Friday, 26 October 2012

நிலக்கரி, இரும்புத்தாதுவை மீண்டும் கையாள சென்னைத் துறைமுகம் கடும் முயற்சி


.
முகவை.க.சிவகுமார்,

சென்னையின் முக்கிய பகுதிகளில் கரித்தூள் மாசு படியும் அபாயம்

திருவொற்றியூர், அக்.12:  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக சென்னைத் துறைமுகத்தில் நிலக்கரி, இரும்புத்தாது கையாளப்படுவது கடந்த ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளநிலையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் கப்பல் துறை செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு  அளித்துள்ள கருத்துரு மூலம் மீண்டும் நிலக்கரியைக் கையாள சென்னைத் துறைமுகம் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
             நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நிலக்கரி, இரும்புத் தாது கையாளப்படுவது தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் சென்னைத் துறைமுகத்தின் முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கரித்தூள் மாசுவால் திணறிய சென்னை:
             சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 2 கோடி டன் அளவிற்கு இரும்புத் தாது, நிலக்கரி நீண்ட காலமாக கையாளப்பட்டு வந்தது.  இவை கையாளப்படும்போது எழும் கரித்தூளால் கடும் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம், பாரிமுனையில் உள்ள முக்கிய கட்டடங்கள் எல்லாம் இவ்வகை மாசுவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டன. வட சென்னை முழுவதும் எங்கு பார்த்தாலும், கரித்தூள், செந்நிற இரும்புத் தாது தூசு படிந்து பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டனர்.  இது குறித்து பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தன. ஆனால் அனல் மின்சாரம் தயாரிக்க நிலக்கரி இறக்குமதி அவசியமாகிறது, மேலும் துறைமுகத்தின் முக்கிய வருவாய் பாதிக்கப்படும் எனக் கூறி சென்னைத் துறைமுக நிர்வாகம் தொடர்ந்து இவற்றை நிறுத்த மறுத்து வந்தது.
நிலக்கரி,இரும்புத் தாதுவிற்கு உயர்நீதிமன்றம் தடை:
    .  இதனையடுத்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கில் நிலக்கரி, இரும்புத் தாது கையாள  தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே, 2011-ல் உத்தரவிட்டது.  இத்தடையை எதிர்த்து துறைமுக நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம்   கப்பல்த் துறை செயலாளர் தலைமையில், வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை செயலாளர், மத்திய, மாநில சுற்றுச்சூழல் கட்டுப்பாடு வாரியத் தலைவர்கள், தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆய்வு மையம் (நீரி),  ஐ.ஐ.டி., தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழு அமைத்து உத்தரவிட்டது.  இதனையடுத்து கடந்த மே மாதம் இக்குழு நேரில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் சமர்பித்தது.  இந்த அறிக்கையின் மீது சமீபத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற சென்னைத் துறைமுகத்திற்கு 2 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த வழக்கு விசாரணையும் தள்ளிவைக்கப்பட்டது.
பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த  துறைமுக நிர்வாகம் நடவடிக்கை:
               இந்த அறிக்கையில்,  நிலக்கரியை இறக்கும்போது மூடப்பட்ட கலன்களைப் பயன்படுத்த வேண்டும்,  தெளிப்பான்கள் மூலம் நிலக்கரி மீது தொடர்ந்து நீர் தெளித்தல்,  கப்பலில் இருந்து நிலக்கரியை திறந்த லாரிகளில் கொண்டு செல்லாமல் மூடப்பட்ட லாரிகளில் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன. மேலும் கப்பலில் இருந்து இறக்கி, சேமித்து வைத்து, வேகன்களில் எடுத்துச் செல்லுவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்ன நடைமுறைகள் கையாளப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
           நிலக்கரி, இரும்புதாது கையாளப்பட்டு வந்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ.250 கோடிவரை சென்னைத் துறைமுகத்திற்கு வருவாய் கிடைத்து வந்தது.  இதனால் உயர்நீதிமன்றம் அளித்த தடையால் கடந்த ஓராண்டாக பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து வந்த துறைமுக நிர்வாகம்,  உயர்மட்டக்குழு அறிக்கையால் தற்போது  எழுச்சி பெற்றுள்ளது.   மேலும்  அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பினைப் பெற முடியும் என துறைமுக நிர்வாகம் கருதி, இதற்கான வேலைகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி நிலக்கரி, இரும்புத் தாது விரைவில் சென்னைத் துறைமுகத்தில் மீண்டும் கையாளப்படும் என்பதே உண்மை என்கிறார் துறைமுக உயர் அதிகாரி ஒருவர்.
பொதுநல அமைப்புகள் கடும் எதிர்ப்பு:
 இது குறித்து வடசென்னை பொதுநல அமைப்புகள் சார்பில் தெரிவித்த கருத்துகள்:
             நிலக்கரி மாசுவால் ஆயிரக் கணக்கானோருக்கு ஆஸ்துமா நோய் ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக வடசென்னை பகுதிகளில் வீட்டுக் கதவு, ஜன்னல்களை சிறிது நேரம் கூட திறந்து வைக்க முடியாது. மாடியில் துணி கூட காய வைக்க முடியாத அளவிற்கு மாசு இருந்தது. தடை செய்யப்பட்ட பிறகுதான் சற்று நிம்மதியடைந்தோம்.    சென்னை மாநகரையே மாசுபடுத்தும் இந்த முயற்சியை கடுமையாக எதிர்ப்போம். ஏற்கனவே படிந்துள்ள கரித்தூள் படலங்கள் கூட இன்னும் விலகாத நிலையில் மீண்டும் நிலக்கரி, இரும்புத்தாது கையாள்வது என்ற முயற்சிக்கு அனைத்து தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். 
     தமிழகத்தைச் சேர்ந்த ஜி.கே.வாசன் கப்பல்த் துறை அமைச்சராக உள்ள நிலையில் சென்னை மாநகர மக்களை பெருமளவில் பாதிக்கக் கூடிய இப்பிரச்னையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.



                                                                              
       



No comments:

Post a Comment