Thursday, 17 November 2016


சேமிப்புக் கிடங்கில் கருப்புப் பணம் பதுக்கலா?

அதிகாரிகள் திடீர் சோதனையால் திருவொற்றியூரில் பரபரப்பு


திருவொற்றியூர், நவ.15:திருவொற்றியூரில் உள்ள தனியார் சேமிப்புக் கிடங்கில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கருப்புப் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக எழுந்த வதந்தியை அடுத்து திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
   எர்ணாவூர் மேம்பாலம் அருகே தனியாருக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்கு உள்ளது. இதனை பாபு என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இங்கு வெளிநாட்டிலிருந்து  கண்டெய்னர்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கு செவ்வாய்க்கிழமை மாலை சுமார் மூன்று கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு திடீர் சோதனையில் ஈடுபட்டன. மேலும் இக்கிடங்கில் கணக்கில் வராத கருப்புப் பணம் வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவதாக பத்திரிகையாளர்களுக்கு தகவல் பரவியது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இதனையடுத்து சோதனை நடைபெற்ற இடத்திற்கு பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் குழுமியிருந்தனர். அவர்கள் வந்திருந்த வாகனங்கள் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது என்பதையடுத்து விசாரித்ததில் சோதனையில் ஈடுபட்டிருப்பது வருமான வரித்துறை அதிகாரிகள் அல்ல, தமிழக விற்பனை வரித்துறை அதிகாரிகள் தான் எனவும், இக்கிடங்கில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள பொம்மை, விளையாட்டுச் சாமான்கள் குறித்து ஆய்வு செய்யவே அவர்கள் வந்ததாகவும், இது வழக்கமான சோதனைதான் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.   இதனையடுத்து பரபரப்பு நீங்கியது. 

No comments:

Post a Comment