இருட்டில் மாநகர உள்வட்டச் சாலைகள்: திகிலில் வாகன ஓட்டிகள்
திருட்டு, பாலியல் தொழில் தொடரும் அவலம்
திருவொற்றியூர், மே.3:சென்னை மாநகரை ஒட்டி அமைந்துள்ள உள்வட்டச் சாலைகளில் இருட்டில் உள்ளதால் சிறு கடைகளை அமைத்து டீசல் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
மேலும் திருட்டு, வழிப்பறி பயமும் அதிகரித்துள்ளதால் இச்சாலையை பயன்படுத்தவே பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸார் 'மாமூலாக' வே செயல்படுவதாக லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பெருங்களத்தூரிலிருந்து மதுரவாயல், அம்பத்தூர் வழியாக புழல்வரை சுமார் 32 கி.மீ. தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெருங்களத்தூரிலிருந்து மதுரவாயல்வரையிலும், மதுரவாயல் முதல் புழல்வரை இரண்டு கட்டங்களாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் இணைப்புச் சாலையாக துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டத்தின்கீழ் மாதவரத்திலிருந்து மணலி, திருவொற்றியூர்வரை நான்கு வழிச்சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளன.
இச்சாலைகள் திட்டமிடப்படப்பட்டபோது இச்சாலை செல்லும் வழி அனைத்தும் புறநகர் பகுதிகளாகவே இருந்தன. ஆனால் தற்போது இதன் பெரும்பாலான பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டன. ஆனால் மாநகராட்சியின் தரத்திற்கேற்ப எவ்வித பராமரிப்பும், வசதிகளும் இச்சாலைகளில் மேம்படுத்தப்படவில்லை. மேலும் காவல்த் துறையின் முழுமையான கண்காணிப்பிலும் இச்சாலை தொடர்ச்சியாக இல்லை.
திகிலில் இரு சக்கர வாகன ஓட்டிகள்:
அண்ணா நகர் பகுதியிலிருந்து திருவொற்றியூர், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாகவும், விரைவாகவும் செல்ல இச்சாலைகள் மிகுந்த பயனுள்ளவையாக உள்ளன. ஆனால் இச்சாலைகளில் ஒளி விளக்குகள் அமைக்கப்படாததால் வழியெங்கும் கும்மிருட்டாகவே உள்ளன. முதலில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்பாட்டில் மட்டுமே இருந்த சாலையில் தற்போது கார்கள், மோட்டார் சைக்கிள்களில் அதிகம் பேர் பயணிக்கின்றனர்.
ஆனால் இதற்கேற்ப எவ்வித வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. கனரக வாகனங்களின் முகப்பு ஒளி வீச்சு மோட்டார் சைக்கிள், சிறிய கார்களில் செல்வோரை அச்சத்திற்கு உள்ளாக்கி திகிலூட்டுகிறது. மேலும் சாலையின் நடுவே தடுப்புச் சுவர்களில் போதுமான அளவிற்கு இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகைகளும் சரிவர அமைக்கப்படவில்லை. இரு சக்கர வாகன ஓட்டிகளால் சாலை அமைத்துள்ள தனியார் நிறுவனத்திற்கு வருவாய் பயன் ஏதும் இல்லை என்பதாலோ என்னவோ பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை.
ஓட்டுனர்களின் துணையுடன் டீசல் திருட்டு:
இந்த இரண்டு சாலைகளிலும் இரவு நேரத்தில் பயணித்தால் ஆங்காங்கு சிறிய பெட்டி கடைகளும், அதற்கு அடையாளமாக மண்ணெண்ணெய் விளக்குகளை எரிய வைத்திருப்பார்கள். இரவு முழுவதும் இக்கடைகள் திறந்திருக்கும். சரக்கு வாகனங்களில் டீசல் திருடுவது என்பது ஒருவகையான ஓட்டுனர்களுக்கு தவிர்க்கமுடியாத பழக்கமாகவே கொண்டுள்ளனர். இவ்வகையான டிரைவர்களுக்கு விளக்குடன் கூடிய பெட்டிக்கடைகளைக் கண்டவுடன் லாரியை ஓரம் கட்டிவிடுவார்கள். இதனைப் புரிந்து கொள்ளும் பெட்டிக் கடைக்காரர் லாரி அருகே வருவார். டீசலின் அளவும், விலையும் பேசிய பிறகு சில நிமிடங்களில் டீசல் திருடப்படுகிறது. மேலும் இரும்பு பொருள்களையும் இங்கு வாங்குகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர் என்றாலும் ஒரு மாநகராட்சி எல்லைக்குள் பட்டவர்த்தமாக திருட்டுவேலை, அதுவும் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இவ்வாறு நடைபெறுவது எப்படி? இதனால் விபத்துகளும் ஏற்படுகின்றன.
கொடிகட்டிப் பறக்கும் பாலியல் தொழில்:
லாரி டிரைவர்கள் எங்கு அதிகம் உள்ளார்களோ அங்கெல்லாம் பாலியல் தொழிலும் தொற்றிக் கொள்வது வழக்கம். இச்சாலைகளில் பயணிக்கும்போது சம்மந்தம் இல்லாத இடத்தில் ஓரமாக ஒரு லாரி நிற்கிறது எனில் சப்தமின்றி சட்டவிரோத காரியம் ஒன்று அங்கே நடைபெறுவதாக உறுதியாகக் கூற முடியும். இரவு முழுவதும் தொடரும் இந்த இரவு ராணிகளில் பெரும்பாலானவர்கள் திருநங்கைகள் என்பது உண்மை. வயிற்றுப் பிழைப்பிற்காக அவர்கள் இதனைச் செய்வதாகக் கூறுகின்றனர்.
அவர்களுக்கு வயிற்றுப்பிரச்னை எனில் ஓட்டுனர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதாரம், தொற்று நோய் பிரச்னை ஆகும். பொதுமக்களுக்கு இது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவே உள்ளது. இச்சம்பவங்களும் எவ்வித ஒளிவு மறைவு இன்றி நடைபெறும் இச்சம்பவங்களை ஒரு முறை பார்க்கும் வாகன ஓட்டிகள் பலர் இரவு நேரத்தில் இச்சாலைகளில் பயணிப்பதைத் தவிர்க்கும் அவல நிலை உள்ளது.
போலீஸாரின் சிறப்பு பார்வை தேவை:
இப்பிரச்னை குறித்து திருவொற்றியூர் நுகர்வேர் பாதுகாப்பு மையத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான என்.துரைராஜ்,
வடசென்னஐ மக்களுக்கு முக்கியமான இச்சாலையைப் பராமரிப்பதில் போதிய கவனம் இல்லை. இதனால் இச்சாலையில் பயணிப்பது என்பதே பயமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் பாதுகாப்பான பயணத்திற்கு இச்சாலையை தவிர்க்க வேண்டிய அவலநிலை நிலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட இச்சாலைகளில் உடனடியாக ஒளிவிளக்குகள் அமைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்கட்டமாக சாலையோரங்களில் உள்ள பெட்டிக்கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்களைப் பிடித்து அவர்களுக்கு வேறு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரவேண்டும். இரவு முழுவதும் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றார் துரைராஜ்.
'பயணம் முடியும்.... பாதை தொடரும்' என்பார்கள். எனவே பயணங்களைத் தொடர சாலைகள் பாதுகாப்பானதாக பராரிக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் ஆவலாக உள்ளது. இத்தனைக்கும் இச்சாலைகள் சுங்கக் கட்டணச் சாலைகள்?