Friday, 11 December 2015

மணலி அருகே வெள்ளத்தில் சிக்கிய 200 பேர் ஒரு வாரத்திற்கு பின்பு மீட்பு

திருவொற்றியூர்,டிச.9:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர்-மணலி சாலை அருகே அமைந்துள்ள் ஒரு பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தத்தளித்த சுமார் 200 பேர் ஒரு வாரத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை 
மீட்கப்பட்டனர். 
    திருவொற்றியூர்-மணலி சாலையில் தாழ்வான பகுதியில் பெரியார் நகர் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இதனைச் சுற்றி தொழிற்சாலைகளுக்கு பின்னாள் தாழ்வான பகுதியில் பெரியார் நகர் உள்ளது. இக்குடியிருப்பைச் சுற்றி ஒரு சாலையைத் தவிர நான்கு புறமும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.  இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொடர்மழையால் பெரியார் நகர் முழுவதும் திடீரென வெள்ளம் சூழ்ந்தது. மார்பளவு உயரத்திற்கு வெள்ளநீர் சூழ்ந்திருந்ததால் இங்கு வசிக்கும் மக்கள் வெளியேற முடியாமல் சிக்கினர். மேலும் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் தடைபட்டிருந்தது. மேலும் அடிப்படை வசதிகளும் இல்லை. இங்குள்ள கோயில் ஒன்றில் பெண்களில் பெரும்பாலானோர் தங்கியிருந்துள்ளனர். மேலும் இக்குடியிருப்பு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் வைக்கப்பட்டிருந்த  கண்டெய்னர் லாரிகளில் ஆண்கள் தங்கியுள்ளனர். 
    இந்நிலையில் மழை பெய்வது நின்றுள்ளதையடுத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இப்பகுதிச் சென்ற திருவொற்றியூர் எம்.எல்.ஏ.கே.குப்பன், மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், மண்டல குழு தலைவர் தனரமேஷ், மாமன்ற உறுப்பினர் கலையரசன் உள்ளிட்டோர் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்டு அருகில் உள்ள நிவாரண முகாமுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்களுக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள், உணவு, உடை உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். 
மேலும் இக்குடியிருப்பு பகுதியில் திருட்டு ஏதும் நடக்காத வகையில்  பாதுகாப்பிற்காக  போலீஸார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 

No comments:

Post a Comment