Thursday, 13 October 2016


சிறுவர்களை ஈர்க்கும் சீனாவின் தெளிப்பான் மிட்டாய்கள் 

சில்லரை விலைச் சந்தையைக் கைப்பற்றும் சீனா 

திருவொற்றியூர், செப்.9:சிறுவர்களை தன்வயப்படுத்தும் சீன நாட்டின் புதிய வகை மிட்டாய்கள் இந்தியச் சந்தையை ஆக்கிமிக்கத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் இந்தியாவின் பாரம்பரிய மிட்டாய் வகைகளுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி கள் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் எனக் கூறப்படுகிறது.
    சீனாவிலிருந்து பொம்மைகள், பிளாஸ்டிக் பொருள்கள், அழகு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ரசாயன பொருள்கள், டயர்கள், இரும்புத் தகடுகள் என ஏராளமான பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் 65 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.4.25 லட்சம் கோடி) சீனப் பொருள்கள் இந்தியாவிற்கு 
இறக்குமதியாகின்றன. ஆனால் இந்தியாவிலிருந்து சுமார் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு மட்டுமே சீனாவிற்கு இந்திய தயாரிப்பு பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கும் வகையில் சீன பொருள்களின் இறக்குமதி  ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிறுவர்களை ஈர்க்கும் வகைவகையான மிட்டாய் வகைகள் வரத் தொடங்கியுள்ளன. இவைகளால் 
ஆபத்துகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கூறுவது என்ன?
ஆசையைத் தூண்டும் தெளிப்பான் மிட்டாய்கள்:
இது குறித்து திருவொற்றியூர் சக்திபுரத்தைச் சேர்ந்த ஜி.சரவணன் கூறியது,
   எனது இரண்டு குழந்தைகளும் திருவொற்றியூர் காலடிபேட்டையில் உள்ள தனியார் தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர். காலையில் பள்ளிக்குக் செல்வதற்கு முன் அருகே உள்ள பெட்டிக் கடையில் இருக்கும் மிட்டாய் வகை ஒன்றை வாங்கி தந்தே ஆக வேண்டும் என அடம் பிடித்தனர். அதனை வாங்கிப் பார்த்தபோது அது வாயு வடிவிலான சாக்கலேட் மிட்டாய் அடங்கிய தெளிப்பான்கள் (Spray Candy) எனத் தெரிய வந்தது. சிறிய அளவிலான இம்மிட்டாய்கள் ரூ.10 க்கு விற்கப்படுகிறது.  பல்வேறு சுவைகளில் விற்கப்படும் இவ்வகை மிட்டாய்கள் சிறுவர்களை வெகுவாக ஈர்க்கிறது. மேலும் படிப்படியாக அடிமையாகின்றனர். பெற்றோர்களுக்கும் அடம்பிடிக்கும் குழந்தைகளை திருப்திப்படுத்த வேறு வழி இல்லை. எனவே எவ்வித ஊட்டச் சத்துக்களும் இல்லாத இது போன்ற கவர்ச்சிகரமான மிட்டாய்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார் சரவணன்.
ஊட்டச் சத்துமிக்க பாரம்பரிய மிட்டாய் தொழில் நலிவடையும்:
சென்னை மிட்டாய் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பி.தங்கப்பெருமாள் கூறியது,
   சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எந்தப் பொருளும் தரத்துடன் இருப்பதில்லை.  ஒரு முறை பயன்படுத்திவிட்டு பழுதானால் தூக்கி எறிய வேண்டிய 
நிலையில் உள்ளன. இந்நிலையில் எவ்வித தரக்கட்டுப்பாடும் இன்றி தயாரிக்கப்படும் 
சீன மிட்டாய்கள் உள்ளூர் சந்தையை வேகமாக ஆக்கிரமித்து வருகிறது. இதனால்
ஊட்டச் சத்து நிறைந்த ரொட்டி வகைகள், கடலைமிட்டாய், கமர்கட், எள்ளுருண்டை உள்ளிட்ட மிட்டாய் வகைகள் விற்பனை வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் பாரம்பரி மிட்டாய் தொழில்கள் நலிவடையும். மேலும் கவர்ச்சிகரமான பேக்கிங்கை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஒரு ரூபாய் கூட மதிப்பில்லாத சீன பொருள்களை ரூ.10-க்கு விற்கின்றனர். மேலும் 2 ஆண்டுகளுக்கு கெட்டுப் போகாது உத்தரவாதம் அளிக்கின்றனர். அப்படியெனில் அதில் அதிக அளவு பதப்படுத்தும் ரசாயனங்கள் கலந்துள்ளது என்பதே உண்மை.  குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப பல்வேறு வடிவமைப்புகளில் சீன மிட்டாய்கள் வந்தவண்ணம் உள்ளன. பொதுமக்களும், வியாபாரிகளும் இப்பொருள்களை புறக்கணிக்க வேண்டும். அதே நேரம் இதற்கு தடைவிதிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தடைவிதிப்பது சாத்தியமா?:
இது குறித்து சென்னை சுங்கத் துறை முகவர்கள் சங்கத்தின் தலைவர் கே.வி.வி.கிரி
கூறியது,
    வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உணவு பொருள்கள் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், சோதனையிட்டு  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுபாடு 
ஆணையத்தின் (fssai- Food Safety and Standards Authority of India) தடையில்லாச் சான்றுக்குப் பிறகே இந்தியாவில் விற்க அனுமதிக்கப்படுகிறது. இது போன்ற மிட்டாய்களுக்கு தொடக்கத்தில் அனுமதி அளிப்பதில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் வியாபாரிகளின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு உடலுக்குத் தீங்கு அளிக்காது என உறுதி செய்யப்பட்டதால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
பொருளாதார தாராளமயமாக்கல், சர்வதேச வணிக அமைப்பின் (WTO) விதிமுறைகள் போன்றவற்றால் இப்பொருள்கள் இறக்குமதி செய்வதை தடுப்பதற்கு தற்போது வழியில்லை. சுமார் 30 சதவீதம் வரை இறக்குமதி வரி செலுத்தியும் லாபமாகவே இத்தொழில் இயங்கிவருவதாகத் தெரிகிறது.  வியாபாரிகளுக்கு விற்பனையும் லாபமும்தான் முக்கியமாக உள்ளது. எனவே கவர்ச்சிகரமான பொருள்களை நாம்தான் புறக்கணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோர்கள் போதிய அறிவுரைகளைக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பின்னர் படிப்படியாக இதன் தாக்கம் குறையும் என்றார் கிரி.
   பன்னாட்டு வணிகத்தில்  சர்வதேச வர்த்தக கொள்கைகளை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வரும் நிலையில் இது போன்ற தாக்கங்கள் இருக்கத்தான் செய்யும் கையெழுத்திட்ட ஆட்சியாளர்களுக்குப் புரியாதது அல்ல. எனவே மக்கள்தான் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்பதே பெரும்பாலோரின் கருத்தாக உள்ளது. 

No comments:

Post a Comment