Monday, 25 January 2016


நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்

ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

திருவொற்றியூர், டிச.11:தமிழகத்தில் நீர் நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
   திருவொற்றியூர் பகுதி த.மா.கா சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு
சுமார் 2 ஆயிரம் பேர்களுக்கு பாய், போர்வை, அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் வாசன் கூறியது,
  நீர் நிலை, நீர் வழி, நீர் சேமிப்பு உள்ளிட்டவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி உடனடியாக அகற்ற வேண்டும். மழை வெள்ளப் பாதிப்புகளுக்கு ஆக்கிரமிப்புகளே மூல காரணமாக உள்ளன. இதனால் பல லட்சம்பேர் 
பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆக்கிமிப்புகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு, தனிநபர்களின் தலையீடு இருக்கக்கூடாது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பது அரசாங்கத்தின் கடமை ஆகும். ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு புதிய வாழ்விடம், வாழ்வாதாரம் உள்ளிட்டவைகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும். இப்பிரச்னையில் ஒருமித்த கருத்து ஏற்பட அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். 
சந்தேகத்தை போக்க வேண்டும்:
   செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக அளவு தண்ணீர் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறி்த்து பொதுப்பணித் துறை போதிய விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் மக்களிடம் ஏற்பட்டுள்ள சந்தேகம், அச்சம் உள்ளிட்டவைகளைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
   அரசு மற்றும் தனியாரால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் முறையாக வழங்கப்பட வேண்டும். வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நூறு சதவீத மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற வேண்டும். 
திருவொற்றியூர் பாலம்:
   மணலி விரைவு சாலையிலிருந்து சடையன்குப்பம் பகுதிக்கு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் நீண்ட நாள்களாக நடைபெறுகிறது. இதனை விரைவில் 
கட்டி முடிக்க காலக்கெடு விதிக்கப்பட வேண்டும். இப்பாலம் இல்லாததால் இங்கு செல்ல படகினை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது என்றார் வாசன். 
      நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கத்திபாரா ஜனார்தனம், டி.வி.முருகன், சுகுமாறன், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment