Friday, 12 June 2015

கண்டெய்னர் லாரிகளின் கண்ணாடிகள் உடைப்பு: டிரைவர்கள் சாலை மறியல்

திருவொற்றியூர், மே 30:மணலி அருகே இருபதுக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகளின் கண்ணாடிகளை போக்குவரத்து போலீஸார் உடைத்ததாகக் கூறி லாரி டிரைவர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகள் துறைமுக இணைப்புச் சாலைகளில் சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு மாதவரம், மணலி புதுநகர்  வரிசைகட்டி நிற்கின்றன. இதனை ஒழுங்குபடுத்துவதற்காக சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து காவல் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை உரத் தொழிற்சாலை அருகே உள்ள சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு வரிசையிலிருந்து விலகி வந்த லாரிகளின் கண்ணாடிகளை ரோந்து பணியில் இருந்த போக்குவரத்து போலீஸார் உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட லாரிகளின் கண்ணாடிகள் சேதமடைந்தன. 
   இது குறித்து தகவல் அறிந்த வரிசையில் நின்ற லாரிகளின் டிரைவர்கள் தங்களது லாரிகளை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்த சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் லாரிகளை உடனே எடுக்கும்படி வலியுறுத்தினர். இதற்கு டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மறியலில் ஈடுபட்ட டிரைவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் டிரைவர்-போலீஸாரிடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. பின்னர் உயர் அதிகாரிகளின் தலையிட்டு சமரசம் செய்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் பொன்னேரி, மீஞ்சூர் செல்ல வேண்டிய பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 
போலீஸார் மீது டிரைவர்கள் புகார்:
போராட்டம் குறித்து டிரைவர்கள் கூறியது,
    துறைமுகத்திற்குச் செல்ல நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னையை யாரும் கண்டு கொள்வதாக இல்லை. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்ட போக்குவரத்து காவல் சாவடிகளில் பணியில் உள்ள போலீஸார் முறைகேடுகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். வரிசையிலிருந்து விலகி வரும் வாகனங்களை ஆதாயம் பெற்றுக் கொண்டு அனுப்புவது போலீஸார்தான். ஆனால் சில நேரங்களில் உயர் அதிகாரிகள் வருவார்கள் எனத் தெரிந்தால் டிரைவர்களைத் தாக்குகின்றனர். லாரிகளின் கண்ணாடிகளை உடைக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் இப்பகுதியில் தொடர்கதையாக உள்ளது. எனவே நெரிசலைப் பயன்படுத்தி ஆதாயம் தேடும் போலீஸாரை உயர் அதிகாரிகள் கண்டறிந்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

No comments:

Post a Comment