Friday, 12 June 2015

கண்டெய்னர்களை உடைத்து திருட்டு: லாரி டிரைவர்கள் 3 பேர் கைது

திருவொற்றியூர், ஜூன் 9:சென்னையில் கண்டெய்னர்களை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள் மூன்று பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.
   சென்னைத் துறைமுகத்தில் உள்ள சரக்குப் பெட்டக முனையத்தில் இறக்குமதியாகும் கண்டெய்னர்களில் அவ்வப்போது சீல் உடைக்கப்பட்டு பொருள்கள் காணாமல் போவதாக இதன் நிர்வாகம் சார்பில் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு டிரைலர் லாரி நிறுவனத்தின் டிரைவர்கள் கூட்டாகச் செயல்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மணலியைச் சேர்ந்த ஏசுராஜா (39), ரவி (29), காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்த காமராஜர் (27) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 எல்.ஈ.டி. தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. 
லாரிகளில் கண்டெய்னர்களை ஏற்றுவதற்காக உள்ளே செல்லும் இவர்கள் மறைவான இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் கண்டெய்னர்களின் சீலினை உடைத்து அதில் உள்ள பொருள்களைத் திருடி பர்மா பஜார் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்ததாக போலீஸாரிடம் தெரிவித்தனர்.
      கைது செய்யப்பட்ட மூவரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

No comments:

Post a Comment