Friday, 12 June 2015

காட்டுப்பள்ளி எல் அன் டி துறைமுகத்தில் வாகனங்கள் ஏற்றுமதி தொடக்கம்

திருவொற்றியூர், ஜூன் 8:சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள தனியார் துறைமுகமான எல் அன் டி துறைமுகத்தில் வாகனங்களை நேரடியாக கப்பலில் ஏற்றுமதி செய்யும் முறை (Roll on Roll off-RORO) திங்கள்கிழமை தொடங்கியது.
    எல் அன் டி துறைமுகத்தில் சரக்குப் பெட்டகங்கள் மட்டும் கையாளப்பட்டு வந்த நிலையில் கார் மற்றும் வாகனங்களை நேரடியாகக் கப்பலில் ஏற்றும் தளம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து முதல்முறையாக வாகனங்களை கப்பலில்  ஏற்றுமதி செய்யும் நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது.  நிகழ்ச்சியில் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர் கலந்து கொண்டு முதல் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
அப்போது வாகன ஏற்றுமதி குறித்து துறைமுகத்தின் செயல் அதிகாரி கேப்டன் என்.விஸ்வநாதன் கூறியது,
      தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் அனுமதியுடன் அமைக்கப்பட்டுள்ள இத்துறைமுகத்தை கடந்த ஜன.30, 2013 தமிழக முதல்வர் ஜெயலலிதாதிறக்கப்பட்டது. துறைமுகத்தில் சரக்குப் பெட்டகங்களை மட்டும் பிரத்யேகமாகக் கையாளும் வகையில் சிறப்பு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 60 ஆயிரம் சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டுள்ளோம். தற்போது மார்ஸ்க், என்.ஒய்.கே ஆகிய இரண்டு கப்பல் நிறுவனத்தின் கப்பல்கள் தொடர்ந்து வந்து செல்கின்றன.
   சரக்குப்பெட்டகங்கள் அல்லாத சரக்குகளை கையாள முடிவு செய்யப்பட்டு இதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இரும்புக் கம்பிகளை எஸ்.ஆர் மற்றும் டாடா நிறுவனங்கள் இத்துறைமுகம் மூலம் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகின்றனர். 
   தற்போது 3,500 கார்களை நிறுத்தி வைக்கும் அளவுக்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களை நேரடியாகக் கப்பலில் ஏற்றுவதற்கான கட்டமைப்பு வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை நடைபெற்ற நிகழச்சியில் டைம்லர் நிறுவனத்தின் வாகனங்கள் எம்.வி.கார்டெனியா என்ற கப்பலில் 
ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கார் நிறுவனங்களின் வாகனங்களை இத்துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் கிராணைட் கற்களை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. படிப்படியாக அனைத்து வகை சரக்குகளையும் கையாளும் வகையில் துறைமுகம் திறனுடையதாக மாற்றப்படும். 
  துறைமுகத்திலிருந்து கொல்கத்தா நெடுஞ்சாலையுடன் இணைக்கும் 400 அடி வடக்கு இணைப்பு சாலைத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்தவுடன் இணைப்புச் சாலை பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். தொழி்ல் துறையும் இத்துறைமுகத்தின் பங்குதாரராக உள்ளதால் மாநில அரசும் மிகுந்த ஒத்துழைப்பை துறைமுக நிர்வாகத்திற்கு அளித்து வருகிறது என்றார் விஸ்வநாதன்.
    நிகழ்ச்சியில் தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் நிரஞ்சன் மார்டி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், எல் அன் டி நிறுவன அதிகாரிகள் காந்திராஜன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment