Friday, 11 December 2015

தூண்களால் கூவம் ஆற்றில் வெள்ளத்தடுப்பு இல்லை:

மதுரவாயல் உயர்மட்ட பாலத் திட்டத்திற்கு ஒத்துழைக்க தமிழக அரசை வலியுறுத்துவோம்

சென்னைத் துறைமுகத் தலைவர் எம்.ஏ. பாஸ்கராச்சார்

திருவொற்றியூர்,நவ.30:மதுரவாயல்-சென்னைத்துறைமுகம் உயர் மட்ட மேம்பாலத் திட்டப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட தூண்களால் கூவம் ஆற்றில் வெள்ளத் தடுப்பு ஏதும் ஏற்படாததால் இத்திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்கும் படி மாநில அரசை வலியுறுத்துவோம் என சென்னைத் துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் திங்கள்கிழமை தெரிவித்தார்.
    சென்னைத் துறைமுகத் தலைவராக எம்.ஏ.பாஸ்கராச்சாரும், துணைத் தலைவராக் சிரில் ஜார்ஜும் சமீபத்தில் பொறுப்பேற்றனர். இந்நிலையில் துறைமுகத்தின் பல்வேறு செயல்பாடுகள், பிரச்னைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்த செய்தியாளர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  
அப்போது பாஸ்கராச்சார் அளித்த பேட்டி
விபரம்:
    மதுரவாயல்-சென்னைத் துறைமுகம் உயர்மட்ட மேம்பாலத்திட்டத்திற்காக கூவம் ஆற்றில் அமைக்கப்பட்ட தூண்களால் தடுப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இத்திட்டம் தற்போது கிடப்பில் உள்ளது. தற்போது கனமழை பெய்ததால் புறநகர் பகுதிகள் எல்லாம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோதும் கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படவில்லை. எங்கும் உடைப்பு ஏற்பட்டு நகருக்குள் தண்ணீர் புகுந்துவிடவில்லை. இதன் மூலம் பாலத்திற்காக அமைக்கப்பட்ட தூண்களால் வெள்ளத் தடுப்பு ஏற்படாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தை மீண்டும் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைக்குமாறு தமிழக அரசுக்கு விரிவான வேண்டுகோள் கடிதம் விரைவில் அனுப்பப்படும். ஏற்கனவே இத்திட்டத்தை நிறைவேற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  
கட்டமைப்பு குறைவே நெரிசலுக்குக் காரணம்:
     துறைமுகத்தின் முக்கிய பிரச்னையான கண்டெய்னர் போக்குவரத்து 
நெரிசல்தான் முக்கிய இடம் வகிக்கிறது. துறைமுகத்தில் உள்ள இரண்டு முனையங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான கண்டெய்னர்களைக் கையாள முடியும். தற்போது ஆண்டுக்கு சுமார் 18 லட்சம் கண்டெய்னர்கள் தான் கையாளப்படுகின்றன. இருப்பினும் நெரிசல் தொடர்கிறது. லாரிகள் நிறுத்துவதற்கு போதுமான நிறுத்துமிடங்கள் இல்லாதது, முனையங்களில் கிரேன்கள்  பற்றாக்குறை உள்ளிட்டவைகளே இப்பிரச்சினைக்கு மூல காரணமாக உள்ளது. இது தவிர மேலும் சில காரணங்களும் உள்ளன.
      ரேடியோ அலைகளால் அடையாளம் காணும் சாதனம் (RFID-Radio Frequency Identified Device) மூலம் கண்டெய்னர் லாரிகளை ஆவணப் பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டம் இன்னும் ஒரு மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும். எனவே இப்பிரச்னையை ஒட்டு மொத்தமாகத் தீர்ப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். 
ஸ்ரீபெரும்புதூர் உலர் துறைமுகம்:
    ஸ்ரீபெரும்புதூரில் உலர் துறைமுகம் அமைக்கத் திட்டமிடப்பட்டு இதற்கென தமிழக அரசிடமிருந்து சுமார் 100 ஏக்கர் நிலத்தை துறைமுகம் வாங்கியது. மதுரவாயல் உயர்மட்டப் பாலத் திட்டம் முடங்கியது உள்ளிட்ட சில காரணங்களால் உலர் துறைமுகத்திட்டத்தில் பங்கேற்க தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டின. எனவே இத்திட்டமும் முடங்கியது. இதனையடுத்து 100 ஏக்கர் நிலத்தையும் தமிழக அரசிடம் மீண்டும் ஒப்படைப்பது என முன்னர் முடிவு செய்திருந்தோம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவை ஒத்திவைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
ஒளிமயமான எதிர்காலம்:
   நாட்டின் பழமையான துறைமுகமான இத்துறைமுகத்திற்கென பல்வேறு சாதகமான 
அம்சங்கள் உள்ளன. இதனால்தான் இப்பிராந்தியத்தில் தனியார் துறைமுகங்கள் வந்தும்கூட அதிக அளவு சரக்குகளைக் கையாள்வதில் சென்னைத் துறைமுகம் முதலிடம் வகிக்கிறது. எனவே இங்கு நீண்டகாலமாக இருந்துவரும் முக்கிய பிரச்னைகளைத் தீர்க்க தற்போதைய நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. மேலும் சென்னைத் துறைமுகம் குறித்து அனைத்து வகை ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், முகவர்கள், தனியார் நிறுவனங்கள் அறிந்து கொள்ளும் வகையில் வரும் ஜனவரி மாதம் சிறப்பு மாநாடு நடத்த உள்ளோம். எனவே சென்னைத் துறைமுகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. 
மீண்டும் நிலக்கரி கையாள திட்டமா?:
    நிலக்கரி கையாள்வதற்கான தடையை நீக்குமாறு  துறைமுகம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதி முடிவு எடுப்பதற்காக நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவுக்கு மார்ச் 31, 2016 வரை கெடுவிதிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முடிவே இறுதியானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி கையாள்வது துறைமுகத்தின் வருவாய்க்காக மட்டுமல்ல, மின்னுற்பத்தியைப் பெருக்குவதற்கான அவசியத் தேவையாகவும் உள்ளது.
பெங்களூருவுக்கு நேரடி சரக்கு ரயில்:
   துறைமுகம்-திருவொற்றியூர் கான்கார் சரக்குப் பெட்டக நிலையம் இடையை  கண்டெய்னர்களை சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லும் திட்டம் கான்கார் நிறுவனம் மூலம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது டிஎல்ஐ என்ற தனியார் நிறுவனம் மூலம் சென்னைத் துறைமுகம்-பெங்களூரு இடையே கண்டெய்னர் சரக்கு ரயிலை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் 2 ஆயிரம் கண்டெய்னர்களை எடுத்துச் செல்ல முடியும் என பாஸ்கராச்சார் தெரிவித்தார். 
    பேட்டியின்போது துறைமுகத் துணைத் தலைவர் சிரில் ஜார்ஜ், துறைமுக டிரஸ்டி செந்தில்குமார், துறை தலைவர்கள் லலிதா கணபதி, மதபாவி, ஹரிகிருஷ்ணன், பிஎஸ்ஏ சரக்குப் பெட்டக முனைய பொது மேலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment