கல்வியறிவுக்கான மதிப்பீடு கணிணி அறிவோடு இணைந்ததாகிவிட்டது
அரிமா ஏ.மரியநாதன்
திருவொற்றியூர், அக்.6:தற்போதைய நிலையில் கல்வியறிவு பெற்றவர்களுக்கான மதிப்பீடு கணிணி அறிவோடு இணைந்ததாகிவிட்டது என அரிமா சங்க நிர்வாகி ஏ.மரியநாதன் திருவொற்றியூரில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் பெண்களுக்கான கணிணி பயிற்சி மையம் திருவொற்றியூர் ஜோதிநகரில் சமீபத்தில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இங்கு பயிற்சி பெற்ற பெண்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அரிமா சங்க (நூற்றாண்டு விழா) மண்டல தலைவர் ஏ.மரியநாதன் பயிற்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் புதியதாக
இணையும் பெண்களுக்கான பயிற்சி திட்டத்தை திருவொற்றியூர் அரசு கல்லூரி முதல்வர் முனைவர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மரியநாதன் பேசியது,
தற்போதைய நிலையில் கல்வியறிவு பெற்றவர்களுக்கான மதிப்பீடுகள் என்பது கணிணி அறிவுடன் இணைந்ததாக உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு படித்துப்
பட்டம் பெற்றவர்கள் திருமணத்திற்கு பிறகு குடும்பம், பிள்ளைகளுடன் கூடிய வீட்டை பராமரிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். தற்போது வளர்ந்து வரும் கணிணிமயமாக்கத்தால் ஏராாளமான வலைதளங்கள், நவீன செல்போன்கள், உள்ளிட்டவற்றைக் கையாள்வதற்கு வீட்டிலிருக்கும் பெண்களுக்கு சிரமமாக உள்ளது.
மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய பெண்களுக்கு
கணிணி அறிவு அவசியமாகிறது. மேலும் கணிணி பயிற்சி இருந்தால்
வீட்டிலிருந்தபடியே கூட வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம். இதனைக் கருத்தில் கொண்டுதான் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் இப்பகுதியில் நிரந்தர
பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அடிப்படையான கணிணி குறித்த பயிற்சிகள், வலைதளங்களைக் கையாள்வது, முகநூல், சுட்டுரை, மின்னஞ்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்றார் மரியநாதன்.
குழந்தைகளுக்கு உதவ முடியும்:
நிகழ்ச்சியில் பயிற்சி முடித்த பெண்கள் கூறியது,
நாங்கள் ஏற்கனவே ஓரளவு படித்திருப்பதால் இப்பயிற்சி பெரும் உதவியாக இருந்தது. தற்போது அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் பிள்ளைகளுக்கு பயிற்சித் திட்டம் என்ற பெயரில் ஏராளமான பணிகளை பிள்ளைகள் மூலம் செய்துவரச் சொல்கின்றனர். கணிணி அறிவு இல்லாம் இப்பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உதவ முடியாது. இப்பயிற்சியின் மூலம் குழந்தைகளின் பயிற்சித் திட்டங்களுக்கு நாமே நேரடியாக உதவ முடியும். மேலும் வீட்டைப் பார்த்துக் கொண்டே கணிணி மூலம் வேலை செய்து சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றனர்.
இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜி.வரதராஜன், சென்னை பசுமை இயக்க நிர்வாகிகள் என்.துரைராஜ், கே.சுப்பிரமணி, செயின்ட் ஆண்டனி பள்ளி முதல்வர் கேப்ரியேல் ரவி, நகைச்சுவை நடிகர் வெங்கையா பாலன் மற்றும் கிராம நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment