Friday, 26 October 2012

பணி காலத்தில் இறந்து போன துறைமுக தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.36 கோடி உதவித் தொகை


கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வழங்கினார்
திருவொற்றியூர், அக்.13: சென்னையில் துறைமுகத்தில் பணிக்காலத்தில் இறந்து போன 868 ஊழியர்களின் துறைமுக ஊழியர்களின் குடும்பத்தினருக்கு சுமார் ரூபாய் 36 கோடி உதவித் தொகைக்கான காசோலைகளை கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சனிக்கிழமை வழங்கினார்.
            சென்னைத் துறைமுகத்தில் பணிகாலத்தின்போது உடல் நலக் குறைவு, விபத்து உள்ளிட்ட காரணங்களால் இறந்து போன 868 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான மாற்று வேலைக்குப் பதிலாக உதவித் தொகை வழங்க துறைமுக நிர்வாகம் முடிவு செய்து இதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஜி.கே.வாசன் உதவித் தொகை காசோலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் வாசன் பேசியது,
    துறைமுகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்ற துணையாகவும்,  அடித்தளமாகவும் இருப்பவர்கள் தொழிலாளர்கள்தான்.   துறைமுகத்தின் வளர்ச்சியையும், தொழிலாளர்கள் நலனையும் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை.  எனவேதான் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அதேசமயம் தொழிலாளர்களின் நலனிலும் கப்பல்துறை அமைச்சகம் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.
         துறைமுகங்களில் பணிகாலத்தின்போது விபத்து, உடல் நலக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் இறந்து போன தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக
இருந்து வருகிறது.  ஆனால் 1999 ஆண்டிற்குப் பிறகு பிரிவு 3,  பிரிவு 4 தகுதி தொழிலாளர்கள் வேலைக்குச் சேர்க்க நேர்ந்தால் மொத்த எண்ணிக்கையில் 5 சதவீதம் மட்டுமே கருணை அடிப்படையில் மாற்று வேலை வழங்க முடியும்.  இதனால்  இவர்களுக்கு மாற்று வேலை வழங்க முடியவில்லை.   உண்மையிலேயே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நியாயமாக வேறு வழியில் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தார்மீகக் கடமை உள்ளதால் இது குறித்து அமைச்சக உயர் அதிகாரிகள், பிரதமர் அலுவலகம் உள்ளிட்டோரிடம் பலகட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு, இறந்து போன தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வேலைக்குப் பதிலாக கணிசமான அளவில் உதவித் தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டது.
           இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கு குறைந்த பட்சம் ரூ.1.25 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.4.90 லட்சம்வரை உதவித்தொகையாகக் கிடைக்கும். இதனைக் கொண்டு அவர்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த தொகை சிறியதாக இருப்பினும் தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் இதனை வழங்கவே கடுமையான நிர்வாக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இத்திட்டத்தின் சென்னைத்துறைமுகத்தில் மூலம் 868 பேர் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான செலவுத் தொகை ரூ.35.73 கோடி ஆகும். 
விசாகபட்டினத்தில் 860 பேருக்கு ரூ.30 கோடி உதவி:
       தொழிலாளர்களின் நலன் கருதி கப்பல்த் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ள இத்திட்டத்தின் கீழ் விசாகபட்டனம் துறைமுகத்தில் பணிகாலத்தில் இறந்து போன சுமார் 860 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 30.30 கோடி உதவித் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.  சென்னை, விசாகபட்டனம் தவிர இதர துறைமுகங்களிலும் இதேபோல் உதவித் தொகை வழங்க அந்தந்த துறைமுக நிர்வாகங்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
        மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளும் தொழிலாளர்கள் 993 பேரை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வந்தது.  கப்பல்த் துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் அவர்கள் அனைவரும் தற்போது நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு நிறுவனம் லாபம் ஈட்டுவது மட்டுமே நோக்கமாக இருக்கக் கூடாது.  தொழிலாளர்கள் நலன்,  அருகில் வசிக்கும் மக்களின் சமூக மேம்பாடு உள்ளிட்டவைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.





No comments:

Post a Comment