Thursday, 13 October 2016


எண்ணூரிலிருந்து கொச்சி, கண்டலாவிற்கு கப்பலில் சென்ற 2 ஆயிரம் கார்கள் 

உள்நாட்டு சரக்குக் கப்பல் போக்குவரத்து அறிமுகம் 

திருவொற்றியூர், செப்.24: எண்ணூர் காமராாஜர் துறைமுகத்தில் உள்நாட்டு சரக்குக் கப்பல் போக்குவரத்து முதல்முறையாக வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் கப்பலான எம்.வி. டிரெஸ்டனில் சுமார் 2 ஆயிரம் கார்கள் ஏற்றும் பணி சனிக்கிழமை நிறைவடைந்தது. இக்கப்பல் கொச்சி வழியாக ஒரு வாரத்தில் குஜராத் மாநிலத்தின் காண்டலா துறைமுகம் சென்றடைகிறது. 
    உள்நாட்டு நீர்வழி, கடலோரப் போக்குவரத்து மூலம் உள்நாட்டுச் சரக்குகளை கப்பல்கள் மூலம் துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்வதை ஊக்கப்படுத்தும் வகையில் 
'சாகர்மாலா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி கப்பல் போக்குவரத்து அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதில் நாட்டின் பெரிய துறைமுகங்கள் மூலம்  இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு வசதியாக துறைமுகத்திற்கு உள்ளே, வெளியே உள்நாட்டுச் சரக்குகளைக் கொண்டு செல்ல சிறப்புப் பாதைகள், கட்டமைப்பு வசதிகள், சுங்கத்துறை சிறப்பு அனுமதி உள்ளிட்டவைகள் அனைத்து துறைமுகங்களிலும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சாலைப் போக்குவரத்து நெரிசல் குறையும், இதன்மூலம் விபத்துகள் குறையும் மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என்பதே   இத்திட்டத்தின் சிறப்பு நோக்கமாகும். இத்திட்டம் பல்வேறு துறைமுகங்களில் ஏற்கனவே தொடங்கிவைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
   இந்நிலையில் உள்நாட்டு சரக்கு கப்பல் போக்குவரத்து எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த  சிகால் லாஜிஸ்டிக் என்ற தனியார் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட எம்.எவி. டிரெஸ்டன் (M.V.Dresden) என்ற கப்பல் காமராஜர் துறைமுகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தது.  இக்கப்பலின் முதல் பயணத்தில் (First Voyage) ஹூண்டாய், ரினால்ட், ஃபோர்டு உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களின் சுமார் 2 ஆயிரம் கார்கள் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டன. 
கட்டணங்களில் 80 சதவீதம் சலுகை:
    கப்பலில் கார்கள் ஏற்றும் பணியை துறைமுகத்தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் 
வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தார். ஆனால் கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்பட்டதால் சனிக்கிழமை கார்களை ஏற்றும் பணி நிறைவடைந்து கப்பல் புறப்பட்டுச் சென்றது. 
இப்புதிய திட்டம் குறித்து  பாஸ்கராச்சார் கூறியது,
   இக்கப்பல் இரண்டரை நாளில் கொச்சித் துறைமுகம் செல்லும். அங்கு 500 கார்களை இறக்கிவிட்டு அங்கிருந்து 1500 கார்களுடன் குஜராத்தின் காண்டலா துறைமுகத்திற்கு 4 நாள்களில் சென்றடையும். பின்னர் அங்கிருந்து ஹோண்டா, ஃபோர்டு நிறுவன வாகனங்கள் இதே கப்பலில் ஏற்றி எண்ணூர் காமராஜர் துறைமுகம் கொண்டு வரப்படும்.  முதல் கட்டமாக மாதம் இருமுறை இக்கப்பல் இதே வழித்தடங்களில் இயக்குவதற்கு சிகால் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. உள்நாட்டுச் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக கப்பல்த்துறை அமைச்சகம் பல்வேறு சலுகைகளை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி வெளிநாட்டு ஏற்றுமதிக்காக கையாளப்படும் கார் ஒன்றுக்கு ரூ.2,500 கட்டணம் எனில் உள்நாட்டிற்குள்ளே செல்லும் காருக்கு ரூ.500 மட்டுமே கட்டணம் விதிக்கப்படுகிறது. இதேபோல் கப்பல்கள் நிறுத்துவதற்கான கட்டணம் (Warfage Charges), கப்பல் சார்ந்த கட்டணங்கள் உள்ளிட்ட கட்டணங்களில் சுமார் 80 சதவீதம்வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்வதை விட கப்பல்களில் எடுத்துச் செல்வது செலவு குறைவாக இருக்கும்.
இதேபோல் படிப்படியாக மற்ற சரக்குகளையும் கடல்வழி மார்க்கமாக எடுத்துச் செல்ல 
திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பாஸ்கராச்சார்.
    இந்நிகழ்ச்சியில் துறைமுக பொதுமேலாளர்கள் வி.கிருஷ்ணசாமி, ஏ.கே.குப்தா, உயர் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், கருப்பையா, சிகால் லாஜிஸ்டிக் நிறுவன மேலாண்மை இயக்குனர் ரமேஷ், முதுநிலை மேலாளர் (மக்கள் தொடர்பு) அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment