Wednesday, 25 January 2017

வடசென்னை பகுதியில் 50 இடங்களில் சாலை மறியல் 

போலீஸார் தலைகாட்டாததால் பொதுமக்கள் கடும் அவதி


திருவொற்றியூர், ஜன.23:வடசென்னை பகுதியில் சுமார் 50 இடங்களில் திங்கள்கிழமை பல்வேறு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் எந்த இடத்திலும் மறியலைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
  ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி வேண்டும் எனக் கோரி கடந்த 7 நாள்களாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தியவர்களை கலைக்க போலீஸார் மேற்கொண்ட முயற்சிகளையடுத்து சென்னையில் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில் திருவொற்றியூர், எண்ணூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் திடீரென திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணூர் விரைவு சாலை உள்ளிட்டவைகளில் சுமார் 100 மீட்டருக்கு ஒரு இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னும் சில இடங்கலில் வெறும் தடுப்புகள் மட்டுமே 
அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் தொடக்கம் முதலே மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸார் எவ்வித முயற்சியும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் 
காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸாரைத் தவிர வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளில் அனுப்பி வைக்கப்படும் சிறப்பு போலீஸார், ஆயுதப்படை போலீஸார் 
எவரும் இப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படாததே இதற்கு காரணம். வடசென்னை முழுவதுமே சுமார் 100 போலீஸார் மட்டுமே திங்கள்கிழமை பணியில் இருந்திருப்பார்கள் என போலீஸார் தரப்பில் கூறப்பட்டது.
சமூக விரோதிகளால் பொதுமக்கள் அவதி:
  மாணவர்கள், பொதுமக்கள்தான் இந்த மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் விபரம் அறியாத சிறுவர்கள், வயதான பெண்மணிகளும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது. மேலும் 
பல்வேறு இடங்களில் கூட்டத்தோடு கூட்டமாக இப்பகுதியில் உள்ளவர்களாலேயே அடையாளம் காண முடியாத நபர்கள் சிலர் ஊடுருவியிருந்ததைக் காண முடிந்தது. மேலும் சில இடங்களில் குடிபோதையில் சிலர் வாகனங்களில் வந்தவர்களை விரட்டியடித்தனர். பள்ளிக்குழந்தைகளைக் கூட அவர்கள் அழைத்துச் செல்ல அனுமதிக்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். தொழிற்சாலைகளில் ஷிப்ட் முடிந்து வந்தவர்களையும் வீட்டிற்குச் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆலைகளிலேயே தங்கி இருந்தனர். 
மேலும் வடசென்னை முழுதும் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியில் ஆழ்ந்த பொதுமக்கள் மாலை 6 மணியளவில் போராட்டம் தானாகவே விலக்கி கொள்ளப்பட்டதால் நிம்மதியடைந்தனர். 
இந்திய கடலோரக் காவல் படை நடத்திய 'கடலில் ஒரு ஒரு நாள்'

சென்னை அருகே நடுக்கடலில் நடைபெற்றது


திருவொற்றியூர், ஜன.22:இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்தியம் சார்பில் சார்பில் கடலில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சி சென்னை அருகே நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
     இந்திய கடற்படையிலிருந்து கடலோரக் காவல்படை பிப்.1, 1977 ம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில்  பிப்.1 ம் தேதியை கடலோரக் காவல்படை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில் 41-வது கடலோரக் காவல்படை தினம் வரும் பிப்.1 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக கடலோரக் காவல்படையின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள், படையினரின் குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் அறிந்து கொள்வதற்காக 'கடலில் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
செயல்விளக்க நிகழ்ச்சிகள்:
     சென்னைத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கடலோரக் காவல் படையின் கப்பல்களில் பொதுமக்கள், படைவீரர்களின் குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் 
நடுக்கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் கடலோரக் காவல் படையினரின் 
செயல்பாடுகள் குறி்த்து பல்வேறு செயல்விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  
ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு வின்ச் மூலம் தகவல், பொருள்கள் பரிமாற்றம் செய்வது, கடத்தல்காரர்களை விரைந்து சென்று பிடிப்பது, தீ விபத்து ஏற்பட்ட வணிகக் கப்பல் ஒன்றை தீயணைத்து மீட்பது, கடலில் தத்தளிக்கும் மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்பது, டோர்னியர் விமானம் மூலம் 
கடலோரப் பகுதிகளை விரைந்து சென்று கண்காணிப்பது, கப்பலில் உடல்நலக் குறைவு ஏற்பட்டவர்களை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு செயல் விளக்க நிகழ்ச்சிகள் இதில் நடத்திக் காண்பிக்கப்பட்டன. 
அணி வகுத்த கப்பல்கள்:
    கிழக்கு பிராந்திய தளபதி ராஜன் பர்கோத்ரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  இந்திய கடலோரக் காவல் படையின் சாகர், சமுத்ரா பகீரதர், வரத்,  அபீக், ராஜ்தரங், அனாக், ராணி கைடின்லியூ ஆகிய ரோந்துக் கப்பல்கள், சி 415, சி 430 ஆகிய சிறிய கப்பல்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள், இரண்டு டோர்னியர் விமானங்கள் உள்ளிட்டவை கலந்து கொண்டன. இறுதியாக அனைத்து கப்பல்களும் வரிசையாக அணிவகுத்து சென்றன. அப்போது கப்பல்களில் இருந்த வீரர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். 
மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத் திட்டம்: 

பாலத்தின் தூண்களின் அமைப்பை மாற்றி அமைக்கக் கோரும் தமிழக அரசு

சாத்தியமில்லாததால் சுமூக முடிவை எட்டுவதில் முட்டுக்கட்டை 

சென்னை, ஜன.11:மதுரவாயல் உயர் மட்ட மேம்பாலத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தூண்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளதாகவும், எனினும் மாநில அரசு ஒத்துழைப்புடன் இத்திட்டதை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்: 
     சென்னைத் துறைமுகத்தின் வாயில் எண் 10 -லிருந்து கூவம் நதி (17.50 கி.மீ), பூந்தமல்லி நெடுஞ்சாலை (1.50 கி.மீ) வழியாக மதுரவாயல் சென்று வெளிவட்டச் சாலையுடன் இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் நீளம் 19 கி.மீ. ஆகும்.   889 தூண்களுடன் அமையும் இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1815 கோடி. இதில் ரூ. 470 கோடி மறுவாழ்வு மற்றும் குடியமர்த்தல் பணிக்கும், ரூ.1,345 கோடி கட்டுமானப் பணிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  இதில் ரூ.470 கோடியை சென்னைத் துறைமுகமும், தமிழக அரசும் தலா ரூ.235 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில் இதுவரை சென்னைத் துறைமுகம் மட்டும் ரூ.51 கோடி வழங்கியுள்ளது. மேலும் கட்டுமானப் பணிக்கான நிதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ. 499 கோடியை மானியமாக வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மாநகர மக்களுக்கு பயனளிக்கும் திட்டம்: 
   இத்திட்டத்தை கட்டுதல்- இயக்குதல்-ஒப்படைத்தல் (Built-Operate-Transfer)  முறையின் கீழ் இதனைக் கட்டமைக்கும் பணியை ஹைதராபாத்தைச் சேர்ந்த சோமா எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது.  15 ஆண்டுகள் சுங்க கட்டணம் வசூலிப்பதன் மூலம் முதலீட்டுத் தொகை, லாபத்தை இந்நிறுவனம் ஈடுகட்ட வேண்டும். பிறகு சென்னைத் துறைமுகம் வசம் இச்சாலை ஒப்படைக்கப்படைக்கப்படும்.  இப்பாலத்தில் சிவானந்த சாலை, கல்லூரி சாலை ஆகிய இடங்களில் வாகனங்கள் ஏறவும், காமராஜர் சாலை, ஸ்பர்டங் சாலை ஆகிய இடங்களில் இறங்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்திற்குச் சென்று வரும் வாகனங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இச்சாலையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.  மேலும் சென்னை மாநகரத்திலிருந்து வெளியூர் செல்லும் வாகனங்கள், வெளியூர்களிலிருந்து அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளுக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தற்போதைய நெரிசலில் மணிக்கணக்கில் காத்திருப்பது தவிர்க்கப்படும்.
தடைவிதித்த தமிழக அரசு: 
      இத்திட்டத்திற்கு செப்.2010-ல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் அடிக்கல் நாட்டுப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பிப்.,2012-ல் உடனடியாகப் கட்டுமானப் பணிகளை தமிழக அரசு தடை விதித்தது.  இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையை நீக்க வழக்கத் தொடுத்தது. விசாரணையின் முடிவில் தமிழக அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசு மேல் முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. மேலும் இத்திட்டத்தையே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்துவிட்டது.  இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசின் ஒப்புதலைப் பெற பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எவ்வித சாதகமான பதிலையும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அவ்வாறு எவ்வித ஒப்புதலும் அளிக்கப்படவில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
தூண்களை மாற்றி அமைப்பது சாத்தியமில்லை: 
இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த சிறப்புப் பேட்டி: 
   சென்னைத் துறைமுக வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத் திட்டத்தை நிறைவேற்றுவது அவசியமானது. ஆனால் தமிழக அரசு விதித்துள்ள தடையால் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது நீரோட்டம் பாதிக்கப்படாமல் இருக்க ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இரு தூண்கள் கொண்ட பாலத்தை ஒரே தூணாகக் கொண்டு  அமைக்க வேண்டும் என மாநில அரசு அதிகாரிகள் நிபந்தனை விதிக்கின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தூண்களை எப்படி மாற்றியமைப்பது? எனவே மீதம் உள்ள தூண்களை வேண்டுமானால் அவ்வாறு அமைக்கலாம் என பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடர் ஆய்வுகள், ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுமூகமான முடிவுகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட வேண்டும். பின்னர்தான் பணிகளைத் தொடங்க முடியும். இது குறித்து நவம்பர் மாதமே தமிழக அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார் அமைச்சர் ராதாகிருஷ்ணன். 
    மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் சென்னத் துறைமுகத்தின் பங்கு முக்கியமானது.  மேலும் சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த இரண்டு கோணத்தில் பார்த்தால் இத்திட்டம் மக்கள் நலனில் மகத்தான பயனை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எனவே இத்திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதில் சுமூக முடிவு எட்டப்பட்டு முட்டுக்கட்டைகள் நீக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் அழுத்தம் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
பாரத மாதா கோயில் கட்டுவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

குமரி அனந்தன் வலியுறுத்தல் 


திருவொற்றியூர்.ஜன.8: நீண்ட காலக் கோரிக்கையான பாரத மாதா கோயிலைக் கட்டுவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் வலியுறுத்தி உள்ளார். 
      தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோவில் கட்டுவது குறித்த விளக்கக் கூட்டம் திருவொற்றியூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பொது வர்த்தகர் சங்க கௌரவத் தலைவர் ஜி. வரதராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் கலந்து கொண்டு பேசியது,  
    1923-ம் ஆண்டு ஜாதி, மத பேதமின்றி அனைவரும் பொதுவாக வழிபாடு நடத்த பாரத மாதா பெயரில் ஒரு கோயிலை கட்ட வேண்டும் என  முடிவெடுத்த சுதந்திர போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா தற்போதைய தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள  பாப்பாரப்பட்டியில் இடத்தைத் தேர்வு செய்து அதனை விலை கொடுத்து வாங்கினார். பின்னர் சித்தரஞ்சன் தாஸை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார். பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுப்பிரமணிய சிவா இறந்து போய்விட்டார்.  தியாகி சுப்பிரமணிய சிவாவிற்கு வாரிசுகள் யாரும் இல்லாததால் அந்த இடத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டது. தியாகி சுப்பிரமணிய சிவாவின் கனவு நனவாகும் வகையில் அடிக்கல் நாட்டப்பட்ட அதே இடத்தில்  பாரத மாதா கோவில் கட்டப்பட வேண்டும் எனக் கோரி பாதயாத்திரை, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். சுமார் 40 வருட போராட்டத்திற்கும் பிறகும் தமிழக அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதி மன்றத்தில் 
வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், எந்த நோக்கத்திற்காக இடம் வாங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற 2 மாதங்களில் பாப்பாரபட்டியில் தமிழக அரசே பாரத மாதா கோயிலை கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் இல்லையெனில் கோயில் கட்ட விருப்பம் உள்ளவர்களிடம்  நிலத்தை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனாலும் தமிழக அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தோம். இதில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு இதனால் மத ரீதியாக பிரச்னைகள் வாய்ப்புள்ளதாக பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 
   கருணாநிதி முதல்வராக இருந்தபோது பாப்பாரபட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவாவிற்கு மணிமண்டபம் மட்டுமே கட்டினார். முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பாரத மாதா கோயிலை அமைக்க மனதளவில் ஒப்புக் கொண்டிருந்தார். இந்நிலையில் இக்கோயிலை உடனடியாக கட்டவோ அல்லது கட்ட விருப்பம் உள்ளவர்களிடம் ஒப்படைக்கவோ தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை வேண்டும். இது குறித்து விரைவில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேச உள்ளேன் என்றார் அனந்தன். 
    இந்நிகழ்ச்சியில் சங்கத்  தலைவர் ராமசாமி, சென்னை பசுமை இயக்கத் தலைவர் துரைராஜ், வர்த்தகர் சங்க ஆலோசகர் காமாட்சி, பச்சையப்பன்,  தாணுலிங்கம், லட்சுமி ராஜாராம் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  

கடலோரக் காவல் படையின் 40 ஆம் ஆண்டு கொண்டாட்டம்

சென்னை துறைமுகத்தில் ரோந்துக்கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்

திருவொற்றியூர், ஜன.5:இந்திய கடலோரக் காவல்படையின் 40-ஆம் ஆண்டு தினத்தையொட்டி சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படையின் ரோந்துக் கப்பல்களில் பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை பார்வையிட்டனர்.
     இது குறித்து கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
     இந்திய கடற்படையிலிருந்து  கடலோரக் காவல்படை தனியாகப் பிரிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 1-ம் தேதியை இந்தியக் கடலோரக் காவல்படை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 40-வது ஆண்டு தினமான இந்த ஆண்டும் 
இத்தினத்தைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பல்களான சாகர், வரத் ஆகியவற்றைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். அப்போது கடலோரக் காவல்படையின் பல்வேறு பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ஆபத்தில் தவிப்பவர்களை ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றுவது எப்படி என்பது  செயல்விளக்க நிகழ்ச்சிகள் செய்து காட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சுமார் 1,208 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமையும் மாணவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிகழ்ச்சியின் மூலம் கடலோரக் காவல் படையின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொண்டு எதிர்காலத்தில் இப்படையில் சேர்வதற்கான ஆர்வத்தை வளர்க்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமா? சலுகைகள் நீடிக்குமா?

வங்கிகளின் சேவைக் கட்டணங்களால் அவதிக்குள்ளாகும் வாடிக்கையாளர்கள் 

பொது நியாயத்தின் அடிபடையில் புதிய விதிமுறைகள் தேவை 

திருவொற்றியூர், டிச.4:ரொக்கப் பணமில்லாத பரிவர்த்தனைக்கு மாறியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு வரும் பொதுமக்கள் வங்கிகளின் பல்வேறு வகையான சேவைக் கட்டணங்களால் கடுமையாக அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
    ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பு செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தொடக்கத்தில் இது கணக்கில் வராத பணம்,  கள்ள நோட்டுகளை ஒழிக்கவே கொண்டு வரப்பட்டதாக அறிவித்த பிரதமர் இதனால் ஏற்படும் சிரமங்களை பொதுமக்கள் 50 நாள்களை பொறுத்துத்தான் ஆக வேண்டும் எனவும் தெரிவித்து வந்தனர். மேலும் டிச.30-ம் தேதியுடன் இதற்கான காலக்கெடு முடிந்தும் வங்கிகளில் தாராள பணப் பட்டுவாடா செய்யப்படவில்லை. 
பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளுக்கு ஈடாக முழுமையாக புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் திட்டம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டலையில் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை மூலம்தான் வாழ்க்கை நடைமுறைகளை செயல்படுத்திக் கொண்டாக வேண்டும் என்ற கட்டாய மனநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  தற்போது ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இச்சலுகைகளும்  வெகு சில நாள்களுக்கு மட்டுமே நீடிக்கும் என கூறப்படுகிறது. 
ஊக்கத் தொகையால் ஏற்படும் இழப்பை ஏற்பது யார்?
இது குறித்து தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கதிரவன், குமரேசன் கூறியது,  
     பெட்ரோல் பங்குகளில் வங்கி அட்டைகளை உபயோகிப்போர்களுக்கு 0.75 சதவீதம் ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. உதாரணமாக 200 ரூபாய்க்கு ஒருவர் பெட்ரோல் போடுகிறார் என்றால் சலுகைப்படி ஊக்கத் தொகை ரூ.1.50 நேரடியாகக் குறைக்கப்படாது. முழுத் தொகையும் பிடித்தம் செய்யப்பட்டு பிறகு வங்கிகள் மூலம் அதே வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் பங்க் உரிமையாளர் கணக்கில் தினசரி வியாபாரம் அடிப்படையில் இக்கட்டணம் எங்கள் கணக்கில் கழித்தல் செய்யப்படுகிறது.  இதனால் விற்பனைத் தொகைக்கு ஏற்ப 
ஒவ்வொரு பங்க் உரிமையாளருக்கும் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய்வரை 
இழப்பு ஏற்படுகிறது. இது குறி்த்து சங்க நிர்வாகிகள் மூலம் எதிர்த்தோம். இதனையடுத்து சுமார் 200 பெட்ரோல் நிலையங்களில் ஆய்வு என்ற பெயரால் அலைக்களிக்கப்பட்டனர். சலுகைகளை அறிவிக்கும் அரசு இதனால் ஏற்படும் இழப்பீட்டை ஏற்க மறுப்பது ஏன்?. இது குறித்து சனிக்கிழமை நடைபெற உள்ள சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவினை எடுக்க உள்ளோம் என தெரிவித்தனர். 
ஒரே சேவை-பல்வேறு கட்டண முறை:
    வங்கி அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது கட்டணம் ஏதும் விதிக்கப்படவில்லை. பின்னர் பொதுமக்கள் உபயோகிக்கத் தொடங்கிய பிறகு 
படிப்படியாக நிபந்தனைகள், கட்டணங்கள் விதிக்கப்பட்டன. இதேபோல் வங்கியில்
கணக்குத் தொடங்க கூவிக் கூவி அழைத்தனர். தற்போது சராசரி பண இருப்பு 
தொகை வைக்க நிர்பந்திக்கின்றனர். தற்போதைய நிலையில் ஜன்தன் கணக்குகளைத் தவிர அனைத்து கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்பு, சராசரி இருப்பு வைக்க வேண்டும். இல்லையெனில் சேவைக் கட்டணங்களை வங்கிகளை தன்னிச்சையாகவே 
எடுத்துக் கொள்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கின் படி இந்தியாவில் 
சுமார் 71 பட்டியலிடப்பட்ட வங்கிகளின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. 
இதில் அரசுடைமையாக்கப்பட்ட சில வங்கிகளில் குறைந்தபட்சம் ரூ.250-க்குக் கூட சேமிப்புக் கணக்கும், ரூ.1,000-த்தில் நடப்புக் கணக்கும் தொடங்கிவிட முடியும்.
ஆனால் இத்தகைய குறைந்த பணத்திலான வங்கிக் கணக்குகளே தற்போது தொழில்நுட்பம், கவர்ச்சி, சேவை அடிப்படையில் இந்தியா முழுவதும் பரவியுள்ள முதல் இரண்டு இடங்களைத் தக்க வைத்துள்ள தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகளில் இல்லை. நடப்புக் கணக்கில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2.50 லட்சம் வரை சராசரி இருப்பு வைக்கும் கணக்குகள் உள்ளன. இதற்கு தகுந்தவாறுதான் சேவையும், கட்டணங்களும். ஏற்கனவே உறுதி ஒப்புக்கொண்டபடி கணக்குகளை பராமரிக்கவில்லையெனில் எதற்கெடுத்தாலும் தண்டக் கட்டணம்தான். அதுவும் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்காமலேயே கணக்கில் கழித்தல் நடைபெறுகிறது. இதனை எதிர்த்து கடுமையாக வாதம் செய்தால் வாடிக்கையாளர்களை குளிர்விக்க இக்கட்டணத்தை மீண்டும் வரவு வைப்பார்கள். இது போன்ற கட்டணங்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் எவ்வித நியாயமும் இன்றி வலுக்கட்டாயமாக 
வசூலிக்கப்படுகிறது.
பொதுவான கட்டண விகிதம் தேவை:
இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறப்படுவதாவது,
     பணமில்லா பரிவர்த்தனைக்கு பொதுமக்கள் இயல்பாக மாற வேண்டும் எனில் 
வங்கிக் கட்டணங்களில் வெளிப்படைத் தன்மை வேண்டும். எல்லா பரிவர்த்தனைகளுக்கும் மிகக் குறைந்த சதவீதத்தில்தான் கட்டணம் இருக்க வேண்டும். வங்கிகளில் நடப்பு, சேமிப்பு கணக்குகளில் இருப்பு வைக்கப்படும் பணத்திற்கு நாள் கணக்கில் வட்டி கணக்கிடப்பட்டு வழங்க வேண்டும். மேலும் சராசரி இருப்பு, குறைந்த பட்ச இருப்பு உள்ளிட்டவைகளில் நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும். எந்தக் கட்டணம் விதித்தாலும் அது பொது நியாயத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க ஊழியர்கள் நியமிக்கப்படவேண்டும். இதன்மூலம் களில் எந்த பிரச்னை என்றாலும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டிய அவலநிலை வாடிக்கையாளர்களுக்கு இருக்காது.  இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான விதிமுறைகள், கோட்பாடுகள் வகுக்க வேண்டும். இதில் வங்கி வாடிக்கையாளர்களின் 
வேண்டுகோள்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றனர்.
     முன்பெல்லாம் பணக்காரர்கள் மட்டுமே வங்கிக்கு வந்து கொண்டிருந்த நிலையில் 
பணமதிப்பு செல்லாது என்ற அறிவிப்பு சாமான்யனையும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது. தற்போதைய நிலையில் பணமில்லா பரிவர்த்தனை பொதுமக்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் வங்கி அட்டைகள், இருப்புத் தொகை பராமரிப்பு சேவைக் கட்டணங்கள் மிகக் குறைவாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும். வங்கியின் வாசலில் பணக்காரர்களுக்கும், சராசரி மனிதனுக்கும் ஒரே மாதிரியான சேவையும், மரியாதையும் வங்கிகள் தரவேண்டும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் அரசின் கொள்கை வெற்றியடைவதில் அதிக சிரமம் இருக்காது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. 

பெட்டிச் செய்தி:
இது குறித்து சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் சி.யூ.சதீசன் கூறியது,
    எனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. எனது வீட்டின் அருகில் உள்ள இதே வங்கியின் ஏடிஎம் மையத்தில் அட்டை மூலம்  பணம் எடுக்கச் சென்றேன். ஆனால் எனது கணக்கில் பணம் இருப்பு இருந்தும் மூன்று முறை முயற்சித்தும் பணம் வரவில்லை. இதற்கு காரணம் தகவல் தொழில்நுட்பக் கோளாறு  இருக்கலாம் என நினைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அப்போது வந்த குறுந்தகவல்களில் மூன்று முறை தலா ரூ.23.50 வீதம் மொத்தம் ரூ.70.50 எனது கணக்கில் கழிக்கப்பட்டிருந்தது. இது நியாயமா எனக் கேள்வி கேட்பதற்கே வங்கியின் வாசலில் காத்திருக்க வேண்டுமே? என்றார் சதீசன்.
திருவொற்றியூரைச் சேர்ந்த பூமிநாதன்:
    இங்குள்ள எச்டிஎப்சி வங்கியில் எங்கள் நிறுவன கணக்கு உள்ளது கடந்த 
மூன்று மாதங்களுக்கான சராசரி இருப்பு வைக்கப்படவில்லை, கணக்கில் ரொக்கம் செலுத்தியது என ரூ.4,850 ஆயிரம்வரை பிடித்தம் செய்துவிட்டனர். பின்னர் வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டபோதும் எதிர்காலத்தில் இது போல நடக்காது என்ற நிபந்தனை அடிப்படையில் ரூ.2,200 மட்டும் திருப்பி வரவு வைக்கப்பட்டது. சேவைக்கு கட்டணம் என்றால் பரவாயில்லை. ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்டையில் 
தண்டத்தொகை வசூலிப்பது சரியா? என்றார் பூமி.
வர்தா புயல் பாதிப்படைந்த காசிமேடு மீனவர்களுக்கு நிவாரணம்

அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார்
 
திருவொற்றியூர்,ஜன.3:வர்தா புயலால் பாதிப்பிற்கு உள்ள சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் பகுதி மீனவர்களுக்கு நிவாரண உதவித் தொகையை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
அப்போது அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது,
   கடந்த டிச.12 அன்று சென்னை மற்றும் புறநகரை உலுக்கியெடுத்த வர்தா புயலால் 
சென்னை மாநகரமே கடும் பாதிப்பிற்கு உள்ளானது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான விசைப்படகுகள், பைபர் படகுகள் முற்றிலும் சேதமடைந்தன, ஆயிரக்கணக்கான விசை, பைபர் படகுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. மேலும் மீன்பிடி வலைகளும் சின்னாபின்னமாயின. இப்புயலால் பாதிப்பிற்குள்ளான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அரசு சார்பில் 
நிவாரணம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. 
    வர்தா புயலால் மீனவர்கள், மீன்பிடித் தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள
பாதிப்புகள் குறித்து மூன்று மாவட்டங்களிலும் கணக்கெடுக்கும் நடைபெற்றது. இதன் அடிப்படையில் நிவாரணம் வழங்க தமிழக அரசு சார்பில் ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி சென்னை மாவட்டம் - 3,172, திருவள்ளூர்-9,976, காஞ்சிபுரம்- 3,680 பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் காசிமேடு மீன்பிடித்துறைமுகம் பகுதியைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. 
   இதன்படி முற்றிலும் சேதமடைந்த விசைப்படகிற்கு ரூ.5 லட்சமும், பகுதி சேதமான படகுகளுக்கு குறைந்பட்சம் ரூ.36 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரையும், இதர சேதங்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதற்கான நிதி வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிதியைப் பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகுகளைச் சரி செய்து கொள்ள வேண்டும் என்றார் ஜெயக்குமார்.
     நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குனர் இந்திரா, ராயபுரம் உதவி இயக்குனர்கள் கணேஷ் நேரு, கங்காதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.