Sunday, 31 January 2016

திருவொற்றியூரில் கடலில் மூழ்கி மாணவர்கள் உள்ளிட்ட மூவர் சாவு

திருவொற்றியூர், ஜன.25:திருவொற்றியூரில் கடலில் மூழ்கி பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட மூன்றுபேர் திங்கள்கிழமை பரிதாபமாக உயிரிழந்தனர். 
   திருவொற்றியூர் சாத்துமாநகர் வரதராஜர் தெருவைச் சேர்ந்த சேர்ந்த மணி (17), ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சூர்யா (14), எட்டாம் வகுப்பு படிக்கும் யுவனேஷ் (13) மற்றும் தினேஷ் (16) ஆகிய நால்வரும் நண்பர்கள். இவர்கள் அனைவரும் திங்கள்கிழமை பிற்பகல் திருச்சினாங்குப்பம் அருகே கடலில் குளித்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் நால்வரும் சிக்கி கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் தினேஷ் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். மீதி மூவரும் கடல் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போயினர். இதில் சூர்யா, மணி ஆகியோரின் சடலங்கள் உடனடியாக மீட்கப்பட்டன. யுவனேஷின் சடலத்தை தொடர்ந்து தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக  அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 
    இது குறித்து திருவொற்றியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே தெருவைச் சேர்ந்த மூன்று பேர் இறந்து போன சம்பவம் இப்பகுதி வசிப்போரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment