Thursday, 13 October 2016

வடசென்னை பகுதியில்  272 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடைபெற்றது

திருவொற்றியூர், செப்.11: வடசென்னை பகுதியில் எர்ணாவூர், திருவொற்றியூர், காசிமேடு உள்ளிட்ட மூன்று இடங்களில் 272 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கடலில் கரைக்கப்பட்டன.
எர்ணாவூரில் 96 சிலைகள்:
    திருவொற்றியூர் பகுதி எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் அருகே உள்ள கடற்கரையில் சுமாா் 98 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இங்குள்ள சான்கோ தனியார் நிறுவனம் வழங்கியிருந்த ராட்சத கிரேன்கள் மூலம் இறக்கி வைக்கப்பட்ட சிலைகள் கட்டுமரம்,  பைபர் படகுகள் உள்ளிட்டவை மூலம் ஆழ்கடல் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோழவரம், மீஞ்சூர், மாதவரம், மணலி, எர்ணாவூர், எண்ணூர், புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இங்கு கொண்டு வரப்பட்டன. இங்கு மட்டும் 96 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இது தவிர இந்து முன்னணி சார்பில்  எண்ணூர், அன்னை சிவகாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த  சுமார் 11 சிலைகள் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.  மாதவரம் போலீஸ் துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
வெறிச்சோடிய திருவொற்றியூர்:
    திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை அருகே சிலைகள் கரைக்க  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென கிரேன், படகு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன. ஆனால் இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஒரே ஒரு சிலை மட்டுமே எடுத்துவரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. திருவொற்றியூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 14 சிலைகள் கடந்த புதன்கிழமையே கடலில் கரைக்கப்பட்டுவிட்டன. இன்னும் சில சிலைகள் காசிமேடு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு
விட்டன. இதனால் ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியே வெறிச்சோடியது. 
காசிமேட்டில் 175 சிலைகள்: 
    காசிமேடு என் 4 காவல் நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை 175 சிலைகள் கரைக்கப்பட்டன. வண்ணாரப்பேட்டை, பூக்கடை காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் காசிமேடு கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. ஐந்து படகுகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் போலீஸாருடன் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 
வடசென்னை போலீஸ் துணை ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் சுமார் 
ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 
எவ்வித அசம்பாவிதமும் இன்றி சுமூகமான முறையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது போலீஸாரை நிம்மதியடையச் செய்தது.    

No comments:

Post a Comment