Friday, 12 June 2015

காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் கடற்படையின் அதிநவீன கப்பல்கள்; தடயங்கள் கிடைக்காததால் மீட்பு குழுவினர் கவலை

திருவொற்றியூர், ஜூன் 10:காணாமல் போன கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல் படை விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மேலும் இரண்டு புதிய அதிநவீன கடற்படை கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடலோரக் காவல் படையின் சென்னை அலுவலகம் தெரிவித்துள்ளது. 
   கடலோரப் பகுதிகளில் கடத்தல், தீவிரவாதம் உள்ளிட்டவைகள் தடுக்கும் 
வகையில் தமிழக காவல்த் துறை, கடலோரக் காவல் படையினர் இணைந்து அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். இதற்கு 'ஆபரேசன் ஆம்லா'  என அழைக்கப்படும். இதேபோல் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்களும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தது. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் கடலோரக் காவல் படையின் டோர்னியர் ரோந்து விமானம் திங்கள்கிழமை  கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் பாக் நீரிணைப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. பணி முடித்த பிறகு திங்கள்கிழமை இரவு சென்னைக்குத் திரும்ப வேண்டிய விமானம் குறித்த நேரத்தில் வந்து சேரவில்லை. இதனையடுத்து விமானம் காணாமல் போய்விட்டதாகவும், விமானத்தை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் செவ்வாய்க்கிழமை கடலோரக் காவல் படை அறிவித்தது. ஆனால் புதன்கிழமைவரை விமானம் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
கடற்படை நவீன கப்பல்கள் வருகை:    
    இந்நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மூலம் இப்பணி மேலும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 15 அதிநவீன ரோந்துப் படகுகள் மூலம் சுமார் 40 மணி நேரத்திற்கு மேல் தேடியும் எவ்வித விமானத்தின் சிதைந்த பாகங்களோ, விமானத்தில் பயணித்த அதிகாரிகள் குறித்தோ எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இந்திய கடற்படையின் இரண்டு அதி நவீன கப்பல்கள் புதன்கிழமை தேடும் பணியைத் தொடங்கியுள்ளன. இவற்றில் நீரில் மூழ்கிய கலன்களை ஒலி அலைகளைக் கொண்டு கண்டறியும் (SONAR-Sound Navigation and Ranging)வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கடலின் மேற்பரப்பில் நீண்ட தூரத்திற்கு தேடிக் கண்டு பிடிக்க முடியும்.
குடும்பத்தினருக்கு ஆறுதல்:
    இந்நிலையில்  இந்தியக் கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குனர் வைஸ் அட்மிரல் பிஸ்ட் புதன்கிழமை சென்னை வந்தார். மேலும் விமானம் காணாமல் போனது, தேடும் பணி உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த அதிகாரிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

No comments:

Post a Comment