Wednesday, 20 April 2016

தொகுதி அறிமுகம்:

திருவொற்றியூர் தொகுதி

தமிழக சட்டப்பேரவை தொகுதி வரிசை எண்:10
    
வரலாறு:
      திருவள்ளூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்டதாக இருந்தாலும் உள்ளாட்சி நிர்வாகத்தில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்துள்ள பகுதி திருவொற்றியூர் தொகுதி. வடசென்னையில் அமைந்துள்ள இத்தொகுதி 1967 முதல் இருந்து வருகிறது.  2011 தேர்தலுக்கு முன்பு வரை மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் தமிழகத்திலேயே மூன்றாவது இடத்தில் இருந்த திருவொற்றியூர்  கடந்த தொகுதி சீராய்வின் போது திருவொற்றியூரிலிருந்து மாதவரம் தொகுதி தனியாக பிரிக்கப்பட்டது. அன்றைய சென்னை பட்டினத்தை ஒட்டிய பழமையான கடலோர கிராமங்களில் திருவொற்றியூரும் ஒன்று. துறவி பட்டினத்தார் முக்தி அடைந்து ஜீவசமாதி அடைந்த இடமும் திருவொற்றியூர்தான்.   
     எண்ணூர் அனல் மின் நிலையம், அசோக் லேலண்டு, எண்ணூர் பவுண்டரீ, எம்ஆர்எப் டயர், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மெட்ராஸ் உர ஆலை, என்பீல்டு மோட்டார் சைக்கிள், கார்பொரெண்டம், டிபிஎல், எம்பிஎல், எவரெடி என ஏராளமான கனரக தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதி திருவொற்றியூர். மேலும் இத்தொகுதியில் அடங்கிய மணலியில் ஏராளமான ரசாயனத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. 
சிறப்புகள்:
    திருவொற்றிசுவரர் என அழைக்கப்படும் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடைம்மன் கோயில், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில், பட்டினத்தார் கோயில், அகத்தீஸ்வரர் கோயில், வடகுருஸ்தலம் என அழைக்கப்படும் தட்சணாமூர்த்தி கோயில் உள்ளிட்ட கோயில்கள் அடங்கிய ஆன்மீக நகரம் திருவொற்றியூர். தியாகராஜர் கோயில் தெப்பக் குளம் மற்றும் ஏராளமான மடங்கள் இங்கு அமைந்துள்ளன. இப்பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம் ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. பக்கிங்காம் கால்வாய் சென்னை மாநகரத்திற்குள் நுழைவது திருவொற்றியூர் தொகுதியில்தான்.
தொகுதியில் எல்லைகள், அடங்கியுள்ள பகுதிகள்:
     திருவொற்றியூர் தொகுதிக்கு கிழக்கே வங்கக் கடல், தெற்கே ஆர்.கே.நகர், வடக்கு மற்றும் மேற்கில் மாதவரம் தொகுதியுன் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கத்திவாக்கம் அடங்கிய திருவொற்றியூர் மண்டலம், சின்னச் சேக்காடு அடங்கிய மணலி மண்டலம் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. அடங்கியுள்ளன.
தற்போதைய வாக்காளர்கள்
          ஆண்         - 1,43,741
          பெண்         - 1,43,076
          திருநங்கை    -       66
      
  மொத்த வாக்காளர்கள் - 2,86,883

மொத்த வாக்குச் சாவடிகள்  : 292

தொகுதியில் வென்றவர்கள்:

 1967  அ.பொ.அரசு              - திமுக
 1971  மா.வெ.நாராயணசாமி    - திமுக
 1977  பொ.சிகாமணி            - அதிமுக
 1980   குமரிஅனந்தன்           - காந்தி காமராஜ் காங்கிரஸ்
 1984   ஜி.கே.ஜே.பாரதி        - இந்திய தேசிய காங்கிரஸ்
 1989   டி.கே.பழனிசாமி        - திமுக
 1991   கே.குப்பன்              - அதிமுக
 1996   டி.சி.விஜயன்           - திமுக
 2001   த.ஆறுமுகம்            - அதிமுக
 2006   கே.பி.பி.சாமி           - திமுக
 2011   கே.குப்பன்              - அதிமுக


தேர்தல் நடத்தும் அலுவலர்/தொடர்பு எண்
                           ஏ.சிகாமணி @ பாபு
           சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர்
            தொலைபேசி எண்: 044-25993494  செல்லிடபேசி எண்: 94451-90001
அரசியல் பயணத்தில் தொடர் குழப்பம்: தத்தளிக்கும் த.மா.கா.
    
   தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இணையத் தளத்தை திறந்தால் புதிய நம்பிக்கை, வளர்ச்சியை நோக்கிய பாதை என்பதுதான் முதலில் ஒளிருகிறது. இதன் தலைவர் ஜி.கே.வாசன் இரண்டு கட்டை விரல்களையும் முன்னோக்கிச் சவால் விடும் படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் முக்கிய கட்சிகளெல்லாம் கூட்டணியைத் தேர்வு செய்து வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கியுள்ள நிலையில் த.மா.கா மட்டும் இன்னும் எந்தக் கூட்டணியில் சேர்வது என்றே தடுமாறி நிற்கிறது. காரணம் என்ன? 
    1996-ம் ஆண்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரக்கூடாது என ஜி.கே.மூப்பனார் தலைமையில் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் தலைமை இதனை ஏற்க மறுத்து கூட்டணி அமைத்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உதயமானது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற முழக்கம் தமாகாவின் கொள்கையாக அறிவிக்கப்பட்டதுு. மேலும் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து த.மா.கா. 40 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு 39 தொகுதிகளில் வென்றது. இதேபோல் போட்டியிட்ட 20 மக்களவைத் தொகுதிகளையும் த.மா.கா வென்றது. இதனையடுத்து தி.மு.க., அ.தி.மு.க.,விற்கு அடுத்து பெரிய சக்தியாக த.மா.கா உருவெடுத்தது.
2001-ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க. சேர முடிவெடுத்ததையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது த.மா.கா. அப்போது கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார். இதுவரை த.மா.கா.வலுவாக இருந்து வந்தது.
மூப்பனார் மறைவு: த.மா.கா. இணைப்பு
     இந்நிலையில் ஆக.2001-ல் த.மா.க. நிறுவனர் ஜி.கே.மூப்பனார் மறைந்ததையடுத்து த.மா.கா.வின் எதிர்காலம் கேள்விக் குறியான நிலையில்
முக்கியத் தலைவர்கள் ஆலோசனையின் பேரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜி.கே.வாசன் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கட்சியைத் தொடர்ந்து வழி நடத்துவதில் வாசனுக்கு விருப்பம் இல்லாத நிலையில் தலைவராகப் பொறுப்பேற்ற பதினோறே மாதங்களில் த.மா.கா.வை தாய்க் கட்சியான காங்கிரஸ் கட்சியோடு இணைத்தார் வாசன். இதனையடுத்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராகவும் பொறுப்பேற்றார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட வாசன் புள்ளிவிபரங்கள் துறை, திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த முறை கப்பல் போக்குவரத்துத் துறை கேபினட் அமைச்சராக ஐந்தாண்டுகள் பதவி வகித்தார் வாசன்.
மீண்டும் த.மா.கா. உதயம்:
     தமாகா இணைக்கப்பட்டுவிட்டாலும் தமிழக காங்கிரஸ் கட்சியில் தனி அணியாகவே தமாகாவினர் செயல்பட்டு வந்தனர். முன்னாள் தமாகாவினரல்லாதவர் மாநில, மாவட்டத் தலைவராக இருந்தாலும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. மேலும் 
வாசனும் மத்திய தலைமையுடன் தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் பதவிகளைப் பெறுவதற்காகவே வலியுறுத்தி வந்தார். இது காங்கிரஸ் தலைமையை எரிச்சலூட்டத் தொடங்கியது. குறிப்பாக கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட பின்னர் வாசனை புறக்கணிப்பதில் வெளிப்படையாகவே நடந்து கொண்டார். இதனை வாசன் பொறுத்துக் கொண்டே வந்தாலும் அவரது ஆதரவாளர்கள் 
மீண்டும் தமாகாவை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியே வந்தனர். இருப்பினும் வாசன் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை, காவிரி நீர் பிரச்னை உள்ளிட்டவைகளில் தன்னிச்சையாகவே கருத்துக்களை தெரிவித்து வந்தார் வாசன்.
தொடங்கியதில் தொடங்கிய சறுக்கல்:
       காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு தமிழகத்தில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு இருந்து வந்த நிலையில் அமைச்சரவையில் தொடர்ந்த வாசன் ஆட்சியை இழந்த பிறகு 
கடந்த செப்.2014-ம் ஆண்டு திருச்சியில் தமாகாவை மீண்டும் தொடங்கினார். 
இங்குதான் வாசனின் அரசியல் அனுபவமின்மை வெளிப்படத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும்போதே  எதிர்ப்பை தெரிவித்து மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே வாசன் வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் 
காங்கிரஸ் கட்சியோடு வாசனும் தமிழக மக்களால் துடைத்தெறியப்பட்ட பின்னர் 
அதிகார பலம் இழந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியது முதல் சறுக்கல்.
தொண்டர்களின் பலத்த கரகோசத்திற்கிடையே பேச்சைத் தொடங்கிய ஜி.கே.வாசன் புதிய தமாகாவின் பாதை காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை ஒட்டியே இருக்கும். 
காங்கிரஸ் தலைவர்களையோ, காங்கிரஸ் கட்சியையோ தமாகா ஒருபோதும் விமர்சிக்காது. மேலும் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்களை சொந்தம் கொண்டாட மாட்டோம் எனப் பேசியது வந்திருந்த தொண்டர்களை சோர்வடையச் செய்தது. 
பிறகு எதற்கு புதிய கட்சி. இது வாசனின் இரண்டாவது சறுக்கல். 
அ.தி.மு.க. கூட்டணி கனவு, மழுப்பலான பதில்கள்:
     இதன்பிறகும் கட்சியினரை ஈர்க்கும் வகையில் வாசன் செல்படவில்லை. கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் பிடியிலிருந்து வெளியேற முடியாத வாசன் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அதிமுக கூட்டணிக்கு அடிப்போட்டார். ஜெயலலிதாவின் எவ்வித உத்தரவாதமும் இன்றி தொடர்ந்து அதிமுக கூட்டணி 
கட்சியினரை நம்ப வைத்தது மூன்றாவது சறுக்கல். இவரது தந்தை மூப்பனாரோ 1996-ல் தி.மு.கவிடம் கூட்டணி பேசி முடித்துவிட்டுத்தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார்.  ஒரே வாரத்தில் கட்சியைப் பதிவு செய்து சைக்கிள் சின்னத்தையும் 
கைப்பற்றினார் மூப்பனார்.  ஆனால் ஜி.கே.வாசனோ கட்சி ஆரம்பித்து கடந்த ஒன்றறை ஆண்டுகளான நிலையில் கூட்டணி குறித்தும் முடிவெடுக்க முடியவில்லை. 
சைக்கிள் சின்னத்தையும் பெற முடியவில்லை. பல மாதங்களாக பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து பேட்டியளிக்கும் ஒரே தலைவர் வாசன்தான். ஆனால் அவர் எந்தக் கேள்விக்கும் வெளிப்படையாகப் பதில் அளிக்கமாட்டார். இதனால் 
குழப்பம் அடைந்தது பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல. கட்சியினரும், பொதுஜனங்களும்தான். இன்றுவரை இந்த நடை மாறவில்லை... எங்கோ சென்றிருக்க வேண்டிய கட்சி.... இன்று கேள்விக்குறியில்... புதிய நம்பிக்கை...
வளர்ச்சிக்கான புதிய பாதை.... வெறும் இணையத் தளத்தில் மட்டுமே ஒளிர்கிறதோ?.....

Tuesday, 5 April 2016

வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியதில் திருவொற்றியூர் தொகுதி முன்னிலை

கே.குப்பன் எம்.எல்.ஏ

திருவொற்றியூர், ஏப்.3:கடந்த ஐந்து ஆண்டுகளில் திருவொற்றியூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம்  வளர்ச்சி பெற்ற தொகுதிகளில் ஒன்றாகத் திருவொற்றியூர் முன்னேறியுள்ளது என திருவொற்றியூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் தெரிவித்துள்ளார்.
   கடந்த 2011 சட்டப் பேரவை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் கே.குப்பன். 1991-ல் இதே தொகுதியில் வெற்றிபெற்றவர் இவர். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து கே.குப்பன் எம்.எல்.ஏ கூறியது,
   தேர்தலில் வெற்றி பெற்றவுடன் திருவொற்றியூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என உறுதி அளித்திருந்தேன். இதில் 90 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
    திருவொற்றியூரில் அரசு கலைக் கல்லூரி புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து பிரிந்து திருவொற்றியூரில் புதிய தாலுகா செயல்பட்டு வருகிறது. திருவொற்றியூர் நெடுஞ்சாலை 65 அடி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  
சுமார் ரூ.63 கோடி செலவில் கடலரிப்புத் தடுப்புச் சுவர், தூண்டில் வளைவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருச்சினாங்குப்பத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 492 மீனவ குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் கட்டப்பட்டு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. சுனாமி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் எர்ணாவூரில் 139 கோடி செலவில் சுமார் 3,600 அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.   ரூ.88 கோடியில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வீடுதோறும் குடிநீர் விநியோகம் சீராகியுள்ளது. சுமார் ரூ.162 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அன்னை சிவகாமி நகர், கத்திவாக்கம், சின்னச் சேக்காடு, மணலி உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.33 கோடியில் மணலி, சின்னச் சேக்காடு சிறப்புக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 
13,650 பேருக்கு மனைப்பட்டா:
  அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த இரண்டு சிறப்பு தாசில்தார் நியமனம் செய்யப்பட்டு திருவொற்றியூரில் சுமார் 8 ஆயிரம், கத்திவாக்கத்தில் 3 ஆயிரம், மணலியில் 2 ஆயிரம், சின்னச் சேக்காட்டில் 650 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன. திருவொற்றியூர் மண்டலத்தில் மட்டும் சுமார் 1,350 தெருக்கள், சாலைகள் உள்ளன. இதில் ஒருசிலவற்றைத் தவிர அனைத்து சாலைகளும் மாநகராட்சி சார்பில் போடப்பட்டுள்ளன. இதில் 360 சாலைகள் கான்கிரீட் சாாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. திருவொற்றியூர், மணலி மண்டலங்களில்  17 ஆயிரம் நவீன மின்விளக்குகள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. எழில் மிகுந்த பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
75 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம்:
    திருவொற்றியூர் தியாகராஜர் சன்னதிக்கு புதிய தேர் அமைக்கப்பட்டு 75 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் சமீபத்தில் நடைபெற்றது. மேலும் தியாகராஜர் திருக்கோயில், பட்டினத்தார் கோயில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. காலடிப்பேட்டை கல்யாண வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. 
    இத்தொகுதியில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 3 ஆயிரம் பேருக்கும், இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 6 ஆயிரம் பேரும் பயனடைந்துள்ளனர். 92 ஆயிரம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 65 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன. 
மின் திட்டங்கள்: 
     எண்ணூர் அனல் மின் நிலையத்தில் சுமார் ரூ.9,800 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய அலகுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இப்பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும், நேரடி வேலை வாய்ப்பும் உருவாகும். ரூ.22 கோடி செலவில் எர்ணாவூர், மணலி, சாத்துமாநகர் ஆகிய 3 இடங்களில் துணை மின் நிலையங்கள் ஏற்படுத்தப்படுள்ளன. மேலும் மணலியில் ரூ.325 கோடி செலவில் 
420 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் குப்பன்.
நிறைவேறாத, கிடப்பில் உள்ள திட்டங்கள்:
இந்நிலையில் நீண்டகால கிடப்பில் உள்ள திட்டங்கள் குறித்து தொகுதி மக்கள் கூறியது, 
    10 ஆண்டுகளைக் கடந்தும் திருவொற்றியூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. இன்னும் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படவில்லை. திருவொற்றியூர் ரயில்வே மேம்பாலம் ஆண்டுக் கணக்கில் நடைபெற்று வருகிறது. விம்கோ நகர் விளையாட்டு மைதானம் இன்னும் மீ்ட்கப்படாமல் உள்ளது. எண்ணூர், விம்கோ நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் நவீன மீன் மார்கெட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. வீட்டு வசதி கோரி 20 ஆண்டுகளாக போராடி வரும் சலவைத் தொழிலாளர்களின் கோரிக்கை இன்னும் முடிந்தபாடில்லை. மீன்பிடித் துறைமுகக் கோரிக்கை, எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் அனல் மின் நிலையங்களால் தொடரும் சுற்றுச் சூழல் பிரச்னை, ராஜீவ்காந்தி நகர்  
ரயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கே.குப்பன் எம்.எல்.ஏ. பதில்:
    இத்திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படவில்லை. அதே நேரம் இவற்றைச் செயல்படுத்தும் வகையில் பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீன்பிடித் துறைமுகம் அமைப்பது குறித்து ரூ.1.40 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அனல் மின் நிலையங்களால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு குறித்தும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விம்கோ விளையாட்டுத் திடலில் 
மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது என்றார் குப்பன். 

டிஜிட்டல் மயமாகும் சுங்கத் துறை: ஏப்ரல் 1 முதல் புதிய நடைமுறை 

ஒற்றைச் சாளர முறையில் ஏற்றுமதி, இறக்குமதி ஆவண பரிவர்த்தனை

முறைகேடுகள், காலதாமதங்கள் குறையும்


திருவொற்றியூர், மார்ச் 30:ஏற்றுமதி, இறக்குமதிக்கான சுங்கத்துறை ஆவணப் பரிசோதனையில் ஒற்றைச் சாளர முறை ஏப்ரல் முதல் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியில் தேவையற்ற காலதாமதம், முறைகேடுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
   தற்போது ஏற்றுமதி செய்ய வேண்டும் எனி்ல் சுங்கத்துறையில் ஷிப்பில் பில் (Shipping Bill), இறக்குமதி செய்ய வேண்டும் எனில் பில் ஆப் என்ட்ரி (Bill of Entry)என்ற ஆவண பரிவர்த்தனை நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்த ஆவணங்களை ICEGATE.gov.in என்ற இணையத்தளம் மூலம் சுங்கத்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்வார்கள். பின்னர் சுங்கக் கட்டணம் செலுத்திய பிறகு சரக்குகளை நேரடியாகப் பார்வையிட்டு கள ஆய்வு செய்வார்கள். பின்னர் இறக்குமதியாளர் அல்லது அவரது அனுமதி பெற்ற முகவர்கள் மூலம் சரக்குகள் விடுவிக்கப்படும். ஏற்றுமதியிலும் மதிப்பீடு, கள ஆய்வுக்குக் பிறகு கண்டெய்னர்களில் சரக்குகளை ஏற்றி மூடி முத்திரையிட்டு பின்னர் துறைமுகங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இதற்கிடையே பெரும்பாலான சரக்குகளுக்கு சுங்கத் துறை அல்லாமல் பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ்கள் (NOC-No Objection Certificates) பெறப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. 
44 வகையான தடையில்லாச் சான்றிதழ்கள்: 
    இச்சான்றிதழ்கள் அனைத்தும் பன்னாட்டு ஒப்பந்த நடைமுறைகளின் அடிப்படையில் 
வழங்கப்படுகின்றன. உதாரணமாக வெளிநாடுகளிலிருந்து விவசாய விளைபொருள்கள், மரங்கள் உள்ளிட்டவைகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனில் அதில் வெளிநாடுகளிலிருந்து பூச்சி, நோய்க் காரணிகள் ஏதும் இந்தியாவில் ஊடுருவாமல் இருக்க தாவர பூச்சிக் கட்டுப்பாட்டுத் துறையின் (Plant Quarantine) தடையில்லாச் சான்று அவசியமானது. இதேபோல் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டும் எனில் இந்திய உணவு பாதுகாப்புத் தரச் சான்று ஆணையத்தின் (FSSAI-Food Safety Standards Authority of India) தடையில்லாச் சான்றும் பெறப்பட வேண்டும். இதுபோல 44 துறைகளின் தடையில்லாச் சான்றுகள் வழங்கப்படுகின்றன. தற்போது 
சுங்கத் துறை ஆவண பரிவர்த்தனைகள் முடிந்துவிட்டாலும் இத்துறைகளில் தடையில்லாச் சான்றுகளைப் பெற தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்தத் 
துறை அதிகாரிகள் சரக்குகளை நேரில் சென்று ஆய்வு செய்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் தடையில்லாச் சான்று அளிப்பார்கள். இச்சான்றுகளை முகவர்கள் சுங்கத்துறையில் ஒப்படைத்த பிறகு சரக்குகள் விடுவிக்கப்படும்.
ஒற்றைச்சாளர முறை அறிமுகம்:
      இதில் சரக்குகளை விடுவிக்க சுமார் 3 முதல் 15 நாள்கள்வரைகூட காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனைத் தவிர்க்க அனைத்து ஆவணங்களையும், ஒருங்கிணைக்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்தை (Integrated Declaration) இறக்குமதியாளர்கள் அல்லது முகவர்கள் சுங்கத்துறையில் சமர்ப்பித்தால் போதுமானது. சுங்கத்துறை மதிப்பீட்டிற்குப் பிறகு தடையில்லாச் சான்றுகளைப் பெற தொடர்புடைய துறைக்கு சுங்கத்துறையே அனுப்பி வைக்கும். பிறகு அந்தந்தத் துறைகளிலிருந்து சரக்குகளை ஆய்வு செய்தபிறகு தடையில்லாச் சான்றுகள் 
சுங்கத்துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். முதல் கட்டமாக தாவர நோய்த் தடுப்பு, உணவுப் பாதுகாப்பு, விலங்குகள் நோய்த் தடுப்பு, அரிய வகை விலங்கினங்கள் பாதுகாப்பு, மருந்துக் கட்டுபாட்டுத் துறை உள்ளிட்ட ஐந்து துறைகளில் இத்திட்டம் அமலாக உள்ளது.  ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள இந்த ஒற்றைச் சாளர முறையால் தேவையற்ற காலதாமதம், முறைகேடுகள் தவிர்க்கப்படும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். 
வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்படும்: 
 இத்திட்டம் குறித்து மத்திய சுங்கம் மற்றும் ஆயத்தீர்வை வாரிய இணை ஆணையர் (ஒற்றைச்சாளர முறை திட்டம்) ராஜேந்திர மீனா கூறியது,
    இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் இறக்குமதியாளர்கள் தடையில்லாச் சான்றுகளைப் பல துறைகளை நோக்கி அலைய வேண்டிய அவசியம் இல்லை. சுங்கத் துறையுடன் அனைத்து துறைகளுக்கும் தகவல் அனுப்ப சிறப்பு தொகுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது முக்கிய துறைகளில் அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் படிப்படியாக அனைத்து துறைகளுக்கும் விரிவு படுத்தப்படும். மேலும் இத்திட்டம் மூலம் ஏற்றுமதி இறக்குமதி ஆவண பரிசோதனையில் வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்படும். மேலும் சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆவணங்களும்  மின்னணு ஆவணமாக (Digital Documents) செயல்வடிவம் பெறும். இதன்மூலம் சுங்கத்துறை படிப்படியாக முழுமையான டிஜிட்டல் பயன்பாட்டுக்கு மாற்றம் பெறும். ஒற்றைச் சாளர முறையை வெற்றியடைச் செய்ய அதிகாரிகள், இறக்குமதியாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பது அவசியமானது என்றார் ராஜேந்திர மீனா.
கால அவகாசம் தேவை: முகவர்கள் கோரிக்கை
இது குறித்து சென்னை சுங்க இல்ல முகவர்கள் சங்கத்தின் தலைவர் நடராஜன், செயலாளர் கே.வி.வி.கிரி ஆகியோர் கூறியது,
    கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்புதான் இது ஏப்ரல் முதல் தேதி முதல் அமலுக்கு 
வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்றுமதியாளர்கள், முகவர்கள், ஊழியர்கள் அறிந்து கொள்ள கால அவகாசம் தேவை. மேலும் சுமார் 40-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களைப் பெற அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். தற்போதைய முறையில் காலதாமதம் குறித்தோ அல்லது வேறு காரணங்கள் குறித்தோ சுங்கத் துறையால் இதர துறைகளைக் கேள்வி எழுப்ப முடியாது. எனவே இத்திட்டத்தை சிறப்பாக அமல்படுத்த வேண்டும் எனில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து குறை தீர்க்கும் அதிகாரி (Nodal Officer) ஒவ்வொரு அலுவலகத்திலும் 24 மணி நேரமும் இருக்க வேண்டும். இந்த அதிகாரிக்கு அனைத்து துறைகளையும் கண்காணிக்கவும், தவறுகளைச் சரிசெய்யவும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது ஐந்து துறைகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அனைத்து துறைகளையும் இந்த ஒற்றச் சாளரமுறையில் இணைக்க வேண்டும் என்றனர்.