Thursday, 21 July 2016

மணலி, எண்ணூர் பகுதியில் கோடிக் கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தப் பணிகள் 

மாமூல் பிரச்னையால் அமைதிக்கு பங்கம்: முதல்வரின் கவனத்தை எட்டுமா?

    மணலியில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் இருந்த முல்லை ஆர்.ஞானசேகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இக்கொலைக்கான பின்னணியில் மணலி, எண்ணூர் பகுதியில் நடைபெற்று வரும் கோடிக்கணக்கான ரூபாய்க்கான ஒப்பந்தப்பணிகள், இதன்  ஒப்பந்ததாரர்களிடமிருந்து மாமூல் வசூலித்தல், பணம் மற்றும் வேலை தராத ஒப்பந்ததாரர்கள் மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசயங்கள் போலீஸாரின் கவனத்திற்கு வந்துள்ளது. இது குறி்த்து விரிவான நடவடிக்கைகளுக்கு அரசுக்கு 
விசாரணை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
   மணலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்), எண்ணூர் பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம், தேசிய அனல் மின் நிலையம்,எண்ணூர் அனல் மின்நிலையம்,  எண்ணூர் காமராஜர் துறைமுகம் உள்ளிட்ட ஏராளமான கனரக நிறுவனங்கள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்க்கு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஒப்பந்த வேலைகளை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் பெரும்பாலும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இதனால் தங்கள் வசதிக்கு ஏற்ப  வடமாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களை அழைத்து வந்து வேலையில் ஈடுபடுத்துகின்றனர். 
உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை:
     இதனையடுத்து உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை தர வேண்டும் என வற்புறுத்திய இங்குள்ள அரசியல் பிரமுகர்கள் படிப்படியாக ஒப்பந்ததாரர்களை மிரட்டி 
மாமூல் வாங்கும் நிலைக்கு வளர்ந்தனர். மேலும் கட்டுமானப் பொருள்களை பணிகள் நடைபெறும் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனில் ஒரு லாரிக்கு இவ்வளவு பணம் தந்தாக வேண்டும். இதற்கென சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  மாமூல் தராத ஒப்பந்ததாரர்களின் தொழிலாளர்கள் ஆலைக்குள் சென்று வேலை செய்ய முடியாத வகையில் இவர்கள் அச்சுறுத்துகின்றனர். இதனை உள்ளூர் போலீஸாரும் கண்டுகொள்வது இல்லை. எனவே சுமூகமாக பணிகள் நடைபெற வேண்டும் எனில் முக்கிய பிரமுகர்களுக்கு மாமூல் அளித்தே ஆக வேண்டும் என்ற நிலைதான் உள்ளது. இதில் ஆள்பலம், பணபலம் உள்ள ஆளும்கட்சி, எதிர்கட்சிகளை அதிகார வர்க்கத்தினர் கூட்டாகவே செயல்படுவதாக ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குடிசை மாற்று வாரிய வீடுகளில் வெளிமாநில தொழிலாளர்கள்:
    இப்பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளுக்காக அழைத்துவரப்பட்ட தொழிலாளர்கள் எர்ணாவூரில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் தங்கியுள்ளனர். இங்கு வீடுகளை ஒதுக்கீடு பெற்றவர்கள் வாடகைக்கு விட்டுவிட்டு பழைய இடங்களுக்குச் சென்றுவிட்டதாகவும், வாடகை குறைவாக இருப்பதால் வடமாநிலத் தொழிலாளர்கள் இங்கு பெருமளவில் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியில் நடைபெறும் திருட்டு, கொள்ளை, கொலை, வழிப்பறி சம்பவங்களையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் இத்தொழிலாளர்களை விசாரிக்கும் போது அவர்களிடம் 
எவ்வித அடையாள ஆவணங்களும் இல்லை, பிறகு சந்தேகத்தை எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது சிரமமாக உள்ளது என போலீஸார் தெரிவிக்கின்றனர். 
உளவுப் பிரிவினர் மீது புகார்:
    சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கும் பல்வேறு உளவுப் பிரிவுகள் இப்பகுதியில் இயங்கி வந்தாலும் ஒப்பந்தப் பணிகளில் உள்ள அச்சுறுத்தல்கள் குறித்தோ, இதனால் ஒருவருக்கொருவர் பலமாக மோதிக்கொள்வது, தாக்குதல் நடத்துவது குறித்தோ முன்னெச்சரிக்கை தகவல்களை அளிப்பதில் சமீப காலமாக தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உளவுபிரிவு போலீஸார்  சிலர் உள்ளூர் போலீஸார், அரசியல் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 
அரசின் கவனைத்தை எட்டுமா?
   சென்னை மாநகரத்தை ஒட்டிய பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக, நடுத்தர தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் இதனை ஒட்டியுள்ள பகுதிகளில்  ஏராளமான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே இங்கு தொழில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் காவல்த் துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.  எனவே இப்பிரச்னையில் தொடர்புடைய அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றாலே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வழி ஏற்பட்டுவிடும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. 
மணலி மாநகராட்சி கவுன்சிலர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது

கொலைக்கான பின்னணி குறித்து தொடரும் விசாரணை 

திருவொற்றியூர்,ஜூலை 20: மணலி அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் கொலை வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிலையில் மதுரை சுரேஷ் (27), காஜா சுரேஷ் (28), கார்த்திக் (23), கணேஷ்குமார் (28) ஆகிய நால்வரையும் புதன்கிழமை போலீஸார் கைது செய்துள்ளனர். 
   மணலியைச் சேர்ந்த மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலரான ஞானசேகரன் கடந்த ஜூலை 9 அன்று மணலியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கொலைக்கான பின்னணி காரணங்கள் குறித்தும் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல் துணை ஆணையர்கள் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.  
    இந்நிலையில் கடந்த சனிக்கிழமை  ஜெபகுமார், ராஜேஸ், ராஜீவ் பகதூர், பிரபு, குமாரவேல், முத்துராஜ் ஆகிய 6 பேரை இவ்வழக்கில் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இருப்பினும் கொலைக்கான  பின்னணி குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மதுரை சுரேஷ் (27), காஜா சுரேஷ் (28), கார்த்திக் (23), கணேஷ்குமார் (28) ஆகிய நான்கு பேரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். பின்னர் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து இந்த நான்கு பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    தொடக்கத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் கொலை செய்யப்பட்ட ஞானசேகர் மகனுடன் ஏற்பட்ட முன் விரோதமே இக்கொலைக்குக் காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது பின்னணி தகவல்கள் மேலும் பல முக்கிய பிரமுகர்களை நோக்கி 
நகர்ந்து வருவதாகவும், இக்கொலைக்கு அரசியல் விரோதங்கள், ஒப்பந்தம் எடுப்பதில் ஏற்பட்ட போட்டி உள்ளிட்டவைதான் பின்னணி காரணங்களாக இருக்க முடியும் என
கூறப்படுகிறது. 
எண்ணூர் அனல் மின் நிலையத்தை மூட எதிர்ப்பு: தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர், ஜூலை 18: எண்ணூர் அனல் மின் நிலைய மூடுவதற்கான முயற்சிகளைக் கைவிட வேண்டும் எனக்கோரி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எண்ணூரில் திங்கள்கிழமை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியது,
    தமிழகத்தின் முக்கிய அனல் மின் நிலையங்களில் ஒன்றான எண்ணூர் அனல் மின் நிலையம் 1970-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகம் (TANGEDCO) நிர்வகித்து வருகிறது. இதில் உள்ள ஐந்து அலகுகள் (Units) மூலம் சுமார் 450 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வந்தது. மேலும் இதன் அருகிலேயே 660 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் வகையில் புதிய அனல் மின் நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.3,960 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் இப்புதிய மின்நிலையத்தின் கட்டுமானப் பணிகளை லான்கோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
    இந்நிலையி்ல் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் உள்ள ஐந்து அலகுகளில் மூன்று அலகுகள் இரு வாரங்களுக்கு முன்பு திடீரென மூடப்பட்டு விட்டன. இதனையடுத்து இங்கு பணியாற்றி வந்த ஊழியர்களை தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய மின் நிலையம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையாத நிலையில் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பழைய அலகுகளை மூடுவதற்கான காரணம் என்ன?. தற்போது எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 1,070 நிரந்தர தொழிலாளர்கள், சுமார் 300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்.  இதனால் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிப்பு உள்ளாவார்கள். எனவே எண்ணூர் அனல் மின் நிலையத்தை மூடும் முடிவைக் கைவிட வேண்டும். ஊழியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது எனத் தெரிவித்தனர்.
    ஆர்ப்பாட்டத்தில் 12 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த  சுமார் நானூறுக்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 
வழிப்பறி கொள்ளையனை தீரமுடன் மடக்கிப் பிடித்த போலீஸ் ஏட்டு

திருவொற்றியூர், ஜூலை 17: திருவொற்றியூரில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி ப
ணம் பறித்த வழிப்பறி கொள்ளையனை திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸ் ஏட்டு விஜயகுமார் கட்டிப்புரண்டு தீரமுடன் மடக்கிப்பிடித்தார்.
    சனிக்கிழமை பிற்பகல் திருவொற்றியூர் காய்கறி மார்க்கெட்டிற்கு வந்திருந்த பொதுமக்களிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி பணம் பறித்துள்ளார். அப்போது பார்த்தசாரதி என்பவரிடம் ரூ. 900 -தை பறித்த அந்த கொள்ளையன் வியாபாரிகளையும், பொதுமக்களையும் தொடர்ந்து மிரட்டியுள்ளார். இது குறித்து அவசரப் போலீஸூக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த திருவொற்றியூர் காவல் நிலைய ஏட்டு விஜயகுமார் அந்த மர்ம நபரை பிடிக்க முயற்சித்தபோது அவரையும் கத்தியால் வெட்ட மர்ம நபர் முயன்றுள்ளான். இருப்பினும் விஜயகுமார் தொடர்ந்து போராடி அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தார். 
பட்டப்பகலில் போலீஸும், ரவுடியும் கட்டிப் புரண்டு சண்டைபோட்ட சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் மீண்டும் காவல்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
   இதனையடுத்து கூடுதல் போலீஸார் வந்தனர். பின்னர் போலீஸ் ஏட்டு மடக்கிப் பிடித்திருந்த கொள்ளையனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவன் திருவொற்றியூர் பூங்காவனபுரத்தைச் சேர்ந்த விசுவநாதன் (35) என்பதும், இவன் மீது ஏற்கனவே ராயபுரம், எண்ணூர் காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து விசுவநாதனைக் கைது செய்த போலீஸார் திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
  கத்தியுடன் போராடிய கொள்ளையனை தீரத்துடன் மடக்கிப் பிடித்த போலீஸ் ஏட்டு விஜயகுமாரை காவல்த்துறை இணை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாராட்டினர். 
மணலி மாநகராட்சி கவுன்சிலர் கொலை வழக்கில் 6 பேர் கைது

திருவொற்றியூர்,ஜூலை 16: மணலி அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் கொலை வழக்கில் ஜெபகுமார் (28), ராஜேஸ் (25), ராஜீவ் பகதூர் (23), பிரபு (22), குமாரவேல் (24), முத்துராஜ் (35) ஆகிய 6 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
   மணலியைச் சேர்ந்த ஞானசேகரன் சென்னை மாநகராட்சி 21-வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். கடந்த ஜூலை 9 அன்று மணலியில் உள்ள ஒரு கடையில் அமர்ந்திருந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பின்னர் கொலையாளிகள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஆனால் கொலை நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொலைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தது. இதனை போலீஸார் உடனடியாகக் கைப்பற்றினர்.  மணலி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பேரூராட்சி, நகராட்சி தலைவராகவும், மாநகராட்சி கவுன்சிலராகவும் இருந்த ஞானசேகர் பொதுமக்கள் நடமாடும் பேருந்து நிலையம் அருகிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
     இதனையடுத்து கொலை வழக்கினைப் பதிவு செய்த மணலி போலீஸார் ஐந்துக்கும் மேற்பட்ட போலீஸ் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக
தீவிரமாகத் தேடுதல் வேட்டை, விசாரணைகள் நடைபெற்றன. மேலும் கொலைக்கான பின்னணி காரணங்கள் குறித்தும் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இவ்வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல் துணை ஆணையர்கள் ராஜேந்திரன், ஜெயக்குமார் ஆகிய இருவரும் தங்களது நேரடி பார்வையில் விசாரணையை கண்காணித்து வந்தனர். 
    இந்நிலையில் இவ்வழக்கில் ஜெபகுமார் (28), ராஜேஸ் (25), ராஜீவ் பகதூர் (23), பிரபு (22), குமாரவேல் (24), முத்துராஜ் (35) ஆகிய 6 பேரையும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மணலி, மாத்தூர் பகுதியில் வசிப்பவர்களே. கைது செய்யப்பட்ட அனைவரும் சனிக்கிழமை திருவொற்றியூர் குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) ஓம்பிராகாஷ் முன்பு  ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 
மணலி கவுன்சிலர் கொலை வழக்கு: 4-வது நாளாகத் தொடரும் விசாரணை

திருவொற்றியூர்,ஜூலை 12:மணலியைச் சேர்ந்த அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் கொலை வழக்கில் இதுவரை 6 பேர் சிக்கியுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நான்கு நாள்கள் ஆகியுள்ள நிலையில் கொலையாளிகளை உறுதி செய்த பின்பும் கொலைக்கான காரணங்களைக் கண்டறிவதில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
   மணலியைச் சேர்ந்த ஞானசேகரன் சென்னை மாநகராட்சி 21-வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். கடந்த சனிக்கிழமை மணலியில் உள்ள ஒரு கடையில் அமர்ந்திருந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஞானசேகரை வெட்டிக் கொலை செய்தனர். இதனையடுத்து ஜெபகுமார், ராஜேஸ், ராஜீவ் பகதூர், பிரபு ஆகிய நால்வரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமையே பிடித்து வைத்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை குமாரவேல், முத்துராஜா ஆகிய இருவரையும் போலீஸார் விசாரணைக்காக பிடித்து வைத்துள்ளனர். சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 
பெறப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் சிக்கியுள்ள அனைவரும் 
உண்மையான கொலையாளிகள்தான் என்பதை முதற்கட்ட விசாரணையில் போலீஸார் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் கொலைக்கான காரணங்கள், பின்னணியில் 
செயல்பட்டுள்ள நபர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் பிடிபட்டுள்ள நபர்கள் மூலம் படிப்படியாக தெரிய வருவதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து 
ஆர்.கே.நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் இருவர், மற்றொரு நபர் ஆகியோருக்கு கொலையில் தொடர்புடையதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவர்களைத் 
தேடி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
       பிடிபட்டவர்களை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாதது ஏன் என இவர்களது உறவினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. யாரும் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றக் காவலுக்கு ஒப்படைக்கப்படுவார்கள். முக்கிய வழக்கு என்பதால் விசாரணையை காவல்த்துறை உயர் அதிகாரிகளே நேரடியாக நடத்தி வருகின்றனர். இதனால் உளவுப் பிரிவு போலீஸார்கூட அறிந்து கொள்ள முடியாதவகையில் இவ்வழக்கில் ரகசியம் காக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
இருப்பினும் புதன்கிழமை விசாரணையில் முக்கிய கட்டத்தை எட்டிவிடுவோம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

மணலி, எண்ணூர் பகுதியில் வளரும் அரசியல் மாஃபியாக்கள்

அச்சத்தில் தொழில் முனைவோர்: அரசு கவனத்தை எட்டுமா?


    மணலியில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் இருந்த முல்லை ஆர்.ஞானசேகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் போலீஸாரிடம் சிக்கியும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதற்கு காரணம் கொலையாளிகள் கூறும் காரணங்கள் போலீஸார் நம்பும்படியாக இல்லை. இவர்களின் பின்னால் பலம் வாய்ந்த நபர்கள் நிச்சயம் இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் மணலி, எண்ணூர் பகுதியில் தொழிற்சாலைகளில் தொடர்ந்து ஒப்பந்ததாரர்களிடமிருந்து மாமூல் வசூலிக்கும் போக்கு வளர்ந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவித்துள்ளனர். 
   மணலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்), எண்ணூர் பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம், தேசிய அனல் மின் நிலையம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் உள்ளிட்ட ஏராளமான கனரக தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.  இங்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்க்கு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவற்றை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் பெரும்பாலும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் எனக் கூறப்படுகிறது. இதனால் வடமாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களை மட்டுமே அழைத்து வந்து வேலை செய்கின்றனர்.
வளரும் மாஃபியாக்கள்:
       இதனையடுத்து உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை தர வேண்டும் என வற்புறுத்திய இங்குள்ள அரசியல் தலைவர்கள் படிப்படியாக ஒப்பந்ததாரர்களை மிரட்டி 
மாமூல் வாங்கும் நிலைக்கு உயர்ந்தனர். மேலும் கட்டுமானப் பொருள்களை பணிகள் நடைபெறும் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனில் ஒரு லாரிக்கு இவ்வளவு பணம் தந்தாக வேண்டும். இதற்கென சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  மாமூல் தராத ஒப்பந்ததாரர்களின் தொழிலாளர்கள் ஆலைக்குள் சென்று வேலை செய்ய முடியாத வகையில் இவர்கள் அச்சுறுத்துகின்றனர். இதனை உள்ளூர் போலீஸாரும் கண்டுகொள்வது இல்லை. எனவே சுமூகமாக பணிகள் நடைபெற வேண்டும் எனில் அரசியல் மாஃபியாக்களுக்கு மாமூல் அளித்தே ஆக வேண்டும் என்ற நிலைதான் உள்ளது. இதில் ஆள்பலம், பணபலம் உள்ள ஆளும்கட்சி, எதிர்கட்சிகளை அதிகார வர்க்கத்தினர் கூட்டாகவே செயல்படுவதாக ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கவுன்சிலர் கொலையின் பின்னணி என்ன?
         இந்நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ள ஞானசேகர் மணலியின் பேரூராட்சி தலைவராக இருமுறையும், நகராட்சி தலைவராக ஒரு முறையும் தற்போது மாமன்ற உறுப்பினர், அ.தி.மு.க திருவொற்றியூர் பகுதி அவைத்தலைவராகவும் இருந்துள்ளார். 
ஞானசேகரின் சொந்த ஊர் ஆமுல்லைவாயல். ஆமுல்லைவாயல், வைக்காடு1, வைக்காடு 2 ஆகிய மூன்று கிராமங்களையும் அப்புறப்படுத்திதான் சுமார் 1,800 ஏக்கர் நிலத்தை சி.பி.சி.எல். நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதில் ஆலைக்கு ஆதரவாக 
ஞானசேகர் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல் சி.பி.சி.எல். ஆலையின் 
நடைபெற்று வரும் அனைத்து ஒப்பந்தப் பணிகளும் ஞானசேகருக்கு அத்துப்படிாம். இதனால் அரசியல் மாஃபியாக்கள் ஒப்பந்ததாரர்கள் மிரட்டி மாமூல் வசூலிக்க ஞானசேகரை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஏதேனும் ஒரு காரணத்தால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் நம்புகின்றனர்.  இதே போல் எண்ணூரிலும் ஒப்பந்தங்கள் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம் சார்பில் நடைபெற்று வந்த சில பணிகள் அரசியல் மாஃபியாக்களின் மிரட்டல்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
செயலிழந்த உளவுத் துறை:
     ஒவ்வொரு பகுதியிலும் சட்டவிரோத செயல்கள் எது நிகழ்ந்தாலும், காவல்த் துறைக்கு 
தெரிவிக்காமல் அரசுக்கே நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் பல்வேறு உளவுப் பிரிவுகள் காவல்த்துறையில் இயங்கி வருகின்றன. ஆனால் மணலி, எண்ணூர் பகுதியில் நடைபெற்று வரும் மாஃபியாக்கள் குறித்தோ, ஆலைகளின் ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து மிரட்டப்படுவது குறித்தோ இதுவரை உளவுத் துறையினர் அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இவர்களின் சிலர் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து 
முறைகேடுகளின் ஈடுபடுவதாகவும், இவர்கள் காவல் நிலைய ஆய்வாளர்கள் கண்டுகொள்வதில்லை எனவும் கூறப்படுகிறது. காரணம் ஆய்வாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டாலும் உளவுத் துறையினர் கண்டுகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.
அரசின் கவனைத்தை எட்டுமா?
   சென்னை மாநகரத்தை ஒட்டிய பகுதிகளான இப்பகுதியால் ஏராளமான தொழிற்சாலைகள் வந்தவண்ணம் உள்ளன. எனவே இங்கு தொழில் அமைதி இருந்தால் மட்டுமே தொழில்முனைவோர்கள் அச்சமின்றி வந்து செல்லமுடியும். மாஃபியாக்களின் அச்சுறுத்தல் காரணமாக இப்பகுதியில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் 
புகார் தெரிவிக்கின்றனர். எனவே இப்பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத அச்சுறுத்தல்கள் குறித்து அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இப்பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க இயலும் என்பதே எதார்த்தநிலையாக உள்ளது.
மணலி அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் பிடிபட்டனர்

திருவொற்றியூர், ஜூலை 10:மணலி அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     மணலியைச் சேர்ந்த 21-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலராக இருப்பவர் ஞானசேகர். இவர் சனிக்கிழமை மணலி பாடசாலை தெருவில் உள்ள தனது நண்பரின் அடகுக் கடையில் அமர்ந்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து ஞானசேகரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இதனையடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைப் பிடிக்கும் பணியை மாதவரம் போலீஸ் துணை ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
    இந்நிலையில் மாதவரம் பால்பண்ணை அரசு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜெபகுமார் (22), ராஜேஸ் (33), ராஜீவ் பகதூர் (23), பிரபு (28) ஆகிய நால்வரையும் சந்தேகத்தின் பேரில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிடித்தனர். இதனையடுத்து சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட வீடியோ பதிவுகளை ஒப்பிட்ட போது பிடிபட்ட நால்வரும்தான் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது உறுதியானதானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இவர்களிடம் நடத்திய 
விசாரணையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஞானசேகரின் மகன் கிருஷ்ணன் சேகருக்கும், பிடிபட்டவர்களுக்கும் கிரிக்கெட் விளையாடுவதில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டதாகவும், இதில் ஞானசேகர் தொடர்ந்து தனது மகனுக்காக தலையிட்டதாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக ஞானசேகரைக் கொலை செய்ததாக
தெரிவித்துள்ளனர்.  இருப்பினும் இது மட்டுமே கொலைக்கு காரணமா? அல்லது வேறு யாரேனும் இச்சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டுள்ளார்களா? என்பது குறித்து நான்கு பேரிடமும் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறுதி விசாரணைக்குப் பிறகு திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இறுதி ஊர்வலம்: கடைகள் அடைப்பு, பதற்றம்
   இதற்கிடையே ஞானசேகரின் சடலத்தன் பிரேதப் பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றது. பிறகு பலத்த பாதுகாப்புடன் ஞானசேகரின் சடலம் மணலி அண்ணா தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின், மக்களவை உறுப்பினர்கள் டாக்டர் வேணுகோபால், வெங்கடேஸ்பாபு, மேயர் சைதை எஸ்.துரைசாமி, கிழக்கு  மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று ஞானசேகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் மணலி பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தனர். பதற்றம் நிலவியதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் ஆங்காங்கு குவிக்கப்பட்டனர். மாலை நடைபெற்ற இறுதி ஊர்வலத்திற்குப் பிறகு மணலி சுடுகாட்டில் ஞானசேகரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
இரங்கல் கூட்டம்:
   நல்லடக்கம் நடைபெற்ற பிறகு மணலி சுடுகாட்டில் ஞானசேகர் மரணம் குறித்த இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவொற்றியூர் பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினர். 
மணலியில் அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர் முல்லை ஞானசேகர் வெட்டிக் கொலை 

திருவொற்றியூர்,ஜூலை 9: மணலியில் சென்னை மாநகராட்சி 21-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முல்லை ஆர்.ஞானசேகர் (58) சனிக்கிழமை மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர் திருவொற்றியூர் பகுதி அவைத் தலைவராகவும் உள்ளார். 
    சென்னை மாநகராட்சி 21-வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருப்பவர் முல்லை ஆர்.ஞானசேகர். இவர் மணலி பேரூராட்சி தலைவராக இருமுறையும், நகர்மன்றத் தலைவராக ஒரு முறையும் ஏற்கனவே பதவி வகித்துள்ளார். மணலி நகரம் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதையடுத்து கடந்த முறை நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் 21-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் சென்னை மாநகராட்சி வரிவிதிப்பு நிலைக்குழு உறுப்பினராாகவும் உள்ளார். 
    சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் மணலி பேருந்து நிலையம் அருகே உள்ள  தனது நண்பரின் அடகுக் கடையில் ஞானசேகர் அமர்ந்திருந்துள்ளார். இங்குதான் அவர் வழக்கமாக அமர்ந்திருப்பாராம். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஞானசேகரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஞானசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில்  கொலையாளிகள் தப்பிச் சென்றனர்.       
      இதனையடுத்து தகவல் அறிந்த மணலி போலீஸார் ஞானசேகரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடகுக் கடையில் இருக்கும் கண்காணிப்பு கேமராவைக் கைப்பற்றி தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன ஞானசேகருக்கு யசோதா என்ற மனைவியும், 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 
கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் மூலம் 318 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

திருவொற்றியூர், ஜூலை 6:திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆலை ஊழியர்கள் 318 பேருக்கு கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை  வடசென்னை மக்களவை உறுப்பினர் டி.ஜி. வெங்கடேஷ்பாபு, பொன்னேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிறுனியம் பி. பலராமன் ஆகியோர் புதன்கிழமை வழங்கினார்.
   திருவொற்றியூர் சுங்கச்சாவடி அருகே யூனியன் கார்பைடு என்ற தனியார் நிறுவனத்தின் எவரெடி பேட்டரி தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு யூனியன் கார்பைடு பணியாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்காக மீஞ்சூர் அருகே நிலம் வாங்கப்பட்டிருந்தது. ஆனால் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி பணியாளர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இது குறித்து ஆலையின் பணியாளர்கள் தொடர்ந்து 
போராடி வந்தனர். இந்நிலையில் பயனாளிகளின் விபரங்களை சேகரித்த கூட்டுறவு வீட்டுவசதித் துறை அதிகாரில் நடவடிக்கை மேற்கொண்டு 318 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க முடிவு செய்தனர். மேலும் இதற்கான நிலம் அளவீடு செய்யப்பட்டு அரசு அங்கீகாரம் பெறும் பணி நிறைவு பெற்றதையடுத்து பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூரில் புதன்கிழமை நடைபெற்றது. 
   இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடசென்னை மக்களவை உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, பொன்னேரி சட்டப் பேரவை உறுப்பினர் சிறுனியம் பலராமன் 
ஆகியோர் 318 பேருக்கு வீட்டுமனைப் பட்டாவை வழங்கினர். இதில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பதிவாளர் கே.எம்.வெள்ளியங்கிரி, அதிமுக நிர்வாகிகள் பி.ராஜேந்திரன், கே.கிருஷ்ணன், எஸ்.அம்பிகைதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Saturday, 2 July 2016

கண்டெய்னர் லாரி மோதி சுங்கத்துறை கண்காணிப்பாளர் சாவு

திருவொற்றியூர், ஜூலை 2:மணலி அருகே கண்டெய்னர் லாரி மோதி சென்னை சுங்க இல்ல ஆயத்தீர்வை கண்காணிப்பாளர்  வெங்கட்சுரேஷ் (56)வெள்ளிக்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
   சென்னை ராமாவரத்தைச் சேர்ந்தவர் வெங்கட்சுரேஷ். சென்னை சுங்க இல்லத்தில் ஆயத்தீர்வை கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு திருவொற்றியூரில் உள்ள தனியார் சரக்குப் பெட்டக நிலையத்தில் பணி முடித்துவிட்டு மணலி, மாதவரம் வழியாக வீட்டிற்குச் செல்லும் வகையில் மோட்டார் சைக்கிள்மூலம் 
சென்றுள்ளார். மணலி அருகே சென்னை உரத்தொழிற்சாலை ரவுண்டானா அருகே வந்தபோது மணலியிலிருந்து வந்த கண்டெய்னர் லாரி வெங்கட்சுரேஷ் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
    இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து கவனக் குறைவாக லாரியை ஓட்டிய அய்யப்பன் (25) என்பவரை கைது செய்தனர். 
அடைத்துக் கிடக்கும் கால்வாய்கள்: போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்படுமா?

திருவொற்றியூர், ஜூலை 1: கனமழை பெய்தால் சென்னை மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள முக்கிய கால்வாய்களில் வெள்ளநீர் வெளியேற முடியாத நிலையில் பெரும்பாலான இடங்களில் அடைத்துக் கிடக்கின்றன.  எனவே இக்கால்வாய்கள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக தூர்வார வேண்டும் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
      இந்தியாவில் பரப்பளவில் 5-வது இடத்திலும், மக்கள் தொகையில் 4-வது இடத்திலும் உள்ள சென்னை மாநகரம் உலக அளவில் அதிகம் பேர் வசிக்கும் நகரங்களில் 35-வது (Worldatlas கணக்கெடுப்பின்படி)இடத்தில் உள்ளது. ஏறக்குறைய சுமார் ஒரு கோடி பேர் வசிக்கும் சென்னையின் மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மழைநீர் வடிகால் வசதிகள் உள்ளிட்டவை போதிய அளவில் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள கால்வாய்களும் முறையாகப் பராமரிக்கப்படுவவில்லை.  ஒவ்வொரு ஆண்டும் இக்கால்வாய்களைத் தூர்வார்வதற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கேப்டன் காட்டன் கால்வாய், கூவம், பக்கிங்காம், அடையாறு உள்ளிட்டவைகள் பிரதான நீர்வழிப்பாதைகளை  பொதுப்பணித் துறையும், சிறிய கால்வாய்களை மாநகராட்சியும் பராமரித்து வருகின்றன.
நான்கு தொகுப்புகளாக பராமரிப்பு:
   சென்னையிலுள்ள முக்கிய வடிகால் வசதி கால்வாய்கள் நான்கு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. வடக்குத் தொகுப்பில் கொளத்தூர், கேப்டன் காட்டன், ஓட்டேரி நுல்லா ஆகிய கால்வாய்களும், மத்திய தொகுப்பில் மாம்பலம் மற்றும் நந்தனம், கூவம், விருகம்பாக்கம் மற்றும் அரும்பாக்கம் ஆகிய கால்வாய்களும், கிழக்கில் ராயபுரம், வடக்கு பக்கிங்காம், சென்ட்ரல் பக்கிங்காம், தெற்கு கால்வாய் ஆகியனவும், தெற்கு தொகுப்பில் அடையாறு, வேளச்சேரி நீராதாரத் தொகுப்பு உள்ளிட்டவைகள் அடங்கியுள்ளன. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 1860 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்றதில் சுமார் 6,200 மெட்ரிக் டன் அளவுக்கு கழிவு மண் வெளியேற்றப்பட்டது. 
அடைந்து கிடக்கும் கால்வாய்கள்:
      இந்நிலையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றிருந்தாலும் முக்கிய கால்வாய்கள் கோரைப் புற்கள், ஆகாயத் தாமரைகளால் முக்கிய கால்வாய்கள், இணைப்புக் கால்வாய்கள் அடைத்துக் கிடக்கின்றன. வடசென்னையின் முக்கிய கால்வாயான கேப்டன் காட்டன் கால்வாயில் எம்.கே.பி நகர், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கு ஏற்பட்டுள்ள திட்டுக்கள் நீரோட்டத்தை தடுத்து நிறுத்துகின்றன. இதேபோல் வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி வழியே செல்லும் இணைப்புக் கால்வாய்கள் கால்வாயின் போக்கே தெரியாத வகையில் புதர் மண்டிக் கிடக்கிறது.  பக்கிங்காம் கால்வாய் சமீபத்தில்தான் தூர்வாரப்பட்டிருந்தாலும் எண்ணூர் முதல் சென்ட்ரல்வரை ஆங்காங்கு ஏராளமான இடங்களில் கால்வாயில் தடுப்புகள் ஏற்பட்டுள்ளன. 
பிளாஸ்டிக் கழிவுகளே முக்கிய காரணம்:
    கால்வாய்களின் பெரும்பாலான இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாக்கெட்டுகள், பைகள் அடைத்துக்கொண்டு மிதக்கின்றன. இணைப்புக் கால்வாய்களில் பொதுமக்களால் தூக்கியெறியப்படும் இவ்வகை பிளாஸ்டிக் கழிவுகள் பிரதான கால்வாய்களுக்கு சிறிது சிறிதாக வந்து சேர்கின்றன. இதற்கிடையில் ஆங்காங்கு வளர்ந்துள்ள கோரைப்புற்கள், ஆகாயத் தாமரைகளால் தடுக்கப்பட்டு படிப்படியாக திட்டுக்களாக மாறுகின்றன. பங்கிங்காம் கால்வாயில் சென்ட்ரல் அருகே மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் சாணங்கள், குப்பை, கூழங்களால் அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மேலும் சில இடங்களில் சிறிய வகை மரங்கள், சீமைக் கருவேல் மரங்கள் அடைத்துள்ளன. திருவொற்றியூர் பகுதியில் 
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் ஆயில் கழிவுகள் கனமழையின் போது பக்கிங்காம் கால்வாயில் புகுந்து கால்வாயில் படிகின்றன. இதனால் ஆற்றின் கொள்ளளவு பாதிக்கப்பட்டு மழைக்காலங்களில் நீரோட்டத்தின் வேகத்தில் தடை ஏற்பட்டு கரையில் உடைப்புகள் ஏற்படுகின்றன. 
போர்க்கால நடவடிக்கை தேவை:
இது குறித்து நுகர்வோர் கூட்டமைப்பின் நிர்வாகி என்.துரைராஜ், திருவொற்றியூர் சமூக சேவை சங்க நிர்வாகி கே.சுப்பிரமணி உள்ளிட்டோர் கூறியது,
      கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சென்னை மாநகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதிலிருந்து அதிகாரிகள் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியதோ அதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். கால்வாய் அடைப்புகளை நீக்க வேண்டும். ஆண்டு முழுவதும் தொடர் பராமரிப்பில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு கால்வாய்கள் கண்காணிக்கப்படவேண்டும். தற்போது தினக்கூலி அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு தினசரி வேலைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. மாநகராட்சி சார்பில் சம்பளம் வழங்கப்படும் இவர்களை பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள கால்வாய்களைக் கண்காணிக்க அறிவுறுத்தலாம். காரணம் சிறிய அளவில் புற்கள் வளரும்போதோ அல்லது பிளாஸ்டிக் கழிவுகள் வந்தாலோ அவற்றை உடனடியாக அகற்றி விட்டால் பிறகு
கோடிக்கணக்கில் செலவு செய்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டிய
அவசியம் இருக்காது. எனவே பொதுப்பணி, மாநகராட்சி உயர் அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு போர்க்கால அடிப்படியில் செயல்பட்டால் 
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்குப் பருவமழையால் சென்னைக்கு
அச்சுறுத்தல் இருக்காது என்றனர்.
     தற்போது ஆங்காங்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்தாலும் ஒட்டுமொத்தமாக மழைநீரை சென்றடைவதற்கான காரணங்களை இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்பதே தற்போதைய நிலை. காரணம் இணைப்புக் கால்வாய்கள் மாநகராட்சி வசமும், பிரதான கால்வாய்கள் பொதுப்பணித் துறை வசமும் உள்ளது. எனவே தற்போதைய உடனடித் தேவை கூட்டுப் பணிதான்.  
வருமுன் காப்போம் மக்களுக்கு மட்டுமல்ல... அதிகாரிகளுக்கும்தான்....
சமூக விரோதிகளின் பிடியில் திருவொற்றியூர் மாநகராட்சி பூங்கா 

எம்.எல்.ஏ-வுடன் தகராறு செய்த போதை ஆசாமிகள்  

திருவொற்றியூர், ஜூலை 1:சமூக விரோதிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படும் பொதுமக்களின் புகார்களின் பேரில் திருவொற்றியூர் மாநகராட்சி பூங்காவை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது அங்கு மதுக் குடித்துக் கொண்டிருந்த போதை ஆசாமிகள் அவருடன் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் பூங்காவிற்கு வந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
    சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகே மாநகராட்சி பூங்கா உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது சுமார் ரூ. 40 லட்சம் செலவில் இப்பூங்காவில் நீச்சல்குளம், பறவைகள் தங்கும் வசதிகள், நீரூற்றுகள், மரங்கள், பூச்செடிகள், நடைபாதைகள், ஓய்விடங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டிருந்தன. மேலும் நீச்சல்குளத்தைப் பராமரிக்க பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இப்பூங்கா முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இதனையடுத்து பொதுமக்களின் வருகை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. 
ஒரு கட்டத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக பூங்கா மாறிவிட்டதாக பொதுமக்கள் 
புகார் தெரிவித்தனர். 
எம்.எல்.ஏ.வுடன் தகராறு செய்த போதை ஆசாமிகள்:
    இந்நிலையில் பொதுமக்களின் புகாரையடுத்து திருவொற்றியூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி வெள்ளிக்கிழமை பூங்காவை ஆய்வு செய்தார். அப்போது அங்கு மூன்றுபேர் மது குடித்துக்கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை அழைத்தபோது வந்திருப்பது எம்.எல்.ஏ. என்பது கூட தெரியாமல் அவரை எதிர்த்து
வாக்குவாதம், தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து மண்டல அலுவலர் பெஞ்சமினைச் சந்தித்த கே.பி.பி.சாமி,  பூங்காவை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். பராமரிப்பதை தனியாரிடம் அளிப்பதை நிறுத்திவிட்டு மாநகராட்சியே பராமரிக்க வேண்டும். மேலும் உடனடியாக நீச்சல்குளத்தைச் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். 
போலீஸார் அதிரடி:
    இது குறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் அங்கு வந்த திருவொற்றியூர் போலீஸார் பூங்காவில் சுற்றித் திரிந்தவர்களை விரட்டிப் பிடித்தனர். அவர்களில் ஜோடியாக அமர்ந்திருந்த சிலரை அழைத்து விசாரித்தபோது அவர்கள்  பள்ளி மாணவ, மாணவிகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கடும் எச்சரிக்கை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இன்னும் சிலரை துரத்தியடித்தனர். இருப்பினும் சாமி எம்.எல்.ஏ-வுடன் தகராறு செய்த போதை ஆசாமிகள் போலீஸார் வருவதற்குள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இனி,சந்தேகத்திற்குரிய நபர்களை பூங்காவிற்குள் அனுமதிக்கக் கூடாது. மீறினால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்  என பூங்கா காவலாளியிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் உத்தரவிட்டார். 
     மண்டல அலுவலகம் அருகிலேயே அமைந்துள்ள பூங்காவைக்கூட மாநகராட்சியால் முறையாகப் பராமரிக்க முடியவில்லையா? என்பதே வெள்ளிக்கிழமை சம்பவங்கள் மூலம் பொதுமக்கள் எழுப்பும் கேள்வியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னைத் துறைமுகத்தில் எண்ணெய்க் கப்பல் மூழ்குகிறதா?

வதந்தியால் ஏற்பட்ட பரபரப்பு

திருவொற்றியூர், ஜூலை 1:சென்னை வந்த எண்ணெய்க் கப்பல் மூழ்கி வருவதாக வெள்ளிக்கிழமை தகவல் பரவியதையடுத்து துறைமுக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கப்பலில் தண்ணீர் அதிகம் புகுந்து ஏற்பட்ட பிரச்னையே வதந்திக்கு காரணம் என்பது பின்னர் தெரியவந்தது. 
     பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான, பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட  எம்.டி. ஃபேட்ல் இ ரப்பி (MT FADL E RABBI)என்ற கப்பல் இந்தோனேசியா நாட்டின் பெலாவான் துறைமுகத்திலிருந்து 5400 மெட்ரிக் டன் பாமாயில் ஏற்றிக்கொண்டு கடந்த திங்கள்கிழமை ஜூன்  27 அன்று சென்னைத் துறைமுகம் வந்ததடைந்தது. சென்னைத் துறைமுகத்தில் பாரதி துறையில் கட்டப்பட்டிருந்த இக்கப்பல் படிப்படியாக மூழ்கி வருவதாக வெள்ளிக்கிழமை தகவல் பரவியது. இது குறித்து துறைமுக அதிகாரிகளிடம் விசாரித்தபோது எவ்வித தகவலும் அளிக்கவில்லை.
      இதனையடுத்து கப்பலின் சென்னை ஏஜென்சி ஜெஸ்பா சிப்பிங் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது அதன் இயக்குனர் பன்னீர்செல்வம் கூறியது, 
      கப்பல் மூழ்கும் அபாயம் ஏதும் இல்லை. டேங்கர் வகை கப்பலான இதில் பல டேங்கர்கள் தனித்தனியே அமைக்கப்பட்டிருக்கும் மேலும் கப்பலின் எடையை சீராகப் பராமரிக்கும் வகையில் தண்ணீர் நிரப்பும் அறைகளும் இருக்கும். இந்தோனேசியாவிலிருந்து கப்பல் வந்து கொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாகவும், கடல் கொந்தளிப்புடன் இருந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால்  அளவுக்கு அதிகமாக கடல் நீர் கப்பலுக்குள் புகுந்துவிட்டது.  இதனையடுத்து வழக்கத்தைவிட சற்று மூழ்கிய நிலையில் கப்பல் சென்னைத் துறைமுகத்திற்குள் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டது.
     இது குறித்து தகவல் அறிந்தவுடன் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் கடல் நீர் உள்புகுந்ததற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது கப்பல் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமையிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யும் பணி தொடங்கும். எனவே கப்பலுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. கப்பல் மூழ்கிவிட்டதாக பரவிய தகவல் வெறும் வதந்திதான் என்றார் பன்னீர்செல்வம்.
   கப்பல் மூழ்கிவிட்டதாக பரவியத் தகவலையடுத்து வெள்ளிக்கிழமை ஏராளமான செய்தியாளர்கள், கேமராமேன்கள் துறைமுக வளாகத்தில் குவிந்தனர். இது குறித்து துறைமுக நிர்வாகமும் போதிய தகவல்கள் அளிக்காததால் வெள்ளிக்கிழமை இரவுவரை இது குறித்து ஒருவருக்கொருவர் விசாரித்தவண்ணமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

காமராஜர் துறைமுகம் சார்பில்

கிராம மக்களுக்கு ரூ.1.57 கோடி செலவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி 

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர், ஜூன் 27:எண்ணூர் காமராஜர் துறைமுகம் சார்பில் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.1.57 கோடி செலவில் கிராம மக்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை தரைவழி, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
   மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு, காட்டுப்பள்ளி, நந்தியம்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு  பரிசோதனை மையம், தையல் பயிற்சி, குளிரூட்டும் இயந்திரங்களை பழுது பார்த்தல், வாகன மெக்கானிக், கம்பியாளர், மோட்டார் ரீவைண்டிங்கு, வெல்டிங், கைபேசி பழுதுபார்த்தல் உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்க காமராஜர் துறைமுகம் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நிறுவனங்களுக்கான தேசிய நிலையம் சிறப்புப் பயிற்சித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து 865 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இதற்கான பயிற்சி தொடக்கவிழா திங்கள்கிழமை அத்திப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது.
இதில் காமராஜர் துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிற்சியைத் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். 
தொழில் வளர திறமையான தொழிலாளர்கள் தேவை அவசியம்:
அப்போது அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியது,
    வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்திய இடம்பெற வேண்டுமெனில் தொழில் வளமும், விவசாயமும் வளர்ச்சியடைய வேண்டும். தொழில் வளர்ச்சி சீராக இருக்க வேண்டும் எனில் திறமையாக மேம்பாடு அடைய வேண்டும் எனில் திறன்வாய்ந்த தொழிலாளர்கள் தேவை. ஆனால் தற்போதைய கல்விமுறையில் படித்து முடித்த இளைஞர்களில் உடனடியாக வேலையில் சேர 80 சதவீதம்பேருக்கு தகுதி இல்லாத நிலை உள்ளது. எனவேதான் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கென தனி அமைச்சகத்தையே பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். திறன்மேம்பாட்டுப் பயிற்சி மூலம் திறமையான தொழிலாளர்கள் கிடைப்பார்கள், இதன்மூலம் தொழில்கள் வளரும், உற்பத்தி பெருகும், நாட்டின் பொருளாதாரம் வளரும். எனவே பயிற்சி பெறுபவர்களின் வீடு மட்டுமின்றி நாடும் வளரும். நாடு முதல்நிலைக்கு வரவேண்டும் எனில் அனைவரும் கூட்டாக உழைக்க வேண்டும். காமராஜ் துறைமுகம் கடந்த ஆண்டு ரூ. 7 கோடியும், நடப்பாண்டில் ரூ. 8 கோடியும் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டுக்குரியது. இதனை இப்பகுதி மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன். 
   நிகழ்ச்சியில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தேசிய நிலையத்தின் பயிற்சித் துறை நிர்வாகி டாக்டர் திப்யேந்து சவுத்ரி, காமராஜர் துறைமுக துணை பொது மேலாளர் பி.ராதாகிருஷ்ணன், பொதுமேலாளர்கள் சஞ்சய்குமார், கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பு அதிகாரி அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர் விம்கோ மார்க்கெட்டில் தீ விபத்து: 15 கடைகள் நாசம் 

மர்ம நபரின் கைவரிசையா?

திருவொற்றியூர், ஜூன் 25: திருவொற்றியூர் விம்கோ நகர் மார்க்கெட்டில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 கடைகள் எரிந்து நாசமாயின. மொத்த சேத மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
    திருவொற்றியூர் விம்கோ நகரில் ரயில் நிலையம் செல்லும் பாதையில் இரு புறமும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களை விற்கும் கடைகள் அடங்கிய மார்க்கெட் உள்ளது. இங்கு கணேசன் என்பவரது காய்கறிக் கடையில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் அதற்குள் தீ மளமளவெனப் பரவி சுமார் 15 கடைகள் எரிந்து நாசமாயின. மேலும் கடைகளில் இருந்த பழங்கள், காய்கறி, மளிகை சாமான்கள் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமாயின. மொத்த சேதமதிப்பு ரூ.3 லட்சம்வரை இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
தீவிபத்தில் சந்தேகம்:
  காய்கறி மார்க்கெட்டில் தீவிபத்து ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில் விம்கோ நகர் அருகே உள்ள சக்திபுரம், ஸ்ரீரங்கம் நியூடவுன் ஆகிய இடங்களில் 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து வணிக அங்காடியில் இருந்த கேமரா பதிவினைச் சோதனையிட்டபோது இதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் சைக்கிளில் 
அங்குமிங்கும் சென்று வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து சந்தேகம் எழுந்த போலீஸார் குமாரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதே போன்ற தீவைப்புச் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் முன்பும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
   இச்சம்பவங்கள் குறித்து எண்ணூர் போலீஸார் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.