வெள்ள மீட்பு பணியில் ஈடுபட மேலும் இரண்டு கடற்படை கப்பல் வந்தன
மீட்பு பணி தொடரும்: கடற்படை அதிகாரி அலோக் பட்நாகர்
திருவொற்றியூர், டிச.4:சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் தமிழக அரசுக்கு ஒத்துழைக்க இந்திய கடற்படையின் மேலும் இரண்டு கப்பல்கள் சுமார் 500 வீரர்களுடன் வெள்ளிக்கிழமை சென்னைத்துறைமுகம் வந்தடைந்தன.
இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு கடற்படை அதிகாரி அலோக் பட்னாகர் செய்தியாளர்களிடம் கூறியது,
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் உதவும்படி தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து ஐ.என்.எஸ். ஐராவத் என்ற கப்பலில் சுமார் 20 டன் மருந்து மற்றும் உணவு பொருள்கள் எடுத்து வரப்பட்டன. இந்நிலையில் சக்தி, சையாத்ரி என்ற இரண்டு பெரிய கப்பல்கள் விசாகபட்டனத்திலிருந்து சென்னை வந்துள்ளன. இதில் 80 நீச்சல் வீரர்கள் உள்ளிட்ட 500 வீரர்கள் உள்ளனர். 19 அதிவேகமாகச் செல்லும் ஜெமினி ரக படகுகள், 400 கேன்களில் தண்ணீர், வரப்பட்டுள்ளது. மேலும் 14 டன் உடனடி உண்ணும் உணவு வகைகள், 20 டன் அரிசி, கோதுமை மாவு, மளிகை சாமான்கள், ஆயிரம் போர்வைகள், 2 ஆயிரம் துண்டுகள், ஆயிரம் லிட்டர் பெட்ரோல் உள்ளிட்டவை இக்கப்பல்களின் எடுத்து வரப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
5 லட்சம் லிட்டர் குடிநீர்:
மேலும் இரு கப்பல்களிலும் சுமார் 5 லட்சம் லிட்டர் குடிநீர் மொத்தமாக தொட்டிகளில் நிரப்பி எடுத்து வரப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப எடுத்துச் செல்லப்பட்டு விநியாகிக்கப்படும். மேலும் தேவையான அளவு டீசல் எடுத்துவரப்பட்டுள்ளது. இதனைக்
கொண்டு ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவைகளை இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மேலும் 3 டாக்டர்கள், 9 மருத்துவ பணியாளர்கள் வந்துள்ளனர். இக்கப்பலில் அறுவைச்சிகிச்சை அரங்குடன் கூடிய மருத்துவமனை வசதி உள்ளது. மீட்பு பணியின் போது மருத்துவ உதவிகள் தேவையெனில் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு நேரடியாக கப்பலுக்குக் கொண்டு வந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்.
மேலும் உதவிட தயார்:
தற்போது 4 ஹெலிகாப்டர்கள் கடற்படை சார்பில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மீட்பு பணியில் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகிறோம். தற்போது குறைந்த அளவு நிவாரண உதவிப் பொருள்களை எடுத்து வந்தாலும் தொடர்ந்து உதவிட கடற்படை தயாராக உள்ளது. எந்தப் பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபடுவது என்பது குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் கேட்டு அதற்கேற்றபடி பணியில் ஈடுபடுவோம் என்றார் பட்னாகர்.



No comments:
Post a Comment