Friday, 11 December 2015

குசஸ்தலை ஆற்றில் வெள்ளம்: பக்கிங்காம் கால்வாயில் உடைப்பு

திருவொற்றியூர், மணலி பகுதியில் 1 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கினர்

15 படகுகளில் மீட்பு பணி

திருவொற்றியூர், டிச.2:சோழவரம், பூண்டி, செங்குன்றம் ஏரிகளில் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் திருவொற்றியூர், மணலி பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். இவர்களை மீட்க சுமார் 15 படகுகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 
   பூண்டி, சோழவரம், செங்குன்றம் மற்றும் ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளிலும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் அனைத்தும் எண்ணூர் அருகே முகத்துவாரப் பகுதியில் கடலில் கலக்கிறது. மேலும் இதே பகுதியில்தான் பக்கிங்காம் கால்வாய் நீரும் சேருகிறது. ஆற்று வெள்ளம் அதிகரித்ததால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு மூன்று இடங்களில் வெள்ளப் பெருக்கு உடைப்பு ஏற்பட்டது. இதனால் திருவொற்றியூரின் மேற்கு பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், அம்பேத்கர் நகர், ஜோதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவுக்கும் அதிகமாக வெள்ளம் பெருக்கெடுத்தது. 
1 லட்சம் பேர் சிக்கித் தவிப்பு:
   குசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. ஆனால் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர் அருகில் உள்ள விச்சூர், மணலி புதுநகர் சடையங்குப்பம், ஆண்டார்குப்பம், நாப்பாளையம், கவுண்டர் பாளையம், இடையன் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிவீடுகளில் முதல் தளம் வரை வெள்ளம் புகுந்தது. மேலும் திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட 
மக்கள் சிக்கியுள்ளனர். தொடர்ந்து புதன்கிழமையும் மழை கொட்டியதால் ஏரிகளில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்படவில்லை. 
15 படகுகளில் மீட்பு பணி:
    வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க சுமார் 15 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் வரவழைக்கப்பட்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள், தீயணைப்பு படையினர், போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதிகமானோர் சிக்கியுள்ளதால் இவர்களை மீட்பதில் இப்படகுகள் போதுமானதாக இல்லை. மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கின் வேகம் அதிகமாக இருப்பதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விச்சூர் பகுதிகளில் படகுகள் மூலம் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள குழந்தை ஏசு ஆலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் இங்கும் வெள்ள நீர் புகுந்ததால் 
இதே வளாகத்தில் உள்ள பள்ளியின் முதல் தளத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 
உணவு, குடிநீரின்றி தவிப்பு:
   கடந்த மூன்று நாள்களுக்கும் மேலாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போதிய உணவு, குடிநீர் வசதிகள் கிடைக்கவில்லை. புதன்கிழமை மேற்கொண்ட மீட்பு பணிகள் மூலம் சுமார் 5 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் தங்க வைக்கப்படும் இடங்களிலேயே வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பெரிய அளவில் உணவு தயாரிக்க தேவையான பொருள்களை மணலி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்துதான் கொண்டு வர வேண்டும். ஆனால் இப்பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முன்னெச்சரிக்கையுடன் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படாததால் இப்பகுதி மக்கள் குடிநீர், உணவு இன்றி அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதே நிலை வியாழக்கிழமையும் தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமாகும்.
உரத்தொழிற்சாலை அருகே 6 அடிக்கு தண்ணீர்:
     புழல் ஏரிக் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சாலையில் வெள்ளம் புகுந்தது. இதனையடுத்து மெட்ராஸ் உரத் தொழிற்சாலை அருகே சுமார் 6 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனையடுத்து இச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 
மேலும் பக்கிங்காம் கால்வாய் உடைப்பு ஏற்பட்டதால் ஏற்பட்ட வெள்ளத்தால் 
எர்ணாவூர் மேம்பாலம் முதல் சத்தியமூர்த்தி நகர்வரை இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. 
இதனையடுத்து திருவொற்றியூரிலிருந்து மணலி புதுநகர், மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன.
பொன்னேரி நெடுஞ்சாலையில் தடுப்புகள் அகற்றம்:
      திருவொற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாலையில் பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் பல இடங்களில் நடுவில் உள்ள தடுப்புச் சுவர்களால் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தடுப்புச் சுவர்களை கிரேன்கள் மூலம் பொதுமக்களே அகற்றினர். சாலையில் அமைக்கப்பட்டிருந்த வடிகால் வசதிகள் அனைத்தும் எவ்வித பயனும் அளிக்கவில்லை. மேலும் துறைமுக இணைப்புச் சாலை அமைக்கப்பட்டபோது
வெள்ளம் ஏற்படும் போது தண்ணீர் தேங்கும் பகுதிகள் அறியப்பட்டு அதற்கேற்ற அளவில் சாலைகள் அமைக்கப்படாததே இப்பிரச்னைக்கு காரணம் என்கிறார் இடையன்சாவடியைச் சேர்ந்த கிருபாகரன். 
வடசென்னையையும் கவனிக்க வேண்டும்:
     தென்சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடற்படை, ராணுவம், கடலோரக் காவல்படை உள்ளிட்டவை மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் பெரும்பாலான ஊடகங்களும் இப்பகுதிகளில்தான் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் ஏரிகளில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அடையாறுக்கு நிகராக குசஸ்தலையிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை போதுமான மீட்பு பணிகள் வடசென்னை, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் போதுமான ஒருங்கிணைப்பு இல்லை என்கிறார் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர். 

No comments:

Post a Comment