Thursday, 13 October 2016

திருவொற்றியூரில் தொடரும் விபத்துகள் : சுரங்கப் பாதை அமைக்க கோரிக்கை

மண்டலக் குழு கூட்டத்தில் தீர்மானம்


திருவொற்றியூர், செப்.6:அடிக்கடி நிகழும் விபத்துக்களைத் தடுக்க எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூர் மயானம் அருகே சுரங்கப்பாதை (Underpass) அமைக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவொற்றியூர் மண்டலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழு தலைவர் மு.தனரமேஷ் கூறியது,
    சென்னை, எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தின் கீழ் எண்ணூர் விரைவு சாலை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 
திருவொற்றியூர் மயானம் அருகே ரூ.5 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்க 
திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திட்டத்தில் உறுதியளித்தப்படி பாலம் அமைக்காமலேயே சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. இது குறித்து அப்போதே 
எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.
      தற்போதைய சாலையின் கிழக்குப் புறத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசிக்கின்றனர். மேலும் திருவொற்றியூரின் பிரதான மயானம், பட்டினத்தார் கோயிலும் கிழக்குப் பகுதியில்தான் உள்ளன. மேற்கு பகுதியில் வடிவுடையம்மன் கோயில், முக்கிய வியாபாரத் தலங்கள், நீதிமன்றம் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன. மேலும்  பெருவாரியாக மக்கள் வசிக்கும் மேற்கு பகுதியிலிருந்து கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மயானத்திற்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட சடலங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன.  நூற்றுக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் விரைந்து செல்லும் நிலையில் இரு திசைகளிலும் தொடர்ந்து பாதசாரிகள் ஆபத்தான நிலையில் சாலையைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது. 
       இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் இச்சாலையில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. எனவே இங்கு ஏற்கனவே திட்ட அறிக்கையில் உடனடியாக பாலம் அமைக்க வேண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மண்டலக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் தனரமேஷ்.

No comments:

Post a Comment