Friday, 26 October 2012

அபாய நிலையில் திருவொற்றியூர் மீனவர் குடியிருப்பு

Source: www.dinamani.com

திருவொற்றியூரில் உள்ள மீனவர் குடியிருப்பில் திங்கள்கிழமை இரவு மேற்கூரை இடிந்து விழுந்ததில் வேலாயுதம் (45) என்ற மீனவர் படுகாயம் அடைந்தார்.
திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் மீன்வளத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் வேலாயுதம். மீனவரான இவர் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்துள்ளது.
இதில் வேலாயுதம் பலத்த காயமடைந்தார். இவரது மனைவி, குழந்தைகள் அப்போது வீட்டில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்.
இதேபோல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே குடியிருப்பில் மூன்றாவது மாடியில் வசித்து வந்த தனபால் என்பவரது வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் அவரது மனைவி ஜெயந்தி, குழந்தை கவினேஷ் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவொற்றியூர் கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய மீனவர் கிராமங்களில் ஒன்று திருச்சினாங்குப்பம். இங்கு 1993-ல் மீனவளத்துறை சார்பில் 478 குடும்பங்கள் வசிக்கும் வசதிகள் கொண்ட அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன. தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கடுமையாக பழுதடைந்து அபாய நிலையில் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக வீட்டின் மேற்கூரைகள் பெயர்ந்து விழும் சம்பவங்களும், அதில் பலர் காயமடையும் சம்பவமும் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக இங்கு குடியிருந்துவரும் மீனவர்கள் தெரிவித்தனர்.
புதிய வீடுகள் கட்டித் தரக் கோரிக்கை: இது குறித்து திருச்சினாங்குப்பம் மீனவர் பஞ்சாயத்து நிர்வாகிகள் கூறியது: அடுக்குமாடி வீடுகள் பழுதடைந்து இடிந்துவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இக்குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் அமைத்துத் தரவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு இதேபோல் நடைபெற்ற சம்பவத்தையடுத்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் நேரில் ஆய்வு செய்தார்.
இதையடுத்து இங்கு வசிக்கும் மீனவர்களுக்கு ரூ.14.5 கோடி செலவில் பழைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் புதிய வீடுகள் கட்டித் தருவதற்கான பணியை மீன்வளத்துறை மேற்கொள்வதாகத் தெரியவில்லை.
தற்போது வீடுகள் எந்நேரமும் இடிந்து விழும் அபாயக் கட்டத்தை எட்டிவிட்டது. எனவே உடனடியாக புதிய குடியிருப்புகளை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment