Friday, 11 December 2015


திருவொற்றியூர், மணலி புதுநகர் பகுதியில் மூன்றாவது நாளாக மீட்பு பணி 

நிவாரண உதவிகள் குவிந்தன.

திருவொற்றியூர், டிச.4:திருவொற்றியூர், மணலி புதுநகர் பகுதிகளில் மூன்றாவது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. இதற்கிடையே பல்வேறு தரப்பினரும் உணவு, குடிநீர் உள்ளிட்ட நிவாரண உதவிகளை அளித்து வருவது வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. 
    பூண்டி, செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் திறந்து விடப்பட்டதால் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜோதிநகர், வி.பி.நகர், சத்தியமூர்த்தி நகர், அம்பேத்கார் நகர், சிவசக்தி நகர், கலைஞர் நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், மணலி புதுநகர், விச்சூர், சடையன்குப்பம், பர்மாநகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இப்பகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட 
மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 
   வெள்ளிக்கிழமை மழை சற்று ஓய்ந்திருந்தது. மேலும் ஏரிகளில் திறந்து விடப்படும் உபரி அளவு குறைக்கப்பட்டதால் சுமார் 8 அடிவரை இருந்த வெள்ளநீர் 5 அடியாகக் குறைந்தது. இதனையடுத்து மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை மீட்பு பணியில் முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும் சில இடங்களில் மக்கள் தாங்களாகவே வெள்ளநீரில் நடந்து சென்று வெளியேறத் தொடங்கினர். இதுவரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு வெளியிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
குவிந்த நிவாரண உதவிகள்-ஆறுதலடைந்த மக்கள்:
    வியாழக்கிழமை மாநகராட்சி மற்றும் சில நிறுவனங்கள் அளித்த உணவு, குடிநீர் மட்டுமே வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்குக் கிடைத்த நிலையில் வெள்ளிக்கிழமை 
அதிக அளவில் நிவாரண உதவிகள் குவிந்தன. ராயபுரம், வண்ணாரப்பேட்டை, 
சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தவ்ஹித் ஜமாத், முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ஜெயின் சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்புகள், வியாபாரிகள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் உணவு, குடிநீர், ரொட்டி பாக்கெட்டுகள், உடை, போர்வை உள்ளிட்டவை வேன்களில் அடுத்தடுத்து வந்து இறங்கியவாறு இருந்தன. ஆனால் இவற்றை பெற்று முறையாக விநியோகிக்க போதுமான அளவில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால் உதவிக்காகக் கொண்டு வரப்பட்ட பொருள்கள் சீராகச் சென்றடைந்ததா என்பது தெரியவில்லை.
ஐந்தாவது நாளாக போக்குவரத்து நிறுத்தம்:
   வெள்ளநீர் வடியாததையடுத்து மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஐந்தாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நூற்றுக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் சாலைகளிலும், துறைமுகத்தின் உள்ளேயும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்களில் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. மேலும் இருபதுக்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டக நிலையங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் இவற்றின் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. வெள்ளிக்கிழமை மழை நின்றாலும் கூட இயல்புநிலைக்குத் திரும்ப இன்னும் சில நாள்கள் ஆகலாம் 
என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. 

No comments:

Post a Comment