Thursday, 29 October 2015

கடலோரக் காவல் படையினருக்கான நீச்சல் போட்டி

சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய கிழக்கு பிராந்தியம்

திருவொற்றியூர், அக்.28: சென்னையில் நடைபெற்ற இந்திய கடலோரக் காவல் படையினர் இடையேயான நீச்சல் போட்டியில் கிழக்குப் பிராந்திய அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
     இந்திய கடலோரக் காவல்படையினர் இடையேயான நீச்சல் போட்டிகள் சென்னையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்தன. இதில் இந்திய கடலோரக் காவல்படையின் தலைமையிடம், கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு, அந்தமான் நிகோபர் பிராந்தியங்களின் பங்கேற்றனர். சுமார் 9 பிரிவுகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் அதிக அளவில் வெற்றிகளைப் பெற்ற சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிழக்குப் பிராந்திய அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இரண்டாம் இடத்தை மேற்கு மற்றும் வடகிழக்கு அணிகள் பகிர்ந்து கொண்டன.
    புதன்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் கலந்து கொண்ட கிழக்கு கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய தளபதி சத்ய பிரகாஷ் சர்மா வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். 
ஒரே நாளில் கணவன், மனைவி மாரடைப்பால் சாவு

மணலியில் சோகம்

திருவொற்றியூர், அக்.28:மணலியில் ஒரே நாளில் கணவன், மனைவி மாரப்படைப்பால் இறந்து போன சம்பவம் மணலி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    மணலி அண்ணா தெருவில் வசிப்பவர் சுந்தரம் (65. தையல் கடை வைத்துள்ளார். இவரது மனைவி பாப்பா (60). இவர்களுக்கு கலா, தனலட்சுமி என இரு மகள்கள் உள்ளனர். இவர்களுக்குத் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். சுந்தரமும் அவரது மனைவி பாப்பாவும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் பாப்பாவுக்கு உடல் நலம் குன்றியதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். செவ்வாய்க்கிழமை மனைவி பாப்பாவை மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு சோகத்துடன் பூந்தமல்லியில் உள்ள மகள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென சுந்தரத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போய்வி்ட்டார். பின்னர் சுந்தரத்தின் சடலம் மணலிக்கு எடுத்துவரப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இறுதிச் சடங்கு செய்வதற்காக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பாப்பாவை உறவினர்கள் புதன்கிழமை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
     அப்போது கணவரின் சடலத்தைப் பார்த்து துக்கம் தாளாமல் கதறி அழுத பாப்பா திடீரென மயங்கி கீழே சரிந்தார். பின்னர் உடனடியாக பாப்பாவைக் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துபோய்விட்டாதாக தெரிவித்தனர். இதனையடுத்து பாப்பாவின் சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு கணவன் சுந்தரத்தின் உடல் அருகே வைக்கப்பட்டது. பின்னர் இருவரது சடலங்களும் இறுதி அஞ்சலிக்குப் பிறகு புதன்கிழமை மணலி மயானத்தில் எரியூட்டப்பட்டன.
     சுந்தரமும், பாப்பாவும் தனியே வசித்தாலும் ஒருவருக்கொருவர் மிகவும் பாசத்தோடு இருப்பார்கள். ஒருவர் இழப்பை மற்றொருவர் தாங்க இயலாமல் இருவரும் ஒரே நாளில் இறந்து போனது பரிதாபமானதுதான் என அருகில் வசிப்போர் தெரிவித்தனர். 

Friday, 16 October 2015

திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பன்னா இஸ்மாயில்


திருவொற்றியூர், அக்.13: புழல் சிறைச்சாலை வார்டன் இளவரசனைத் தாக்கிய வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி பன்னா இஸ்மாயிலை  திருவொற்றியூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை போலீஸார் ஆஜர்படுத்தினர்.
    சென்னையை அடுத்த புழல் சிறைச்சாலையில்  கடந்த 25 ந்தேதி  கைதிகளை சிறை அதிகாரிகள், காவலர்கள் சோதனையிட்டனர். அப்போது தீடீரென கைதிகள் சூழ்ந்து கொண்டு தாக்கியதில் சிறை வார்டன்  இளவரசன், காவலர்கள் முத்துமணி, மோகன், தேவராஜ் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்  உள்ளிட்ட 13 கைதிகள் மீது புழல் போலீஸார் வழக்கப்பதிவு செய்தனர்.  இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மூன்று பேரும் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். 
   இந்நிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி பன்னா இஸ்மாயில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு திருவொற்றியூர் நீதிமன்றத்தில் போலீஸார் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர். இதனையடுத்து பன்னை இஸ்மாயிலை ரிமாண்டு செய்த குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி வசந்தகுமார் அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் பன்னா இஸ்மாயில் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருவொற்றியூர், அக்.11:சென்னையை அடுத்து  மணலி புதுநகர்  அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். 
     சென்னையை அடுத்த மணலி புதுநகரில் அமைந்துள்ள  அய்யா வைகுண்ட தர்மபதி 10 நாள் திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை 10 நாள்கள்  நடைபெற்றது. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவினையொட்டி கடந்த 10 நாள்களாக  ஏடுவாசித்தல், அலங்கார வாகனத்தில்  அய்யா வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஞாயிற்றுக்கிழமை 36 அடி உயரம் கொண்ட திருத்தேர் 
அய்யா வழி பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பின்னர் வீதிகள் வழியாக உலா வந்த தேர் பின்னர் இருப்பு சேர்ந்தது.   தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி அன்னதானம், தண்ணீர், மோர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. 
    நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், நாங்குனேரி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.நாராயணன், மணலி மண்டலக் குழு தலைவர் தங்கிசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை  தர்மபதி தலைவர்  தலைவர் தங்கபெருமாள், செயலாளர் தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். 
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படையினர் கூட்டுப் பயிற்சி
சென்னை அருகே நடுக்கடலில் அக்டோபர் 19-வரை நடைபெறுகிறது

திருவொற்றியூர், அக்.15: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் கடற்படையினர் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி சென்னைக்கு அருகே நடுக்கடலில் அக்.19-வரை நடைபெற உள்ளதாக இந்திய கடற்படை கிழக்குப் பிரிவு தளபதி ரியர் அட்மிரல் பி.கே.வர்மா சென்னையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

   இது குறித்து சென்னைத் துறைமுகத்தில் இந்திய கடற்படையின் போர்க் கப்பலான ஐ.என்.எஸ்.ஷிவாலிக்கில் வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ரியர் அட்மிரல் பி.கே.வர்மா கூறியது,
    இந்திய, அமெரிக்க கடற்படையினர் பங்கேற்கும்  மலபார் கூட்டுப் பயிற்சி (Excercise Malabar) என்ற பெயரில் கடந்த 1992-ல்  தொடங்கி கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் நடைபெற்ற ஒத்திகையில் புதிதாக ஜப்பான் நாட்டின் கடற்படையும் இணைந்தது.  இதில் இந்நிலையில் 19-ம் ஆண்டு ஒத்திகையை சென்னைக்கு அருகே நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் இந்திய, அமெரிக்க, ஜப்பான் கடற்படையினர் பங்கேற்றுள்ளனர்.  இதன்படி அக்.14 தொடங்கிய கூட்டுப் பயிற்சி இரு நாள்கள் சென்னைத் துறைமுகத்திலும், நான்கு நாள்கள் நடுக்கடலிலும் நடைபெற உள்ளது. 
அதி நவீன விமானம் தாங்கி போர்க் கப்பல்:
         துறைமுகத்தில் நடைபெறும் பயிற்சியில் மூன்று நாடுகளின் தொழில் நுட்ப உத்திகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. நடுக்கடலில் நடைபெறும் கூட்டுப் பயிற்சியில் இந்திய கடற்படையின் ஷிவாலிக், ரன்விஜய், பெட்வா, ஷக்தி ஆகிய நான்கு போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பலான சிந்துத்வஜ், பி.81 டோர்னியர் விமானம், ஹெலிகாப்டர்கள் பங்கேற்கின்றன. அமெரிக்கா கடற்படையின் விமானம் தாங்கி கப்பல், அணு சக்தியில் இயங்கும் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல், அதி நவீன ரோந்து விமானங்கள் உள்ளிட்டவை பங்கேற்கின்றன. மேலும் ஜப்பான் நாட்டின் ஏவுகணைகளைக் கொண்டு எதிரிகளின் தளங்களை துள்ளியமாகத் தாக்கும் புயூஜுகி என்ற கப்பலும் இதில் பங்கேற்கிறது.
பயிற்சியின் நோக்கம்:
    இக்கூட்டுப் பயிற்சி மூலம் இரு தரப்பினரின் போர் உத்திகள், போர்க்கருவிகளைக் கையாளும் விதங்கள், கடற்கொள்ளையர்களை எதிர்கொள்வது, இரு தரப்பு ஒத்துழைப்புகளை அதிகரிப்பது, பரிமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இதில் மேற்கொள்ளப்படும். மேலும் எவ்வாறான சிறப்புப் பயிற்சிகளை மேற்கொள்கிறோம் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க இயலாது. மேலும் ஒவ்வொரு நாட்டினரின் கட்டமைப்பு போர்த் திறன் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து வீரர்கள் அறிந்து கொள்ள இயலும். மேலும் வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியில் கடற்படை கப்பல்கள், போர்க் கருவிகளில் ஏற்பட்டு வரும் தாக்கங்கள் குறித்து படையினர் அறிந்து கொள்ள முடியும். 
எந்த நாட்டிற்கும் எதிரானதல்ல:
    உலக அளவில் ஜனநாயகம் வலுப்பெற்றுள்ள இந்த நாடுகளின் சார்பில் நடைபெறக் கூடிய இப்பயிற்சி மூலம் சுதந்திரமான சர்வதேச கடல்வழிப் பயணத்திற்கான பாதுகாப்பை அதிகரிக்க முடியும். இதனால் சர்வதேச வணிகம் அதிகரிப்பதோடு பொருளாதாரமும் வளர்ச்சி அடையும். மேலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த முடியும்.  இது வங்கக் கடல் பகுதியில் நடைபெறுவதால் சீனா நாட்டிற்கு எதிரான கூட்டுப் பயிற்சி இல்லை என்பதோடு எந்த நாட்டிற்கும் எதிரானதல்ல. படையினர் என்றால் தொடர்ந்து இது போன்ற போர்ப் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படுத்தப்பட வேண்டும் என்பது வழக்கமானதுதான் என்றார் வர்மா.
   பேட்டியின் போது அமெரிக்க கடற்படை துணைத் தளபதிகள் ஜே.பி.அக்காய்ன், சி.வில்லியம்ஸ், ஜப்பான் கடற்படை துணைத் தளபதி முரகவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
சென்னை அருகே இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் அணி வகுத்தன
கடற்படை தினத்தையொட்டி பொதுமக்கள் முன்னிலையில் செயல் விளக்கம்

திருவொற்றியூர், அக்.12:இந்திய கடற்படையின் கிழக்கு பிரிவு சார்பில் 'கடலில் ஒரு நாள்'  நிகழ்ச்சி சென்னைக்கு அருகே நடுக்கடலில் திங்கள் நடைபெற்றது.  இதில் 8 போர்க் கப்பல்கள் பங்கேற்று அணிவகுத்தன. பின்னர் கடற்படையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்க நிகழ்வுகள் நடைபெற்றன.  
    1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் பங்கேற்ற இந்திய கடற்படை படகுகளில் சென்று கராச்சி துறைமுகத்தைக் கைப்பற்றி வெற்றி கொண்டது.  இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் இந்த வெற்றி யை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதி கடற்படை தினம் கொ்ண்டாடப்பட்டு வருகிறது. 
    இதேபோல் இந்த ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.  இதில் முதல் நிகழ்ச்சியாக இந்திய கடற்படையின்  செயல்பாடுகள் குறித்து முப்படை வீரர்களின் குடும்பத்தினர், ராணுவம், விமானப்படை அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள'கடலில் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.   சென்னைக்கு அருகே நடுக்கடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏவுகனைகளை ஏவும், எதிரிகளின் ஏவுகனைகளை அளிக்கும் வல்லமை, அதி நவீன ஆயுதங்கள் அடங்கிய கப்பல்களான ஷிவாலிக், ரன்விஜய், ஷக்தி, பெட்வா, கோரா, விபுடி, நிசான்க் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலான சிந்துத்வஜ் ஆகிய 8 கப்பல்கள் அணிவகுத்துச் சென்றன.
      பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.  போரின்போது ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு பொருள்களை பரிமாற்றம் செய்வது, ஹெலிகாப்டர், சிறிய ரக விமானங்களில் ரோந்து செல்வது, அதிநவீன துப்பாக்கிகளால் சுட்டு வீழ்த்துவது, அதிவேக படகுகளில் ரோந்து செல்வது, உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை கடற்படை வீரர்கள் செய்து காட்டினர்.  இந்நிகழ்வுகளைக் கண்டுகளிக்க முப்படை வீரர்களின் குடும்பத்தினர், அதிகாரிகள், தேசிய மாணவர் படை (என்.சி.சி.), பொதுமக்கள் என சுமார் சுமார் 3 ஆயிரம் பேர் போர்க்கப்பல்களில் சென்னைத் துறைமுகத்திலிருந்து நடுக்கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

     கடற்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் ரியர் அட்மிரல் எஸ்.பொகரே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி அலோக் பட்நாகர் மற்றும் முப்படையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்திய கடற்படையின் கிழக்கு பிரிவு விசாகபட்டனத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிகழ்ச்சிக்காக விசாகபட்டனத்திலிருந்து இக்கப்பல்கள் வரவழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
ஆண்டுக் கணக்கில் நீடித்தப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு
துறைமுக இணைப்புச் சாலை பணிக்காக செரியன் நகர் வீடுகள் அகற்றம்

திருவொற்றியூர், அக்.5: சென்னை, எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைகள் விரிவாக்கத் திட்டப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட  தண்டையார்பேட்டை செரியன் நகரில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான இழப்பீட்டினைப் பெறுவதில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் பயனாளிகளுக்கிடையே ஆண்டுக் கணக்கில் நீடித்து வந்த பிரச்னைக்கு சமீபத்தில் தமிழக அரசு சுமூகத் தீர்வு ஏற்படுத்தியது. 
    இதனையடுத்து இவ்வீடுகள் அனைத்தும் திங்கள்கிழமை ராட்சத கிரேன்கள்,  புல்டோசர் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. இதன் மூலம் இத்திட்டத்திற்கு நீண்ட நாள்களாக இருந்து வந்த தடங்கல்கள் நீங்கியுள்ளன.
    சென்னை, எண்ணூர் துறைமுகங்கள் மற்றும் வடசென்னையில் நிலவி வரும் கண்டெய்னர் லாரி போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் விதமாக ரூ. 600 கோடி மதிப்பீட்டிலான துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டப்பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்ற வருகின்றன. இதில் சுமார் 90 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில் ஆங்காங்கு சில இடங்களில் சாலை அமைப்பதற்கான நிலங்களைக் கையகப்படுத்துவதில் தொடர்ந்து தடங்கல்கள் இருந்து வருகிறது. 
செரியன் நகரில் பிரச்னை என்ன?:
    தண்டையார் பேட்டை செரியன் நகரில் குடிசைமாற்று வாரியம் சார்பில் குறைந்த விலையில் அளிக்கப்பட்ட காலிமனையில் அமைக்கப்பட்டிருந்த 41 வீடுகள் துறைமுக இணைப்புச் சாலை திட்டப்பணிகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டன. இவ்வீடுகளில் 94 குடும்பங்கள் வசித்து வந்தன. இதில் காலி மனைகளுக்கான தவணைகளைச் செலுத்தி 
விற்பனை பத்திரத்தை பெரும்பாலான பயனாளிகள் பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் 
மனை மற்றும் வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு உரிமை யாருக்கு என்பதில் குடிசை மாற்று வாரியத்திற்கும், பயனாளிகளுக்கும் தொடர்ந்து பிரச்னை இருந்து வந்தது. இப்பிரச்னை நீண்ட நாள்களாக இருந்து வந்த நிலையில் இந்த இடத்தைத் தவிர்த்து மீதமுள்ள இடங்களில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டன. 
இதனால் இப்பகுதியில் மட்டும் குறுகலான சாலையில் போக்குவரத்து இருந்து வந்தது. 
       இந்நிலையி்ல் இப்பிரச்னையில் சமீபத்தில் சுமூகத் தீர்வு ஏற்பட்டது. இதன்படி குடிசை மாற்று வாரியம் சார்பில் தண்டையார்பேட்டை ரங்கநாதபுரம் திட்டப்பகுதியில் 94 குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கப்பட்டன. மேலும் தற்போது இடிக்கப்படும் வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டன். 
இதனையடுத்து ஒரு சில தினங்களுக்கு முன்பு அனைத்து குடும்பங்களும் புதிய வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர். இதனையடுத்து திங்கள்கிழமை ராட்சத கிரேன்கள், புல்டோசர்கள் உதவியுடன் 41 வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டு அகற்றப்பட்டன.
நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம்:
  இந்நிலையில் இத்திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்திலுள்ள குடிசைகள் இதுவரை அகற்றப்படவில்லை. இங்கு பெரும்பாலானோர் மீனவர்கள் என்பதால் இங்கிருந்து வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி எர்ணாவூரில் அமைக்கப்பட்டுள்ள
குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு இடம்பெயர மறுத்து வருகின்றனர். இதேபோல் எண்ணூர் விரைவு சாலையில் காலடிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள முத்துகிருஷ்ணசுவாமி மடம், ஜீவ வார்த்தை சபை ஆகியவற்றையும் இதுவரை அகற்ற முடியாமல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திணறி வருகிறது. இந்த இடங்களைத் தவிர்த்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் இந்த மூன்று இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயமும் தொடர்கிறது. இந்த மூன்று இடங்களுக்கான பிரச்னை அனைத்தும் தீர்க்கப்பட்டுள்ள நிலையில் இந்த இடங்களை விரைவில் கையகப்படுத்தி உடனடியாக சாலை விரிவாக்கம் செய்யப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
     செரியன் வீடுகளை இடிப்பதற்கான பணிகளை துறைமுக இணைப்புச் சாலை திட்ட இயக்குனர் சுரேந்திரநாத், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழக முதுநிலை மேலாளர் ரங்கராஜன், தண்டையார்பேட்டை தாசில்தார் சத்யபிரகாஷ் உள்ளிட்டோர் முன்னின்று மேற்பார்வையிட்டனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறுவதைத் தவிர்க்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


காட்டுப்பள்ளி எல் அன் டி துறைமுகத்தை நிர்வகிக்கும் பணியில் அதானி குழுமம் 
சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்கத் திட்டம்

திருவொற்றியூர், அக்.4:எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி எல் அன் டி துறைமுகத்தை இயக்கி பராமரிக்கும் பணியை (Operation and Maintenance) குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அதானி குழுமம் (APSEZ-Adani Ports and Special Economic Zone) கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏற்றுள்ளது.
   தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் உதவியுடன் காட்டுப்பள்ளியில் எல் அன் டி மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) இணைந்து எல் அன் டி கப்பல் கட்டும் தளம் (L & T Shipbuilding Ltd) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு இதன் மூலம்  சுமார் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் பணி கடந்த 2009-ல் தொடங்கியது. இதனையடுத்து சுமார் 1,200 ஏக்கர் காலி நிலத்தை நீண்டகால குத்தகை அடிப்படையில் தமிழக அரசு இந்நிறுவனத்திற்கு வழங்கியது. கடந்த 2013-ஜனவரி மாதம் இத்துறைமுகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். 
    சரக்குப் பெட்டக முனையம், கப்பல் கட்டும் தளம், கடல்சார் கட்டுருவாக்கம் வசதி, துறைமுகத்திற்கான கிடங்குகள் ஆகிய நான்கு துணை நிறுவனங்கள் இத்துறைமுக வளாகத்தில் இயங்கி வருகின்றன. இதில் சரக்குப் பெட்டக முனையத்தை பிலிப்பைன்ஸ் நாட்டு நிறுவனம் இயக்கி வந்தது. ஆனால் போதுமான கப்பல்கள் வராதது, மற்றும் கப்பல்கள் வந்தால் அதற்கு தேவையான குறைந்தபட்ச சரக்குப் பெட்டகங்கள் கிடைக்கப் பெறாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் சரக்குப் பெட்டக முனையத்தை லாபகரமாகக் கையாள்வதில் கடந்த இரு ஆண்டுகளாக துறைமுக நிர்வாகம் போராடி வந்தது.
பங்குச் சந்தையில் தகவல்: 
    இந்நிலையில் இத்துறைமுகத்தை ஒட்டு மொத்தமாக முழுமையாக அதானி குழுமம் வாங்கவிருப்பதாக கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இதிலுள்ள சரக்குப் பெட்டக முனையத்தை மட்டும் இயக்கி பராமரிக்கும் பொறுப்பை ப்பை அதானி குழுமம் ஏற்றுள்ளதாக பம்பாய் பங்கு பரிவர்த்தனை மையத்தில் (BSE-Bombay Stock Exchange)-ல் கடந்த புதன்கிழமை உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட இதர துணை நிறுவனங்களை எல் அன் டி நிர்வாகமே தொடர்ந்து நிர்வாகிக்கும் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புதிய தலைமை நிர்வாக அதிகாரி சி.ஜே.ராவ்:
   இதனையடுத்து வெள்ளிக்கிழமை அதானி குழும இயக்குநர் (பெட்டகஉயர்மட்டக் குழு தலைவர் என்னரசு தலைமையில் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குச் சென்று எல் அன் டி அதிகாரிகளிடமிருந்து பொறுப்புகளை ஏற்றனர். மேலும் இம்முனையத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சி.ஜே.ராவ் நியமிக்கப்பட்டுள்ளதாக துறைமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. சி.ஜே.ராவ் சென்னைத் துறைமுகத்தின் துணைத் தலைவராகவும், தூத்துக்குடி, பாரதீப் துறைமுகத் தலைவராகவும் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவர். பின்னர் அதானி குழுமத்தில் இணைந்தார் சி.ஜே.ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு மாதத்திற்கு துறைமுகம் குறித்த முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு பிறகுதான் இரு நிறுவனங்களுக்கிடையேயான லாபப் பங்கீடு இறுதி செய்யப்படும் என இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்தியாவில் தடம் பதிக்கும் அதானி குழுமம்: 
  அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் கடந்த நிதியாண்டில் ஆண்டுக்கு சுமார் ரூ.650 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் முந்த்ரா துறைமுகம் ஆண்டுக்கு சுமார் 120 மில்லியன் சரக்குகளைக் கையாண்டு வருகிறது. இது தவிர ஹஜிரா, துனா டெக்ரா, டாம்ரா,
மர்முகோவா, விசாகபட்டணம் உள்ளிட்ட துறைமுகங்களில் உள்ள முனையங்களை
இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது. மேலும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் சரக்குப் பெட்டக முனையம் பணி தற்போது நடைபெற்று வருகிறது.  சமீபத்தில் கேரளாவில் ரூ.4 ஆயிரம் கோடியில் அமைய உள்ள விளிஞ்சியம் சர்வதேச துறைமுகத்தை அமைக்கும் பணியை அதானி குழுமம் ஏற்றுள்ள நிலையில்  காட்டுப்பள்ளி துறைமுகத்தை இக்குழுமம் ஏற்றுள்ளது. 
சர்வதேச கடல் வழிப் பாதை: 
        சர்வதேச கடல் வழிப் பாதை என்பது தென்னிந்தியாவை ஒட்டியே அமைந்துள்ளது. இதனால்தான் சிங்கப்பூர், கொழும்பு உள்ளிட்ட துறைமுகங்கள் சர்வதேச அளவில் பெரும் அளவிலான சரக்குகளைக் கையாளுகின்றன. எனவே தமிழகம் மற்றும் கேரளாவில் அதி நவீன முனையங்களை ஏற்படுத்தி நிர்வகிப்பதன் மூலம உலகின் பல்வேறு துறைமுகங்களிலிருந்து இந்தியாவிற்கு வரும் சரக்குப் பெட்டகங்களை நேரடியாகக் கையாள முடியும். இதன் மூலம் உலக அளவில் அதானி குழுமம் வளர்ச்சிய அடைய முடியும் என்பதால்தான் சமீபத்தில் தொடர்ந்து தென்னிந்திய துறைமுகங்களில் அதானி குழுமம் ஆர்வம் செலுத்தி வருவதாக இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருவொற்றியூர், எண்ணூரில் 1,466 குடும்பங்களுக்கு அரசு இலவச பட்டா 

அமைச்சர் பி.வி.ரமணா வழங்கினார்

திருவொற்றியூர், செப்.27:திருவொற்றியூர், எண்ணூரில் 1,466 குடும்பங்களுக்கு அரசு இலவச பட்டாவை பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா சனிக்கிழமை வழங்கினார்.
    திருவொற்றியூர் சாத்துமாநகர் பகுதியில் பல்வேறு நகர் பகுதிகள் உள்ளன. இங்குள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான பயன்பாடில்லாத நிலங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.இதேபோல் எண்ணூர் பகுதியில் மாநராட்சி முதலாவது வார்டு பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இதுவரை இவர்களுக்கு அரசு பட்டா வழங்கப்படவில்லை. இதே போல் திருவொற்றியூர் தொகுதியில்  சுமார் 65 ஆயிரம் குடும்பங்கள் பட்டா இன்றி வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனர் ஆண்டுகளாக அரசு பயன்பாடு இல்லாத நிலங்களில் வசித்து வந்தனர். 
    இக்குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு நிலவரித் திட்டத்தின் கீழ் இலவச பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டு கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கென சிறப்பு தாசில்தார் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இதுவரை சுமார் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. 
    இந்நிலையில் மேலும் 1,466 குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை திருவொற்றியூர், மற்றும் எண்ணூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையும், திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன் முன்னிலையும் வகித்தனர். இதில் கலந்து கொண்டு பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா திருவொற்றியூரில் 1006 பயனாளிகளுக்கும், எண்ணூரில் 460 பயனாளிகளுக்கும் அரசு பட்டாக்களை வழங்கினார். 
இதன் மொத்த பரப்பளவு சுமார் 32 ஏக்கர் எனவும், நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.282 கோடி எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 
     இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் ஆர்.டி.ஒ. வீரப்பன், மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் மு.தனரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. த.ஆறுமுகம், மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க முக்கிய  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.