Friday, 26 October 2012

லாரிகள் நிறுத்துமிடத்திற்கான நிலத்தை திருப்பி அளித்தது சென்னைத் துறைமுகம்

கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதில் மீண்டும் சிக்கல் பிரச்னை
திருவொற்றியூர், ஜூலை.16:கண்டெய்னர் லாரிகள் நிறுத்துமிடம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட 11 ஏக்கர் நகராட்சி நிலத்தை சென்னைத் துறைமுக நிர்வாகம் திடீரென திருப்பி அளித்து விட்டது. இதன்மூலம் வடசென்னையின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பதில் மீ்ண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  இந்தியாவின் கிழக்கு வாயிலாகக் கருதப்படும் சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் சரக்குப் பெட்டகங்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுகின்றன. சுமார் 4 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள், 3 ஆயிரம் டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன. இருப்பினும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் துறைமுகத்திற்கு வந்து செல்லும் வாகனங்கள் 5 முதல் 20 மணி நேரம்வரை வரிசையில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. எண்ணூர் வரை சுமார் 15 கி.மீ தூரத்திற்கு வரிசையில் லாரிகள் காத்திருப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் இப்பகுதில் கடும் போக்குவரத்து நெரிசல்   நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இப்பிரச்னை குறித்து பல்வேறு அமைப்புகளும் போராடி வந்ததை அடுத்து முன்பு டி.ஜி.பி.யாக இருந்த அலெக்சாண்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
குத்தகைக்கு 11 ஏக்கர் நகராட்சி நிலம்:
  இதனை அடுத்து சாலையில் காத்திருக்கும் கண்டெய்னர் லாரிகளை ஓரிடத்தில்
நிறுத்தி பின்னர் நெரிசலின்றி சீராக துறைமுகத்திற்கு அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கென எண்ணூர் விரைவு சாலையை ஒட்டி இருந்த திருவொற்றியூர் நகராட்சிக்குச் சொந்தமான 11 ஏக்கர் காலி நிலம் தேர்வு செய்யப்பட்டது. மாதவாடகை ரூ.11 லட்சம் என முடிவு செய்யப்பட்டது. குத்தகை முன்பணமாக ரூ.33 லட்சத்திற்கான அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சரான மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டு அதனை திருவொற்றியூர் நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜெயராமனிடம் கடந்த ஜூலை 2, 2007-ல் வழங்கினார்.
ஆனால் கனரக வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு காலி நிலத்தை சீர் செய்யாததால்  லாரிகள் மணலில் புதைந்தன. இதனை அடுத்து காலி நிலத்தில் உறுதியான கான்கிரீட் தளம் அமைக்க சென்னைத் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக நிலையத்தை கையாண்டு வரும் சி.சி.டி.எல் நிறுவனம் முன்வந்து ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடும் செய்தது. ஆனால் நிலத்தை 30 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கிட இந்நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இதற்கு ஒப்புதல் அளித்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் கடந்த 2007-ல் நிறைவேற்றப்பட்டது.  இருப்பினும் நீண்ட நாள்களாக அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இது குறித்து 'தினமணி' நாளிதழில் கடந்த ஏப்ரல் 26-ல் சிறப்பு செய்தி வெளியானது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் இறுதியில் குத்தகை காலத்தை 18 ஆண்டுகளாக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்து.
நிலத்தை திருப்பி அளித்த துறைமுகம்:
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த இப்பிரச்னை தீர்ந்து கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் விரைவில் தீரும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை துறைமுக நிர்வாகம் திடீரென காலி நிலத்தை திருப்பி அளித்து விட்டது. இது குறித்து திருவொற்றியூர் நகராட்சி ஆணையர் எஸ்.கலைச்செல்வன் கூறியது, பல்வேறு நெருக்கடிகளில்தான் குத்தகை காலம் 18 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. மேலும் துறைமுகம் அரசு நிறுவனம் என்பதால் தொடர்ந்து குத்தகையை நீடிப்பதில் சிக்கல் ஏதும் இருக்காது. ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஜூன்.30 முதல் திருப்பி அளித்துவிடுவதாக கடிதம் அனுப்பி உள்ளனர். கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலால் திருவொற்றியூர் நகரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது என்பது முற்றிலும் உண்மை என்றார் கலைச்செல்வன்.
மழுப்பும் துறைமுக அதிகாரிகள்:
திடீரென நிலத்தை திருப்பி அளித்தது ஏன் என்பது குறித்து சென்னைத் துறைமுக
அதிகாரிகள் சிலர் கூறியது, கண்டெய்னர் நிறுத்துமிடம் அவசியமானது என்றுதான் நாங்கள் வலியுறுத்தினோம். இதனையே கோப்பிலும் குறிப்பிட்டோம். ஆனால் நிலத்தை திருப்பி அளிப்பது குறித்து நிர்வாகக் குழு கூட்டத்தில் கூட ஆலோசனை நடத்தாமல் முடிவெடுத்தது ஏன் என்பது புரியவில்லை. இது குறித்து சென்னை துறைமுக தலைவர் சுபாஷ்குமார் கூறியது, எங்களுக்கு அந்த நிலம் தேவை இல்லை என்பதால் திருப்பி அளித்துவிட்டோம். இது குறித்து காரணம் தெரிவிக்க இயலாது என பதில் அளித்தார்.
11 ஏக்கர் காலி நிலம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் பிரச்னை மீண்டும் சிக்கலில் ஆழ்ந்துள்ளது என்பதே நிதர்சன உண்மை. மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசனும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கவனத்தில் உள்ள இம்முக்கிய பிரச்னையில் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது கண்டிக்கத் தக்கது. இது குறித்து மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என்றார் திருவொற்றியூர் சமூக சேவை மைய நிர்வாகி கோட்டீஸ்வரன். 



 

No comments:

Post a Comment