Monday, 29 October 2012

கடலில் ஒரு நாள் நிகழ்ச்சி: போர்க் கப்பல்களில் கடற்படையினர் சாகசம்




திருவொற்றியூர், அக்.27.:இந்திய கடற்படையின் கிழக்கு மண்டலம் சார்பில் 'கடலில் ஒரு நாள்'  நிகழ்ச்சி சென்னைக்கு அருகே நடுக்கடலில் சனிக்கிழமை நடைபெற்றது.  இதில் 6 போர்க்கப்பல்கள் அணிவகுத்தன. இதில் பங்கேற்ற கடற்படை வீரர்கள் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர்.
                 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் பங்கேற்ற இந்திய கடற்படை படகுகளில் சென்று கராச்சி துறைமுகத்தைக் கைப்பற்றி வெற்றி கொண்டது.  இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் இந்த வெற்றி யை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதி கடற்படை தினம் கொ்ண்டாடப்பட்டு வருகிறது.
 இதேபோல் இந்த ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.  இதில் முதல் நிகழ்ச்சியாக 'கடலில் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.   சென்னைக்கு அருகே நடுக்கடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  ஏவுகனைகளை ஏவும் வசதிகள் கொண்ட ஆயுதம் தாங்கிய கப்பல்கள் உள்ளிட்ட ஜலஸ்வா, ரானா, ரன்விஜய், கிர்பான், குலிஸ் மற்றும் கிர்ச் ஆகிய 6 கப்பல்கள் கலந்து கொண்டன.
           நடுக்கடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கடலில் தத்தளிப்போரைக் காப்பாற்றுவது,  போரின்போது
ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு பொருள்களை பரிமாற்றம் செய்வது, ஹெலிகாப்டரில் ரோந்து செல்வது, துப்பாக்கியால் சுடுவது போன்ற பல்வேறு சாகசங்களை கடற்படை வீரர்கள் செய்து காட்டினர்.  மேலும் நிகழ்ச்சியின்போது தமிழ்நாடு பாய்மரப் படகு சங்க செயலாளர் சாந்தா கலந்து கொண்டு ஜலஸ்வா என்ற கப்பலில் இருந்து கயிறு மூலம் அடுத்த கப்பலுக்குச் சென்று திரும்பினார். இதனை கடற்படை வீரர்களின் குடும்பத்தினர், இதர ராணுவப் பிரிவு அதிகாரிகள், தேசிய மாணவர் படை (என்.சி.சி.) என சுமார் 2.500 பேர் பார்த்து ரசித்தனர்.ஆளுனர் ரோசையா பங்கேற்பு:
        முன்னதாக சென்னைத் துறைமுகத்திலிருந்து கிளம்பிய ஜலஸ்வா கப்பலில் தமிழக ஆளுனர் ரோசையா பயணம் செய்தார்.  சாகச நிகழ்ச்சிகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ரோசையா பேசியது, சென்ற முறை சிறிய கப்பலில் பயணம் செய்தேன். இந்த முறை பிரமாண்டமான பெரிய கப்பலில் பயணிக்கிறேன். இந்நிகழ்வு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது நாட்டின் பாதுகாப்பு வலுவாக உள்ளது. எவ்வித தாக்குதலையும் முறியடிக்கும் சக்தி நமது படையினருக்கு உண்டு என்பது போன்றவற்றை பொதுமக்களும் அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி வழிவகுக்கும் என்றார் ரோசையா.
       கடற்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் பி.அஜித்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத்தலைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் ஸ்ரீதர், கடற்படை உயர் அதிகாரி மகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment