Monday, 26 November 2012

போர்க்களத்தில் அறநெறியைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள்



வைகோ
திருவொற்றியூர், நவ.21: சங்க காலம் தொட்டு போர்க்களத்தில் அறநெறியைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள்தான் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
     சென்னைத் துறைமுகத் தமிழ்ச் சங்கம் சார்பில் 48-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் செ.ஹரிசந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த தமிழறிஞருக்கான விருது முனைவர் ம. லெனின் தங்கப்பா,  சிறந்த சமூக சேவைக்கான விருது இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், கலைச் சேவைக்கான விருது கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்மந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன். மேலும் சென்னைத் துறைமுகத்தில் சிறப்பாகப் சேவையாற்றியதற்காக டாக்டர் ராஜா ரவிவர்மா, டாக்டர் ராஜ்குமார், டாக்டர் குணசேகரன் உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர்.    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு  பெரியார், அண்ணா, சங்கரலிங்கனார் ஆகியோரின் திருஉருவப் படங்களைத் திறந்து வைத்தார்.  பின்னர்  'அறமும் மறமும்' என்ற தலைப்பில் வைகோ இலக்கிய பேருரையாற்றினார்.
அப்போது வைகோ பேசியது,
        தமிழர்களின் கலாச்சாரத்திலும், வரலாற்று நிகழ்வுகளிலும் துறைமுகங்களுக்கு முக்கிய இடம் உண்டு.   மறம் என்பதே பல்வேறு அறநெறிகள் மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுதான்.  புறநானூறு, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கியங்களில் அறமும், மறமும் பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.  எழுத்தின் மூலம் வல்லமையை உருவாக்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு.
        எது அறம்? எது மறம்?  வீரம் செறி்ந்த தமிழன் போர்க்களத்தில் அறத்தைக் காப்பாற்றினான்.  போர்முனைக்குச் சென்ற போதிலும் மனித  நேயத்தோடு போராடியவன் தமிழன்.   மகளிர், சமயத் துறவிகளை,  உடல் நலம் குன்றியவர்கள், ஊனமுற்றவர்கள் உள்ளிட்டோரை வெளியேற்றிவிட்டு போர்களத்தைச் சந்தித்தவன் தமிழன்.  இது பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் முதல் ஈழம் பிரபாகரன் வரை அனைவருக்கும் பொருந்தும்.  ஆனால் இலங்கையில் நடந்தது என்ன? பெண்கள், கற்பிணிகள் குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஆயுதங்களை இழந்து  நிராயுதபாணியாக வந்தவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.  
      உலகத்தில் மன்னிக்கவே முடியாத குற்றம் நன்றி மறப்பதுதான் என அறம் கூறுகிறது.  பசுவின் மடிக்காம்பை அறுத்தவன், பெண்களின் கற்பைச் சிதைத்தவனுக்குக் கூட மன்னிப்பு உண்டு. ஆனால் நன்றி மறந்தவனுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது என்ற பொருளில் பல்வேறு இலக்கியங்களும் வலியுறுத்துகின்றன.  தவ வேடத்தில் உள்ளவன் தவறு செய்யக்கூடாது.  வீரம், அறநெறியை எடுத்தியம்பும் புறநானூற்றில் எந்த மன்னன் பெயரும் குறிப்பிடப்படவில்லை. திருக்குறளிலோ நாட்டின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை.  உலகின் பல்வேறு பகுதிகளில் தத்துவங்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் உலகத்திற்கு பொருந்தும் அறநெறிகளை ஆதியிலேயே வகுத்தவன் தமிழன்தான்.
     இந்திய சுதந்திர வரலாற்றில் காந்தியடிகள் அறமென்றால் நேதாஜி மறம். இலங்கையில் செல்வநாயகம் மறமென்றால் பிரபாகரன் மறம்.  அண்ணா அறம்.  பெரியாரின் வழி எதிர்காலத்தில் மறம் என்றார் வைகோ.
  

No comments:

Post a Comment