Thursday, 13 October 2016

திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் புதிதாக அமைக்கப்படுமா?

பொதுமக்கள், வழக்குரைஞர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறுமா?

திருவொற்றியூர், செப்.25:திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் (Sub Court) அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். 
     திருவள்ளூர் மாவட்டத்தில் 37 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள ஒருங்கிணைந்த வளாகத்தில்  மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இயங்கி வருகிறது. கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றம், தலைமை குற்றவியல் நடுவர், குடும்ப நல நீதிமன்றம், நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றம், வாகன விபத்து தீர்ப்பாயம் உள்ளிட்ட 13 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. 
        பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் சார்பு நீதிமன்றங்களுடன் கூடிய உரிமையியல், குற்றவியல் நடுவர் மன்ற நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும் அம்பத்தூர், ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.  இந்நிலையில் அதிக மக்கள் தொகை நெருக்கம் நிறைந்த திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்களிடையே நீண்டகாலமாக கோரிக்கை இருந்து வருகிறது. 
சார்பு நீதிமன்றம் அமைவதன் பயன் என்ன?
    தற்போது திருவொற்றியூரில் அமைந்துள்ள உரிமையியல் நீதிமன்றத்தில்  ரூ.1 லட்சம் மதிப்புள்ள தாவாக்களுக்கு மட்டுமே வழக்குத் தொடுக்க முடியும். ஆனால் ரூ.20 லட்சம் வரையிலான தாவாக்களுக்கு சார்பு நீதிமன்றத்தில்தான் வழக்காட முடியும். இதேபோல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அதிகபட்சம் 3 ஆண்டுகள்வரை தண்டனை வழங்கக் கூடிய வழக்குகள் மட்டுமே விசாரணை நடத்த முடியும். சார்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டால் 7 ஆண்டுகள் தண்டனை வழங்கக் கூடிய கொலை முயற்சி (இந்தியச் தண்டனைச் சட்டம் பிரிவு 307) உள்ளிட்ட வழக்குகளைக்கூட  விசாரிக்க முடியும்.
      மேலும் வாகன விபத்து, மணமுறிவு, நில மோசடி உள்ளிட்ட பெரும்பாலான வழக்குகளை தற்போது திருவொற்றியூர் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. மேலும் தற்போதுள்ள பொருளாதார  சூழ்நிலையில் ரூ. ஒரு லட்சம் என்பது அதிகமான தொகை அல்ல. வாகன விபத்துக்களும், மணமுறிவு வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றன. எனவே திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. 
10 லட்சம் மக்கள் தொகை:
இது குறித்து திருவொற்றியூர் பொதுவர்த்தக சங்க கௌரவத் தலைவர் ஜி.வரதராஜன் கூறியது,
   சென்னையை ஒட்டிய முக்கிய பகுதிகளில் திருவொற்றியூர் முக்கியமானதாகும்.  திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மாதவரம், புழல், செங்குன்றத்தின் ஒரு பகுதி திருவொற்றியூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட காவல் நிலையங்களின் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவாகின்றன.  இதில் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகள் மட்டுமே திருவொற்றியூரில் உள்ள நீதிமன்றங்களால் விசாரிக்க முடிகிறது. பொன்னேரியில் ஏற்கனவே கூடுதல் மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட ஐந்து நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் திருவொற்றியூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் வழக்குகள் பொன்னேரி நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் அமைத்து இவ்வழக்குகளை இங்கு மாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வரதராஜன். 
ஒருங்கிணைந்த நீதிமன்றம் தேவை:
   இது குறித்து திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கத்தின் தலைவர் என்.நாகசுந்தரம் கூறியது,
   திருவொற்றியூரில் 1969-ம் ஆண்டு திருவொற்றியூரில் குற்றவியல் நடுவர் மன்ற நீதிமன்றமும் (J.M. Court), 1996-ல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் (Munsif Court) அமைக்கப்பட்டன. திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கான 
அனைத்து தகுதிகளும் உள்ளன. மேலும் மாநகர எல்லைக்குட்பட்ட திருவொற்றியூர் பகுதிக்கென ஒருங்கிணைந்த நீதிமன்றம் அவசியமானது. இதற்கென கட்டடங்களை அணைக்க எர்ணாவூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் கனிம வளத்துறையின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சார்பு நீதிமன்றம் அமைக்கவும், எர்ணாவூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்களை அமைக்கவும்  திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்துள்ளோம். வரும் செப்.29-ம் தேதி இம்மனு விசாரணைக்கு வருகிறது.
      மேலும் திருவொற்றியூர் முன்சீப் நீதிமன்றத்துக்கென இதுவரை அரசு 
வழக்குரைஞர் (Govt Pleader) இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்திலேயே அரசு வழக்குரைஞர் இல்லாத நீதிமன்றம் திருவொற்றியூர்தான். 
திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கத்தில் மட்டும் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். எனவே சார்பு நீதிமன்றத்துடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் இங்கு அமைக்கப்பட்டால் வழக்குரைஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரிதும் பயன் பெறுவார்கள். எனவே இதில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நாகசுந்தரம். -

No comments:

Post a Comment