Sunday, 26 July 2015

சென்னைத் துறைமுகம்-தண்டையார்பேட்டை இடையே புதிய சரக்கு ரயில் வசதி தொடக்கம்


நெரிசலைக் குறைக்க துறைமுகம்-கான்கார் உடன்பாடு

திருவொற்றியூர், ஜூலை 24: சென்னைத் துறைமுகத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் துறைமுகம் -தண்டையார்பேட்டை இடையே சரக்கு ரயில்கள் மூலம் கண்டெய்னர்களை இடமாற்றம் செய்யும் புதிய வசதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. 
  இதற்கான தொடக்கவிழா நிகழ்ச்சி சென்னைத் துறைமுகத்தில் உள்ள இரண்டாவது சரக்குப் பெட்டக முனையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா கலந்து கொண்டு கண்டெய்னர்கள் ஏற்றப்பட்ட முதல் சரக்கு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் துறைமுகத் துணைத் தலைவர் ஐ.ஜெயக்குமார், போக்குவரத்து துணை மேலாளர்கள் விமல், பிரபாகரன் கிருபானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
   நிகழ்ச்சிக்குப் பிறகு புதிய வசதிகள் குறித்து ரயில்வே அமைச்சகத்தின் துணை நிறுவனமான கான்கார் (CONCOR-Container Corporation Ltd) முதன்மை பொது மேலாளர் எஸ்.பாலாஜி அருண்குமார் 'தினமணி' செய்தியாளருக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
   இந்திய துறைமுகங்களின் சரக்குகளைக் கையாள்வதில் கான்கார் நிறுவனம் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. சென்னைத் துறைமுகத்தில் நீண்ட காலமாக இருந்து வரும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலைத் தீர்ப்பதற்காக  சென்னைத் துறைமுகம்-சரக்குப் பெட்டக முனையம்-கான்கார் ஆகிய மூன்று நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. இதன் முடிவின்பேரில்  துறைமுகத்தின் இரண்டாவது முனையம் மற்றும்  தண்டையார்பேட்டையில் உள்ள கான்கார் சரக்குப் பெட்டக முனையம் இடையே சரக்கு ரயில் போக்குவரத்தை தொடங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட இப்புதிய வசதி மூலம் தலா 4 தடவை ஏற்றுமதி, இறக்குமதிக்கான சரக்குப் பெட்டகங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. 
78 ஏக்கரில் கண்டெய்னர் கையாளும் தளம்:
    சரகுக்கு ரயில் ஒரு தடவை இயக்கப்படுவதன் மூலம் சுமார் 80 கண்டெய்னர்களை 
இடமாற்றம் செய்ய முடியும். ஒரு நாளைக்கு சுமார் 650 கண்டெய்னர்களை 
கையாள முடியும். இது இம்முனையத்தின் கையாளும் திறனில் நான்கில் ஒரு பங்கு 
ஆகும். இந்த சரக்கு ரயில் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு தண்டையார்பேட்டைக்கு சுமார் 4 மணி நேரத்தில் வந்தடையும். இப்புதிய வசதி மூலம் கண்டெய்னர்களை வெளியே எடுத்துச் செல்வதற்கான கால அளவு வெகுவாகக் குறையும். அதேபோல் ஏற்றுமதிக்காக வரும் கண்டெய்னர்கள் லாரிகள் தண்டையார்பேட்டையில் உள்ள முனையத்தில் சுமார் ஒரு மணி நேரத்தில் கண்டெய்னர்களை இறக்கிவிட்டுத் திரும்பிச் செல்ல முடியும். இக்கண்டெய்னர்கள் சுமார் 24 மணி நேரத்திற்குள் துறைமுகத்தின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு கப்பல்களில் ஏற்றப்படும். இதற்கென கான்கார் நிறுவனம் சுமார் 78 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய சரக்குப் பெட்டகத் தளத்தினை தண்டையார்பேட்டையில் ஏற்படுத்தியுள்ளது. 
24 மணி நேரமும் சுங்கப் பரிசோதனை வசதி:
     மேலும் தண்டையார்பேட்டைக்கு கொண்டு வரப்படும் கண்டெய்னர்களை சோதனையிட்டு விடுவிக்க 24 மணி நேரமும் சுங்கத் துறை அதிகாரிகள் பணியில் இருப்பார்கள். தண்டையார்பேட்டையிலிருந்து  வேறு சரக்குப் பெட்ட நிலையங்களுக்கும் கண்டெய்னர்களை வழக்கப்போல் எடுத்துச் செல்ல முடியும். ஏற்கனவே சென்னைத் துறைமுகத்திலிருந்து பெங்களூருக்கு ஏற்கனவே சரக்கு ரயில்கள் மூலம் கண்டெய்னர்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. தற்போது தண்டையார்பேட்டைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதிகள் மூலம் துறைமுகத்தின் கையாளும் திறன் மேம்படும்.  லாரிகள் மூலம் கையாளப்படுவதால் ஏற்படும் செலவினங்களை ஒப்பிட்டே புதிய வசதியில் குறைவான கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வசதி  ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்காது. அதேவேளை சென்னைத் துறைமுகத்தில் இருந்து வரும் நெரிசலைத் தீர்ப்பதில் இப்புதிய வசதி ஒரு மைல் கல்லாக  இருக்கும் என நம்புகிறோம் என்றார் பாலாஜி அருண்குமார்.
   பேட்டியின்போது கான்கார் சரக்குப் பெட்டக முனைய மேலாளர் இந்திரா, முதன்மை மேற்பார்வையாளர் எஸ்.சரவண பெருமாள், துறைமுகத்தின் இரண்டாவது சரக்குப் பெட்ட முனைய  மேலாளர்கள் அருள்ராஜ், சுஸ்மிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

மாயமான விமானத்தை தேடும் பணி முடிவுற்றது

மனித எலும்புத் துண்டுகள், கைக்கடிகாரம் கண்டெடுப்பு


கிழக்கு பிராந்திய தளபதி எஸ்.பி.சர்மா தகவல்

திருவொற்றியூர், ஜூலை 14:விமானத்தின் முக்கிய பாகங்கள், மனித எலும்புத் துண்டுகள் கண்டறிந்து மீட்கப்பட்டதையடுத்து மாயமான விமானம் தேடும் பணி உடனடியாக நிறுத்திக் கொள்வதாக கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்திய தளபதி எஸ்.பி.சர்மா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். 

 இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் எஸ்.பி. சர்மா கூறியது,
இந்திய கடலோரக் காவல்படையின் ரோந்து விமானமான டோர்னியர் 791 கடந்த ஜூன் 8-ல் காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து தேடும் பணி ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த 36 நாள்களாக நடைபெற்று வந்தது. இதில் கடற்படை கப்பல்கள் சந்தயாக், சிந்துத்வாஜ், தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் சாகர்நிதி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒலிம்பிக் கேன்யன் உள்ளிட்ட கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 
   கடலூர் மாவட்டம் பிச்சாவரம் கடற்கரை பகுதியிலிருந்து கிழக்கே சுமார் 28 கி.மீ. 
விமானம் விழுந்திருக்க வாய்ப்புள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்றது. தொடக்கத்தில் காணாமல் போன விமானத்திலிருந்து சமிஞ்சை 
கிடைத்தாலும் சுமார் ஒரு மாதம்வரை எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை. 


எலும்புத் துண்டுகள், கைக்கடிகாரம் மீட்பு:


இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 990 மீட்டர் ஆழத்தில் கிடந்த விமானத்தின் கருப்புப் பெட்டி (Flight Data Recorder), விமானி குரல் பதிவு பெட்டி (Cockpit Voice Recorder) உள்ளிட்டவை மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இதே பகுதியில் விமானத்தின் இயந்திரங்கள், இறக்கை உள்ளிட்ட முக்கிய பாகங்கள் திங்கள்கிழமை காலையில் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து இதே பகுதியில் சிதறிக்கிடந்த விமானத்தின் பல்வேறு  சிதைந்த பாகங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இப்பாகங்களுடன் சிக்கிய மனித எலும்புத் துண்டுகள், கைக்கடிகாரம், சோனி கேமரா, விமானியின் கவச உடை உள்ளிட்டவை மீட்கப்பட்டன. இவையனைத்தும் ஒலிம்பிக் கேன்யான் கப்பலில் ஏற்றி சென்னைத் துறைமுகத்திற்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.
எலும்புகளை மரபணு சோதனைக்கு உட்படுத்த முடிவு: 
     மீட்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் மீனம்பாக்க்தில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இந்நிலையி்ல் மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி இருப்பது மீ்ட்கப்பட்ட சிதைந்த பாகங்களிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட எலும்புத் துண்டுகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. 
விமானத்தில் பயனித்த மூன்று பேரின் பெற்றோர், உறவினர்கள் மூலம் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மீட்கப்பட்ட எலும்பின் மரபணுவுடன் ஒப்பீடு செய்யப்படும். 
இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில்தான்  விமானத்தில் பயனித்தவர்கள் இறந்து போனார்களா? இல்லையா? என்பதை  அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும். 
அதுவரை எங்களைப் பொருத்தவரை மூன்று காணாமல் போனவர்களாகவே கருத முடியும். 
தேடும் பணி முடிவுற்றது: 
     விமானத்தை தேடும் பணி கடந்த 36 நாள்களாக அதிநவீன அறிவியல் தொழில்நுட்ப உதவிகளுடன், பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் முழுமையான ஈடுபாட்டோடு நடைபெற்று வந்தது. தற்போது மாயமான விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது மீட்கப்பட்ட பாகங்களைக் கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்ட இடம் 990 மீட்டர் ஆழத்தில்  140 பி.எஸ்.ஐ (PSI-Per Square Inch to kg/cm2) கடல் அழுத்தம் உள்ளது. இது ஒரு எலி மீது யானை ஏறி இருந்தால் எவ்வளவு அழுத்தம் இருக்குமோ அதனைப் போன்றது. இவ்வளவு அழுத்தம் நிறைந்த பகுதியில் ஆழத்தில் மனிதர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லை. தேடும் பணியைத் தொடர்வதால் எவ்வித கூடுதல் பயன்களும் ஏற்படப் போவதில்லை என்பதால் செவ்வாய்க்கிழமையுடன் தேடும் பணி முடித்துக் கொள்ளப்படுகிறது. இதில் ஈடுபட்ட வந்த கப்பல்கள் அனைத்தும் அதனதன் இருப்பிடங்களுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டன. 
    இனி விமான விபத்து குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து விசராணை அறிக்கையை அளிக்கும் என்றார் எஸ்.பி.சர்மா.

Friday, 3 July 2015

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை உடனே மாற்ற வேண்டும்

டாக்டர் ராமதாஸ்

திருவொற்றியூர், ஜூலை 2:இடைத் தேர்தலை நேர்மையாக நடத்தத் தவறிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
  வடசென்னை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது,
  ஊழலற்ற, நேர்மையான, மது இல்லாத தமிழகத்தை உருவாக்கும் கொள்கைகளோடு கண்ணியமான அரசியலில் பா.ம.க.ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் அனைத்திலும் பணம், அதிகார பலத்துடன் ஆளும் கட்சியினர் செயல்படுவதால் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்பதை பா.ம.க கொள்கையாகக் கொண்டுள்ளது. இதனால்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் 
நாங்கள் போட்டியிடவில்லை. இங்கு போட்டியிட்டிருந்தால் சுமார் 25 ஆயிரம் வாக்குகளை பெற்றிருப்போம். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்ததால் ஸ்ரீங்கம் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு 110 நாள்களுக்குப் பிறகே இடைத் தேர்தல் நடைபெற்றது. ஆனால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட 10 நாள்களில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அ.தி.மு.க ஆட்சி பதவியேற்று நான்கு ஆண்டுகள் மே 23 அன்றே முடிவடைந்த நிலையில் பொதுத் தேர்தல் இன்னும் ஓராண்டுக்கும் குறைவாக உள்ள நிலையில் 
எப்படி தேர்தல் அறிவிக்கப்பட்டது?. இத்தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் ராஜினாமா செய்ததில் இருந்து அனைத்துமே அவசர கோலத்தில்தான் நடைபெற்றன. 
   குண்டும் குழியாக இருந்த சாலைகள் அனைத்தும் போலீஸார் உதவியுடன் தினசரி இரவோடு இரவாக புதிதாகப் போடப்பட்டன. தேர்தல் நாளன்று அனைத்து வாக்குச் சாவடிகளையும் ஆளும் கட்சியின் கைப்பற்றி வாக்குகளைப் பதிவு செய்தனர். 
 தேர்தல் நடைபெற்ற நாளன்றும், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடனேயே 
1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என 
கூறி விட்டேன். இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை. இதெற்கெல்லாம் காரணம் தலைமை தேர்தல் அதிகாரியாக இருக்கும் சந்தீப் சக்சேனாதான் காரணம்.  இவர் தொடர்ந்து நீடித்தால் 2016-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவை தேர்தல் நியாயமாக நடைபெறாது. எனவே சந்தீப் சக்சேனாவை உடனடியாக இப்பொறுப்பிலிருந்து அகற்ற இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஆளுநர் மீது புகார்:
   தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லட்சக் கணக்கான கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்று வருகிறது. இது குறித்து 203 பக்கங்கள் கொண்ட புகார் அறிக்கையை பல்வேறு ஆதாரங்களுடன் ஆளுநரிடம் பா.ம.க. அளித்தது.  மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் ஆளுநர்தான். பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் ஆளுநரால் எடுக்கப்படவில்லை. 
   தமிழகத்தின் நடைபெற்றுவரும் ஊழல்கள் குறித்து பத்திரிகைகள், ஊடகங்கள் 
எவ்வித செய்திக் கட்டுரைகளையும் வெளியிடுவதில்லை. அரசுத் தேர்வுகளில் ஒரு கேள்வி தவறாக இருந்தால் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிடுவோர் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் உள்ள கணக்கீட்டுத் தவறுகள் குறித்து ஊடகங்கள் விமர்சனங்கள் செய்யவில்லை. நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் உள்ள தவறுகளைக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இன்னும் ஒரு வாரத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். 
   எதிர்க்கட்சிகளுக்கு இலக்கணம் என்பது ஆட்சி குறித்து புதிய கருத்துக்கள், தெளிவான விமர்சனங்கள், ஆக்கப்பூர்வமான யோசனைகள் உள்ளிட்டவைகளைக் கொண்டிருக்க வேண்டும். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக உள்ளவரோ, இதர அரசியல் கட்சிகளோ இத்தகைய இலக்கணங்களைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் பா.ம.க. தொடர்ந்து உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. எட்டு அமைச்சர்களை வைத்துக் கொண்டு திறம்பட ஆட்சி நடத்தியவர் காமராஜர். ஆனால் இப்போதுள்ள தமிழக அமைச்சர்களுக்கு அனைத்து அமைச்சர்களின் துறைகள் கூட சரிவரத் தெரியாத நிலை உள்ளது. 
   தமிழகம் முழுவதும் பா.ம.க முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. எனவே 2016-ல் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் பா.ம.க. தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றார் ராமதாஸ்.
    இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, மாவட்டச் செயலாளர் சீமான் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்திய கடற்படை: புதிய அதிகாரி பொறுப்பேற்பு

திருவொற்றியூர், ஜூன்.30:இந்திய கடற்படை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு கடற்படை அதிகாரியாக கம்மோடர் அலோக்பட்னாகர் சென்னையில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். 
   இது குறித்து பாதுகாப்புத் துறை வெளயிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய கடற்படையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவின் தலைமையகம் ஐ.என்.எஸ். அடையார் சென்னையில் உள்ளது. இதன் கடற்படை அதிகாரியாக பணியாற்றி வந்த கம்மோடர் அமர் கே.மகாதேவன் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். இதனையடுத்து கம்மோடர் அலோக்பட்னாகர் புதிய கடற்படை அதிகாரியாக  சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றார். அவருக்கு மகாதேவன் வாழ்த்துக்களை தெரிவித்தார். அலோக்பட்னாகர் மராட்டிய மாநிலத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் 1984-ல் படித்துப் பட்டம் பெற்றவர். மேலும் பல்வேறு கடற்படை கப்பல்களில் அதிகாரியாகப் பணியாற்றியுள்ள இவர் இறுதியாக புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் முதன்மை இயக்குனராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.