக்கும் சாதீயத் தொண்டனுக்குத் தெரியவா போகிறது?. அதுதான் அரசியல்வாதிகளின் பலமே.

                                                                              
       

Monday, 29 October 2012

கடலில் ஒரு நாள் நிகழ்ச்சி: போர்க் கப்பல்களில் கடற்படையினர் சாகசம்




திருவொற்றியூர், அக்.27.:இந்திய கடற்படையின் கிழக்கு மண்டலம் சார்பில் 'கடலில் ஒரு நாள்'  நிகழ்ச்சி சென்னைக்கு அருகே நடுக்கடலில் சனிக்கிழமை நடைபெற்றது.  இதில் 6 போர்க்கப்பல்கள் அணிவகுத்தன. இதில் பங்கேற்ற கடற்படை வீரர்கள் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர்.
                 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் பங்கேற்ற இந்திய கடற்படை படகுகளில் சென்று கராச்சி துறைமுகத்தைக் கைப்பற்றி வெற்றி கொண்டது.  இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் இந்த வெற்றி யை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதி கடற்படை தினம் கொ்ண்டாடப்பட்டு வருகிறது.
 இதேபோல் இந்த ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.  இதில் முதல் நிகழ்ச்சியாக 'கடலில் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.   சென்னைக்கு அருகே நடுக்கடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  ஏவுகனைகளை ஏவும் வசதிகள் கொண்ட ஆயுதம் தாங்கிய கப்பல்கள் உள்ளிட்ட ஜலஸ்வா, ரானா, ரன்விஜய், கிர்பான், குலிஸ் மற்றும் கிர்ச் ஆகிய 6 கப்பல்கள் கலந்து கொண்டன.
           நடுக்கடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கடலில் தத்தளிப்போரைக் காப்பாற்றுவது,  போரின்போது
ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு பொருள்களை பரிமாற்றம் செய்வது, ஹெலிகாப்டரில் ரோந்து செல்வது, துப்பாக்கியால் சுடுவது போன்ற பல்வேறு சாகசங்களை கடற்படை வீரர்கள் செய்து காட்டினர்.  மேலும் நிகழ்ச்சியின்போது தமிழ்நாடு பாய்மரப் படகு சங்க செயலாளர் சாந்தா கலந்து கொண்டு ஜலஸ்வா என்ற கப்பலில் இருந்து கயிறு மூலம் அடுத்த கப்பலுக்குச் சென்று திரும்பினார். இதனை கடற்படை வீரர்களின் குடும்பத்தினர், இதர ராணுவப் பிரிவு அதிகாரிகள், தேசிய மாணவர் படை (என்.சி.சி.) என சுமார் 2.500 பேர் பார்த்து ரசித்தனர்.ஆளுனர் ரோசையா பங்கேற்பு:
        முன்னதாக சென்னைத் துறைமுகத்திலிருந்து கிளம்பிய ஜலஸ்வா கப்பலில் தமிழக ஆளுனர் ரோசையா பயணம் செய்தார்.  சாகச நிகழ்ச்சிகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ரோசையா பேசியது, சென்ற முறை சிறிய கப்பலில் பயணம் செய்தேன். இந்த முறை பிரமாண்டமான பெரிய கப்பலில் பயணிக்கிறேன். இந்நிகழ்வு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது நாட்டின் பாதுகாப்பு வலுவாக உள்ளது. எவ்வித தாக்குதலையும் முறியடிக்கும் சக்தி நமது படையினருக்கு உண்டு என்பது போன்றவற்றை பொதுமக்களும் அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி வழிவகுக்கும் என்றார் ரோசையா.
       கடற்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் பி.அஜித்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத்தலைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் ஸ்ரீதர், கடற்படை உயர் அதிகாரி மகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Friday, 26 October 2012

பணி காலத்தில் இறந்து போன துறைமுக தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.36 கோடி உதவித் தொகை


கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வழங்கினார்
திருவொற்றியூர், அக்.13: சென்னையில் துறைமுகத்தில் பணிக்காலத்தில் இறந்து போன 868 ஊழியர்களின் துறைமுக ஊழியர்களின் குடும்பத்தினருக்கு சுமார் ரூபாய் 36 கோடி உதவித் தொகைக்கான காசோலைகளை கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சனிக்கிழமை வழங்கினார்.
            சென்னைத் துறைமுகத்தில் பணிகாலத்தின்போது உடல் நலக் குறைவு, விபத்து உள்ளிட்ட காரணங்களால் இறந்து போன 868 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான மாற்று வேலைக்குப் பதிலாக உதவித் தொகை வழங்க துறைமுக நிர்வாகம் முடிவு செய்து இதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஜி.கே.வாசன் உதவித் தொகை காசோலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் வாசன் பேசியது,
    துறைமுகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்ற துணையாகவும்,  அடித்தளமாகவும் இருப்பவர்கள் தொழிலாளர்கள்தான்.   துறைமுகத்தின் வளர்ச்சியையும், தொழிலாளர்கள் நலனையும் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை.  எனவேதான் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அதேசமயம் தொழிலாளர்களின் நலனிலும் கப்பல்துறை அமைச்சகம் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.
         துறைமுகங்களில் பணிகாலத்தின்போது விபத்து, உடல் நலக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் இறந்து போன தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக
இருந்து வருகிறது.  ஆனால் 1999 ஆண்டிற்குப் பிறகு பிரிவு 3,  பிரிவு 4 தகுதி தொழிலாளர்கள் வேலைக்குச் சேர்க்க நேர்ந்தால் மொத்த எண்ணிக்கையில் 5 சதவீதம் மட்டுமே கருணை அடிப்படையில் மாற்று வேலை வழங்க முடியும்.  இதனால்  இவர்களுக்கு மாற்று வேலை வழங்க முடியவில்லை.   உண்மையிலேயே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நியாயமாக வேறு வழியில் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தார்மீகக் கடமை உள்ளதால் இது குறித்து அமைச்சக உயர் அதிகாரிகள், பிரதமர் அலுவலகம் உள்ளிட்டோரிடம் பலகட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு, இறந்து போன தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வேலைக்குப் பதிலாக கணிசமான அளவில் உதவித் தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டது.
           இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கு குறைந்த பட்சம் ரூ.1.25 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.4.90 லட்சம்வரை உதவித்தொகையாகக் கிடைக்கும். இதனைக் கொண்டு அவர்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த தொகை சிறியதாக இருப்பினும் தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் இதனை வழங்கவே கடுமையான நிர்வாக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இத்திட்டத்தின் சென்னைத்துறைமுகத்தில் மூலம் 868 பேர் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான செலவுத் தொகை ரூ.35.73 கோடி ஆகும். 
விசாகபட்டினத்தில் 860 பேருக்கு ரூ.30 கோடி உதவி:
       தொழிலாளர்களின் நலன் கருதி கப்பல்த் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ள இத்திட்டத்தின் கீழ் விசாகபட்டனம் துறைமுகத்தில் பணிகாலத்தில் இறந்து போன சுமார் 860 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 30.30 கோடி உதவித் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.  சென்னை, விசாகபட்டனம் தவிர இதர துறைமுகங்களிலும் இதேபோல் உதவித் தொகை வழங்க அந்தந்த துறைமுக நிர்வாகங்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
        மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளும் தொழிலாளர்கள் 993 பேரை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வந்தது.  கப்பல்த் துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் அவர்கள் அனைவரும் தற்போது நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு நிறுவனம் லாபம் ஈட்டுவது மட்டுமே நோக்கமாக இருக்கக் கூடாது.  தொழிலாளர்கள் நலன்,  அருகில் வசிக்கும் மக்களின் சமூக மேம்பாடு உள்ளிட்டவைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.





நிலக்கரி, இரும்புத்தாதுவை மீண்டும் கையாள சென்னைத் துறைமுகம் கடும் முயற்சி


.
முகவை.க.சிவகுமார்,

சென்னையின் முக்கிய பகுதிகளில் கரித்தூள் மாசு படியும் அபாயம்

திருவொற்றியூர், அக்.12:  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக சென்னைத் துறைமுகத்தில் நிலக்கரி, இரும்புத்தாது கையாளப்படுவது கடந்த ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளநிலையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் கப்பல் துறை செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு  அளித்துள்ள கருத்துரு மூலம் மீண்டும் நிலக்கரியைக் கையாள சென்னைத் துறைமுகம் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
             நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நிலக்கரி, இரும்புத் தாது கையாளப்படுவது தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் சென்னைத் துறைமுகத்தின் முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கரித்தூள் மாசுவால் திணறிய சென்னை:
             சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 2 கோடி டன் அளவிற்கு இரும்புத் தாது, நிலக்கரி நீண்ட காலமாக கையாளப்பட்டு வந்தது.  இவை கையாளப்படும்போது எழும் கரித்தூளால் கடும் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம், பாரிமுனையில் உள்ள முக்கிய கட்டடங்கள் எல்லாம் இவ்வகை மாசுவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டன. வட சென்னை முழுவதும் எங்கு பார்த்தாலும், கரித்தூள், செந்நிற இரும்புத் தாது தூசு படிந்து பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டனர்.  இது குறித்து பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தன. ஆனால் அனல் மின்சாரம் தயாரிக்க நிலக்கரி இறக்குமதி அவசியமாகிறது, மேலும் துறைமுகத்தின் முக்கிய வருவாய் பாதிக்கப்படும் எனக் கூறி சென்னைத் துறைமுக நிர்வாகம் தொடர்ந்து இவற்றை நிறுத்த மறுத்து வந்தது.
நிலக்கரி,இரும்புத் தாதுவிற்கு உயர்நீதிமன்றம் தடை:
    .  இதனையடுத்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கில் நிலக்கரி, இரும்புத் தாது கையாள  தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே, 2011-ல் உத்தரவிட்டது.  இத்தடையை எதிர்த்து துறைமுக நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம்   கப்பல்த் துறை செயலாளர் தலைமையில், வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை செயலாளர், மத்திய, மாநில சுற்றுச்சூழல் கட்டுப்பாடு வாரியத் தலைவர்கள், தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆய்வு மையம் (நீரி),  ஐ.ஐ.டி., தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழு அமைத்து உத்தரவிட்டது.  இதனையடுத்து கடந்த மே மாதம் இக்குழு நேரில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் சமர்பித்தது.  இந்த அறிக்கையின் மீது சமீபத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற சென்னைத் துறைமுகத்திற்கு 2 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த வழக்கு விசாரணையும் தள்ளிவைக்கப்பட்டது.
பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த  துறைமுக நிர்வாகம் நடவடிக்கை:
               இந்த அறிக்கையில்,  நிலக்கரியை இறக்கும்போது மூடப்பட்ட கலன்களைப் பயன்படுத்த வேண்டும்,  தெளிப்பான்கள் மூலம் நிலக்கரி மீது தொடர்ந்து நீர் தெளித்தல்,  கப்பலில் இருந்து நிலக்கரியை திறந்த லாரிகளில் கொண்டு செல்லாமல் மூடப்பட்ட லாரிகளில் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன. மேலும் கப்பலில் இருந்து இறக்கி, சேமித்து வைத்து, வேகன்களில் எடுத்துச் செல்லுவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்ன நடைமுறைகள் கையாளப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
           நிலக்கரி, இரும்புதாது கையாளப்பட்டு வந்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ.250 கோடிவரை சென்னைத் துறைமுகத்திற்கு வருவாய் கிடைத்து வந்தது.  இதனால் உயர்நீதிமன்றம் அளித்த தடையால் கடந்த ஓராண்டாக பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து வந்த துறைமுக நிர்வாகம்,  உயர்மட்டக்குழு அறிக்கையால் தற்போது  எழுச்சி பெற்றுள்ளது.   மேலும்  அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பினைப் பெற முடியும் என துறைமுக நிர்வாகம் கருதி, இதற்கான வேலைகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி நிலக்கரி, இரும்புத் தாது விரைவில் சென்னைத் துறைமுகத்தில் மீண்டும் கையாளப்படும் என்பதே உண்மை என்கிறார் துறைமுக உயர் அதிகாரி ஒருவர்.
பொதுநல அமைப்புகள் கடும் எதிர்ப்பு:
 இது குறித்து வடசென்னை பொதுநல அமைப்புகள் சார்பில் தெரிவித்த கருத்துகள்:
             நிலக்கரி மாசுவால் ஆயிரக் கணக்கானோருக்கு ஆஸ்துமா நோய் ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக வடசென்னை பகுதிகளில் வீட்டுக் கதவு, ஜன்னல்களை சிறிது நேரம் கூட திறந்து வைக்க முடியாது. மாடியில் துணி கூட காய வைக்க முடியாத அளவிற்கு மாசு இருந்தது. தடை செய்யப்பட்ட பிறகுதான் சற்று நிம்மதியடைந்தோம்.    சென்னை மாநகரையே மாசுபடுத்தும் இந்த முயற்சியை கடுமையாக எதிர்ப்போம். ஏற்கனவே படிந்துள்ள கரித்தூள் படலங்கள் கூட இன்னும் விலகாத நிலையில் மீண்டும் நிலக்கரி, இரும்புத்தாது கையாள்வது என்ற முயற்சிக்கு அனைத்து தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். 
     தமிழகத்தைச் சேர்ந்த ஜி.கே.வாசன் கப்பல்த் துறை அமைச்சராக உள்ள நிலையில் சென்னை மாநகர மக்களை பெருமளவில் பாதிக்கக் கூடிய இப்பிரச்னையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.



                                                                              
       



லாரிகள் நிறுத்துமிடத்திற்கான நிலத்தை திருப்பி அளித்தது சென்னைத் துறைமுகம்

கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதில் மீண்டும் சிக்கல் பிரச்னை
திருவொற்றியூர், ஜூலை.16:கண்டெய்னர் லாரிகள் நிறுத்துமிடம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட 11 ஏக்கர் நகராட்சி நிலத்தை சென்னைத் துறைமுக நிர்வாகம் திடீரென திருப்பி அளித்து விட்டது. இதன்மூலம் வடசென்னையின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பதில் மீ்ண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  இந்தியாவின் கிழக்கு வாயிலாகக் கருதப்படும் சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் சரக்குப் பெட்டகங்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுகின்றன. சுமார் 4 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள், 3 ஆயிரம் டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன. இருப்பினும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் துறைமுகத்திற்கு வந்து செல்லும் வாகனங்கள் 5 முதல் 20 மணி நேரம்வரை வரிசையில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. எண்ணூர் வரை சுமார் 15 கி.மீ தூரத்திற்கு வரிசையில் லாரிகள் காத்திருப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் இப்பகுதில் கடும் போக்குவரத்து நெரிசல்   நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இப்பிரச்னை குறித்து பல்வேறு அமைப்புகளும் போராடி வந்ததை அடுத்து முன்பு டி.ஜி.பி.யாக இருந்த அலெக்சாண்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
குத்தகைக்கு 11 ஏக்கர் நகராட்சி நிலம்:
  இதனை அடுத்து சாலையில் காத்திருக்கும் கண்டெய்னர் லாரிகளை ஓரிடத்தில்
நிறுத்தி பின்னர் நெரிசலின்றி சீராக துறைமுகத்திற்கு அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கென எண்ணூர் விரைவு சாலையை ஒட்டி இருந்த திருவொற்றியூர் நகராட்சிக்குச் சொந்தமான 11 ஏக்கர் காலி நிலம் தேர்வு செய்யப்பட்டது. மாதவாடகை ரூ.11 லட்சம் என முடிவு செய்யப்பட்டது. குத்தகை முன்பணமாக ரூ.33 லட்சத்திற்கான அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சரான மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டு அதனை திருவொற்றியூர் நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜெயராமனிடம் கடந்த ஜூலை 2, 2007-ல் வழங்கினார்.
ஆனால் கனரக வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு காலி நிலத்தை சீர் செய்யாததால்  லாரிகள் மணலில் புதைந்தன. இதனை அடுத்து காலி நிலத்தில் உறுதியான கான்கிரீட் தளம் அமைக்க சென்னைத் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக நிலையத்தை கையாண்டு வரும் சி.சி.டி.எல் நிறுவனம் முன்வந்து ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடும் செய்தது. ஆனால் நிலத்தை 30 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கிட இந்நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இதற்கு ஒப்புதல் அளித்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் கடந்த 2007-ல் நிறைவேற்றப்பட்டது.  இருப்பினும் நீண்ட நாள்களாக அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இது குறித்து 'தினமணி' நாளிதழில் கடந்த ஏப்ரல் 26-ல் சிறப்பு செய்தி வெளியானது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் இறுதியில் குத்தகை காலத்தை 18 ஆண்டுகளாக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்து.
நிலத்தை திருப்பி அளித்த துறைமுகம்:
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த இப்பிரச்னை தீர்ந்து கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் விரைவில் தீரும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை துறைமுக நிர்வாகம் திடீரென காலி நிலத்தை திருப்பி அளித்து விட்டது. இது குறித்து திருவொற்றியூர் நகராட்சி ஆணையர் எஸ்.கலைச்செல்வன் கூறியது, பல்வேறு நெருக்கடிகளில்தான் குத்தகை காலம் 18 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. மேலும் துறைமுகம் அரசு நிறுவனம் என்பதால் தொடர்ந்து குத்தகையை நீடிப்பதில் சிக்கல் ஏதும் இருக்காது. ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஜூன்.30 முதல் திருப்பி அளித்துவிடுவதாக கடிதம் அனுப்பி உள்ளனர். கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலால் திருவொற்றியூர் நகரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது என்பது முற்றிலும் உண்மை என்றார் கலைச்செல்வன்.
மழுப்பும் துறைமுக அதிகாரிகள்:
திடீரென நிலத்தை திருப்பி அளித்தது ஏன் என்பது குறித்து சென்னைத் துறைமுக
அதிகாரிகள் சிலர் கூறியது, கண்டெய்னர் நிறுத்துமிடம் அவசியமானது என்றுதான் நாங்கள் வலியுறுத்தினோம். இதனையே கோப்பிலும் குறிப்பிட்டோம். ஆனால் நிலத்தை திருப்பி அளிப்பது குறித்து நிர்வாகக் குழு கூட்டத்தில் கூட ஆலோசனை நடத்தாமல் முடிவெடுத்தது ஏன் என்பது புரியவில்லை. இது குறித்து சென்னை துறைமுக தலைவர் சுபாஷ்குமார் கூறியது, எங்களுக்கு அந்த நிலம் தேவை இல்லை என்பதால் திருப்பி அளித்துவிட்டோம். இது குறித்து காரணம் தெரிவிக்க இயலாது என பதில் அளித்தார்.
11 ஏக்கர் காலி நிலம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் பிரச்னை மீண்டும் சிக்கலில் ஆழ்ந்துள்ளது என்பதே நிதர்சன உண்மை. மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசனும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கவனத்தில் உள்ள இம்முக்கிய பிரச்னையில் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது கண்டிக்கத் தக்கது. இது குறித்து மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என்றார் திருவொற்றியூர் சமூக சேவை மைய நிர்வாகி கோட்டீஸ்வரன். 



 

அபாய நிலையில் திருவொற்றியூர் மீனவர் குடியிருப்பு

Source: www.dinamani.com

திருவொற்றியூரில் உள்ள மீனவர் குடியிருப்பில் திங்கள்கிழமை இரவு மேற்கூரை இடிந்து விழுந்ததில் வேலாயுதம் (45) என்ற மீனவர் படுகாயம் அடைந்தார்.
திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் மீன்வளத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் வேலாயுதம். மீனவரான இவர் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்துள்ளது.
இதில் வேலாயுதம் பலத்த காயமடைந்தார். இவரது மனைவி, குழந்தைகள் அப்போது வீட்டில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்.
இதேபோல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே குடியிருப்பில் மூன்றாவது மாடியில் வசித்து வந்த தனபால் என்பவரது வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் அவரது மனைவி ஜெயந்தி, குழந்தை கவினேஷ் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவொற்றியூர் கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய மீனவர் கிராமங்களில் ஒன்று திருச்சினாங்குப்பம். இங்கு 1993-ல் மீனவளத்துறை சார்பில் 478 குடும்பங்கள் வசிக்கும் வசதிகள் கொண்ட அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன. தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கடுமையாக பழுதடைந்து அபாய நிலையில் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக வீட்டின் மேற்கூரைகள் பெயர்ந்து விழும் சம்பவங்களும், அதில் பலர் காயமடையும் சம்பவமும் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக இங்கு குடியிருந்துவரும் மீனவர்கள் தெரிவித்தனர்.
புதிய வீடுகள் கட்டித் தரக் கோரிக்கை: இது குறித்து திருச்சினாங்குப்பம் மீனவர் பஞ்சாயத்து நிர்வாகிகள் கூறியது: அடுக்குமாடி வீடுகள் பழுதடைந்து இடிந்துவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இக்குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் அமைத்துத் தரவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு இதேபோல் நடைபெற்ற சம்பவத்தையடுத்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் நேரில் ஆய்வு செய்தார்.
இதையடுத்து இங்கு வசிக்கும் மீனவர்களுக்கு ரூ.14.5 கோடி செலவில் பழைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் புதிய வீடுகள் கட்டித் தருவதற்கான பணியை மீன்வளத்துறை மேற்கொள்வதாகத் தெரியவில்லை.
தற்போது வீடுகள் எந்நேரமும் இடிந்து விழும் அபாயக் கட்டத்தை எட்டிவிட்டது. எனவே உடனடியாக புதிய குடியிருப்புகளை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்றனர்.