Wednesday, 24 July 2013

இரண்டுமுறை திறப்பு விழா கண்டும் செயல்படாத திருவொற்றியூர் எரிவாயு தகன மேடை

-பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி துரித நடவடிக்கை தேவை

திருவொற்றியூர்:
சென்னை மாநகராட்சியால்  சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட திருவொற்றியூர் எரிவாயு தகன மேடை மயான ஊழியர்களின் எதிர்ப்பால் செயல்படாமல் முடங்கியுள்ளது. 
    திருவொற்றியூர் மயானம் புதர் மண்டி கிடந்ததையடுத்து இதனை சீரமைத்து நவீனப்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து  இம்மயானத்தில் எரிவாயு தகன மேடை கூடிய மயானமாக மாற்றியமைக்க முடிவு செய்த நகராட்சி நிர்வாகம் ரூ. 1.10 கோடி செலவில் அமரர் பூங்கா, இறுதிச் சடங்கு மண்டபம்,  தகன மேடை ஆகியவற்றுடன் நவீன மயானத்தைக் கட்டி முடித்தது. 
இதனை கடந்த பிப்.27, 2011-ல் அப்போதையை மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி இதனைத் திறந்து வைத்தார். மேலும் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்) சார்பில் ரூ.9.50 செலவில் அமரர் ஊர்தியும் ஒன்றையும் இலவசமாக வழங்கியது. எரிவாயு தகன மேடையை இயக்கும் பொறுப்பு பட்டினத்த சமூக சேவை மையத்திடம் அளிக்கப்பட்டது.  
மயான ஊழியர்கள் எதிர்ப்பு
    சில நாள்கள் மட்டும் எரிவாயு தகன மேடை செயல்பட்டு வந்த நிலையில் இம்மயானத்தில் ஏற்கனவே பணி செய்து வந்த மயான ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக உத்தரவிட்டால் மட்டுமே மயானத்தை இயக்க ஒத்துழைப்பு கொடுப்போம் என இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேவை மைய நிர்வாகிகளையும் விரட்டியடித்தனர். இக்கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம். ஆனால் உடனே முடியாது அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை மயான ஊழியர்கள் ஏற்க மறுத்தனர்.இந்நிலையில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டதில் தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளதாகக் தகன மேடை  மூடப்பட்டது.     
   இதனையடுத்து பழைய எரிமேடையிலேயே விறகு, சாண இராட்டை போன்றவைகளைக் கொண்டு சடலங்கள் எரிக்கும் பணி தொடங்கியது.   சடலங்கள் எரியூட்டப்படும்போது பரவும் துர்நாற்றம் மிகுந்த புகையால்  இப்பகுதி மக்கள் மீண்டும் அவதிக்குள்ளாயினர்.  மேலும் ஒரு சடலத்தை எரிக்க ரூ.5 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை மயான ஊழியர்களால் வசூலிக்கப்பட்டது.  இந்நிலையில் திருவொற்றியூர் நகராட்சி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு மயானமும் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 
மேயர் ஆய்வு: 
     இதனையடுத்து எரிவாயு தகன மேடையை சீரமைத்து இயக்க வேண்டும் என பல்வேறு பொதுநல அமைப்புகளும் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தன.  இது குறித்து 'தினமணி'யில் செப். 21,  2012-ல் விரிவாக செய்தியும் வெளியிடப்பட்டது.   இதனையடுத்து மேயர் சைதை எஸ்.துரைசாமி, சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன்,  மண்டலக் குழு தலைவர் மு.தனரமேஷ் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.  பின்னர் எரிவாயு தகன மேடையை விரைவில் இயக்குவதற்கான பணிகளை உடனடியாகச் செய்யும்படி அதிகாரிகளுக்கு மேயர் துரைசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த ஆறு மாதங்களாக சீரமைக்கும் பணியும், மயான ஊழியர்களை சமாதானப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வந்தன. 
மீண்டும் திறப்பு விழா:
     இதனையடுத்து எரிவாயு தகனமேடையுடன் கூடிய மயானம் புதுப் பொலிவு பெற்றது. மேலும் மயானத்தின் அருகிலேயே உயர் கோபுர மின் விளக்கும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன்,17 அன்று திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேயர் சைதை எஸ்.துரைசாமி சீரமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடையை திறந்து வைத்தார். மேலும் சடலத்தை எரிக்கும் செலவை மாநகராட்சியே ஏற்கும். உறவினர்கள் ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை என அறிவித்தார்.  ஆனால் திறப்பு விழாக் கண்டு ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் தகன மேடையில் ஒரு சடலம் கூட எரிக்கப்படவில்லை. 

கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற முடியாது:

இது குறித்து மண்டலக் குழு தலைவர் மு.தனரமேஷ் கூறியது,
     மயான பணியாளர்களை மாநகராட்சி ஊழியர்களாக பணிவரன்முறைப்படுத்தும் கோரிக்கை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதி மயான பணியாளர்களுக்கும் பொதுவானது.  எனவே இதில் உடனடியாக முடிவெடுக்க முடியாது. இவர்கள் இல்லாமலேயே புதிய எரிவாயு தகன மேடையை இயக்க முடியும் என்றாலும் இறுதி அடக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்டும் சாஸ்திர, சம்பிரதாயங்களை செய்ய மயான பணியாளர்கள் தேவை.  ஏற்கனவே செய்து வந்த பணியாளர்கள் 11 பேரும் இதனைச் செய்ய மறுக்கும் நிலையில் புதிய பணியாளர்களையும் அச்சுறுத்துகின்றனர். எனினும் மாற்று ஏற்பாடுச் செய்து உடனடியாக மயானத்தை இயக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றார் தனரமேஷ்.
   சென்னை மாகராட்சியின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே உள்ள மயானங்களில் உள்ள பணியாளர்கள் எல்லாம் நிரந்தர ஊழியர்களாக இருக்கும் போது திருவொற்றியூர் மயான பணியாளர்களின் கோரிக்கை நியாயமானதாகவே தெரிகிறது. எது எப்படி இருப்பினும் ஒன்று அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிட்டு மயானத்தை திறந்திருக்க வேண்டும். திறந்து வைத்துவிட்டால் பொதுமக்களின் நலன் கருதி பிரச்னைகளைச் சமாளித்து மயானத்தை செயல்படுத்த முனைய வேண்டும். இதுவே இந்த விசயத்தில் பெரும்பாலோரின் கருத்தாக உள்ளது. 

No comments:

Post a Comment