Friday, 11 December 2015

சாலையில் ஆறாக ஓடும் சாக்கடை: சீரமைப்பதில் நிர்வாகக் குளறுபடி 

திருவொற்றியூர், டிச.6:திருவொற்றியூர் எர்ணாவூர் மேம்பாலம் அருகே சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைக் குழாயிலிருந்து கழிவு நீர் ஊற்றுபோல் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது.
  திருவொற்றியூர்  நகராட்சியாக இருந்தபோதே சுமார் 18 வார்டுகளில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகளை குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியம் செயல்படுத்தி வந்தது. ஐந்து கட்டப் பணிகளாக நடைபெற்றுவந்த இப்பணிகளில் எர்ணாவூர் பகுதியில் பணிகள் நிறைவடைந்து இரு மாதங்களுக்கு முன்பு திறப்புவிழாவும் நடைபெற்றது. 
இந்நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து திருவொற்றியூர் மேற்கு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பாதாளச் சாக்கடை குழாய்களின் நிலைமை என்னானது என்பது இனிமேல்தான் தெரிய வரும் 
    எர்ணாவூர் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீர் பாதாளக் குழாய்கள் வழியாக 
வந்து வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் ஏற்றும் மையத்திற்கு வந்தடைகின்றன. இதில் சுனாமி மறுவாழ்வு குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பாரத்நகர்  வழியாக நீரேற்று நிலையத்திற்கு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக 
எர்ணவூர் மேம்பாலம் அருகே உள்ள பாதாளச் சாக்கடை குழாயிலிருந்து ஆள் இறங்கும் துளைகள் வாயிலாக ஊற்றுபோல கழிவு நீர் வெளியேறி வருகிறது. 
துர்நாற்றம், நிர்வாகக் குளறுபடி:
இது குறித்து பாரத்நகரை கிராம நலச் சங்க நிர்வாகிளில் ஒருவரான சேர்ந்த பி.பாலு கூறியது,
    இச்சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கு கழிவுநீர் தேங்கியுள்ளது. இப்பகுதியின் முக்கியச்சாலையே இதுதான். இதனால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலாகவே இருந்து வரும். இந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்கின்றனர். நீரேற்று நிலையத்தில் மோட்டார்கள் சரிவர இயக்கப்படாததால் கழிவுநீர் குழாய்களிலிருந்து வெளியேறுகிறது. இது குறித்து வாரியத்தின் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் இது வாரியத்தின் கட்டுமானப் பிரிவிலிருந்து பராமரிப்புத் துறைக்கு ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இப்பிரச்னையைத் ஒரே வாரியத்தின் இரு பிரிவுகளுக்குள் கூட ஒற்றுமையில்லாது அதிகாரிகளின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது. எனவே கழிவு நீர் அகற்றல் வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். மேலும் சேதமான ஆள் இறங்கும் துளைகளைச் சீரமைக்க வேண்டும் என்றார் பாலு

No comments:

Post a Comment