Friday, 11 December 2015

திருவொற்றியூர், மணலி புதுநகரில் மீட்பு பணியில் தேக்கநிலை

ஆயிரக்கணக்கானோர் குடிநீர், உணவின்றி தவிப்பு

திருவொற்றியூர், டிச.3:வெள்ளத்தில் சிக்கிய திருவொற்றியூர், மணலிபுதுநகர் பகுதியில் மீட்பு பணிகளில் அரசு இயந்திரங்கள் போதிய அளவில் செயல்படவில்லை. இதனால் இப்பகுதியில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உணவு, குடிநீரின்றி  தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
     பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஏரிகளின் உபரி நீர் திறக்கப்பட்டதால் குசஸ்தலை மற்றும் ஏரிக் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இப்பகுதியில் செல்லும் பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கார்கில் நகர், ராஜாஜி நகர், ஜோதிநகர், சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் அதிகமான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. அதிகபட்சமாக சுமார் 8 அடிவரை வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மணலி விரைவு சாலையில் இடுப்பளவு தண்ணீர் பெருக்கெடுத்ததால் இப்பகுதி இதர பகுதிகளிலிருந்து முற்றிலுமாகக் துண்டிக்கப்பட்டுள்ளது. 
மணலி புதுநகர் துண்டிப்பு: 
     இதேபோல் மணலி புதுநகர், விச்சூர், புதுநாப்பாளையம், வெள்ளிவாயல்சாவடி, 
இடையன்சாவடி, கொண்டக்கரை, குருவிமேடு, ஆண்டார்குப்பம் உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பொன்னேரி நெடுஞ்சாலையில் சென்னை உரத் தொழிற்சாலை அருகே இடுப்பளவு தண்ணீர் செல்வதால் திருவொற்றியூரிலிருந்து மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து மூன்றாவது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் படகுகள் மூலம் மீட்கப்படும் மக்கள் வேறு இடங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுக்குமாடி வீடுகளில் வசிப்போர் மீட்பு படையினருக்கு
போன் செய்தபோதும் அவர்களை மீட்டெடுக்க போதுமான ஏற்பாடுகள் இல்லை. 
மீட்பு பணிகளில் தேக்கநிலை:
     திருவொற்றியூர், மணலி புதுநகரை மையமாகக் கொண்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இங்கு நடைபெறும் மீட்பு பணிகளின் தாக்கம் 
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்க போதுமானதாக இல்லை. சுமார் 30 படகுகள் வரை இப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இங்கு போலீஸாருடன் இருநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் படகுகளை எங்கு அனுப்ப வேண்டும், எவ்வாறு மீட்க வேண்டும், மீட்கப்பட்டவர்களின் அடுத்த தேவை என்ன என்பது போன்ற பணிகளை ஒருங்கிணைக்க போதுமான போலீஸார், மாநகராட்சி அதிகாரிகள் களத்தில் இல்லை. 
      உணவு, குடிநீர் உள்ளிட்ட நிவாரண உதவிகளை பல்வேறு தரப்பினர் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் இவைகளை முறையாக விநியோகம் செய்ய எந்த அதிகாரியோ, ஊழியர்களோ களத்தில் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான அளவில் நிவாரண பொருள்கள் பகிர்ந்தளிப்பதில் போதுமான ஏற்பாடுகள் இல்லை. மொத்தத்தில் இப்பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் தொடர்ந்து தேக்கநிலை இருந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் படகுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுற்றிப்பார்க்க கிடைத்த வாய்ப்பாக சிலர் பயன்படுத்தியதைப் பார்க்க முடிந்தது. மேலும் செல்வாக்கினைப் பயன்படுத்தி அவரவர் பகுதிகளுக்கு படகுகளை அழைத்துச் சென்றனர். இதனால் உள்பகுதியில் சிக்கியவர்களை மீட்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. 
குறைவான எண்ணிக்கையில் போலீஸார்:
     ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. குடிநீர், உணவின்றி தவிக்கும் இம்மக்களை மீட்கும் பணியை தீவிரமாகச் செயல்படுத்தவோ அல்லது மேல் தளங்களில் தங்கியுள்ளோர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதில் மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் போதிய அளவில் கவனம் செலுத்தாத நிலையை வியாழக்கிழமை பார்க்க முடிந்தது. வெள்ள நீரில் படகுகள் செல்வதைப் பார்வையிடுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் சாரைசாரையாக எர்ணாவூர் மேம்பாலத்தில் குவிந்தனர். இவர்களால் மீட்கப்பட்டவர்கள் யார்? வேடிக்கை பார்க்கவந்தவர்கள் யார்? என்பதில் குழப்பம் ஏற்பட்டது. உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வேடிக்கை பார்க்கவந்தவர்களும் வாங்கிச்
சென்றது சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் பார்த்தனர்.  சில படகுகளில் சென்றவர்கள் மீட்கப்பட்டவர்களிடம் பணம் கேட்டு வாங்கிய புகார்களுக்கும் பஞ்சமில்லாத நிலையே 
வியாழக்கிழமை நிலவியது. 
      வேடிக்கை பார்க்கவந்தவர்களை அப்புறப்படுத்தவோ, விரட்டவோ போலீஸாார் முயற்சிக்கவில்லை. எண்ணூர் காவல் உதவி ஆணையர் தலைமையில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே போலீஸார் களத்தில் இருந்தனர். இவர்களால் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கவோ சிறிதும் முடியவில்லை.  வெள்ளத்தில் சிக்கியவர்கள் போலீஸாருக்கு நேரடியாக போன் செய்தும் அவர்களால் ஏதும் செய்ய இயலவில்லை. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் வியாழக்கிழமை இரவு வரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. 
முதல்வருக்கு கோரிக்கை:
    குழந்தைகளை, முதியோர் உள்ளிட்டோருடன் ஆயிரக்கணக்கான மக்கள்
உணவு, குடிநீர் இன்றி வெளியேறமுடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த மூன்று நாள்களுக்கும் மேலாக மின்சாரம் இல்லை. இந்நிலையில் போர்க்கால அடிப்படையில்
செயல்படவேண்டிய அரசு இயந்திரம் இப்பகுதியில் பெயரளவிற்கு மட்டுமே 
மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வெறும் உணவுப் பொட்டலங்களால் இனி பயனில்லை. இன்னும் ஐம்பதுக்கும் மேற்பட்ட படகுகளை வெள்ளிக்கிழமை எடுத்து வந்து மீட்பு பணியை ஒருங்கிணைத்தால் மட்டுமே வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை பத்திரமாக மீட்க முடியும். 
     வடசென்னையில் அதிக பாதிப்பு இல்லை என்ற கருத்து அதிகாரிகள் மத்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது உண்மையெனில் அவர்கள் வெள்ளத்தில் சிக்கிய
உள்பகுதிகளுக்கு இன்னும் செல்லவில்லை என்பதே நிதர்சனம். எனவே இவ்விசயத்தில் 
முதல்வர் ஜெயலலிதா உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

No comments:

Post a Comment