Friday, 11 December 2015

சாக்கடை நீரில் தவிக்கும் வடசென்னை மக்கள்: நோய்கள் பரவும் அபாயம்

சிறப்பு கவனம் தேவை

திருவொற்றியூர், டிச.6:வெள்ளத்தின்போது பக்கிங்காம் கால்வாயிலிருந்து வெளியேறிய சாக்கடை மற்றும் குப்பைகளால் வடசென்னையில் சுமார் 40 ஆயிரம் வீடுகளில் வசிக்கும் சுமார் 1.50 லட்சம் பேர் தொடர்ந்து கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
     வடசென்னையில் எண்ணூரிலிருந்து கூவம் ஆறுவரை பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. இதில்தான் எண்ணூர், திருவொற்றியூரின் மேற்கு பகுதி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளின் வெள்ளநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் நீர் உள்ளிட்டவை வெளியேற்றப்பட்டு வந்தன. ஆனால் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் வழக்கமாகச் செல்லும் இப்பகுதியிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் கால்வாயில் செல்லவில்லை.  மேலும் குசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து பங்கிங்காம் கால்வாய் நீர் எண்ணூர் கடலுக்குச் செல்ல முடியாமல் மேலே ஏறியது. இதனையடுத்து திருவொற்றியூர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இக்கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கால்வாயில் சென்ற வெள்ளநீர் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் புகுந்தது. இதில் சாக்கடை, குப்பைகளும் உள்ளே வந்ததுதான் இப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாக பெரும் காரணமாக உள்ளது.
சுமார் 1.50 லட்சம் பேர் பாதிப்பு:
   திருவொற்றியூரில் சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், சார்லஸ் நகர், கலைஞர் நகர், 
ஜோதிநகர் உள்ளிட்ட, தண்டையார்பேட்டையில் பரமேஸ்வரன் நகர், தமிழர் நகர் ராஜசேகரன் நகர், மீனாம்பாள் நகர், திருவள்ளுவர் நகர், கருமாரியம்மன் நகர், எழில் நகர் உள்ளிட்ட, கொருக்குப்பேட்டையில் நேரு நகர், அஜிஸ் நகர், பட்டேல் நகர், குமரன் நகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் சுமார் 40 ஆயிரம் வீடுகளில் வெள்ளநீருடன் சாக்கடை, குப்பைகள் புகுந்துள்ளன. இதனால் சுமார் 1.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை குறைந்திருப்பதையடுத்து பக்கிங்காம் கால்வாயிலும் ஓடும் நீர் மட்டம் குறைந்துள்ளதால் இதனால் இப்பகுதியில் தேங்கியிருந்த வெள்ளநீர் படிப்படியாக வடிந்து வருகிறது. 
தேங்கிய கழிவுகள், வெளியேறாத குப்பைகள்:
          பக்கிங்காம் கால்வாயிலிருந்து வெளியேறிய குப்பைகளும், சாக்கடைக் கழிவுகள் தண்ணீருடன் வெளியேறாமல் பெரும்பாலான இடங்களில் படிந்து காணப்படுகின்றன. இதனால் எங்கு பார்த்தாலும் கரிய நிறத்தில் சாக்கடை கழிவுகள், சகதி, குப்பைகளாகவே காணப்படுகின்றன. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. இன்னும் ஒரு சில இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளன. மேலும் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி, மாவு, மளிகைச் சாமான்கள் வெள்ளநீரில் மூழ்கி பாழடைந்து
உள்ளது. 
நோய்கள் பரவும் அபாயம், சிறப்பு கவனம் தேவை:
     பொதுவாகவே வடசென்னையில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகள் பெரும்பாலனவை நெருக்கமான வீடுகள், குடிசைகளால் அமைந்தவையே. எனவே சாக்கடைக் கழிவு குப்பைகளை அகற்றுவதில் தீவிர கவனம் தேவை. மேலும் இப்பிரச்னையால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்னதான் சுகாதாரக் குழுக்களை அனுப்பினாலும் இப்பகுதியின் நோய் பரவும் தீவிரத்திற்கு போதுமானதாக இருக்காது. எனவே இப்பகுதியில் படிந்துள்ள சாக்கடை மற்றும் குப்பைகளை விரைந்து வெளியேற்ற சிறப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும். அப்போதுதான் இப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதிக்கு உள்ளாவதில் இருந்து காப்பாற்ற முடியும் என்பதே தற்போதைய நிலை.


   தீவாக மாறிய மணலி புதுநகர்:
திருவொற்றியூர் பொன்னேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 
வடசென்னையின் கடைக்கோடி பகுதியான மணலி புதுநகர், விச்சூர் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித் தீவாக மாறின. இப்பகுதியில் பெரும்பாலான மக்கள் சுமார் ஐந்து நாள்கள்வரை எவ்வித நிவாரண உதவிகளும் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பல்வேறு அமைப்புகள் வழங்கிய உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் இப்பகுதி மக்களைச் சென்றடையவே இல்லை. எண்ணூர் முகத்துவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம், வல்லூர் வழியாக மட்டுமே இப்பகுதியை அடைய முடிந்தது. பொன்னேரி நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இரவு முதல் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளதால் இப்பகுதி மக்கள் மெள்ளமெள்ள இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். 

No comments:

Post a Comment