Monday, 25 January 2016

இந்திய-ஜப்பான் கடலோரக் காவல் படை கூட்டுப் பயிற்சி 

சென்னை அருகே நடுக்கடலில் நடைபெற்றது

திருவொற்றியூர், ஜன.17:இந்திய, ஜப்பான் நாட்டின் கடலோரக் காவல்படையினர் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி சென்னை அருகே நடுக்கடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    இரு நாடுகளின் கடலோரக் காவல்படையினரிடையே உள்ள பல்வேறு திறன்களைப் பரிமாறிக்கொள்வதற்காகவும், நல்லெண்ணப் பயணமாகவும் நடத்தப்படும் இக்கூட்டுப் பயிற்சி கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற கூட்டுப்பயிற்சியில் இந்திய கடலோரக் காவல்படையினர் பங்கேற்ற நிலையில் வெள்ளிக்கிழமை சென்னைக்கு அருகே நடைபெற்ற கூட்டுப் பயிற்சியில் ஜப்பான் நாட்டின் கடலோரக் காவல் படையினர் பங்கேற்றனர். 
ஆறு கப்பல்கள் அணி வகுப்பு:
    இக்கூட்டுப் பயிற்சியில் இந்திய கடலோரக் காவல்படையின் சமுத்ரா பகீரதர்,  விஸ்வாஸ்ட், ராஜ்கமல், ராஜ்தரங் ஆகிய நான்கு பெரிய கப்பல்களும், சி-417, சி-415 ஆகிய இரண்டு சிறிய அதிவேக கப்பல்களும் பங்கேற்றன. மேலும் இரண்டு டோர்னியர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. ஜப்பான் கடலோரக் காவல்படை சார்பில் ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய எசிகோ என்ற கப்பலும் பங்கேற்றன. பயிற்சியின்போது கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வணிகக் கப்பலை மீட்பது, 
கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்பது, தீவிபத்தில் சிக்கும் கப்பலை காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு சாகசப் பயிற்சிகளில் இரு நாட்டு வீரர்களும் இணைந்து ஈடுபட்டனர். மேலும் இருநாட்டினரின் தொழில் நுட்ப வளர்ச்சி, தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவைகள் குறித்தும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. பயிற்சியின் நிறைவில் கப்பல்களில் அணிவகுத்துச் சென்று மரியாதை செலுத்தினர்.
       கூட்டுப் பயிற்சிக்குப் பிறகு சமுத்ரா பகீரதர் கப்பலில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கடலோரக் காவல்படை தலைமை தளபதி பிஸ்த், ஜப்பான் கடலோரக் காவல்படை தலைமைத் தளபதி ஹிதேயோ ஹனாமிஜூ கூட்டாகப் அளித்த பேட்டி:
    இரு நாட்டின் நல்லுறவைப் பேணுவதற்கு இக்கூட்டுப் பயிற்சி ஒரு வாய்ப்பாக இருந்து வருகிறது. மேலும் இரு பிராந்தியங்களில் வணிகக் கப்பல்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை விரைந்து முறியடிக்க விரைவாகத் தொடர்பு கொள்ள முடியும். மேலும் கடல் பயணத்தில் மருத்துவ உதவி ஏதேனும் தேவைப்பட்டால் உடனடியாக அளிக்க இயலும். இந்தியா, ஜப்பான் இடையே ஆழமான நட்பு நிலவுகிறது. மேலும் சர்வதேச அளவில் நல்ல கூட்டாளிகளாகச் செயல்பட்டு வருகின்றன. கடலோரக் காவல்படையினர் சர்வதேச அளவில் இணைந்து செயலாற்றி வருவதால் சோமாலியா உள்ளிட்ட நாடுகள் வழியாகச் செல்லும் கப்பல்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். 
    இந்நிகழ்ச்சியில் இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியத் தளபதி எஸ்.பி.சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பெட்டிச் செய்தி 

சர்வதேச கடல் எல்லையை மதிக்க வேண்டும்:கடலோரக் காவல்படை தலைமைத் தளபதி பிஸ்த்
இலங்கை கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தற்போது குறைந்துள்ளது. இப்பிரச்னை குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் உள்ளது. சர்வ தேச சட்டங்கள் இந்தியா மதித்து வரும் நிலையில் இலங்கையில் மட்டும் அந்நாட்டின் கடல் பகுதியில் மீன்பிடிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. சர்வதேச கடல் எல்லையை மதித்து நடக்க மீனவர்களுக்கு விளிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
    தமிழகக் கடலோரப் பகுதியில் ஏராளமான டால்பின்கள் மர்மமான முறையில் இறந்து கரை ஒதுங்கியதற்கான காரணங்கள் குறித்து உரிய ஏஜென்சிகள் மூலம் விசாரணை நடத்தப்படும். பதன்கோட் தாக்குதலுக்குப் பிறகு கடல் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எவ்வித அச்சுறுத்தல்களையும் சமாளிக்கும் திறன் இந்தியக் கடலோரக் காவல்படைக்கு உள்ளது என்றார் பிஸ்த். 

No comments:

Post a Comment