Saturday, 11 February 2017

கடற்கரையில் அகற்றப்பட்ட எண்ணெய்க் கழிவுகளை

உயிரி தொழில் நுட்பம் மூலம் அழிக்கும் பணி தொடங்கியது

3 மாதங்களில் மக்கிப் போகும்: விஞ்ஞானிகள் தகவல் 

திருவொற்றியூர், பிப்.4: சென்னை எர்ணாவூர் கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டு வரும் எண்ணெய்க் கழிவுகளை உயிரி தொழில் நுட்பம் மூலம் அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இதற்கான பணிகள் ஹரியானா மாநிலம் பரிதாபாதில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்போரேசன் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை விஞ்ஞானிகள் முன்னிலையில் எண்ணூர் காமராஜர் துறைமுக வளாகத்தில் 
நடைபெற்று வருகிறது. 
    எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த ஜன.28-ல் நடைபெற்ற விபத்தில் இரண்டு கப்பல்கள் மோதியதையடுத்து சேதமடைந்த கப்பலிலிருந்து எண்ணெச் கசிவு ஏற்பட்டது. இது எர்ணாவூர் பாரதியார் நகர் அருகே கடற்கரையொட்டி படிந்துள்ளது. சுமார் 200 டன் எடையுள்ள இந்த எண்ணெய்க் கழிவுகள் ஆள்கள் மூலம் கடந்த ஒரு வாரமாக அகற்றப்பட்டு வருகிறது. அகற்றப்பட்டு வரும் கழிவுகளை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் எவ்வாறு அழிக்கப் போகிறார்கள் என்ற சந்தேகம் பொதுமக்கள், 
சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வருகிறது. 
உயிரி தொழில் நுட்பம் மூலம் அழிப்பு:
     இந்நிலையில் எண்ணெய்க் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டு வரும் எண்ணெய்க் கழிவுகள் பிளாஸ்டிக் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதன் அருகே உள்ள காலியான இடத்தில் சுமார் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு சுமார் ஒன்றரை அடி அளவில் பள்ளம் தோண்டப்பட்டு இதன்மீது தார்பாலின் பாய்கள் விரிக்கப்பட்டன. பின்னர் எண்ணெய்க் கழிவுகளும், மணலும் கலக்கப்பட்டது. இதில் மைக்ரோசோம்ஸ் (Microsomes) என்ற நுண்ணுயிரிகள் மற்றும் ஊட்டச் சத்துகள் (Nutrients) இக்கலவையுடன் சேர்க்கப்பட்டன. இதற்கான செயல் விளக்கத்தை பரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்போரேசன் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை விஞ்ஞானிகள் எஸ்.கே.பூரி, எம்.கே.உப்ரேதி ஆகியோர் செய்து காண்பித்தனர்.
சுற்றுச் சுழலுக்கு சேதம் விளைவிக்காது: விஞ்ஞானிகள் விளக்கம்
அப்போது விஞ்ஞானிகள் இருவரும் செய்தியாளர்களிடம் அளித்த விளக்கம்:
   கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கசிவு கடல் நீரோடு கலந்து சேறு (Sludge) போல் மாறிவிட்டது. இதனை மீண்டும் உபயோகப் படுத்தவோ, கச்சா எண்ணெயுடன் கலந்து சுத்திக்கரிக்கவும் முடியாது. அவ்வாறு கலந்தால் சுத்திக்கரிக்கப்படும் முறையில் பாதிப்புகள் ஏற்படலாம். இதில் பல்வேறு வகையான் ஹைட்ரோ கார்பன்கள் உள்ளன. எனவே வேறு வகையில் எரித்தால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படும். எனவே இது குறித்து ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்றன. இதில் இந்த உயிரி தொழில்நுட்பம் (Bio Remedian) கண்டறியப்பட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  சுமார் 200 டன் எண்ணெய்க் கழிவுகள் இவ்வாறு கலவையிடப்பட்டு பள்ளத்தில் பரவப்படும். இதற்கான பணிகள் நான்கு நாள்களில் நிறைவுறும். பின்னர் இக்கலவையில் உள்ள எண்ணெய் கழிவுகள் மக்கும் தன்மை 
தொடர்ந்து கண்காணிக்கப்படும். சுமார் 3 மாதங்களில் முற்றிலுமாக வளமான மண்ணாக மாறிவிடும். இதனை மரம் வளர்ப்பது முதல் அனைத்து பணிகளுக்கும் பயன்படுத்தலாம். ஒரு டன் எண்ணெய்க் கழிவுக்கு ஒரு கிலோ நுண்ணுயிரி கலவை பயன்படுத்தப்படும். இத்தொழில்நுட்பம் மூலம் முற்றிலுமாகச் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும். 
வெறும் மணலால் மட்டுமே மக்காது:
     எண்ணெய்க் கழிவுகளை வெறும் ஆற்றுமணல், கடற்கரை மணல் மூலம் மக்கச் செய்ய முடியாது. நுண்ணுயிரிகள் கலக்கப்படுவதன் மூலம்தான் இயற்கையாக எண்ணெய்க் கழிவுகள் மக்கிப் போகும். தார்பாலின் பாய்கள் கீழே விரிப்பது இக்கலவை கீழே புதையாமல் இருப்பதற்குத்தான். மேலும் சாதாரண மழையால் இச்செயல்முறை பாதிக்கப்படாது. ஆனால் பெருவெள்ளம் ஏற்பட்டால் பாதிப்பு இருக்கக் கூடும். இருப்பினும் தற்போதைய இடத்தில் எவ்வித பாதிப்பிற்கும் வாய்ப்பு இல்லை. எண்ணெய் சுத்திக்கரிப்பு ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் எண்ணெய்க் கழிவுகள் இந்த முறையில்தான் அழிக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் 
ஒரு கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகள் இந்த முறையில்தான் அழிக்கப்பட்டன. எனவே எதிர்காலத்தில் எத்தகைய எண்ணெய்க் கழிவுகளையும் நுண்ணுயிரி தொழில்நுட்பம் மூலம அழிக்க முடியும். எண்ணெய்க் கழிவு தேங்கியுள்ள கடற்கரையிலேயே இச்செயல்முறை செய்வது சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 


தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி
  எண்ணெய்க் கழிவு குறித்த தகவல்கள் கப்பல்த் துறை அமைச்சகம் மூலம்
பெட்ரோலிய அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அஜய் பிரகாஷ் எண்ணூர் துறைமுகத்திற்கு 
வந்து நேரில் ஆய்வு செய்தார். பின்னர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்கு இத்திட்டம் அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்  துறையின் முக்கிய அதிகாரிகளுடன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார். இதனையடுத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இச்செயல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், மேலும் இதன் மூலம்  எண்ணெய்க் கழிவுகளை அழிப்பது குறித்த பொதுமக்களின் அச்சம் முடிவுக்கு வரும் என இந்தியன் ஆயில் கார்போரேசன் அதிகாரிகள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment