Saturday, 13 June 2015

காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் புதிய உத்திகள்

ஐந்தாவது நாளாக தேடுதல் தொடர்கிறது

திருவொற்றியூர்,  ஜூன் 12:கடந்த திங்கள்கிழமை காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் ஐந்து நாள்களாகியும் வெள்ளிக்கிழமைவரை தேடும் பணியில் எவ்வித பலனும் இல்லை. இந்நிலையில் விமானத்தைத் தேடும் பணியில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் வெள்ளிக்கிழமை முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
   கடந்த திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் ஐந்து நாள்கள் ஆகியும் முக்கிய தடயங்களை ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விமானத்தைத் தேடும் பணியில் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட ரோந்துக் கப்பல்கள், அதிவேகப் படகுகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழக காவல்த் துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுவினர் கடலை ஒட்டி அமைந்துள்ள சதுப்பு நில மாங்குரோவ் காடுகளில் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
   இந்நிலையில் கடலுக்கு அடியில் தேடும் பணியில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் வெள்ளிக்கிழமை ஈடுபட்டுள்ளது. மேலும் வியாழக்கிழமை  சோனார் (Sound Navigation and Ranging-SONAR) கருவிகள் பொருத்தப்பட்ட ஐ.என்.எஸ். சந்தயாக் ஆகிய  ஆழ் கடல் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. இது கடலுக்கு அடியில் தரைப்பகுதிவரை ஆய்வு செய்யும் வசதிகளைக் கொண்டது. இதற்கு உதவியாக ரோந்து விமானங்கள் செயல்பட்டு வருகின்றன.  கடல் பகுதியில் மிதந்து வந்த எண்ணெய்ப் படலம் காணாமல் போன விமானத்தின் எரிபொருள் இல்லை என்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. 
புதிய உத்திகள்:
    ஐந்து நாள்களாகியும் தேடும் பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் 
புதிய உத்திகளைக் கையாள முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய தொலை உணர்வு முகமை (National Remote Sensing Agency-NRSA) மூலம் செயற்கை கோள் படங்களைக் கொண்டு தேடும் பணியை மேற்கொள்ளும். ஹைதராபாத்தில் உள்ள கடல்சார் தகவல்களுக்கான இந்திய தேசிய சேவை மையம் (The Indian National Centre for Ocean Information Services), சென்னையிலுள்ள தேசிய கடல்சார் தொழில் நுட்பக் கழகம் (National Institute of Ocean Technology), தஞ்சாவூரில் உள்ள ஓம்கார் பவுண்டேசன் உள்ளிட்ட நிறுவனங்களின் உதவியை கடலோரக் காவல்படை கோரியுள்ளது.  இவை அனைத்தும் தனித் தனி தொழில்நுட்பங்களில் சிறப்புத் திறன் பெற்றவை. இதன் மூலம் புதிய உத்திகளைக் கையாள்வதன் மூலம் காணாமல் போன விமானம் குறித்து தகவல்கள் கிடைக்கலாம் என நம்புகிறோம். தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment