Monday, 25 January 2016

இந்திய கடலோரக் காவல் படை நடத்திய 'கடலில் ஒரு ஒரு நாள்'

சென்னை அருகே நடுக்கடலில் நடைபெற்றது


திருவொற்றியூர், ஜன.17:இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்தியம் சார்பில் சார்பில் கடலில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சி சென்னை அருகே நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
     இந்திய கடற்படையிலிருந்து கடலோரக் காவல்படை பிப்.1, 1977 ம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில்  பிப்.1 ம் தேதியை கடலோரக் காவல்படை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலோரக் காவல்படையின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள், படையினரின் குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் அறிந்து கொள்வதற்காக 'கடலில் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும்  நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில் கடந்த ஆண்டு நீர்மூழ்கிக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதால் கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு கடலோரக் காவல்படை தினத்தையொட்டி கடலில் ஒரு நாள் நிகழ்ச்சி 
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
செயல்விளக்க நிகழ்ச்சிகள்:
     சென்னைத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கடலோரக் காவல் படையின் கப்பல்களில் பொதுமக்கள், படைவீரர்களின் குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் 
நடுக்கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் கடலோரக் காவல் படையினரின் 
செயல்பாடுகள் குறி்தது பல்வேறு கள செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 
ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு வின்ச் மூலம் தகவல், பொருள்கள் பரிமாற்றம் செய்வது, கடத்தல்காரர்களை விரைந்து சென்று பிடிப்பது, தீ விபத்து ஏற்பட்ட வணிகக் கப்பல் ஒன்றை தீயணைத்து மீட்பது, கடலில் தத்தளிக்கும் மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்பது, டோர்னியர் விமானம் மூலம் 
கடலோரப் பகுதிகளை விரைந்து சென்று கண்காணிப்பது, கப்பலில் உடல்நலக் குறைவு ஏற்பட்டவர்களை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு செயல் விளக்க நிகழ்ச்சிகள் இதில் நடத்திக் காண்பிக்கப்பட்டன. 
அணி வகுத்த கப்பல்கள்:
    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், கிழக்கு பிராந்திய தளபதி எஸ்.பி.சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இந்திய கடலோரக் காவல் படையின் சாரங், சாகர், சமுத்ரா பகீரதர், விஸ்வாஸ்த், அபீக், அனாக், ராஜ் கமல், ராஜ் தரங் ஆகிய 8 ரோந்துக் கப்பல்கள், சி 415, சி 412 ஆகிய சிறிய கப்பல்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள், இரண்டு டோர்னியர் விமானங்கள் உள்ளிட்டவை கலந்து கொண்டன. சிறப்பு நிகழ்ச்சியாக அனைத்து கப்பல்களும் வரிசையாக அணிவகுத்து சென்றன. அப்போது கப்பல்களில் இருந்த வீரர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். 

No comments:

Post a Comment