Wednesday, 24 July 2013

கழிவுநீர், குப்பைக் கழிவுளால் நாசமாகும் வடசென்னை கடற்கரை மாநகராட்சி நிர்வாகம் சிறப்புக் கவனம் செலுத்துமா?

முகவை.க.சிவகுமார்,
திருவொற்றியூர்:

வடசென்னையில் காசிமேடு முதல் எண்ணூர்வரை உள்ள நீண்ட கடற்கரை பகுதி கழிவு நீர் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றுச் சூழல் சீர்கேடு அடைந்து வருகிறது.
முன்பு கடற்கரை கிராமங்களாக இருந்த  மைலாப்பூர், திருவல்லிக்கேணி, சென்னை பட்டணம், ராயபுரம், வண்ணையம்பதி, திருவொற்றியூர் உள்ளிட்டவைதான் முதலில் சென்னை மாநகரம் தோன்ற காரணமாக அமைந்தது என்பது வரலாற்று உண்மை.
சிறு படகுத் துறையாக இருந்த மெரினா இன்று ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.  லட்சக் கணக்கான மக்கள் காற்று வாங்கும் இடமாக மெரினா உள்ளது.  மெரினா, பெசன்ட் நகர், பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிகளை பராமரிக்க, அழகுபடுத்த என சென்னை மாநகராட்சி ஆண்டு தோரும் கணிசமான தொகையைச் செலவு செய்கிறது. இதேபோல்  வடசென்னை கடற்கரையை பராமரிப்பதிலும் போதுமான கவனம் செலுத்த வேணடும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கடலரிப்பில் காணாமல் போன கோயில்:
   காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மணல் நிறைந்த அழகிய கடற்கரைகள் முன்பு இருந்தன. மேலும் காசி விசுவநாதர் கோயில், பட்டினத்தார் கோயில், அகத்தியர் கோயில், ராமலிங்கர்மடம் என வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களும், அகலமான மணற்பரப்பும், மரங்கள் அடங்கிய தோப்புகளும் இக்கடற்கரைக்கு முன்பு அழகு சேர்த்தன. ஆனால் இப்பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட கடலரிப்பால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு நிலம் கடலால் காவு கொள்ளப்பட்டு விட்டது. இதில் காசி விசுவநாதர் கோவில் போன்றவைகளும் கடலில் கரைந்துவிட்டன. இந்நிலையில் மீதி உள்ள பகுதியும் தற்போது குப்பை, கழிவுகள்  கொட்டப்படும் இடங்களாக மாறி வருவது இப்பகுதி மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.  
கடலில் கலக்கும் ரசாயனக் கழிவுகள்:
   மணலி,எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட ரசாயனத் தொழிற்சாலைகள் உள்ளன. இவைகளிலிருந்து வெளியேற்றப்படும் ஆலைக் கழிவு நீர் வடசென்னை கடற்கரை பகுதியில்தான் கடலில் விடப்படுகின்றன.  இங்குள்ள இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களின் முக்கிய தொழிலே மீன் பிடிப்பதுதான். கடலில் தொடர்ந்து கலந்து வரும் ரசாயன கழிவுகளால் இப்பகுதியில் மீன்வளம் பெருமளவு குறைந்துபோய்விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடற்கரையில் கொட்டப்படும் குப்பைகள்:
    சென்னை மாநகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகள் இதற்கென உள்ள வளாகங்களில்தான் பெரும்பாலும் கொட்டப்படுகின்றன. ஆனால் வியாபார நிறுவனங்கள் நிறுவனங்கள் மற்றும் மாவு மில்கள் போன்றவற்றில் வெளியேற்றப்படும் குப்பைகள் எண்ணூர் விரைவு சாலையில் சுங்கச் சாவடி கடற்கரை பகுதி அருகே தொடர்ந்து கொட்டப்படுகின்றன. இதில் இரவு நேரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகள் அப்போதே தீவைக்கப்படுகின்றன. சுங்கச் சாவடியில்  புறக்காவல் நிலையம் இருந்தும் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுபவர்களைத் தடுப்பது எங்கள் வேலை அல்ல என்பது போல் உள்ளனர்.  
சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் வாரியம்:
 
  திருவொற்றியூர் மண்டலத்தில் 14 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை வசதி இல்லை. இப்பகுதியில்  சென்னைக் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுமார் ரூ.110 கோடி மதிப்பீட்டிலான பாதாளச் சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகளும் சுமார் 7 ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெற்று வருகின்றன. பாதாளச் சாக்கடை வசதியில்லாத இப்பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீர் முறைப்படி கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுக்குத்தான் எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் போதுமான கழிவு நீர் லாரிகள் இல்லாததால், அதிக நடை செல்ல வேண்டும் என்கிற கட்டாயத்தில் அகற்றப்படும் கழிவு நீர் அனைத்தும் அருகில் உள்ள கடற்கரை பகுதியில்தான் கொட்டுகின்றனர். மேலும் பாதாளச் சாக்கடையில் தேங்கும் கழிவுகளையும் கடற்கரையில்தான் குடிநீர் வாரியம் கொட்டுகிறது.
சிறப்புத் திட்டம் வேண்டும்:
   இப்பிரச்னை குறித்து  திருவொற்றியூரைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள் கோட்டீசுவரன், சுப்பிரமணி ஆகியோர்  கூறியது,
    கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்ட பிறகு கடற்கரை நெடுகிலும் மணல் குவிந்துள்ளது. துறைமுக இணைப்பு சாலைகள் (EMRIP) திட்டத்தின் கீழ் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது. ஆனாலும்  இங்கு தொடர்ந்து குப்பைகள்,  கழிவுநீர், ரசாயனக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் இப்பகுதி தொடர்ந்து மாசடைந்து வருகிறது. கடலோரப் பகுதிகளில்  சிறிய கட்டங்கள், பொதுக் கழிப்பிடங்கள் கட்டுவதற்குக் கூட எதிர்ப்பு தெரிவிக்கும் கடலோர மண்டல மேலாண்மை குழுமம் (COASTAL ZONE MANAGEMENT AUTHORITY) கூட இது போன்ற சீர்கேடுகளைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. சுமார் 20 லட்சம் பேர் வசிக்கும்  வடசென்னையில் எவ்வித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லை. எனவே வட சென்னை கடற்கரை பகுதியை அழகுபடுத்துவது குறித்து ஆய்வு செய்து ஒரு சிறப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவிக்க வேண்டும் என்றனர். 
    மொத்தத்தில் தென் சென்னைக்கு நிகராக வடசென்னையும் வளம் பெறுமா?. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துமா? வடசென்னை மக்கள் பிரதிநிதிகள் முன்முயற்சி எடுப்பார்களா? இவைகளே இப்பகுதி மக்களின் பொதுவான கேள்விகளாக உள்ளன

No comments:

Post a Comment