Saturday, 11 February 2017

ஆழ் கடல் பகுதியில் பரவியிருந்த எண்ணெய் மாசு முற்றிலும் அகற்றம்

கடலோரக் காவல் படை அறிவிப்பு

திருவொற்றியூர், பிப்.3:விபத்துகுள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய ஆழ்கடலில் படர்ந்திருந்த எண்ணெய் மாசு முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது என கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய தளபதி ராஜன் பர்ஹோத்ரா வெள்ளிக்கிழமை அறிவித்தார். 
    கடந்த சனிக்கிழமை எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே ஏற்பட்ட விபத்தில் சேதமடைந்த கப்பலிலிருந்து வெளியேறிய எரிவாயு எண்ணெய் எர்ணாவூர் கடற்கரை பகுதியை அடைந்தது. இதனை அகற்றும் பணி ஆறாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடற்பகுதியில் மீன்கள், ஆமைகள் செத்து மிதப்பதாகவும், பல கி.மீ. தூரத்திற்கு எண்ணெய்ப் படலம் பரவியுள்ளதாகவும், இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.
எண்ணெய் படலம் கலைத்து அழிப்பு: 
   இந்நிலையில் இரு இடங்களில் எண்ணெய் படலங்கள் மிதப்பதாக 
கடலோரக் காவல் படை வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதனை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை கடலோரக் காவல் படை மேற்கொண்டது. 
இப்பணியை விளக்குவதற்காக வரத் என்ற ரோந்துக் கப்பலில் பத்திரிகையாளர்கள் சென்னைத் துறைமுகத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டனர். அப்போது காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார்  10 கடல் மைல் தூரத்தில் பரவியிருந்த எண்ணெய் படலத்தின் மீது கப்பலில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கருவிகள் மூலம் 
எண்ணெய் கசிவு கலைப்பான் (OSD-Oil Spill Dispersant) பீய்ச்சி அடிக்கப்பட்டன. இதனையடுத்து அப்போது எண்ணெய் படலத்தின் வண்ணம் மாறி பிறகு கடல்நீரோடு கலந்து படலம் இருந்த சுவடே தெரியவில்லை. பின்னர் எண்ணூர் துறைமுகத்திலிருந்து 
திருவான்மியூர் வரையிலான கடல்பகுதியில் செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது எங்கும் எண்ணெய்க் கசிவுகளைக் காண முடியவில்லை 
எண்ணெய் மாசு முற்றிலும் அகற்றம்:
அப்போது கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய தளபதி ராஜன் பர்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறியது,
   ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் படலங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டன என்பதை அறிந்து கொள்வதற்காகவே பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட்டனர். தற்போது எவ்வித மாசும் இல்லை. எனவே வீணாகப் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதற்கு எண்ணெய்க் கசிவு காரணம் இல்லை. ஆமைகள் இறந்து போவது என்பது வயது முதிர்வு, கப்பல்களில் சிக்குவது போன்ற காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம். எனவே மீன்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பொதுமக்கள் தாராளமாக மீன்களை சாப்பிடலாம். 
4 நாள்களில் மெரினா தூய்மையாகும்:
    சென்னைத் துறைமுகத்திற்கு தெற்கே மெரினா, பட்டணம்பாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் பரவியுள்ள எண்ணெய் கசிவு மாசு இன்னும் 4 நாள்களில் முற்றிலுமாக அகற்றப்படும். கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய் படலத்தில் சுமார் 10 சதவீதம் மட்டுமே இப்பகுதிக்கு வந்தடைந்ததுள்ளது. மீதமுள்ள 90 சதவீதம் எர்ணாவூர் கடற்கரையை அடைந்துவிட்டன. இதனை அகற்றும் பணியில் மாநில அரசின் பல்வேறு துறைகள், தன்னார்வலர்கள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் 
ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 176 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் எண்ணெய் கசிவு என்று கூறிவிட முடியாது. இதில் மண், தண்ணீர் உள்ளிட்டவை கலந்துள்ளன. எனவே கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெயின் அளவு குறித்து துள்ளியமாக அறிய முடியவில்லை. இதனை அகற்றி, தூய்மைப்படுத்தும் முற்றிலுமாக முடிய சுமார் ஒரு வார காலம் ஆகும்.
விபத்து குறித்து தாமதமாகவே தகவல்:
    விபத்து நடைபெற்று இரண்டரை மணி நேரத்திற்கு பிறகுதான் தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக ரோந்துக் கப்பல் ஹெலிகாப்டர்கள் விபத்து நடந்த இடத்திற்கு வந்தடைந்தன. அப்போது முதல்கட்டமாக சேதமடைந்த கப்பலின் நிலை, கப்பல் சிப்பந்திகளின் நலன், சுற்றுச்சூழல் பாதிப்பு குறி்த்த ஆய்வு மூன்று காரணிகள் மீதுதான் கவனம் செலுத்தினோம். பெரிய விபத்து, குறைவான எண்ணெய்க் கசிவு என்பதுதான் எங்களின் அப்போதைய முடிவாக இருந்தது. இதற்குள் ஏற்கனவே வெளியாகியிருந்த எண்ணெய்க் கசிவு கடற்கரையை அடைந்துவிட்டது. உடனடியாக அவற்றையும் அகற்ற முயற்சி மேற்கொண்டோம். அது எளிதாக இல்லாததால் மாவட்ட ஆட்சியரின் உதவி கோரப்பட்டு பல்வேறு துறைகளும் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனவே கடலோரக் காவல்படையின் மெத்தனப்போக்கால்தான் இப்பிரச்னை பெரிதாகியது என்பதில் உண்மை இல்லை. கப்பல் விபத்துக்கு என்ன காரணம், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது விசாரணை நடத்துவது கடலோரக் காவல்படையின் பொறுப்பு அல்ல. இவ்விசாரணை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என்றார் ராஜன் பர்ஹோத்ரா.

பெட்டிச் செய்தி:

விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை:
கப்பலில் உடன் வந்த சென்னைத் துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் கூறியது,
  சேதமான கப்பலில் இருந்து சரக்குகள் முற்றிலுமாக இறக்கப்பட்டுவிட்டன. இரண்டு கப்பல்களும் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 
விபத்துக்குக்கான காரணம் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த கப்பல்த்துறை அமைச்சகம் உத்தரவிட்டதையடுத்து கேப்டன் சுபாஷ்குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் சார்பில்இணைச் செயலாளர்கள் நேரில் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். எண்ணெய்க் கசிவின் மாதிரி சேகரிக்கப்பட்டு வியாழக்கிழமை பரிதாபாத்தில் உள்ள மைய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்தின் தன்மை குறித்து தனியார் மதிப்பீட்டு நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. விசாரணை முடிவில் விபத்துக்கான காரணம் தெரியவரும். அப்போது தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ரவீந்திரன்

No comments:

Post a Comment