ரூ.100 நோட்டுகள் புழக்கத்தில் இல்லாததே பொதுமக்கள் அவதிக்கு முக்கிய காரணம்
ஆயிரம் ரூபாய் பெற 5 மணி நேரம் காத்திருக்கும் அவலம்
திருவொற்றியூர், நவ.12: நூறு மற்றும் இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் புழக்கத்தில் இல்லாததே பொதுமக்கள் வங்கிகளை நோக்கி படையெடுக்க முக்கிய காரணமாக உள்ளது. மேலும் வங்கிகளில் போதிய பணம் இருப்பு இல்லாததும் பொதுமக்களுக்கும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் செல்லாத நோட்டுகள் டிசம்பர் 31 வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்ததையடுத்து ஓரிரு நாள்களில் நிலைமை சரியாகும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் மூன்று நாள்களாகியும் அன்றாடத் தேவைக்குக் கூட பணம் இல்லாமல் மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏடிஎம்-களில் பணம் எடுக்கலாம் எனக் காத்திருந்தவர்கள் அதுவும் செயல்படாமல் போனதால் திண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சனிக்கிழமை நிலவரப்படி பொதுமக்களில் மிகக் குறைந்த அளவினர்தான் இதுவரை பணம் மாற்றியுள்ளனர். மேலும் புதிதாக மாற்ற வேண்டியவர்கள் ஏராளமாக உள்ள நிலையில் ஏற்கனவே குறைந்த அளவு பணமே மாற்றியவர்கள் அப்பணமும் செலவாகிவிட்ட நிலையி்ல் மீண்டும் வரிசையில் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பழைய நோட்டுகளை தாற்காலிகமாக வாங்கி வந்த சிறு வணிகர்களும் அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்டேட் வங்கியில் 60 ஆயிரம் கணக்குகள்:
திருவொற்றியூர் ஸ்டேட் வங்கியில் மட்டும் சுமார் 60 ஆயிரம் கணக்குகள் உள்ளன. கடந்த மூன்று நாள்களில் இங்கு அமைக்கப்பட்டுள்ள 6 கவுண்டர்கள் மூலம் இதுவரை சுமார் ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே தலா ரூ.4 ஆயிரம், ரூ.2 ஆயிரம் , ஆயிரம் வழங்கப்பட்டுள்ளன எனில் 60 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு எப்போது பணம் வழங்கி முடிக்க முடியும். இதே நிலை நீடித்தால் தினமும் வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில் காத்திருந்தே பணம் பெற்றாக வேண்டிய நிலையே ஏற்படும். இதனால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே அதிக அளவிலான பணம் மாற்றித் தருவதற்கான ஏற்பாடுகளை வங்கிகள் விரைவாகச் செய்யவில்லை எனில் பொதுமக்களின் கடுமையான அதிருப்தியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ரூ.100 நோட்டுகள் புழக்கத்தில் இல்லாது ஏன்?:
இந்நிலையில் சனிக்கிழமை வரிசையில் காத்திருந்த திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அனுராதா கூறியது,
நாட்டின் நன்மைக்காக பிரதமர் எடுத்த முடிவினை ஆதரிக்கிறேன். ஆனால்
இதன் மூலம் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ரூ.500,1000 நோட்டுகளை செல்லாது என அறிவிக்க முனைந்தபோது
அதற்கேற்ற முன்னதாகவே நூறு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடாதது ஏன்?. மேலும் புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் தயாராக வைத்திருந்து விட்டு பழைய நோட்டுக்களை செல்லாது என அறிவித்திருக்கலாமே. நவ.8-ம் தேதி அறிவித்தபடி
எதுவும் நடக்கவில்லை. ஏடிஎம் செயல்படவில்லை, சொன்னபடி ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்படவில்லை. யாரிடமாவது பணம் அதிகமாக இருந்தால் நாம் கடனாவது
வாங்கிக் கொள்ளலாம். ஆனால் காலையில் சென்றவர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கினர். அதுவை பிற்பகல் ரூ.2,000, மாலையில் ரூ.1000 மட்டுமே பட்டுவாடா செய்யப்பட்டது. இதனைப் பெற குறைந்தபட்சம் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை. இதனைத் தினந்தோறும் அனுபவிக்க முடியுமா?. கணக்கு வைத்திருப்பவர்களுக்காவது வாராந்திர அதிகபட்ச அளவீடு ரூ.20 ஆயிரத்தை ஒரே தவணையில் அளித்திருக்கலாமே. வங்கிகளுக்கு ஒரு நாள் விட்டபோது போதுமான அளவு பணத்தை இருப்புக்கு கொண்டு வந்திருக்கலாமே . மொத்தத்தில் நல்ல திட்டம்தான் என்றாலும் இவ்வளவு குளறுபடியால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்றார் அனுராதா. இதே கருத்தை வரிசையில் நின்ற பெரும்பாலான பெண்கள் ஆமோதித்ததை அறிய முடிந்தது.
தினமும் வரிசையில் நின்றால் வருமானத்திற்கு வழி என்ன?
இது குறித்து வரிசையில் நின்ற தனலட்சுமி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட பெண்கள் கூறியது,
பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்க்க பெட்ரோல் பங்குகளில், ஆவின் பூத்துகளில் ரூ.500 நோட்டுகள் செல்லும் என அறிவித்தார்கள். ஆனால் அங்கு ரூ.500 முழுவதுக்கும் வாங்கினால் மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். கூலி வேலை செய்பவர்களக்கு இது சாத்தியமல்ல. மருந்துக் கடைகளில் கூட மருந்து வாங்க முடியவில்லை. வங்கி அட்டையைப் பயன்படுத்தலாம் என்றால் வங்கியில் பணம் டெபாசிட் செய்யாமல் எப்படி பயன்படுத்த முடியும். டெபாசிட் செய்ய வேண்டும் என்றாலும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி நிலைதான் உள்ளது. தினமும் வேலைக்குச் செல்லாமல் வங்கிக்கு வந்து வரிசையில் நின்றால் வருமானத்திற்கு வழி என்ன? எங்களது அன்றாட பணிகளை யார் பார்த்துக் கொள்வது? என கேள்வி எழுப்பினர்.
இது தவிர ஏராளமான பிரச்னைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தினசரி வசூலாகும் பணத்தைக் கூட வங்கியில் செலுத்துவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னதாகவே வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துள்ள காசோலைகள் பணமின்றி திருப்பி அனுப்பப்படும் அவல நிலை நீடிக்கிறது. மேலும் லட்சக் கணக்கில் செலுத்த வேண்டியவர்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பது சாத்தியமாகப்படவில்லை. ரொக்கமாக சம்பளம் வழங்கி வந்த சிறிய நிறுவனங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர்.
இதுபோன்ற என்னற்ற பிரச்னைகள் தொடரும் நிலையில் பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் உடனடி நடவடிக்கைகளை செயல்படுத்தியாக வேண்டும். இன்னும் ரூ.500 ரூபாய் நோட்டு வரவில்லை. வழங்கப்பட்ட ரூ.2 ஆயிரம்
நோட்டுக்கும் சில்லரை வாங்க வழியில்லை. எனவே என்னதான் நடக்கிறது? என்னதான் நடக்கும்? என்பதை பிரதமர் மோடி மக்களுக்கு மீண்டும் தெளிவுபடுத்தினால் நல்லது. இல்லையெனில் மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதைதான் ஏற்படும்.
No comments:
Post a Comment