Thursday, 17 November 2016

தாவர நோய்த் தடுப்புச் சான்றிதழ்களில் மோசடி:

வேளாண் விளைபொருள் ஏற்றுமதி, இறக்குமதி சோதனையில் புதிய நடைமுறை 

சரக்குகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்படும் அபாயம்?


திருவொற்றியூர், அக்.4: வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதியின் போது மோசடியான முறையில் தாவர நோய்த் தடுப்புச் சான்றிதழ்கள் பெறப்பட்டு வந்ததாக எழுந்த புகாரை அடுத்து இச்சான்றிதழ்களை வழங்குவதில் புதிய நடைமுறை மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்கும்படி மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி, இறக்குமதிக்கான சரக்குகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். 
வேளாண் விளைபொருள் ஏற்றுமதி, இறக்குமதி:    
   சென்னைத் துறைமுகத்திலிருந்து மட்டும் மக்காச்சோளம், வெங்காயம், அரிசி, மிளகாய், வேர்க்கடலை ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கண்டெய்னர்கள் வரை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதேபோல்  மரங்கள், மரக் கட்டைகள், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள், உளுந்து, துவரை, பட்டாணி, சுண்டக் கடலை உள்ளிட்ட பருப்பு வகைகள்,  அலங்காரப் பூக்கள் என ஆண்டுக்கு சுமார் 80 ஆயிரம் கண்டெய்னர்கள் வரை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.  மொத்தத்தில் வேளாண் வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு வெளிநாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஆய்வுச் சான்று வழங்கும் தாவரப் பாதுகாப்புத் துறை
       இவ்வாறு வேளாண் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் முன்பு மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள தாவரப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து சான்று அளிக்கப்பட வேண்டும்.  இச்சான்றில் விளைபொருளின் பொதுவான தாவரவியல் பெயர், தரம், கிருமி, பூச்சி ஏதும் இல்லை, அளவு, காலம் உள்ளிட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த சட்டப்பூர்வமான சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாமல் எந்த கண்டெய்னரையும் எடுத்துச் செல்ல சுங்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கமாட்டார்கள்.  
       ஏற்றுமதி, இறக்குமதிக்கான சரக்குகளை நேரில் வந்து ஆய்வு செய்ய வர்த்தகர்கள் விண்ணப்பித்தவுடன் மத்திய தாவரவியல் நோய்க் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கிடங்குகளுக்கு நேரில் சென்று சோதனையிட்டு, மாதிரிகள் எடுத்து பின்னர் அலுவலக ஆய்வகத்தில் பரிசோதிப்பார்கள். இதில் எவ்வித நோய்க்கிருமிகளும் இல்லையென முடிவுக்கு வந்த பிறகு தடையில்லாச் சான்றிதழ்களை முத்திரையிட்டு அளிப்பார்கள். இதனை சுங்கத் துறையில் சமர்ப்பித்த பிறகே ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியும். முன்பெல்லாம் ஒரே நாளில் கிடைத்த இச்சான்றிதழ்கள் கடந்த சில ஆண்டுகளாக மூன்று முதல் ஐந்து நாள்கள்வரை ஆகிறது. 
போலிச் சான்றிதழ்கள்:
      ஏற்றுமதிக்கான சரக்குகளை ஆய்வு செய்வதற்கு முன்பு மீத்தைல் புரோமைடு என்ற பூச்சிக்கொல்லி மருந்தை புகையூட்டுதலுக்கு (Fumigation)உட்படுத்த வேண்டும். இதற்கென சென்னையில் மட்டும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிலர் புகையூட்டுதலுக்கு உட்படுத்தாமலேயே சான்றிதழ்களை வழங்கி மோசடியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் மத்திய தாவர நோய்க்கட்டுப்பாட்டுச் சான்றிதழையே போலியாகத் தயாரித்து சுங்கத்துறையில் அளித்ததாகவும், பின்னர் கண்டறியப்பட்டு 
தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
மோசடியைத் தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்:
   இந்நிலையில் மத்திய தாவர நோய்த் தடுப்புத் துறை இணை இயக்குனர் டாக்டர் வி.கே.ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
      ஏற்றுமதி செய்யப்படும் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை முறையாக மேற்கொள்ளாமல் மோசடியாக நோய்த் தடுப்பு தடையில்லாச் சான்றுகளை பெற்று வருவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்துள்ளன. மேலும்  இறக்குமதி செய்யப்படும் இடத்தில் பூச்சிகள் தென்பட்டால் வெளிநாடுகளில் இந்தியாவின் வேளாண் விளை பொருள்களுக்குத் தடை விதிக்கும் அபாயமும் உள்ளது.  எனவே இனி சரக்குகளை பூச்சிக் கொல்லி புகையூட்டுதலுக்கு உட்படுத்தும்போது அதற்கு ஆதாரமாக புகைப்படங்கள், ஒளிப்பதிவுகளை ஆய்வின்போது அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும். இதனை உடனே நடைமுறைப்படுத்துமாறு அனைத்து மண்டல அலுவலகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
சென்னையில் இன்று ஆய்வுக் கூட்டம்:
    இந்நிலையில் புதிய நடைமுறையை செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய தாவரவியல் நோய்த்தடுப்பு மண்டல அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ளது. மத்திய வேளாண் அமைச்சக இணைச் செயலாளர் (தாவர நோய்த் தடுப்பு) அஸ்வனி குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மண்டல இணை இயக்குனர் மாணிக்கம், பூச்சிக்கொல்லி புகையூட்டல் நிறுவனங்களின் பிரதிநிதிகள் (Fumigation Operators) கலந்து கொள்ள உள்ளனர். 
     கண்டெய்னர் லாரிகள் நெரிசல், போதிய கிடங்கு வசதிகள் இல்லாமை, சர்வதேசப் போட்டி உள்ளிட்ட பிரச்னைகளால் வேளாண் விளைபொருள்கள் ஏற்றதி படிப்படியாகக் குறைந்து வருகிறது. எனவே புதிய நடைமுறைகள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதியில் மேலும் தாமதம் ஏற்படாமல் இருப்பதில் கவனம் தேவை என பல்வேறு தரப்பினரும் 
கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment