4 நாள்கள் ஆகியும் எவ்வித தகவலும் இல்லை
திருவொற்றியூர், ஜூன் 11:கடந்த திங்கள்கிழமை காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானம் நான்கு நாள்களாகத் தேடியும் வியாழக்கிழமை இரவுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் விமானத்தைத் தேடும் பணியில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் நான்கு நாள்கள் ஆகியும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தைத் தேடும் பணியில் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட ரோந்துக் கப்பல்கள், அதிவேகப் படகுகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழக காவல்த் துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுவினர் கடலோரப்பகுதியில் உள்ள சதுப்பு நிலம், மாங்குரோவ் காடுகள் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடலுக்கு அடியில் தேடும் பணியில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ், சோனார் (Sound Navigation and Ranging-SONAR) கருவிகள் பொருத்தப்பட்ட ஐ.என்.எஸ். சந்தயாக் ஆகிய இரண்டு கப்பல்களும் வங்கக் கடல் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் கடல் பகுதியில் மிதந்து வந்த எண்ணெய்ப் படலத்தை பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment