Sunday, 28 August 2016

திருவொற்றியூர் முருகன் கோயிலில் 6 சாமி சிலைகள் திருட்டு 

மர்மநபர்கள்  கைவரிசை

திருவொற்றியூர், ஆக.20:திருவொற்றியூர் முருகன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த 6 உற்சவர் சாமி சிலைகளை வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
   திருவொற்றியூர் ஜோதிநகர் பிரதான சாலையில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. 40 ஆண்டுகள் பழமையான இக்கோயிலை ஜோதிநகர் கிராம நிர்வாகத்தினர் நிர்வகித்து வருகின்றனர். தற்போது ஆடி மாதம் என்பதால் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றனர். இங்குள்ள அறை ஒன்றில் பத்துக்கும் மேற்பட்ட உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை காலையில் கோயிலைத் திறந்து பூஜை செய்ய வந்த கோயில் அர்ச்சகர் கார்த்திக் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பிறகு கதவைத் திறந்து பார்த்தபோது அறையில் வைக்கப்பட்டிருந்த முருகன், ஈஸ்வரன், பார்வதி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட 6 உற்சவர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. 
    இதனையடுத்து கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்த கார்த்திக், பிறகு சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் காவல்த்துறை கைரேகை பிரிவு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். சென்னை மாநகர காவல்த் துறையின் மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
திருவொற்றியூர் சிலை காப்பக மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு:
   திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் சிலை பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு  சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தீனதயாளனிடமிருந்து கைப்பற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. திருவொற்றியூரில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தையடுத்து இம்மையத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
தரச்சான்று நடைமுறை மூலம் சுங்கத்துறை பரிவர்த்தனை எளிமைப்படுத்தப்படும் 

மத்திய வாரிய உறுப்பினர் பி.கே.பன்சால் 

திருவொற்றியூர், ஆக.19:ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் மற்றும் இதில் தொடர்புடைய நிறுவனங்களுக்கு தரச்சான்று அளிக்கும் புதிய நடைமுறை மூலம் சுங்கத் துறை ஆவண பரிவர்த்தனை எளிமைப்படுத்தப்படும் என மத்திய ஆயத்தீர்வை மற்றும் சுங்க வாரிய (CBEC- Central Board of Excise and Customs) உறுப்பினர் பி.கே.பன்சால் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   சுங்கத்துறை சார்பில் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அங்கீகாரம் பெற்ற பொருளாதார இயக்குனர் (AEO-Authorised Economic Operator) என்ற சர்வதேச தரச்சான்று அளிக்கும் புதிய நடைமுறையை மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது. ஆனால் இதில் போதிய ஆர்வம் காட்டாததால் சில நூறு நிறுவனங்கள் மட்டுமே இச்சான்றிதழை பெற்றுள்ளனர். இந்நிலையில் இதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் சுங்கத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
  புதிய தரச்சான்று நடைமுறை குறித்த  விளக்கக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயத்தீர்வை மற்றும் சுங்க  வாரிய உறுப்பினர் பி.கே.பன்சால், வாரிய இணைச் செயலாளர் சத்ய ஸ்ரீனிவாஸ், சுங்கத் துறை 
முதன்மை ஆணையர் பி.கே.தாஸ், சேவை வரித்துறை முதன்மை ஆணையர் சி.பி.ராவ் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.
அப்போது பி.கே.பன்சால் பேசியது,
    நாடு தொடர்ந்து நிலையான வளர்ச்சியைப் பெற வேண்டும் எனில் சர்வ தேச அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் தொழில் செய்வதற்கான சூழல் குறித்து வரிசைப்படுத்தியதில் இந்தியா 133-வது இடத்தில் இருந்து வந்தது. இதற்கு காரணம் இந்தியாவில் 
உள்ள சட்டம் மட்டும் விதிமுறைகள்தான். எனவே இதனை எளிமைப்படுத்தும் 
பணியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டதன் பேரில் தொழில் செய்வதற்கான 
உகந்த நாடுகளில் வரிசையில் இந்தியா படிப்படியாக முன்னேறி வருகிறது.
   இதன் அடிப்படையில்தான் சுங்கத் துறை நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில் புதிய தரச்சான்று நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பெறுவதற்கான நடைமுறைகளை ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆர்வம் காட்டவேண்டும். இத்தரச்சான்றினை பெறுவதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் இந்நிறுவனத்திற்கு கிடைக்கும். மேலும் சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்காக அளிக்க வேண்டி அதிக அளவிலான நடைமுறைகளை தவிர்க்க இயலும் என்றார் பன்சால்.
   இந்நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத் தலைவர் சிரில்ஜார்ஜ், காமராஜர் துறைமுகத் தலைவர் பாஸ்கராச்சார், அதானி துறைமுக நிர்வாகிகள் சி.ஜே.ராவ், ராம்நாத் மற்றும் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட சுங்கத்துறை முகவர்கள்,
சரக்குப் பெட்டக நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூரில் சலவைத் தொழிலாளர்களுக்கு ரூ.10 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்பு 

திருவொற்றியூர், ஆக.17: திருவொற்றியூரில் சலவைத் தொழிலாளர்களுக்கு ரூ.10.21 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி புதன்கிழமை தொடங்கியது. 
  பழமையான சென்னையை ஒட்டி அமைந்திருந்த கிராமங்களின் ஒன்றான திருவொற்றியூர் காலடிபேட்டையில் 1946-ல் டோபிகானா உருவானது. இதே பகுதியில் சுமார் 8 குடும்பங்களைச் சேர்ந்த சலவையாளர்கள் இங்கு சலவைத் தொழில் செய்து வந்தனர். மேலும் இவர்கள் இதே பகுதியில் தனித்தனியே குடியைகளை அமைத்திருந்தனர். தற்போது சுமார் 128 சலவைத் தொழிலாளர் குடும்பங்கள் வசிக்கின்றன. சலவைத் தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கையினை அடுத்து  இவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துத் தருமாறு 1998-ம் ஆண்டு திருவொற்றியூர் நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் நில உரிமை மாற்றம், ஒரு பிரிவினருக்கான குடியிருப்பு, திட்ட வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுமார் 18 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில் இத்திட்டத்திற்கு சமீபத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதன்பேரில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் ரூ.10.21 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்திற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு பணியாணை வழங்கப்பட்டது. இதனையடுத்து திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை காலடிப்பேட்டையில் நடைபெற்றது. 
   இந்நிகழ்ச்சியில் மண்டலக் குழு தலைவர் மு.தனரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், சலவைத் தொழிலாளர் சங்கத் தலைவர் மாசிலாமணி, மாமன்ற உறுப்பினர் பேரரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நவம்பரில் காமராஜர் துறைமுக புதிய சரக்குப் பெட்டக முனையம்  

துறைமுகத் தலைவர் பாஸ்கராச்சார் உறுதி

திருவொற்றியூர், ஆக.15:எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டு வரும் அதானி குழும சரக்குப் பெட்டக முனையம் வரும் நவம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் திங்கள்கிழமை தெரிவித்தார். 
    எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட துறைமுகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
அப்போது பாஸ்கராச்சார் பேசியது,
     சுதந்திர இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் உலக அளவில் பல்வேறு துறைகளில் குறிப்பாக தகவல் தொழில் நுட்பத் துறைகளில் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தற்போது இந்தியாவின் பாரம்பரியக் கலையான யோக உலகளவில் வரவேற்பினை பெற்று வருகிறது. 
   காமராஜர் துறைமுகம் தொடக்கம் முதலே நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கினை அளித்து வருகிறது. குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு குறிப்பிடத்தக்க சாதனைகளை இத்துறைமுகம் படைத்துள்ளது. மேலும் சரக்குகளைக் கையாள புதிய தொழில்நுட்பங்களை புகுத்த துரித நடவடிக்கைகளை எடுக்க துறைமுக நிர்வாகம் எடுத்து வருகிறது. 
நவம்பரில் புதிய சரக்குப் பெட்டக முனையம்:
   இத்துறைமுகத்தில் அதானி குழுமம் சார்பில் அமைக்கப்பட்டு வரும்  அதி நவீன சரக்குப் பெட்டக முனையம் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் செயல்பாட்டுக்கு வரும். மேலும் பல சரக்கு முனையம் (Multi Cargo Terminal) விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதேபோல் புதிய கப்பல் தளங்கள், எண்ணெய் இறக்குமதி சிறப்பு தளம் உள்ளிட்டவைகளும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது காமராஜர் துறைமுகத்தின் ஒட்டுமொத்த முகமே மாறிவிடும். ஏராளமான கண்டெய்னர் லாரிகள், கனரக வாகனங்கள், பலவகை சரக்குகள் இங்கு வரும். அப்போது சென்னைத் துறைமுகத்தில் நீண்ட நாள்களாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை இங்கும் வந்துவிடக் கூடாது. எனவே இதனை ஒரு சவாலாக ஏற்று இப்போது இருந்தே துறைமுக அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும்.
மீனவர்கள், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை:
   காமராஜர் துறைமுகத்தின் வளர்ச்சி என்பது கடலோர மீனவர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்துடன் இணைந்ததாகவே இருக்கும். சமீபத்தில் நடைபெற்ற கருத்தறியும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் உள்ளூர் மக்களின் உணர்வுபூர்வமானது. இதனை மதித்து துறைமுக நிர்வாகம் செயல்படும்.  எண்ணூர் முகத்துவாரம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவைகளை தூர்வாரும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதன்மூலம் இப்பகுதி பாரம்பரிய நீர்நிலைகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் வரும். சமுதாய ஒத்துழைப்புடன் கூடிய வளர்ச்சியே நிலையானதாக இருக்கும் என்றார் பாஸ்கராச்சார்.
   இவ்விழாவில் பொது மேலாளர்கள் சஞ்சய், கிருஷ்ணசாமி, ஏ.கே.குப்தா, ராதாகிருஷ்ணன், கருப்பையா மற்றும் மக்கள் தொடர்பு மேலாளர் அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
வறுமையைப் பயன்படுத்திய மருத்துமனை நிர்வாகம்

   இச்சம்பவத்தில் அருகில் வசிக்கும் யாரோதான் நித்யாவிற் குழந்தையை 
விற்பதற்கான யோசனையைத் தெரிவித்திருக்கக் கூடும். இதற்கு மருத்துவமனை நிர்வாகமும் உடந்தையாக இருந்துள்ளது என நம்பப்படுகிறது.  ஏனெனில் 
எவ்வித கட்டணமும் இல்லாமல் பிரசவம் பார்க்க இத்தனியார் மருத்துமனையின் 
எதிரிலேயே பிரசவத்திற்கான அறுவைச்சிகிச்சை அரங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை உள்ளது. கணவன் ஓடிப்போய்விட்டகாவ் எழுந்த வருவாய் இழப்பு, மேலும் 5 வயதைக் கடந்த முதல் குழந்தையின் பராமரிப்பதில் ஏற்பட்ட சிரமம் உள்ளிட்ட காரணங்களைக் கொண்டு நித்யாவிடம் மருத்துவமனை நிர்வாகம் வறுமையைப் போக்க உதவுவதுபோல் நடந்து கொண்டுதான் 
இச்சம்பவம் நடைபெற்றுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
செயற்கை கருத்தரிப்பில் ஏற்பட்ட பின்னடைவு, சட்டப் பூர்வமாக தத்தெடுப்பதில் உள்ள பிரச்னைகளால்தான் சுரேஷ்குமார்-லதா இக்குழந்தையை பணம் கொடுத்து வாங்க சம்மதித்துள்ளனர்.உண்மையிலேயே மருத்துவமனை நிர்வாகத்திற்கு லாபம் நோக்கமில்லை என்றால் வறுமையிலும் ரூ.35 ஆயிரம் கட்டணத்தை பிசகின்றி வசூலித்துவிட்டார்களே... இதில் இடைத்தரகர்களாக மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டுள்ளதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களை போலீஸார் திரட்டி வருகின்றனர்.
பிரசவ செலவிற்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை

வறுமையைப் பயன்படுத்தி மருத்துவர்கள் அலட்சியம் 

திருவொற்றியூர், ஆக.9:திருவொற்றியூரில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை பெற்றெடுத்த நித்யா (26) என்ற பெண் மற்றொரு தம்பதியிடம் ரூ.85,000-க்கு விற்பனை செய்துள்ளதும், ஒரு மாதம் கடந்த நிலையில் மீண்டும் குழந்தையைத் திரும்பப் பெற்றுத் தருமாறு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார். இதனையடுத்து குழந்தை மீட்கப்பட்டு நித்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்த விபரம் வருமாறு:
   திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோயில் தெருவில் வசிப்பவர் ஜெயராமன் (30). இவரது மனைவி நித்யா (26). தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களுக்கு கடந்த 2010 ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஜெயசூர்யா (5) என்ற ஆண்குழந்தை உள்ளது. கட்டட தொழிலாளியான ஜெயராமன் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கித் திருப்பித் தராததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெயராமன் சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாராம். இந்நிலையி்ல் நிறைமாதமாக கற்பிணியாக இருந்த நித்யா கடந்த கடந்த ஜூலை 10-ம் தேதி திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அடுத்த நாள் நித்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் பிரசவத்திற்கான கட்டணம் ரூ.35 ஆயிரத்தை செலுத்தும்படி மருத்துவமனை ஊழியர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் நித்யா கணவர் காணாமல் போய்விட்ட நிலையில் மருத்துவமனைக் கட்டணம் செலுத்த தன்னிடம் பணம் ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து இங்கு பணியாற்றும் மகப்பேறு மருத்துவர் மூலம் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை பெற்று வந்த பம்மலைச் சேர்ந்த சுரேஷ்குமார், லதா தம்பதியிடம் குழந்தையை ஒப்படைத்துவிவிட்டு, இதற்காக பிரசவச் செலவு ரூ.35 ஆயிரத்தைக் கழித்துக் கொண்டு ரூ.50 ஆயிரம் ரொக்கமாக நித்யா பெற்றுள்ளார். 
   இந்நிலையில் காணாமல் போயிருந்த நித்யாவின் கணவன் ஜெயராமன் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார். அப்போது மனைவியிடம் குழந்தை குறித்து கேட்டபோது குழந்தையை விற்றுவிட்டதாக நித்யா கூறியுள்ளார். இதற்கிடையே 
குழந்தையைத் திருப்பித்தருமாறு மருத்துமனை நிர்வாகம் மூலம் நித்யாவும், ஜெயராமனும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கு மருத்துமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 
    இதனையடுத்து குழந்தையை மீட்டுத் தருமாறு திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நித்யா புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் உடனடியாக பம்மல் சென்று குழந்தையை மீட்டு வெள்ளிக்கிழமை இரவு நித்யாவிடம் ஒப்படைத்தனர். இது குறித்து மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சரவணன், மகப்பேறு நிபுணர் டாக்டர் செல்வி மகாலட்சுமி, குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய சுரேஷ்குமார், லதாவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மணலி கவுன்சிலர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

கொலைக்கு காரணம் ஒப்பந்தத் தகராறுதான்?

திருவொற்றியூர்,ஜூலை 28:மணலி அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் கொலை வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலையின் முக்கிய குற்றவாளியான தில்லை பாஸ்கர் (43) மற்றும் விஜய்ஆனந்த் (29), குதிரை வெங்கடேஷ் (37), ரபீக் (36), சுரேஷ் (32) ஆகிய ஐந்து பேரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
    மணலியைச் சேர்ந்த மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலரான ஞானசேகரன் கடந்த ஜூலை 9 அன்று மணலியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கொலைக்கான பின்னணி காரணங்கள் குறித்தும் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  
    இதனையடுத்து இதுவரை ஜெபகுமார், ராஜேஸ், ராஜீவ் பகதூர், பிரபு, குமாரவேல், முத்துராஜ் ஆகிய 6 பேரையும் முதன்முதலாக கைது செய்தனர். பின்னர்  மதுரை சுரேஷ், காஜா சுரேஷ், கார்த்திக், கணேஷ்குமார் ஆகிய நான்கு பேரும் கடந்த ஜூலை 20-ல் கைது செய்தனர். இந்நிலையில் கொலையின் முக்கிய குற்றவாளியான மணலியைச் சேர்ந்த தில்லை பாஸ்கர் (43), மணலி பெரிய தோப்பைச் சேர்ந்த விஜய்ஆனந்த் (29), மணலியைச் சேர்ந்த குதிரை வெங்கடேஷ் (37), ரபீக் (36), மதுரையைச் சேர்ந்த சுரேஷ் (32) ஆகிய ஐந்து பேரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருவொற்றியூர் குற்றவியல் நடுமன்ற நீதிபதி முன்பு புதன்கிழமை இரவு ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலையின் பின்னணி என்ன?
      மணலியின் முக்கிய பிரமுகரான ஞானசேகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலைக்கான முக்கிய காரணத்தை போலீஸார் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் கொலை செய்யப்பட்ட ஞானசேகர் மகனுடன் ஏற்பட்ட முன் விரோதமே இக்கொலைக்குக் காரணம் என கூறப்பட்ட நிலையில் இறுதியில் ஞானசேகர் கொலைக்கு அரசியல் விரோதங்கள், தொழிற்சாலைகளில் ஒப்பந்தங்கள் எடுப்பது, மாமூல் வாங்குவது உள்ளிட்டவைகளில்  எடுப்பதில் ஏற்பட்ட போட்டியே இதற்கு காரணங்களாக இருந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். தில்லை பாஸ்கர் அ.தி.மு.க 18-வது வார்டு செயலாளராக இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டவர் என்பதும், மற்றொரு குற்றவாளியான விஜய் ஆனந்த் இந்திய ஜனநாயகக் கட்சியின் முக்கிய நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. 
கார் ஏற்றுமதியில் சாதனையை எட்டிய ஹூண்டாய் நிறுவனம் 

வாடகை கட்டணத்தில் ரூ.20 கோடியைத் திருப்பியளித்தது சென்னைத் துறைமுகம் 

திருவொற்றியூர், ஜூலை 27:சென்னைத் துறைமுகம் வழியாக கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து கார் ஏற்றுமதி செய்து சாதனை அளவினை எட்டியதையடுத்து கப்பல்த்தள வாடகை கட்டணத்தில் (Wharfage Charges) ரூ.19.70 கோடியை துறைமுக நிர்வாகம் புதன்கிழமை திருப்பியளித்தது.
   ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் வாகன தயாரிப்பு நிறுவனம் தனது ஆலையில் தயாரிக்கப்படும் கார்களை சென்னைத் துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்கு வசதியாக கார்களை நிறுத்தி வைக்க கப்பல் தளத்தில் போதுமான இடம் இந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துறைமுக நிர்வாகமும், ஹூண்டாய் வாகன நிறுவனமும் கடந்த 2006-ம் ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதனையடுத்து இந்நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் 
சுமார் 20 லட்சம் கார்களை சென்னைத் துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்துள்ளது. 
இந்நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி சாதனை அளவினை ஹூண்டாய் நிறுவனம் எட்டியதை அடுத்து இந்நிறுவனம் செலுத்திய கப்பல்த் தள வாடகை கட்டணம் ரூ.165 கோடியில் ரூ.19.70 கோடியை சென்னைத் துறைமுகம் புதன்கிழமை திருப்பி அளித்தது.
   இதற்கான காசோலையை புதன்கிழமை சென்னைத் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத் தலைவர் (பொறுப்பு) சிரில் ஜார்ஜ் ஹூண்டாய் வாகன நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஓ.கே.கூ-விடம் வழங்கினார்.
போட்டிகளைச் சமாளிப்போம்:
நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் சிரில் ஜார்ஜ் கூறியது,
   கார் ஏற்றுமதியில் ஹூண்டாய் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் சென்னைத் துறைமுகத்தின் வழியாகவே தொடர்ந்து கார்களை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கார்களை ஏற்றுமதி செய்வதில் நாட்டிலேயே சென்னைத் துறைமுகம் முன்னணி துறைமுகங்களில் ஒன்றாக உள்ளது. எனவே கார் ஏற்றுமதிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பல்லடுக்கு கார் நிறுத்த முனையம் தற்போதைய நிலையில் அவசியமற்றதாக உள்ளது. எனவே இதனை உடனடியாக செயல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை. 
    தற்போது சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுகத்தின் கிழக்குப் பகுதியில் கரை அமைக்கப்பட்டு தரைப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது சுமார் 20 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் காலியாக உள்ளது. மேலும் ஏற்றுமதியாகும் சரக்குகளை இருப்பு வைக்க போதுமான கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மதுரவாயல் துறைமுக உயர்மட்ட மேம்பாலத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். மொத்தத்தில் அனைத்து விதமான போட்டிகளையும் சந்திக்க சென்னைத் துறைமுகம் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது என்றார் சிரில் ஜார்ஜ்.
   நிகழ்ச்சியில் துறைமுக போக்குவரத்து மேலாளர் பி.விமல், முதுநிலை போக்குவரத்து மேலாளர் பிரபாகரன், ஹூண்டாய் வாகன நிறுவன முதுநிலை பொது மேலாளர் வி.ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பெட்டிச் செய்தி

சென்னையிலிருந்து 92 நாடுகளுக்கு கார் ஏற்றுமதி

நிகழ்ச்சியில் ஹூண்டாய் மேலாண்மை இயக்குனர் ஒய்.கே.கூ கூறியது,

வாகன உற்பத்தியில் ஆசியாவின் மையமாகச் செயல்பட்டு வரும் தமிழகத்திலிருந்து சென்னைத் துறைமுகம் வழியாக சுமார் 92 நாடுகளுக்கு கார்களை ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது.  ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது ஆலை விரைவில் அமைக்கப்பட உள்ளது. ஏற்றுமதிகான கார்களை பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக துறைமுகத்திற்கு எடு்ததுவர சிறப்பு அனுமதியை போக்குவரத்து காவல்த்துறை அளித்துள்ளது. எதிர்காலத்திலும் சென்னைத் துறைமுகத்தின் வழியாகவே ஏற்றுமதியைத் தொடர விரும்புகிறோம்.
நான்கு நாள்களாகியும் நீடிக்கும் மர்மம் 

காணாமல் போன விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது 

கடலோரக் காவல் படை ஐ.ஜி. ராஜன் பர்ஹோத்ரா தகவல் 


திருவொற்றியூர், ஜூலை 25: கடந்த வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து போர்ட் பிளைர் சென்றபோது காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என கடலோரக் காவல் படை ஐ.ஜி.(கிழக்கு பிராந்தியம் ) ராஜன் பர்ஹோத்ரா திங்கள்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
   சென்னை தாம்பரம் விமானப் படை தளத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு 29 பேருடன் புறப்பட்ட AN-32 ரக விமானம் வங்கக் கடலில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது. இதனையடுத்து மாயமான விமானத்தை தேடும்பணி கடந்த நான்கு நாள்களாக நடந்து வருகிறது. இருப்பினும் விமானம் குறித்து எவ்வித தகவல் மற்றும் தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை. 
     இந்நிலையில் இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தேடும் பணிக்கு தலைமையேற்றுள்ள கிழக்கு கடலோரக் காவல்படை ஐ.ஜி.ராஜன் பர்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறியது,
  சென்னையிலிருந்து 150 கடல் மைல் தூரத்தில் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இது தற்போது 200 கடல் மைல்வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாக 
மோசமான வானிலையால் மேகமூட்டம், கடல் கொந்தளி்ப்பு உள்ளிட்டவை தேடும் பணிக்கு சிரமமாக இருந்து வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை வானிலை சீராகியுள்ளது. இதனையடுத்து தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 
தேடும் பணியில் 16 கப்பல்கள் 12 விமானங்கள்: 
    தேடும் பணியில் 13 கடற்படை கப்பல்கள், 2 கடலோரக் காவல்படை கப்பல்கள், 12 விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் தேடப்பட்டு வரும் பகுதியை நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறது. தற்போது வான்வழி பார்வையில் (Aerial view)60 ஆயிரம் சதுர கடல் மைல் பரப்பளவு,  தரைவழியில் (Surface) 40 ஆயிரம் சதுர கடல் மைல் பரப்பளவிலும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 
சமிஞ்சை கிடைக்கவில்லை:
   சுமார் 3 ஆயிரம் மீட்டர் ஆழமுள்ள கடல்பகுதியில் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் காணாமல் போன விமானத்தின் அவசரகால இருப்பிடம் அறியும் கருவியிலிருந்து (ELT- Emergency Location Transmitter) எவ்வித சமிஞ்சையும் கிடைக்கவில்லை. மேலும் விமானத்தின் பாகங்களோ, சிதைவுகளோ எங்கும் இதுவரை கண்டறியப்படவில்லை. இவ்வாறு ஏதேனும் அடையாளங்கள் கிடைத்தால் தேடும் பணி எளிதாக இருக்கும். பிறகு அந்த இடத்தைச் சுற்றி தண்ணீருக்குள் 
ஆய்வு செய்யும் கப்பல்களை ஈடுபடுத்த முடியும்.  மேலும் இவ்வழியே வரும், செல்லும் வணிகக் கப்பல்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆபரேசன் தலாஷ்: 
     தேடும் பணிக்கு இஸ்ரோ, தேசிய கடலாய்வு தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்டவைகளின் உதவிகள் பெறப்பட்டு வருகின்றன்.  தற்போதைய சூழலில் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவிகள், ஆலோசனைகள் ஏதும் கோரப்படவில்லை.  ஆபரேசன் தலாஷ் என பெயரிடப்பட்டுள்ள இத்தேடுதல் பணியில் முப்படையும் ஈடுபட்டுள்ளது. விமானத்தைத் தேடும் பணிக்கான காலவரையறை ஏதும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றார் பர்ஹோத்ரா.


பெட்டிச் செய்தி:
விமானத்தில் சென்றவர்களின் விபரங்கள் எங்கே?
       AN-32 விமானம் காணாமல் போய் நான்கு நாள்களாகியும் இதுவரை விமானத்தில் பயணம் செய்த 29 பேர்களின் முழுமையான விபரங்களை விமானப்படை அதிகாரிகள் வெளியிடவில்லை. இது குறித்து ராஜன் பர்ஹோத்ராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, விமானத்தில் சென்றவர்களில் முத்துக்கிருஷ்ணன் என்ற ஒருவர் மட்டுமே கடலோரக் காவல்படையைச் சேர்ந்தவர். இதர நபர்கள் குறித்து விமானப்படை அதிகாரிகள்தான் தெரிவிக்க வேண்டும். இதனையடுத்து டெல்லியிலுள்ள விமானப்படை செய்தி தொடர்பாளர் அனுபம் பானர்ஜியை நாம் தொடர்பு கொண்டும் இதற்கான பதில் கிடைக்கவில்லை.  தினசரி சரக்குகள், ஆள்களைச் சுமந்து செல்லும் இந்த விமானத்தில் படையினருடன், கட்டட பணிக்கான வேளையாள்கள், படையினரின் உறவினர்களும் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் விதிமுறைகளை அதிகாரிகள் கடைப்பிடிக்காததே இந்த மௌனத்திற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரையும் ஒருங்கிணைத்த பொன்விழா

கடந்த சுமார் 5 ஆண்டுகளாக பொதுவாக மத்திய அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வது அபூர்வமாக இருந்து வந்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தபோது அ.தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட கலந்து கொள்ள மாட்டார்கள். அழைப்பிதழ்களில் பெயர் மட்டும் அச்சிடப்பட்டிருக்கும். சனிக்கிழமை நடைபெற்ற சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பொன்விழா மத்திய அரசு சார்பில் நடைபெற்ற விழா. இதில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் டாக்டர் பி.வேணுகோபால், வடசென்னை மக்களவை உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர். இதுமட்டுமல்லாது, ஒவ்வொருவர் பேசும்போதும் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களையும் மறக்காமல் விழித்துப் பேசியது வந்திருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.  விழாவிற்கு தலைமை வகித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பொன்விழா நிகழ்ச்சி

தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

திருவொற்றியூர், ஜூலை 23:தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
    மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இதற்கான பொன்விழா நிகழ்ச்சி சனிக்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலையின் மேலாண்மை கவுதம் ராய் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விழாவிற்கு தலைமை வகித்தார். அப்போது பொன்விழா நினைவுத் தூண்,
மைல்கற்கள் விபரங்கள் அடங்கிய தகவல் பலகை உள்ளிட்டவைகள் அமைச்சர் தர்மேந்திரபிரதான் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது, 
   1965-ம் ஆண்டு இந்த ஆலை தொடங்கப்பட்ட போது ஆண்டுக்கு 2.5 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி திறனைக் கொண்டிருந்தது. இது படிப்படியாக வளர்ந்து தற்போது 
11.5 மில்லியன் மெட்ரிக் டன் சுத்திகரிக்கும் திறனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனையை எட்டுவதற்கா பங்கு வகித்த அனைத்து தரப்பினரையும் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கான நம்பகத்தன்மை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளன. இதனால்தான் தமிழகம் துறைமுகங்கள், வாகன உற்பத்தி தொழில்கள், கணிணி மென்பொருள் துறைகளில் அபரிதமாக வளர்ச்சியை எட்டியுள்ளது. மேலும் தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்து வருகிறது. குஜராத் மாநிலத்தின் ஹஜிரா பகுதியைப் போல் சென்னையின் அருகே அமைந்துள்ள மணலி வளர்ந்து வருகிறது.
ஐ.ஓ.சி.யுடன் சி.பி.சி.எல் இணைப்பு: 
   நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆலை கடந்த ஆண்டு லாபத்தை நோக்கிச் 
செல்ல ஆரம்பித்துள்ளது.  தற்போது ஆண்டுக்கு 230 மில்லியன் மெட்ரிக் டன் 
பெட்ரோலிய பொருள்களை உபயோகித்து வருகிறோம். இது அடுத்த 25 ஆண்டுகளில் 600 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயரும். எனவே தற்போது 50 ஆண்டுகளை நிறைவடைந்துள்ள நிலையில் இந்த ஆலையின் அடுத்த 50 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்களை அதிகாரிகள் கண்டறிய வேண்டும். இந்தியன் ஆயில் கார்போரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமானச் செயல்பட்டு வரும் இந்த ஆலையை தாய் நிறுவனத்துடன் இணைக்கும் முடிவிற்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துவிட்டது. இனி இந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள்தான் முடிவு செய்யவேண்டும். இதன் மூலம் உற்பத்தியையும், விற்பனையையும் ஒரே நிறுவனமே மேற்கொள்ள முடியும். 
மாநில அரசின் இணக்கம் தேவை: 
   ஒட்டுமொத்த இந்தியாவும் வளர வேண்டும். ஒட்டுமொத்த வளர்ச்சியின் பயன் ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உறுதிமொழியுடன்தான் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். மாநில அரசுகள் ஒரு படி இறங்கி வந்தால் மத்திய அரசு இரண்டு படி இறங்கிவரத் தயாராக உள்ளது. தமிழகத்தி்ல் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மாநில அரசின் இணக்கமான உறவு தேவை. எனவே இணைந்து செயல்பட்டால் தமிழகத்தின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும் என்றார் தர்மேந்திர பிரதான். 
    இந்நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஐ.ஓ.சி நிறுவனத் தலைவர் பி. அசோக், மக்களவை உறுப்பினர்கள் டாக்டர் பி.வேணுகோபால், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.