Friday, 6 December 2013

திறப்புவிழா கண்ட அன்றே மூடப்பட்ட திருவொற்றியூர் வாகன நிறுத்த மையம் நெரிசல் பிரச்னைக்குத் தீர்வு: பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் சென்னைத் துறைமுகம்

முகவை.க.சிவகுமார்.

திருவொற்றியூர்:
திருவொற்றியூரில் கண்டெய்னர் வாகன நிறுத்த மையம் திறக்கப்பட்டதன் மூலம் இப்பகுதியில் நிலவி வரும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஓரளவு தீரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்மையம் கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட அன்றே மூடப்பட்டு விட்டது. 
    இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் துறைமுக நிர்வாகம் தொடர்ந்து தனது பொறுப்பினைத் தட்டிக் கழித்து வருவதே இதற்குக் காரணம் எனக் குறப்படுகிறது
    சென்னைத் துறைமுகம் ஆண்டுக்கு சுமார் 18 லட்சம் கண்டெய்னர்களைக் கையாண்டு வருகிறது. இதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாததால் கடந்த பல ஆண்டுகளாக துறைமுக இணைப்புச் சாலைகளில் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து இருந்து வருகிறது. இப்பிரச்னையைத் தீர்க்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பல்வேறு தரப்பினரும் மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுவந்தனர். இதனையடுத்து ரூ. 600 கோடி மதிப்பீட்டிலான 
இணைப்புச் சாலைகள் திட்டம், ரூ.1450 கோடியில் மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத் திட்டம்,  திருவொற்றியூரில் சுமார் 11 ஏக்கரில் வாகன நிறுத்த மையம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

      இதில் துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டப்பணிகள் பெருமளவு நிறைவு பெற்றிருந்தாலும் நெரிசல் ஏற்பட காரணமாக உள்ள காசிமேடு பகுதியில் பணிகள் நடைபெறவில்லை.  மாநில அரசின் எதிர்ப்பு, உயர்நீதி மன்ற வழக்கு நிலுவை போன்றவைகளால் மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவொற்றியூரில் 11 ஏக்கர் பரப்பளவில் ரூ. 6 கோடி செலவில் அமைக்கப்பட்ட வாகன நிறுத்த மையத்தை கப்பல்த் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கடந்த நெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இதன் மூலம் இப்பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் திறப்பு விழா கண்ட அன்று இரவே இம்மையம் மூடப்பட்டு விட்டது. ஒரிரு நாளில் மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்கப்பட்டிருந்த நிலையில் இம்மையம் செயல்படுவதற்கான 

சாத்தியக் கூறுகளே தற்போதைக்கு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. 
பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் சென்னைத் துறைமுகம்:
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத சென்னைத் துறைமுக உயர்அதிகாரி ஒருவர் கூறியது, 
   போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில்தான் திருவொற்றியூர் நகராட்சியிடமிருந்து இந்த நிலம் பெறப்பட்டது. இந்நிலம் குத்தகைக்கு 2007-ஆண்டு ஜூன் மாதம் சென்னைத் துறைமுகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இங்கு வாகன நிறுத்த மையத்தை அமைப்பதில் துறைமுக நிர்வாகம் 
பல்வேறு குழப்பமான முடிவுகளையே மேற்கொண்டு வருகிறது. முதலில் இந்த இடத்தை சென்னை கண்டெய்னர் டெர்மினல் (சி.சி.டி.எல்) நிறுவனத்திடம் ஒப்படைத்தது. மேலும் இந்நிறுவனத்திடமிருந்து மூன்று ஆண்டுகளாக ரூ.4 கோடிவரை வாடகையாக வசூலித்து அதனை நகராட்சியிடம் துறைமுக நிர்வாகம் வழங்கியது. மேலும் இந்நிறுவனம் இங்கு சர்வதேச தரத்தில் வாகன நிறுத்த முனையம் அமைக்கவும், இதற்கு வசதியாக குத்தகை காலத்தை 30 ஆண்டுகளுக்கு நீடித்துத் தரும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுது.  மிகுந்த காலதாமதத்திற்கு பிறகு தமிழக அரசு இதற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் 3 ஆண்டு குத்தகை காலமே முடிவுக்கு வந்தவுடன் இந்த நிலமே துறைமுகத்திற்குத் தேவையில்லை என திரும்பவும் திருவொற்றியூர் நகராட்சியிடமே ஒப்படைத்துவிட்டது. இதனையடுத்து சி.சி.டி.எல். நிறுவனமும் அங்கிருந்து வெளியேறியது.

டெண்டர் குளறுபடிகள்:

    இதனையடுத்து இந்த இடத்தை 30 ஆண்டு குத்தகைக்குப் பெற்று வாகன நிறுத்த மையத்தை அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதை அடுத்து இத்திட்டத்தைச் செயல்படுத்துமாறு சென்னைத் துறைமுகத்திற்கு கப்பல்த்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால் இடத்தைப் பெற்றுக் கொண்ட துறைமுக நிர்வாகம் மீண்டும் தனது குளறுபடிகளை தொடங்கியது. முறைப்படி ஏற்கனவே வாடகை செலுத்தி, 30 ஆண்டு குத்தகைக்குக் கோரிய சி.சி.டி.எல் நிறுவனத்திற்கு இந்த இடத்தை ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் இவ்வாறு செய்யாமல் மையம் அமைப்பதற்காக 3 முறை கோரியது. ஆனால் இந்த டெண்டர்களில் எவரும் பங்கேற்கவில்லை. நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத விதிகள் டெண்டரில் சேர்க்கப்பட்டதே இதற்கு காரணம் புகார் கூறப்பட்டது. இதற்கிடையே தொடரும் நெரிசல் பிரச்னையால் வாகன நிறுத்த மையத்தை உடனடியாக அமைக்க வேண்டிய நிர்பந்தம் துறைமுக நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. 

தீர்வு கூறும் சாத்தியமான அம்சங்கள்:

    துறைமுகத்தில் நிலவும் ஆவணப் பரிசோதனைகளில் ஏற்படும் கால தாமதம்தான் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் ஆகும். இதனால் திருவொற்றியூரில் இம்மையம் அமைக்கப்பட்டு, இங்கு துறைமுக நுழைவுச் சீட்டு வழங்கும் மையம், துறைமுகத்தில் உள்ள தனியார் சரக்குப் பெட்டக முனையங்களின் அனுமதிச் சீட்டு வழங்குவது, கண்டெய்னர் சர்வே, சுங்கத்துறை சோதனை உள்ளிட்ட அனைத்துவிதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு துறைமுக நுழைவு வாயிலில் தாமதமின்றி எளிதாகவும், விரைவாகவும் செல்வதற்குத்தான் முதலில் திட்டமிடப்பட்டது.  இதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் சில உயர் அதிகாரிகளின் தவறான பரிந்துரைகளால் இந்த இடம் மத்திய கிடங்கு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஆனால் அனைத்து தரப்பினரையும் வழி நடத்துவது என்பது மத்திய கிடங்கு நிறுவனத்திற்கு எளிதான விசயம் இல்லை. இதில் ஏற்பட்டுள்ள கால தாமதமே இம்மையம் மூடப்பட்டதற்கான காரணம் எனறார் அவர்.

விரைவில் மீண்டும் செயல்படுமா?

    இது குறித்து மத்திய கிடங்கு நிறுவன மண்டல மேலாளர் ஏ.டி.சங்கர் கூறியது,
துறைமுக நிர்வாகம் எங்களிடம் தற்போதுதான் ஒப்படைத்துள்ளது. இதன் பிறகுதான் இங்கு என்னென்ன வசதிகளை ஏற்படுத்துவது என்பது குறித்து விரைவில்ஆலோசனை நடத்த உள்ளோம். மேலும் சுங்கத்துறை அனுமதி பெற விண்ணப்பிக்கபட உள்ளது. மேலும் கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தேவையான ஒப்புதல்களைப் பெற வேண்டும். இதற்கு காலக் கெடு ஏதும் கூற இயலாது என்றார்.

துறைமுகத் தலைவர் பதில்:

   இது குறித்து துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா கூறியது,
திறப்புவிழா அன்றே இம்மையம் மூடப்பட்டுள்ளது குறித்து தகவல் ஏதும் இல்லை. இம்மையம் மத்திய கிடங்கு நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இனி வாடகை, நிர்வாகம், கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் மத்திய கிடங்கு நிறுவனம்தான் மேற்கொள்ளும். யாரேனும் புகார் தெரிவித்தால் இந்நிறுவன அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது துறைமுகத்தின் பொறுப்பு என்றார் மிஸ்ரா.
    ஆக, இம்மையம் இப்போதைக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதாகத் தெரியவில்லை. கண்டெயர்னர் லாரிகள் சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு வரிசை கட்டி நிற்கின்றன. ஒரு கண்டெய்னர் லாரி துறைமுகத்திற்குள் சென்று திரும்ப 5 நாட்கள் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. இது குறித்து துறைமுக நிர்வாகமோ, அமைச்சகமோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பொறுப்பைக் தட்டிக் கழிக்கும் துறைமுக நிர்வாகத்தை தட்டிக் கேட்பது யார்?
     திறப்புவிழா காண்பதில் ஆர்வம் காட்டும் கப்பல்த்துறை அமைச்சகம் அவை தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுகிறதா? அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளனவா? உள்ளிட்டவைகளில் காட்ட வேண்டும் என்கிறார் இப்பிரச்னையைக் கூர்ந்து நோக்கும் சமூக நல ஆர்வலர் ஒருவர். 

Tuesday, 26 November 2013

திருவொற்றியூர் கடற்கரையில் கடல் மணலை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள பொக்லின் இயந்திரம்

முகவை.க.சிவகுமார்.
திருவொற்றியூர்.

-திருவொற்றியூர் கடற்கரையில் மணலை அள்ள உத்தரவிட்டது யார்?


-கடற்கரை மேலாண்மைக் குழுமம் விசாரணை நடத்தக் கோரிக்கை


திருவொற்றியூர்: திருவொற்றியூர் கடற்கரையில் பொக்கலின் இயந்திரத்தைப் பயன்படுத்தி லாரிகளில் மணல் அள்ள உத்தரவிட்டது யார் என்பது குறித்து கடற்கரை மேலாண்மை பாதுகாப்புக் குழுமம் விசாரணை நடத்தை வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் அருகே கடற்கரையை ஒட்டி  மாநகராட்சிக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம் காலி நிலம் உள்ளது. இந்நிலத்தை தற்போது சென்னைத் துறைமுகத்திற்கு 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் வாடகைக்கு மாநகராட்சி விட்டுள்ளது. இதற்கு மாதம் ரூ.15 லட்சம் வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இடத்தில் கண்டெய்னர் லாரிகள் நிறுத்துமிடத்தை அமைக்க துறைமுக நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான பணிகள் ரூ. 6 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

கடல் மணல் கடத்தல்?:

    இம்மையத்தை ஒட்டிய பகுதியில் கடற்கரையில் உள்ள மணலை பொக்கலின் இயந்திரம் மூலம் குவித்து லாரிகளில் கடத்தும் முயற்சியில் சிலர் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அருகில் உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து மணலை அள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மணலை அள்ள முயற்சித்தவர்கள் துறைமுக நிர்வாகம்தான் மணலை அள்ள அனுமதி அளித்தது. இங்கு அள்ளும் மணலை வாகன நிறுத்த மையத்தில் நடைபெற்று வரும் பணிகளுக்கு உபயோகப்படுத்தப்போவதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் பத்திரிகையாளர்கள், பொதுமக்கள, போலீஸார் என அனைத்து தரப்பினரும் குவிந்ததையடுத்து மணல் அள்ளும் முயற்சி கைவிடப்பட்டது.
இது குறி்த்து திருவொற்றியூர் சமூக நல ஆர்வலர் என்.துரைராஜ் கூறியது,
    திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் தொடர்ந்து இருந்து வரும் கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவுகள், தடுப்புச் சுவர்களை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் பயனாக கடற்கரையில் கடலரிப்பு தடுக்கப்பட்டு அங்கு மணல்மேடுகள்  உருவாகி வருகின்றன. இம்மணலை அவ்வப்போது சிலர் கடத்துவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் தற்போது துறைமுக நிர்வாகமே இயந்திரங்கள் மூலம் மணலைக் குவித்து லாரிகளில் எடுத்துச் செல்ல முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. உண்மையிலேயே துறைமுக நிர்வாகம் உத்தரவிட்டதா? ஒப்பந்ததாரர் தன்னிச்சையாக இச்செயலை மேற்கொண்டார்களா என
விசாரணை நடத்த வேண்டும்.
    காசிமேடு மீன்பிடித் துறைமுக பகுதியில் துறைமுக இணைப்புச் சாலை பணிக்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்குப் பதிலாக ஆழ்படுத்தி, சமன்படுத்தும் பணி தாமதம் ஆவதற்கு கடற்கரை மேலாண்மை மற்றும் ஒழுங்காற்றுக் குழுமத்தின் ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை துறைமுக அதிகாரிகள் காரணமாகக் கூறுகின்றனர். ஆனால் திருவொற்றியூரில் எவ்வித அனுமதியும் இன்றி கடல் மணலை அள்ளும் முயற்சிகள் குறித்து கடற்கரை மேலாண்மை மற்றும் ஒழுங்காற்றுக் குழுமம் தன்னிச்சையாக விசாரணை நடத்த வேண்டும். 

துறைமுகத் தலைவர் மறுப்பு:

    இது குறித்து சென்னைத் துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ராவிடம் இப்பிரச்னை குறித்துக் கேட்டபோது அவர் அளித்த பதில்:
    கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் திருவொற்றியூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்த மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதற்கு கடற்கரை மணலை அள்ள துறைமுக நிர்வாகம் எவ்வித உத்தரவையும் அளிக்கவில்லை. மணலை அள்ள மேற்கொண்ட முயற்சிகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றார் மிஸ்ரா. 
    கடலரிப்பைத் தடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதன் பயனாக வடசென்னை கடற்கரை முழுவதும் மணல் திட்டுகள் உருவாகி வருகின்றன. இதனைப் பாதுகாக்கவும், அழகுபடுத்தவும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்பதே வடசென்னைவாசிகளின் விருப்பமாக உள்ளது.

25 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் கண்டெய்னர் லாரிகள்: அவதியில் பொதுமக்கள்

முகவை.க.சிவகுமார்
 

-துறைமுக நிர்வாக மெத்தனத்தால் தொடரும் கண்டெய்னர் நெரிசல் 

-மாதவரத்திலிருந்து சென்னைத் துறைமுகம் செல்ல மூன்று நாள்கள் பயணம் 

-இணைப்புச் சாலைகள் வந்தும் நெரிசல் நீடிக்கக் காரணம் என்ன?


திருவொற்றியூர்:சென்னைத் துறைமுகத்திலிருந்து மாதவரம், புழல் மற்றும்  நாப்பாளையம் வரை சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு கண்டெய்னர் லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. மாதவரத்திலிருந்து துறைமுகம் செல்ல மூன்று நாள்கள்வரை ஆவதாக கண்டெய்னர் லாரி டிரைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து அடிக்கடி ஸ்தம்பித்து பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  
      மேலும் சென்னையிலிருந்து மணலி புதுநகர், நாப்பாளையம்,  மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் நெரிசலில் சிக்கி பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.  

அமைச்சர் கூறிய உறுதிமொழி என்னாயிற்று?

     பல ஆண்டுகளாக நிலவி வரும் இப்பிரச்னைக்கு துறைமுக இணைப்புச் சாலைகள்  அமைக்கப்பட்டவுடன் தீர்வு ஏற்படும் என கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் துறைமுக அதிகாரிகள் கூறிவந்தனர். ஆனால் தற்போது இத்திட்டத்தின் பெரும்பகுதி பணிகள் நிறைவடைந்து,  வரும் டிசம்பர் மாதம் திறப்புவிழா காண உள்ளது. ஆனாலும் தொடரும் கண்டெய்னர் நெரிசல் நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கண்டெய்னர் லாரிகளை ஓட்டி வந்த 
டிரைவர்கள் வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஓடுகின்றனர். படிப்படியாக இத்தொழிலே நலிவடைந்து அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கிறார் இண்டர் ஸ்டேட் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முத்துகிருஷ்ணன். 

துறைமுகம் செல்ல 3 நாள்கள் பயணம்: 

   சென்னையைச் சுற்றியுள்ள 30 சரக்குப் பெட்டக நிலையங்களிலிருந்து துறைமுகம் செல்லும் கண்டெய்னர் லாரிகள்  பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சாலை, எண்ணூர் விரைவு சாலை வழியாக துறைமுகத்தை அடைய வேண்டும். இதுவல்லாது வெளியூர்களில் சரக்கு ஏற்றிய கண்டெய்னர் லாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கிடங்குகளில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் சரக்குகள் ஏற்றப்பட்ட கண்டெய்னர் லாரிகள் மாதவரத்தில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்குக்குக்குச் சென்று முத்திரை, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் மேலே குறிப்பிட்ட வழியாகவே சென்னைத் துறைமுகத்திற்கு வந்தடைய வேண்டும். 
        இவ்வாறு தினமும் சுமார் ஆயிரம் முதல் 3 கண்டெய்னர் லாரிகள்வரை இதேபோல் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.  பல்வேறு நிலைகளைக் கடந்து துறைமுகத்திற்குள் செல்ல வேண்டியதுள்ளதால் எங்காவது ஓரிடத்தில் தடங்கல் ஏற்பட்டாலே 20 முதல் 25 கி.மீ. தூரத்திற்கு கண்டெய்னர் லாரிகள் வரிசை கட்டி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை மாதவரத்தில் வரிசையில் இணைந்த கண்டெய்னர் லாரி திங்கள்கிழமை இரவுதான் துறைமுக நுழைவு வாயிலுக்கே வந்து சேர்ந்தது என்கிறார் சுங்க இல்ல முகவர் சந்திரபோஸ் 

சுங்கத்துறை அதிகாரிகள் மெத்தனம்:

        மாதவரத்தில் சுங்கத்துறை ஆவண சரிபார்க்கும் மையம் தொடங்கப்பட்டபோது இங்கு 24 மணி நேரமும் ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெறும்  என சுங்கத்துறை உயர் அதிகாரிகள்  உறுதி அளித்திருந்தனர். ஆனால் நடைமுறையில்
இம்மையம் இவ்வாறு செயல்படவில்லை.  காலை 6 மணிக்கு வரவேண்டிய சோதனை அதிகாரிகள் பிற்பகல் 2 மணிக்குத் தான் வருகின்றனர். இரவு நேரமாகிவிட்டால் லாரிகள் காத்திருந்தாலும் ஓய்வெடுக்கச் சென்று விடுகின்றனர். இவர்களை சுங்கத்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கண்காணிக்கிறார்களா? எனத் தெரியவில்லை என்கிறார் கண்டெய்னர் லாரி உரிமையாளர் முருகேசன் தெரிவித்தார். 

வசூல் மழையில் போக்குவரத்துப் போலீஸார்:

     லாரிகள் வரிசையில் சென்றாலும் மாதவரத்திலிருந்து துறைமுகம் வரை சுமார் 11 இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதாக போக்குவரத்துப் போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் இச்சோதனைச் சாவடிகளில் லாரிகள் வரிசையிலிருந்து விலகி முந்திச் செல்ல 'வசூல்' செய்யும் பணிதான் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் லாரி டிரைவர்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்வதில்தான் கவனம் செலுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பிப்பதோடு, விபத்துகளும் அதிகரிக்கின்றன.  இச்சோதனைச் சாவடிகளின் மூலம் சுமார் ரூ.10 லட்சம்வரை சட்டவிரோதமாக போக்குவரத்துப் போலீஸார் 'வசூல்' செய்கின்றனர். பல கண்டெய்னர் லாரி நிறுவனங்கள் மாத வாடிக்கை செலுத்துகின்றனர் என்கிறார் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த கஜேந்திரன்.  

நுழைவு வாயில்களில் தாமதம்:

    வரிசையில் நிற்கும் லாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆட்களை நியமித்து சோதனை நடத்தினால்தானே வாகனங்கள் விரைவாகச் செல்ல முடியும். வெளியில் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்பதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பது போல் தான் துறைமுகத்தின் நுழைவு வாயிலில் மேற்கொள்ளப்படும் பணிகள் உள்ளன. வரிசையில் 200 லாரிகள் நின்றாலும்,  2 ஆயிரம் லாரிகள் நின்றாலும் அதற்கேற்ப பணி செய்யும் பாங்கு இங்கு பணியாற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் அறவே இல்லை. நுழைவு வாயில்களில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பதற்கும் துறைமுக நிர்வாகம் தயாராக இல்லை என்கிறார் சுங்க இல்ல முகமை நிறுவன மேலாளர் ஜெகநாதன். 

துறைமுகத்திற்குள் நெரிசல்:

     துறைமுகத்தில் இரண்டு தனியார் சரக்குப் பெட்டக முனையங்கள் உள்ளன. இங்கு வந்து செல்லும் லாரிகளுக்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லை. இருக்கின்ற குறைந்த வசதிகளையுடைய சாலைகளையும் துறைமுக நிர்வாகம் முறையாகப் பராமரிப்பதில்லை. இதனால் குறுகலான சாலைகளில் ஒரிரு லாரிகள் ஓரங்கட்டி நின்றாலே அதன் பின்னால் நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசை கட்டி நிற்கும். இதனால் சில இடங்களில் அகலமாக இருக்கும் சாலைகளிலும் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பிக்கும். இதற்கு சில லாரி டிரைவர்களின் அவசரமே காரணம் என்றாலும் இவற்றை ஒழுங்குபடுத்த பொறுப்பு யாருக்கு உள்ளது?  முனையங்களின் நிர்வாகிகளைக் கேட்டால் தாங்கள் முனையங்களுக்கு வெளியே  எவ்வித செயல்களையும் செய்ய துறைமுக அதிகாரிகள் அனுமதி அளிப்பதில்லை எனக் கூறுகின்றனர். 
    கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை மேலோட்டமாகப் பார்த்தால் இது சென்னைத் துறைமுகத்தின் பிரச்னைகளில் ஒன்று என்பதாகவே கருதப்படுகிறது.  ஆனால் இப்பிரச்னையின் பின் விளைவுகளால், லாரி தொழில், ஏற்றுமதி-இறக்குமதி,  சரக்குப் பெட்டக நிலையங்கள், திருப்பூர் உள்ளிட்ட ஏற்றுமதி நகரங்கள்,  தனியார் நிறுவன ஊழியர்கள், கூலித் தொழிலாளர்கள் என லட்சக் கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள். மேலும் ஒட்டுமொத்த தொழில்துறையே பாதிக்கப்படும் என்பதால் இப்பிரச்னையைத் தீர்க்க மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

Friday, 26 July 2013

75 ஆண்டுகளைக் கடந்து சாதனை படைத்த அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

-இன்று பவள விழா நடைபெறுகிறது.

திருவொற்றியூர், ஜூலை.26.: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி 75 ஆண்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கான பவள விழா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 
     1781- ஆண்டில் சென்னையில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டது.  இதனால் அன்றைய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் பட்டினியால் வாடினர். இவர்களைக் காப்பாற்றும் நோக்கில் மெட்ராஸ் பிரசிடென்சி அரசும், தூய மேரி தேவாலயமும் இணைந்து ராயபுரம் பகுதியில் தற்போதைய மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் கஞ்சித் தொட்டியை திறந்தன.  பின்னர் இங்கேயே ஒய்வெடுக்கவும் வசதிகள் ஏற்படுத்துப்பட்டது.  பின்னர் இந்த இடம் கிராம ஹெட்மேனின் நினைவாக Monegar Choultry என மக்கள் பெயரிட்டு அழைத்தனர்.   மோனிகர் சவுல்ட்ரியின்  ஒரு பகுதி இன்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் உள்ளது.  உணவும், மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டதால்  நீண்டகாலமாக இம்மருத்துவமனை கஞ்சித் தொட்டி மருத்துவமனை என்றே அழைக்கப்பட்டு வந்தது. 
       1797- டாக்டர் ஜான் ஹோலன் அண்டர்வுட் என்பரால் மருத்துவமனைக்கான கட்டடம் கட்டப்பட்டது.  இதில் 90 படுக்கை வசதிகள் ஏற்படுத்துப்பட்டன. 1807-ல் மோனேகர் சவுல்ட்ரி இம்மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டது.  1968-ல் பெண்களுக்குக் சிகிச்சை அளிக்க வசதியாக 40 படுக்கைகள் கொண்ட சிறப்பு கட்டடம் அமைக்கப்பட்டது.  பின்னர் 
செங்குன்றம் ஏரியிலிருந்து இம்மருத்துவமனைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதற்கு ராஜா சர் ராமசாமி முதலியார் உதவி செய்தார். இவரது நினைவாக தற்போதைய ஆர்.எஸ். ஆர்.எம். மகப்பேறு மருத்துமனை செயல்பட்டு வருகிறது. 
       1903-ல் ராயபுரம் மெடிக்கல் ஸ்கூல் தொடங்கப்பட்டது. பின்னர் மெட்ராஸ் பிரசிடென்சியில் கவர்னராக இருந்த ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லியின் நினைவாக ஸ்டான்லி மெடிக்கல் ஸ்கூல் என பெயர் மாற்றம் பெற்றது.  இப்பள்ளிதான் படிப்படியாக வளர்ந்து ஜூலை 2, 1938-ல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்வு பெற்றது.  முதலில் 72 மருத்துவ மாணவர்கள், 462 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துமனை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.  இம்மருத்துவக் கல்லூரியின் முதல் டீனாக டாக்டர் அனந்தநாராயன ஐயர் பதவி வகித்துள்ளது. இதுவரை 25 டீன்கள்கள் இப்பதவியில் இருந்துள்ளனர்.  26 வது டீனாக டாக்டர் கீதாலட்சுமி இருந்து வருகிறார். 

சாதனை படைத்த சிறப்பு மருத்துவத் துறைகள்:
இம்மருத்துமனையில் முதலில் உடல் கூறு இயல் சிறப்பு மையம் டாக்டர் அனந்தநாராயண ஐயரால் தொடங்கப்பட்டது. 1971-ல் பேராசிரியர் டாக்டர் ஆர்.வெங்கடசாமியால் தொடங்கி வைக்கப்பட்ட ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைப் பிரிவு இதுவரை 3.30 லட்சம் பேருக்கு சிகிச்சை அளித்துள்ளது. சுமார் 70 ஆயிரம் பேருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இவ்வகைச் சிகிச்சையில் இந்தியாவிலேயே முன்னோடி மையமாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது கை மாற்றும் அறுவைச் சிகிச்சை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
1995-ல் டாக்டர் ஆர்.பி.சண்முகம் தலைமையில் தொடங்கப்பட்ட கல்லீரல், குடல் பகுதி சிகிச்சை பிரிவில்தான் இந்தியாவிலேய கல்லீரல் மாற்று முதல் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பேராசிரியர் டாக்டர் ஆர். சுரேந்திரன் தலைமையில் கல்லீரல் சிகிச்சைப் பிரிவு சிறப்பு மையமாக வளர்ச்சி பெற்றது. 2000-ஆம் ஆண்டில் ஐ.எஸ்.ஓ. 9001 தரச்சான்று இம்மையத்திற்கு வழங்கப்பட்டது.
நாட்டிலேயே அரசு மருத்துவமனையில் இச்சான்று பெற்ற மையம் இது என்பதும், கல்லீரல் செயலிழந்த 37 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இந்தியாவின் முன்னணி மையமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஸ்டான்லி மருத்துவமனை என்றாலே நினைவுக்கு வருவது எலும்பு சிகிச்சைப் பிரிவுதான். இப்பிரிவுக்கு மட்டும் தினமும் சுமார் 800 நோயாளிகளுக்கும் மேல் சிகிச்சை பெற வருகின்றனர்.

மொத்தத்தில் 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட மருத்துவமனையின் துணையோடு 75 ஆண்டுகளைக் கடந்து சாதனை படைத்து இன்று பவள விழாக் கொண்டாடுகிறது அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி.

Wednesday, 24 July 2013

தினமணி செய்தி எதிரொலி..... செயல்படத் தொடங்கியது திருவொற்றியூர் எரிவாயு தகன மையம்

-ஒரே நாளில் 3 சடலங்கள் எரிப்பு

திருவொற்றியூர்:இரண்டு முறை திறப்பு விழா கண்டு செயல்பாட்டுக்கு வராத  திருவொற்றியூர் எரிவாயு தகன மையம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் முழு வீச்சில் செயல்படத் தொடங்கியது.
     திருவொற்றியூரில் ரூ.1.10 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எரிவாயு தகன மையம் கடந்த 2011-ல் திறக்கப்பட்டது. ஆனால் ஒரு சில மாதங்களில் மூடப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகர மேயர் சைதை எஸ். துரைசாமி நேரில் ஆய்வு செய்து எரிவாயு தகன மையத்தை சீரமைத்து உடனடியாகத் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து தகன மையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. மேலும் புதுப்பிக்கப்பட்ட எரிவாயு தகன மையத்தை கடந்த ஜூன்.17 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேயர் சைதை துரைசாமி திறந்தும் வைத்தார். ஆனாலும் இம்மையம் செயல்பாட்டுக்கு வந்தபாடு இல்லை. பழைய முறையிலேயே சடலங்கள் விறகு, எரு ராட்டை உள்ளிட்டவைகளால் எரிக்கப்பட்டன.
        இம்மையம் செயல்பாட்டுக்கு வராததிற்கான காரணம் குறித்து மண்டலக்குழுத் தலைவர் தனரமேஷிடம் கேட்டபோது, 'மயான ஊழியர்களின் எதிர்ப்பால்தான் மையம் செயல்படுவதில் தடங்கல் உள்ளது' என தெரிவித்தார். இது குறித்து தினமணி ஜூலை.16 நாளிதழில் 'இரண்டு முறை திறப்பு விழா கண்டும் செயல்படாத திருவொற்றியூர் எரிவாயு தகன மேடை' என சிறப்புச் செய்தி வெளியானது. 

மேயர் துரித நடவடிக்கை:
    இது குறித்து தகவல் அறிந்த மேயர் சைதை துரைசாமி வெளிநாட்டில் இருந்த போதும் தகன மையத்தை உடனடியாகத் செயல்பட வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மண்டல அலுவலர் காங்கேயன் கென்னடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மயான ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதில் புதிய எரிவாயு தகன மையம் செயல்பட மயான ஊழியர்கள் ஒத்துழைப்பதாக தெரிவித்தனர். மேலும் அவர்களை மாநகராட்சி ஊழியர்களாக பணி நியமனம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஓரே நாளில் மூன்று சடலங்கள் எரிப்பு:
   இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் தகன மையம் செயல்படத் தொடங்கியது. காலடிப்பேட்டை மேற்கு மாடவீதியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் எம்.இ. குமாரின் உறவினர் பார்வதி புற்றுநோய் பாதிப்பினால் சனிக்கிழமை இறந்து போனார். 
பார்வதியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை எரிவாயு தகன மேடையில் வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டது. இரவு வரை மேலும் இரண்டு சடலங்கள் எரிக்கப்பட்டன. 

மயான ஊழியர்கள் வேண்டுகோள்:

இது குறித்து மயான ஊழியர்கள் சார்பில் ஆனந்தன் கூறியது,
    திருவொற்றியூர் மயானத்தில் பரம்பரையாக சடலங்களை எரிக்கும், புதைக்கும் பணியைச் செய்து வருகிறோம். இந்நிலையில் புதிய எரிவாயு தகன மையத்தை திறந்துள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனினும் மையம் செயல்பட முழு ஒத்துழைப்பு கொடுப்போம். எங்களின் ஏழ்மை நிலை கருதி கருணை அடிப்படையில் 9 மயான ஊழியர்களையும் மாநகராட்சி ஊழயர்களாக நியமிக்க வேண்டும். இதனைத்தான் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகிறோம்.  மற்றபடி தகன மையத்தை செயல்படவிடாமல் இதுவரை தடுத்தோம் என்பது தவறான தகவல் என்றார் ஆனந்தன்.
தடங்கலின்றி செயல்படக் கோரிக்கை:
இது குறித்து திருவொற்றியூர் பகுதி பொதுநல ஆர்வலர் அரிமா என்.துரைராஜ் கூறியது,
    திருவொற்றியூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம் இது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இம்மையம் செயல்படுதில் தடங்கல் ஏற்பட்டு விட்டது. இனிமேலாவது இம்மையம் தடங்கலின்றிச் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தகன மையத்தில் உள்ள அமரர் பூங்கா, நீரருவி உள்ளிட்டவைகளை பராமரிக்க தேவையான தண்ணீரை வழங்க வேண்டும்.  ஏற்கனவே சென்னை மாநகராட்டியில் உள்ள விதிமுறைகள், திட்டங்கள் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளுக்கும் இன்னும் விரிவுபடுத்தாமல் இருப்பதே இது போன்ற பிரச்னைகளுக்குக் காரணம் கூறப்படுகிறது. எனவே இது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர், மாநகர மேயர் ஆகியோர்  துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் துரைராஜ். 

இரண்டுமுறை திறப்பு விழா கண்டும் செயல்படாத திருவொற்றியூர் எரிவாயு தகன மேடை

-பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி துரித நடவடிக்கை தேவை

திருவொற்றியூர்:
சென்னை மாநகராட்சியால்  சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட திருவொற்றியூர் எரிவாயு தகன மேடை மயான ஊழியர்களின் எதிர்ப்பால் செயல்படாமல் முடங்கியுள்ளது. 
    திருவொற்றியூர் மயானம் புதர் மண்டி கிடந்ததையடுத்து இதனை சீரமைத்து நவீனப்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து  இம்மயானத்தில் எரிவாயு தகன மேடை கூடிய மயானமாக மாற்றியமைக்க முடிவு செய்த நகராட்சி நிர்வாகம் ரூ. 1.10 கோடி செலவில் அமரர் பூங்கா, இறுதிச் சடங்கு மண்டபம்,  தகன மேடை ஆகியவற்றுடன் நவீன மயானத்தைக் கட்டி முடித்தது. 
இதனை கடந்த பிப்.27, 2011-ல் அப்போதையை மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி இதனைத் திறந்து வைத்தார். மேலும் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்) சார்பில் ரூ.9.50 செலவில் அமரர் ஊர்தியும் ஒன்றையும் இலவசமாக வழங்கியது. எரிவாயு தகன மேடையை இயக்கும் பொறுப்பு பட்டினத்த சமூக சேவை மையத்திடம் அளிக்கப்பட்டது.  
மயான ஊழியர்கள் எதிர்ப்பு
    சில நாள்கள் மட்டும் எரிவாயு தகன மேடை செயல்பட்டு வந்த நிலையில் இம்மயானத்தில் ஏற்கனவே பணி செய்து வந்த மயான ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக உத்தரவிட்டால் மட்டுமே மயானத்தை இயக்க ஒத்துழைப்பு கொடுப்போம் என இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேவை மைய நிர்வாகிகளையும் விரட்டியடித்தனர். இக்கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம். ஆனால் உடனே முடியாது அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை மயான ஊழியர்கள் ஏற்க மறுத்தனர்.இந்நிலையில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டதில் தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளதாகக் தகன மேடை  மூடப்பட்டது.     
   இதனையடுத்து பழைய எரிமேடையிலேயே விறகு, சாண இராட்டை போன்றவைகளைக் கொண்டு சடலங்கள் எரிக்கும் பணி தொடங்கியது.   சடலங்கள் எரியூட்டப்படும்போது பரவும் துர்நாற்றம் மிகுந்த புகையால்  இப்பகுதி மக்கள் மீண்டும் அவதிக்குள்ளாயினர்.  மேலும் ஒரு சடலத்தை எரிக்க ரூ.5 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை மயான ஊழியர்களால் வசூலிக்கப்பட்டது.  இந்நிலையில் திருவொற்றியூர் நகராட்சி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு மயானமும் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 
மேயர் ஆய்வு: 
     இதனையடுத்து எரிவாயு தகன மேடையை சீரமைத்து இயக்க வேண்டும் என பல்வேறு பொதுநல அமைப்புகளும் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தன.  இது குறித்து 'தினமணி'யில் செப். 21,  2012-ல் விரிவாக செய்தியும் வெளியிடப்பட்டது.   இதனையடுத்து மேயர் சைதை எஸ்.துரைசாமி, சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன்,  மண்டலக் குழு தலைவர் மு.தனரமேஷ் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.  பின்னர் எரிவாயு தகன மேடையை விரைவில் இயக்குவதற்கான பணிகளை உடனடியாகச் செய்யும்படி அதிகாரிகளுக்கு மேயர் துரைசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த ஆறு மாதங்களாக சீரமைக்கும் பணியும், மயான ஊழியர்களை சமாதானப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வந்தன. 
மீண்டும் திறப்பு விழா:
     இதனையடுத்து எரிவாயு தகனமேடையுடன் கூடிய மயானம் புதுப் பொலிவு பெற்றது. மேலும் மயானத்தின் அருகிலேயே உயர் கோபுர மின் விளக்கும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன்,17 அன்று திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேயர் சைதை எஸ்.துரைசாமி சீரமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடையை திறந்து வைத்தார். மேலும் சடலத்தை எரிக்கும் செலவை மாநகராட்சியே ஏற்கும். உறவினர்கள் ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை என அறிவித்தார்.  ஆனால் திறப்பு விழாக் கண்டு ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் தகன மேடையில் ஒரு சடலம் கூட எரிக்கப்படவில்லை. 

கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற முடியாது:

இது குறித்து மண்டலக் குழு தலைவர் மு.தனரமேஷ் கூறியது,
     மயான பணியாளர்களை மாநகராட்சி ஊழியர்களாக பணிவரன்முறைப்படுத்தும் கோரிக்கை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதி மயான பணியாளர்களுக்கும் பொதுவானது.  எனவே இதில் உடனடியாக முடிவெடுக்க முடியாது. இவர்கள் இல்லாமலேயே புதிய எரிவாயு தகன மேடையை இயக்க முடியும் என்றாலும் இறுதி அடக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்டும் சாஸ்திர, சம்பிரதாயங்களை செய்ய மயான பணியாளர்கள் தேவை.  ஏற்கனவே செய்து வந்த பணியாளர்கள் 11 பேரும் இதனைச் செய்ய மறுக்கும் நிலையில் புதிய பணியாளர்களையும் அச்சுறுத்துகின்றனர். எனினும் மாற்று ஏற்பாடுச் செய்து உடனடியாக மயானத்தை இயக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றார் தனரமேஷ்.
   சென்னை மாகராட்சியின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே உள்ள மயானங்களில் உள்ள பணியாளர்கள் எல்லாம் நிரந்தர ஊழியர்களாக இருக்கும் போது திருவொற்றியூர் மயான பணியாளர்களின் கோரிக்கை நியாயமானதாகவே தெரிகிறது. எது எப்படி இருப்பினும் ஒன்று அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிட்டு மயானத்தை திறந்திருக்க வேண்டும். திறந்து வைத்துவிட்டால் பொதுமக்களின் நலன் கருதி பிரச்னைகளைச் சமாளித்து மயானத்தை செயல்படுத்த முனைய வேண்டும். இதுவே இந்த விசயத்தில் பெரும்பாலோரின் கருத்தாக உள்ளது. 

காலாவதியான எண்ணெய்க் குழாய்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை பயன் தருமா?

-மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்த 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் 

திருவொற்றியூர்:
காலாவதியான எண்ணெய்க் குழாய்களால் வடசென்னைக்கு  மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதுவும் புதிய குழாய்கள், கொள்கலன்களை அமைக்க மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளிப்பதைப் பொருத்தே இதன் கால அளவு அமையும் எனத் தெரிகிறது. 
     தண்டையார்பேட்டை வரதராஜபெருமாள் கோயில் தெருவில் உள்ள சில வீடுகளின் ஆழ்குழாய்க் கிணறுகளில் பெட்ரோலிய எண்ணெய் கலந்த பிரச்னையை அடுத்து மாசுக் கட்டுப்பாடு வாரியங்கள், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். எனினும் எங்கிருந்து இந்த எண்ணெய் கசிந்து கிணறுகளுக்கு வந்தது?, மேலும் அது என்ன வகை எண்ணெய்? எந்த நிறுவனத்தின் குழாயிலிருந்து கசிவு ஏற்பட்டது? என்பதில் தொடர்ந்து குழப்பம்தான் நிலவுகிறது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தடை பலன் தருமா?:
    சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) தங்களுக்கு வருவது கச்சா எண்ணெய் மட்டுமே. கிணறுகளில் காணப்பட்ட எண்ணெய் இதுவல்ல எனவும், இந்தியன் ஆயில் கார்போரேசன்  (ஐ.ஓ.சி.) நிறுவனம் தங்களது குழாய் வழியில் எவ்வித கசிவும் இல்லை எனவும், பாரத் பெட்ரோலியம் (பி.பி.சி.எல்.) நிறுவனம் இவ்வழியே செல்லும் குழாயில் எண்ணெய் கொண்டு செல்வதை சில மாதங்களுக்கு முன்பே நிறுத்தி விட்டோம் எனவும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம்  இவ்வழியே எண்ணெய் எடுத்துச் செல்ல தடை விதிப்பதாக  மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.  இவ்வாறு தடை விதிக்கப்படுவதால் மட்டும் இப்பிரச்னை முடிந்துவிடும் என கருத முடியாது. பிறகு பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் பிரச்னை பெரிதாக உருவெடுக்கும் அபாயமும் இருக்கிறது என்கிறார் எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர்.  

பிரச்னையின் மூலமும், மாற்றுத் திட்டமும்:

      1969-ல் மணலியில் சி.பி.சி.எல் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த ஆலைக்காக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை கொண்டு வர சென்னை துறைமுகத்திலிருந்து தண்டையார்பேட்டை வழியாக சுமார் 7 கி.மீ. நீளத்திற்கு 75 செ.மீ. விட்டுமுள்ள குழாய்கள் அமைக்கப்பட்டன. இதேபோல் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளை தண்டையார்பேட்டையில் உள்ள கொள் கலன்களுக்குக் கொண்டு வரவும் இதே காலத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டன. இங்கிருந்துதான் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கு பெட்ரோலிய பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதன் ஆயுள் காலம் 30 ஆண்டுகள் மட்டுமே. தற்போது சுமார் 45 ஆண்டுகள் பழமையாகிவிட்டன. எனவே இதனத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்கும்வரை ஆபத்தும் தொடரும் என்பதுதான் உண்மை நிலவரம். இதற்கான மாற்றுத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? 
ரூ.126 கோடி திட்டத்திற்கு விரைவில் அனுமதி: 
இது குறித்து சி.பி.சி.எல். நிறுவன அதிகாரிகள் கூறியது,
  காலாவதியான குழாய்களை தொடர் பயன்பாட்டில் வைத்திருப்பது ஆபத்தானது என்பதால்தான் ரூ.126 கோடி மதிப்பீட்டிலான புதிய குழாய்கள் பதிக்கும் திட்டத்தை நிறுவனம் அறிவித்தது. டி துறைமுகத்திலிருந்து எண்ணூர் விரைவுசாலை, மணலி சாலை வழியாக 17 கி.மீ. நீளத்திற்கு 105 செ.மீ. விட்டமுள்ள CARBON STEEL குழாய்களை பதிக்கும் இத்திட்டத்திற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மைக் குழுமம் பரிசீலனை செய்த பிறகு கடந்த மே மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. பின்னர் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் (COASTAL REGULATION ZONE) துறை பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இத்திட்டத்திற்கு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளிக்க பரிந்துரைத்துள்ளது. தற்போது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக இத்திட்டம் காத்திருக்கிறது. ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஒப்புதல் கிடைத்த 18 மாதங்களில் புதிய குழாய்களைப் பதித்து செயல்பாட்டுக்குக் கொண்டு வரமுடியும் என்றனர். 
சேமிப்பு கொள்கலன்கள் எண்ணூருக்கு மாற்றம்:
    தமிழகத்தில் IOC, BPCL,HPCL உள்ளிட்ட நிறுவனங்கள்தான் பெருவாரியாக எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன. துறைமுகங்களிலிருந்தும், சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்தும் பெட்ரோலிய எண்ணெய் வகைகளை குழாய் மூலம்  கொள்கலன்களுக்குக் கொண்டு வந்து சேமித்து வைக்கின்றன. இந்நிறுவனங்களின் கொள்கலன்கள் பெரும்பாலானவை தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் தான் உள்ளன. மக்கள் நெருக்கும் அதிகமாக இருக்கும் இப்பகுதியில் இக்கலன்களை தொடர்ந்து வைத்திருப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது. தற்போதைய சம்பவத்தால் இது மேலும் வலுத்துள்ளது. 
    இதனையடுத்து தங்களது சேமிப்பு இருப்பிடத்தை மாற்ற இந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பி.பி.சி.எல் நிறுவனம் எண்ணூர் துறைமுகம் அருகே 60 ஏக்கர் பரப்பளவில் சேமிப்பு கொள்கலன்களை அமைக்கவும் இதற்கான இடத்தை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது. சமீபத்தில் மத்திய தொழில் மற்றும் வர்த்தக இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனை சந்தித்து பி.பி.சி.எல். நிறுவன அதிகாரிகள் இதனை வலியுறுத்தியுள்ளனர். இதே போல் இதர நிறுவனங்களும் மாற்றுத் திட்டங்களை வகுத்து செயல்படுத்து முனைந்துள்ளன என்பதை தற்போதைய நிலை.
    எப்படி பார்த்தாலும் தற்போதைய நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு காலாவதியான குழாய்கள் பயன்பாட்டில் வைத்திருப்பது தவிர்க்க முடியாது. எனவே தடைவிதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளால் பயன் ஏதும் இராது. அதனை விடுத்து மாற்றுத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஒருங்கிணைந்து ஆர்வத்துடன் செயல்பட்டால் மட்டுமே 
வட சென்னை மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்பதே ஏதார்த்த உண்மை.

கழிவுநீர், குப்பைக் கழிவுளால் நாசமாகும் வடசென்னை கடற்கரை மாநகராட்சி நிர்வாகம் சிறப்புக் கவனம் செலுத்துமா?

முகவை.க.சிவகுமார்,
திருவொற்றியூர்:

வடசென்னையில் காசிமேடு முதல் எண்ணூர்வரை உள்ள நீண்ட கடற்கரை பகுதி கழிவு நீர் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றுச் சூழல் சீர்கேடு அடைந்து வருகிறது.
முன்பு கடற்கரை கிராமங்களாக இருந்த  மைலாப்பூர், திருவல்லிக்கேணி, சென்னை பட்டணம், ராயபுரம், வண்ணையம்பதி, திருவொற்றியூர் உள்ளிட்டவைதான் முதலில் சென்னை மாநகரம் தோன்ற காரணமாக அமைந்தது என்பது வரலாற்று உண்மை.
சிறு படகுத் துறையாக இருந்த மெரினா இன்று ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.  லட்சக் கணக்கான மக்கள் காற்று வாங்கும் இடமாக மெரினா உள்ளது.  மெரினா, பெசன்ட் நகர், பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிகளை பராமரிக்க, அழகுபடுத்த என சென்னை மாநகராட்சி ஆண்டு தோரும் கணிசமான தொகையைச் செலவு செய்கிறது. இதேபோல்  வடசென்னை கடற்கரையை பராமரிப்பதிலும் போதுமான கவனம் செலுத்த வேணடும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கடலரிப்பில் காணாமல் போன கோயில்:
   காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மணல் நிறைந்த அழகிய கடற்கரைகள் முன்பு இருந்தன. மேலும் காசி விசுவநாதர் கோயில், பட்டினத்தார் கோயில், அகத்தியர் கோயில், ராமலிங்கர்மடம் என வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களும், அகலமான மணற்பரப்பும், மரங்கள் அடங்கிய தோப்புகளும் இக்கடற்கரைக்கு முன்பு அழகு சேர்த்தன. ஆனால் இப்பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட கடலரிப்பால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு நிலம் கடலால் காவு கொள்ளப்பட்டு விட்டது. இதில் காசி விசுவநாதர் கோவில் போன்றவைகளும் கடலில் கரைந்துவிட்டன. இந்நிலையில் மீதி உள்ள பகுதியும் தற்போது குப்பை, கழிவுகள்  கொட்டப்படும் இடங்களாக மாறி வருவது இப்பகுதி மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.  
கடலில் கலக்கும் ரசாயனக் கழிவுகள்:
   மணலி,எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட ரசாயனத் தொழிற்சாலைகள் உள்ளன. இவைகளிலிருந்து வெளியேற்றப்படும் ஆலைக் கழிவு நீர் வடசென்னை கடற்கரை பகுதியில்தான் கடலில் விடப்படுகின்றன.  இங்குள்ள இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களின் முக்கிய தொழிலே மீன் பிடிப்பதுதான். கடலில் தொடர்ந்து கலந்து வரும் ரசாயன கழிவுகளால் இப்பகுதியில் மீன்வளம் பெருமளவு குறைந்துபோய்விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடற்கரையில் கொட்டப்படும் குப்பைகள்:
    சென்னை மாநகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகள் இதற்கென உள்ள வளாகங்களில்தான் பெரும்பாலும் கொட்டப்படுகின்றன. ஆனால் வியாபார நிறுவனங்கள் நிறுவனங்கள் மற்றும் மாவு மில்கள் போன்றவற்றில் வெளியேற்றப்படும் குப்பைகள் எண்ணூர் விரைவு சாலையில் சுங்கச் சாவடி கடற்கரை பகுதி அருகே தொடர்ந்து கொட்டப்படுகின்றன. இதில் இரவு நேரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகள் அப்போதே தீவைக்கப்படுகின்றன. சுங்கச் சாவடியில்  புறக்காவல் நிலையம் இருந்தும் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுபவர்களைத் தடுப்பது எங்கள் வேலை அல்ல என்பது போல் உள்ளனர்.  
சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் வாரியம்:
 
  திருவொற்றியூர் மண்டலத்தில் 14 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை வசதி இல்லை. இப்பகுதியில்  சென்னைக் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுமார் ரூ.110 கோடி மதிப்பீட்டிலான பாதாளச் சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகளும் சுமார் 7 ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெற்று வருகின்றன. பாதாளச் சாக்கடை வசதியில்லாத இப்பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீர் முறைப்படி கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுக்குத்தான் எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் போதுமான கழிவு நீர் லாரிகள் இல்லாததால், அதிக நடை செல்ல வேண்டும் என்கிற கட்டாயத்தில் அகற்றப்படும் கழிவு நீர் அனைத்தும் அருகில் உள்ள கடற்கரை பகுதியில்தான் கொட்டுகின்றனர். மேலும் பாதாளச் சாக்கடையில் தேங்கும் கழிவுகளையும் கடற்கரையில்தான் குடிநீர் வாரியம் கொட்டுகிறது.
சிறப்புத் திட்டம் வேண்டும்:
   இப்பிரச்னை குறித்து  திருவொற்றியூரைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள் கோட்டீசுவரன், சுப்பிரமணி ஆகியோர்  கூறியது,
    கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்ட பிறகு கடற்கரை நெடுகிலும் மணல் குவிந்துள்ளது. துறைமுக இணைப்பு சாலைகள் (EMRIP) திட்டத்தின் கீழ் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது. ஆனாலும்  இங்கு தொடர்ந்து குப்பைகள்,  கழிவுநீர், ரசாயனக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் இப்பகுதி தொடர்ந்து மாசடைந்து வருகிறது. கடலோரப் பகுதிகளில்  சிறிய கட்டங்கள், பொதுக் கழிப்பிடங்கள் கட்டுவதற்குக் கூட எதிர்ப்பு தெரிவிக்கும் கடலோர மண்டல மேலாண்மை குழுமம் (COASTAL ZONE MANAGEMENT AUTHORITY) கூட இது போன்ற சீர்கேடுகளைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. சுமார் 20 லட்சம் பேர் வசிக்கும்  வடசென்னையில் எவ்வித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லை. எனவே வட சென்னை கடற்கரை பகுதியை அழகுபடுத்துவது குறித்து ஆய்வு செய்து ஒரு சிறப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவிக்க வேண்டும் என்றனர். 
    மொத்தத்தில் தென் சென்னைக்கு நிகராக வடசென்னையும் வளம் பெறுமா?. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துமா? வடசென்னை மக்கள் பிரதிநிதிகள் முன்முயற்சி எடுப்பார்களா? இவைகளே இப்பகுதி மக்களின் பொதுவான கேள்விகளாக உள்ளன