Monday, 14 March 2016


சென்னையிலிருந்து குஜராத் மாநிலத்திற்கு கப்பலில் செல்லும் கார்கள்

துறைமுகத்தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர், பிப்.5:ஹூயூண்டாய் நிறுவனம் தயாரித்த சுமார் 800 இலகு ரக கார்கள் சென்னைத் துறைமுகத்திலிருந்து குஜராத் மாநிலத்தின் பிபாவ் துறைமுகத்திற்கு கப்பலில் முதல்முறையாக எடுத்துச் செல்லப்பட்டன. இவ்வசதியை சென்னைத் துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். 

    இதற்கான தொடக்கவிழா நிகழ்ச்சி சென்னைத் துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னைத் துறைமுகத் தலைவர் எம்.ஏ. பாஸ்கராச்சார் கார்கள் ஏற்றுவதை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
இப்புதிய வசதி குறித்து பாஸ்கராச்சார் செய்தியாளர்களிடம் கூறியது, 
    உள்நாட்டுச் சரக்குகளை கடல் மார்க்கத்தில் கப்பல்கள் மூலம் எடுத்துச் செல்வதை கப்பல்த் துறை அமைச்சகம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதற்கென விரிவான கொள்கையை அமைச்சகம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன உற்பத்தியில் சென்னை மண்டலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் கார்கள் வட மாநிலங்களுக்கு நீண்ட லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகின்றன. இக்கார்களை கப்பல் மூலம் குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகங்களுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து   
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்திரபிரதேஷ் உள்ளிட்ட பெரும்பாலான வட மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து சைமெக்ஸ் மாரிடைம் என்ற நிறுவனத்தின் எம்.வி.ஐடிஎம் சைமெக்ஸ் என்ற கப்பல் மூலம் ஹூயூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் கார்களை குஜராத் மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி முதல்முறையாக இக்கப்பல் சுமார் 800 கார்களுடன் சென்னைத் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் செல்கிறது. இக்கப்பலில் சுமார் 2 ஆயிரம் கார்களை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்ல முடியும். இக்கப்பல் 5 நாள்களில் குஜராத் மாநிலத்தின் பிபாவ் துறைமுகத்தை அடையும். இவ்வாறு கடல் மார்க்கத்தில் உள்நாட்டுச் சரக்குகளை எடுத்து செல்வதன் மூலம் சரக்குகளை இடமாற்றும் செலவு குறையும், சாலைப் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசு குறையும்,  பயண நேரம் உள்ளிட்டவை வெகுவாகக் குறையும். எனவே இப்போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் தற்போது ஒரு காருக்கு ரூ.500 மட்டுமே சென்னைத் துறைமுகம் நிறுத்தக் கட்டணமாக வசூலிக்கிறது.  எனவே உள்நாட்டு சரக்குகளை கையாள சிறப்பு முனையம் சென்னைத் துறைமுகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் பாஸ்கராச்சார்.
    இந்நிகழ்ச்சியில் துறைமுகத் துணைத் தலைவர் சிரில்ஜார்ஜ், போக்குவரத்து மேலாளர் விமல், முதுநிலை துணை மேலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment