Thursday, 13 October 2016


காவிரி பிரச்னைக்கு வேலை நிறுத்தங்கள் தீர்வாகுமா?

காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தவிட்டதை எதிர்த்து கர்நாடகத்தில் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதனைப் பார்த்து நாடே காரி உமிழ்ந்தது. இரண்டு நாள்கள் நடைபெற்ற நாடகங்களுக்குப் பிறகு கர்நாடகா அரசு விழித்துக் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தியது. கலவரக்காரர்களை அடக்குமாறு போலீஸாருக்கு கடும் உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன. இனி எதிர்காலத்தில் பெங்களூருக்கு வெளியூர், வெளிநாட்டவர்கள் வருவார்களா? அப்படியே வந்தாலும் தொழிலில் முதலீடு செய்வார்களா? சந்தேகம் கர்நாடகாவிற்கே வந்து விட்டது....உச்சநீதிமன்றத்தின் கடுமையான உத்தரவால் 20-ம் தேதிவரை சப்தமின்றி தண்ணீர் திறந்துவிட்டே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு கர்நாடகம் தள்ளப்பட்டுள்ளது. 
     இந்நிலையில் கர்நாடகத்தில் வேலை நிறுத்தம் நடத்திவிட்டார்கள். இதற்கு போட்டியாக தமிழகத்திலும் ஒரு நாள் வேலை நிறுத்தம். இது தேவைதானா என்பதே என்னுள் எழுந்த கேள்வி...இவ்வாறு கேட்பர்கள் தமிழினத் துரோகியாகச் சித்தரிக்கப்படலாம்...ஆனால் அறிவு சார்ந்து சிந்தித்தால் இந்த வேலை நிறுத்தத்தால் ஒரு பயனும் கிடைக்கப் போவது இல்லை. விவசாயிகளின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது வேறு. கன்னடர்களுக்கு இணையாக இன,மொழி வெறி போராட்டங்களை நடத்துவது வேறு.
மொழி, இனவெறியே காரணம்:
    காவிரி பிரச்னையை நீண்ட காலமாகத் தொடர்ந்து பார்த்தும்.. படித்தும் வருபவர்களுக்கு தற்போதைய கலவரங்கள், போராட்டங்கள் காவிரி நீருக்காக மட்டுமல்ல, அதையும் தாண்டி உலகளவில் வளர்ந்து வரும் இன,மொழி, மத,சாதி அடிப்படையிலான என வேறுபாட்டு சித்தாந்தமே என்பது புரிந்து கொள்ளக்கூடியதே.
பெங்களூரு கன்னடர்களுக்கு மட்டுமேயும், சென்னை தமிழர்களுக்கு மட்டுமேயும்,  மும்பை மராட்டியர்களுக்கு மட்டுமேயும் சொந்தமானதும் அல்ல...எத்தனை தொழிற்சாலைகள், நிறுவனங்கள்  இங்கேயும் அங்கேயும் உள்ளன. இவற்றின் முதலாளிகள் யார்? தொழிலாளிகள் யார்? எந்த மாநிலத்தவர் என இனம் பிரிக்க முடியுமா? தமிழகத்தில் முதலமைச்சருக்கு அருகில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் மலையாளம், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான்.... சென்னை மாநகர காவல் ஆணையர்-மலையாளி, தலைமைச் செயலாளர்- தெலுங்கர். உயர்நீதிமன்ற நீதிபதி-இந்தி...என்னற்ற ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. எனவே 
இன,மொழி பேதங்களை ஆதரிக்க முடியாது....
     வேலை நிறுத்தத்தை முதலில் அறிவித்த வியாபாரி சங்கங்கள் என்றைக்காவது தக்காளி கிலோ 2 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 5 ரூபாய்க்கும் விற்றபோது விவசாயிகளைப் பற்றி கவலைப்பட்டார்களா?  நியாயமாக கிலோ ரூ. 20 க்குத்தான் வாங்கி விற்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றார்களா?. நம்நாட்டு விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் என கவலையடைந்த  படித்து வேலையில் உள்ள இளைஞர்கள் விவசாயிகளின் நலன் கருதி இனி பழச்சாறுகள் மட்டுமே குடிப்போம் என உறுதி எடுத்தார்களா?. காரணம் இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே விவசாயி எப்போதும் நாதியற்றவனே..
    ஒரு போக விவசாயம் பொய்த்துவிட்டால் அடுத்த போகம் விளையும் வரை அந்தக் குடும்பமே சோற்றுக்குக் கூட கஷ்டப்படும். விவசாயத்தை விட்டு நகரத்தை நோக்கி நகரத் தொடங்கியதால் நிலைமை மாறி வருகிறது. விவசாயம் செய்யாத விவசாயி பணக்காரனாக இல்லாவிட்டாலும் கடன்காரனாக இல்லாமலிருக்கிறான். தமிழகத்தில் விளையும் காய்கறிகள் கேரளா செல்கிறது. கர்நாடக வெங்காயம், தக்காளி சென்னையில் குவிகிறது. ஆந்திர பருப்பு, அரிசி தமிழகம் வருகிறது. எனவே விவசாயி எங்கிருந்தாலும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. இதில் பிரிவினை கூடாது.
தீர்வு மத்திய அரசின் கையில்:
       நான்கு மாநிலங்களுக்கிடையே 75 ஆண்டு காலமாக இருந்து வரும் காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கே உண்டு. மாநில அரசுகளுக்கு இன உணர்வு இருந்தே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது.  ஆனால் இதற்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டிய மத்திய அரசு என்ன செய்கிறது? இதில் காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி என்பதெல்லாம் வேறுபாடு கிடையாது. வெறும் 146 இடங்களை வைத்து அன்றைக்கு ஆட்சி செய்த பிரதமர் வி.பி.சிங்கால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க முடிந்தது என்றால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடுவர் மன்றம் வெளியிட்ட இறுதித் தீர்ப்பினை  பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த, இருக்கும் கட்சிகளால் அமலுக்குக் கொண்டுவர முடியாதா?  முடியும்...அவர்களுக்குத் தேவையில்லை...தீர்ப்புகளை அமல்படுத்துவதன் மூலம் அரசியல் லாபக் கணக்குகள் சரிவதை எந்தக் கட்சிதான் ஏற்கும்? நடுவர் மன்றத் தீர்ப்பில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் அமைக்க வேண்டும் என நடுவர் மன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை அரசிதழில் வெளியிடவே
கடும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டி இருந்த நிலையில் தீர்ப்பாவது... ஆணையமாவது... 
மாநிலங்களிடையேயான பிரச்னையில் மெத்தனம்:
    தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது  நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி குறித்து யாருக்கும் அக்கரையில்லை.. காவிரி பிரச்னையில் மட்டுமல்ல...தெலுங்கானா-ஆந்திரம் இடையேயான பிரச்னைகள், பாலாறு பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை என இருமாநிலங்கள் சம்மந்தப்பட்ட  எந்த பிரச்னையிலும் மத்திய அரசின் செயல்பாடுகள் சமீப காலமாக  திருப்திகரமாக இல்லை. எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் சென்றுதான் போராட வேண்டும் எனில் ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், மத்திய அரசு எல்லாம் எதற்கு? 
    இங்கு வாக்கு வங்கி அரசியல்தான் அனைத்து முடிவுகளையும் நிர்ணயம் செய்கிறது. கர்நாடகத்தில் கலவர அமளியில் ஈடுபட்டோர் பெரும்பாலனவர்கள் எதிர்கட்சியைச் சேர்ந்த பா.ஜ.கவினர் எனக் கூறப்படுகிறது. கர்நாடகத்தில் திடீரென வெடித்த கலவரத்தில் தனி மனித சுதந்திரம் பறிக்கப்படுகிறது,  மக்கள் பீதியில்
உறைகின்றனர், ஊடகங்களில் தொடர்ந்து ஊழைச் சப்தம்தான் கேட்கிறது. ஆனாலும்  நாட்டின் பிரதமருக்கும், உள்துறை மந்திரிக்குமே இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் தகவல் தெரியவருகிறது. பிறகு நாமும் ஏதாவது கூற வேண்டும் என நினைத்த பிரதமர் இருமாநில மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பொத்தாம் பொதுவாக வேண்டுகோள் விடுத்தார். ராமதாஸ் பாணியில் சொல்வதென்றால் கட்டப் பஞ்சாயத்து.. சுதந்திரத்திற்கு பிறகு நாட்டினை ஒருங்கிணைத்த இரும்பு மனிதர்  சர்தார் பட்டேல் இங்கே? தேச ஒற்றுமையைக் கூறுபோடும் தற்போதைய தலைவர்கள் எங்கே?
    சட்டத்தை பலம் பொருந்தியவன் கையிலெடுக்கும்போது எளியவனைக் காப்பாற்றாத அரசுகள் இருந்தென்ன பயன்? மலர்வளையம் வைப்பற்கு தலைவர்கள் தேவையில்லை. மலர் தொடுக்கும் பூக்காரர் போதுமே. கூலி வேலைக்கு போனவர்களை காட்டுக்குள் அழைத்துப் போய் சுட்டு பிணமாக்கினார்கள். இதுவரை மத்திய அரசு ஏதாவது தலையிட்டது உண்டா? அதாவது மாநில ஆட்சியை விட மத்திய அரசு பலமானது அல்ல (356 பிரிவை நீக்கிய பிறகு) என்பதே நிதர்சன உண்மை.
அழுத்தம் கொடுப்பதே அனைவரின் கடமை:
    இந்திய நதிகள் அனைத்தையும் தேசிய மயமாக்க வேண்டும். ஒட்டுமொத்த தண்ணீரின் அளவை கணக்கிட வேண்டும். மழை நீரைச் சேமிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இரு மாநிலங்கள் தொடர்புடைய பிரச்னைகளில் 
வலுவான அதிகாரங்கள் நிறைந்த ஒழுங்காற்று ஆணையங்களை அமைக்க வேண்டும். ஒட்டுமொத்த விவசாயத்தையும் கணக்கிட்டு புள்ளி விபரப்படுத்த வேண்டும். 
விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை குறித்து போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
விளைபொருள்களுக்கு சந்தையில் நியாயமான விலை கிடைக்காதபோது அரசு தலையிட்டு கொள்முதல் செய்து விளைபொருள்களைப் பாதுகாக்க வேண்டும்.
மழைக்காலத்திற்கு முன்பே கால்வாய்கள், கண்மாய்களைச் சீரமைக்க வேண்டும். நதிகளை இணைப்பது என்பது பெருங்கனவு... இருப்பினும் அதற்கான செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்...நடைமுறையில் உள்ள சட்டங்களை, நீதிமன்றத் தீர்ப்புகளை யார் மீறினாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு பிரதமர், குடியரசுத் தலைவருக்கு இருக்க வேண்டும்.
    இது போன்ற கருத்துக்களுக்குக் ஊக்கம் கொடுத்து ஆளும் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய சங்கங்கள், பொதுமக்கள் ஒற்றுமையை, இன உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம் என்ற ஒரு பயனைத் தவிர இந்த வேலை நிறுத்தத்தால் எவ்வித பயனும் விழையப்போவது இல்லை. மனித நேயம் மட்டுமே மக்களை வாழ வைக்கும்...இது உலகளாவிய பொதுமறை... 

No comments:

Post a Comment